Monday, July 30, 2012

ஸ்ருதியின் உயிர் குடித்த எஃப்.சி.! போக்குவரத்து துறைக்குள் பெரிய ஓட்டை!


அம்மா... இன்னைக்கி என்ன சொல்லிக் குடுத்தாங்க தெரியுமா...'' என்று குதூகலத்துடன்துள்ளிக் குதித்து பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைக்​காகக் காத்திருக்கும் தாயிடம், அந்தக் குழந்தையின் உடலை வெள்ளைத் துணியில் கட்டிக்கொடுத்தால்..? 
அப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது சென்​னையை அடுத்த தாம்பரத்தில். பள்ளியில் இருந்து பஸ்ஸில் திரும்பிய ஏழு வயதான ஸ்ருதி, அந்த பஸ்ஸில் இருந்த ஓட்டை வழியே ரோட்டில் விழுந்து... தலையில் டயர் ஏறி உயிரை இழந்திருக்கிறாள். ஓட்டை இருந்தது பஸ்ஸில் மட்டுமா? பள்ளியின் நிர்வாகத்தில், கல்வித் துறையில், போக்குவரத்துத் துறையில் எவ்வளவு பெரிய ஓட்டைகள் இருக்கின்றன என்பதைத் தனது சாவின் மூலமாகக் காட்டிவிட்டு மறைந்து விட்டாள் ஸ்ருதி. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சோகச் சம்பவங்கள் இனி காட்சிகளாக...
காட்சி 1: கிழக்குத் தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் இருக்கும் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த 25-ம் தேதி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மாலை 4 மணிக்குக் கிளம்பிய பஸ், முடிச்சூர் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டு இருந்தது. அங்குள்ள அட்டைக் கம்பெனி ஒன்றின் அருகே சென்ற நேரத்தில், பஸ்ஸின் இருக்கையில் இருந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பஸ்ஸின் குலுங்கலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஸீட்டில் இருந்து விழுந்திருக்கிறாள். அவள் விழுந்த இடத்தில் ஒரு பெரிய ஓட்டை. அதை மூடியிருந்த காலண்டர் அட்டை நழுவிக்கொள்ளவே, அந்த அட்டையோடு சேர்ந்து ஸ்ருதியும் ஓட்டை வழியாக சாலையில் விழுந்து விட்டாள். அடுத்த நொடியில் பஸ்ஸின் பின்பக்க டயர் அவள் தலையை நசுக்கிக் கூழாக்கி விட்டது. அலறக்கூட முடியாமல், அந்தக் குழந்தையின் உயிர் நொடியில் காற்றோடு கலந்து விட்டது. உடன் சென்ற குழந்தைகளின் கதறலைக் கண்டுகொள்ளாமல் விரைந்தது பஸ்.
காட்சி 2: சம்பவத்தை நேரில் பார்க்கிறார் பெட்ரோல் பங்க் வாசலில் இருந்த கிருஷ்ணன். பஸ்ஸில் இருந்து ஒரு குழந்தை விழுந்து நசுங்கிக் கிடப்பதையும், அதுகூடத் தெரியாமல் பஸ் வேகமாகப் பறப்பதையும் பார்த்துப் பதைபதைத்துப் போகிறார். உடனே, அந்த ரோட்டின் மறுமுனையில் இருக்கும் தன் நண்பர் ஒருவருக்கு செல்போனில் தகவல் சொல்கிறார். நண்பர் அந்த பஸ்ஸை வழிமறித்து, குழந்தை கீழே விழுந்த தகவலைச் சொல்கிறார். ஆனால் டிரைவர் சீமான், 'இந்த பஸ்ஸில் இருந்து யாரும் விழவில்லை’ என்று கூறிவிட்டு பஸ்ஸைக் கிளப்ப முயற்சிக்கிறார். அதற்குள் கூட்டம் கூடுகிறது. தப்பி ஓட நினைத்த டிரைவருக்கு சரமாரி அடி விழுகிறது. பஸ்ஸில் இருந்த மற்ற குழந்தைகளை இறக்கி அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் உட்கார வைக்கிறார்கள் முடிச்சூர் மக்கள்.
காட்சி 3: சாலையில் இறந்துகிடக்கும் குழந்தை யாருடையது என்று தெரியாமல் மக்கள் அலைமோதுகிறார்கள். பின்னர் அது, ஆட்டோ டிரைவர் மாதவனுடைய குழந்தை என்று அடையாளம் காணப்படுகிறது. உடனே, செல்போனில் மாதவனுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 'பஸ்ஸில் இருந்து குழந்தை விழுந்துவிட்டாள்’ என்று மட்டும் கூறியதால், 'உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க. என் வண்டியில் இருக்கும் குழந்தைகளை இறக்கிட்டு வந்துடறேன்’ என்று அந்த நேரத்திலும் கடமை மாறாத மனிதராக போன் செய்தவரிடம் சொல்கிறார் மாதவன். ஆட்டோ டிரைவரான மாதவன் தினமும் 50 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருபவர். வண்டியில் இருந்த குழந்தைகளை இறக்கிவிட்டுத் திரும்பி வருகிறார். அப்போதுதான், சாலையில் பெரும் கூட்டம் கூடி நிற்பதைப் பார்க்கிறார். வண்டியை ஓரம் கட்டிவிட்டு கூட்டத்துக்குள் வருகிறார். சாலையில் ஒரு குழந்தையின் சடலம் துணியால் போர்த்தப்பட்டுக் கிடக்கிறது. அருகில் அவரது நண்பர்களும் நிற்பதைப் பார்த்ததும் மாதவனுக்கு கை, கால்கள் நடுங்குகிறது. அந்தத் துணியை விலக்கிப் பார்க்க முயற்சிக்கிறார். எல்லோரும் அவரைத் தடுக்கிறார்கள். கதறுகிறார். ''வேண்டாம்டா... எங்களாலயே பார்க்க முடியலை...'' என்று கதறுகின்றனர் நண்பர்களும். அந்த இடத்தைப் பெரும்துயரம் சூழ்ந்து கொள்கிறது. மாதவனின் அலறல் கூடியிருந்த அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. குழந்தையின் வருகைக்காகக் காத்திருந்த மாதவனின் மனைவி பிரியாவுக்குத் தகவல் சொல்கின்றனர். ஆக்ஸிடென்ட் என்று கேள்விப்பட்டதுமே மயங்கிச் சரிந்த அந்தத் தாய், வியாழன் காலை வரை கண் திறக்கவில்லை. அதன் பிறகு எழுந்தவருக்குத் தகவல் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் தவித்தது பெரும் சோகம். இன்னமும் கதறிக் கதறி அழுதுகொண்டு இருக்கிறார் பிரியா.
காட்சி 4:  நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்கள் திரள்கிறார்கள். குழந்தையின் உடலைப் பார்த்து இதயம் வெடித்துப்போகிறார்கள். சம்பவ இடத்தில் இருந்து, தொலைவில் நிற்கும் பஸ்ஸைப் பார்க்கும்போது ஆத்திரம் பீறிடுகிறது. உடனே ஓடிப்போய் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகின்றனர். இன்னும் சிலரோ ஆத்திரம் தீராமல் பஸ்ஸுக்குத் தீ வைக்கின்றனர். போலீஸ் வந்துதான் பொதுமக்களை விரட்ட முடிந்தது. தீயணைப்பு வண்டிக்குத் தகவல் பறக்கிறது. இதற்கிடையில், ஆம்புலன்ஸ் வந்து ஸ்ருதியின் உடலை எடுத்துக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பறக்கிறது. தீயணைப்பு வண்டி வந்து சேருவதற்குள், பஸ் எலும்புக்கூடாகி விட்டது.
காட்சி 5:  பஸ் டிரைவர் சீமான், சீயோன் பள்ளி நிறுவனர், தாளாளர் மற்றும் முதல்வருமான விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஷ், பஸ் கிளீனர் சண்முகம் ஆகிய நான்கு பேரையும், பல்லாவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்கின்றனர். நள்ளிரவு 11 மணிக்கு நான்கு பேரையும் கைது செய்து இருப்பதாக அறிவிக்கிறது போலீஸ்.
26-ம் தேதி காலை முடிச்சூர் மக்கள் சுமார் 500 பேர் சம்பவம் நடந்த இடத்தில் திரண்டனர். அங்கிருந்து, ஊர்வலமாக குழந்தை ஸ்ருதி வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை, கலெக்டர் அனீஸ் ஸாப்ரா, ஸ்ருதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவியை பெற்றோரிடம் கொடுத்தார். ஊர்மக்கள் அத்தனை பேரும் கண்ணீருடன் ஸ்ருதியின் உடலை வழியனுப்பி வைத்தார்கள்.

இத்தனை சம்பவங்களுக்கும் காரணமான இந்த பஸ்ஸுக்கு கடந்த 9-ம் தேதிதான் தகுதிச் சான்​றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பஸ்ஸின் அனைத்துப் பாகங்களும் தகுதியுடன் இருப்பதாக சான்று கொடுத்திருக்கிறார் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி. ''ஒரு குழந்தை விழும் அளவுக்கு பஸ்ஸில் ஓட்டை இருந்த​தைக்​கூடப் பார்க்காமல் எப்படி தகுதிச் சான்றிதழ் வழங்கினீர்கள்?'' என்று போலீஸ் துணை கமிஷனர் விமலா கேட்டதற்கு, ''நாங்கள் சான்றிதழ் வழங்கிய பிறகு டேமேஜ் ஆகி இருக்கலாம்'' என்று அசட்டையாகப் பதில் சொன்னாராம் பாட்டப்பசாமி.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் சிலர், பாட்டப்பசாமியைப் பார்த்து, ''எவ்வளவு பணம் வாங்கிட்டு இந்த பஸ்ஸுக்கு எஃப்.சி. குடுத்தீங்க. அந்தக் காசெல்லாம் என்னய்யா பண்ணப்போறீங்க. உங்க வீட்டுலயும் இந்த மாதிரி குழந்தைங்க இருக்கா... இல்லையா? முதல்ல இவரை அரெஸ்ட் பண்ணுங்க'' என்று ஆவேசத்தைக் காட்டினார்கள். நிலைமை சிக்கல் ஆவதை உணர்ந்த போலீஸ், உடனே அங்கே இருந்து பாட்டப்பசாமியை பத்திரமாக அனுப்பி வைத்தார்கள்.
ஓர் அசம்பாவிதம் நடந்ததும் கூப்பாடு போட்டு அதிரடி நடவடிக்கை எடுப்பது வழக்கம்தான். அப்படித்தான், தமிழகம் முழுவதும் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்யும்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு போட்டுள்ளது தமிழக அரசு. இந்தச் சம்பவம் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தானாகவே முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு உள்ளது. இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர்  சஸ்பெண்ட் செய்யட்டுள்ளனர்.
பள்ளிக்கூடம் கட்டி... ஆயிரக்கணக்கில் வசூல் செய்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இன்னும் எத்தனை பச்சைப் படுகொலைகளை நாம் பார்க்கப்போகிறோமோ?


thanks to vikatan.com

அதிர வைக்கும் வைதீஸ்வரி தற்கொலை. 'களங்கம்'தான் கற்பிக்கிறார்களா?


செங்கல்பட்டு அருகே படாளம் பகுதி யில் அமைந்து உள்ளது கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. இந்தக் கல்லூரியின் நிறுவனர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ரகுபதி. இப்போது இவர் தி.மு.க.வில் இருக்கிறார். அவரது மகன் அண்ணாமலை, இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர். இந்தக் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ளவே... அரசியல் மற்றும் மாணவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. 
திருவண்ணாமலை அருகே உள்ள வாழவச்சனூரைச் சேர்ந்த வைதீஸ்வரி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இ.சி.இ. படித்து வந்தார். வழக்கம் போல வார விடுமுறைக்கு தனது வீட்டுக்கு வந்த வைதீஸ்வரி, 22-ம் தேதி ஞாயிறு இரவு மீண்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பினார். இவர்தான், அடுத்த நாள் இரவு 8.30 மணிக்கு ஹாஸ்டலில் உள்ள ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டார். உடனே சென்னை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட வைதீஸ்வரி, சிகிச்சை பலன் இன்றி 24-ம் தேதி இறந்துபோனார்.
சோகத்தில் இருந்த வைதீஸ்வரியின் தந்தை ராமசாமியிடம் பேசினோம். ''ஞாயிற்றுக் கிழமை மதியம் வீட்டில் இருந்து வைதீஸ்வரி ஹாஸ்டலுக்குக் கிளம்பிப் போச்சு. ஹாஸ்ட லுக்குப் போய்ச் சேரும்போது ராத்திரி ஆயிடுச்சு போல. மறுநாள், கூடப்படிக்கறவங்க முன்னாடிவெச்சு, லேட்டா வந்ததாச் சொல்லி வைதீஸ்வரியைத் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்காங்க. அதைத் தாங்க முடியாத வைதீஸ்வரி மாடியில இருந்து குதிச்சதா சொல்றாங்க. அவ்வளவு அசிங்கமாத் திட்டினவங்களுக்கு, எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா? இப்படி அநியாயமா என் பொண்ணைக் கொன்னுப்புட்டாங்களே...'' என்றார் கண்களில் நீர் கோர்க்க.
அவருடைய புகாரின் பேரில் வைதீஸ்வரியைத் திட்டிய பேராசிரியர்கள் கார்த்திகா மற்றும் ஜோஸ் மிராண்டா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர் படாளம் போலீஸார்.
கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசியபோது, ''வைதீஸ்வரி ஹாஸ்டலுக்கு வந்து சேர லேட்டாயி டுச்சுன்றது உண்மைதான். வெளியே யார்கூடவோ சுத்திட்டு வந்ததுதான் காரணம்னு மேடம் அவங் களாவே  முடிவு பண்ணிட்டாங்க. அடுத்த நாள் காலேஜ்ல எல்லா மாணவர்களையும் வைச்சுக்கிட்டு அசிங்க அசிங்கமாத் திட்டினாங்க. காது கூசும் அளவுக்குத் திட்டினதால்தான் வேதனை தாங்க முடியாம தற்கொலை செஞ்சுக்கிட்டா'' என்றனர்.
வைதீஸ்வரியின் தற்கொலை கல்லூரி மாணவர்களைக் கொதிக்கவைக்க... போராடும் சூழல் எழுந்தது. உடனே மாணவர்களை ஆடிட்டோரியம் வரவழைத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ''வைதீஸ்வரி இறப்புக்குக் காரணமான ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கை வைத்தனர் மாணவர்கள்.
அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ''மாணவர்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அவங்களைத்தானே கேட்பாங்க? நீங்க சொல்வது போலத் தகாத வார்த்தைகளால் பேசியது உண்மையாக இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் டி.எஸ்.பி. ஸ்ரீதேவி. ''சில ஆசிரியர்கள் பேசுறது சகிக்க முடியலை. 'அவுட்டிங் போறீயா? எவன்கூட போற? உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கத் தெம்பில்லைன்னு எவனையாவது புடிச்சுக்கிட்டு வான்னு அனுப்பிட்டாங்களா?’னு கேட்கிறாங்க. ஒரு பொண்ணுகிட்ட இப்படியா எல்லா ஸ்டூடன்ட் முன்னாடியும் பேசுவாங்க?'' என்று கொதித்தனர் மாணவிகள். அதனால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து நிலைமையை சமாளித்து இருக்கிறார்கள்.
ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கல்வி நிறுவனம் தனது பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. நியாயமான நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுப்பதன் மூலமாக மட்டுமே இந்தக் களங்கம் துடைக்கப்படும். மாணவர்களைக் கையாள்வதில் ஆசிரியர்களுக்கு இன்னமும் நிறையப் பக்குவம் தேவை. அதைக் கற்றுக்கொடுப்பது யாரோ?

சசிகலாவுக்கு ரெட் கார்பெட்! கட்சியினரை அலற வைத்த எஸ்டேட் விழா!


பல நூறு கோடிகள் மதிப்பீட்டில் பெரும் தொழிற்சாலைகளையும், அரசுத் திட்டங்களையும் துவக்கிவைக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்கள், ஒரு மலையின் மூலையில் இருக்கும் தம்மாத்தூண்டு ஏ.டி.எம். மையத்தை கடந்த 25-ம் தேதி திறந்துவைத்தன!

 முதல்வரின் பங்களா வாயிலில் ஆரம்பித்து தோரணங்கள், அலங்கரிப்புகள், ஆட்டம் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. எஸ்டேட் பங்களாவுக்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால், சில கிலோ மீட்டர்கள் நடந்தேதான் மக்களால் விழாவுக்கு வர முடிந்தது.  மழை, காற்று மற்றும் குரங்குகள் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மேடை மூன்று பக்கமும் மூடப்பட்டு இருந்தது. பிற்பகல் 2 மணி அளவில், பார்வையாளர்கள் நடந்து வரும் பாதையில் இருந்த ரெட் கார்பெட்டை பரபரவென சரிசெய்து ஒழுங்குபடுத்திய போலீஸார், படுபவ்யமாக ஒதுங்கி நின்று யாரையோ வழி மேல் விழிவைத்து எதிர்பார்த்தனர். கொஞ்ச நேரத்தில் கம்பீர நடை போட்டு பிரசன்னமானார் சசிகலா. பிரிவு, இணைப்பு நெகிழ்வுகளுக்குப் பிறகு முதல்வரோடு சசிகலா பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. முதல் வரிசை இருக்கையை நோக்கி சசிகலா நகர, பவ்யமாக எழுந்து நின்று குனிந்து வணங்கினர் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மேயர்கள். அத்தனை மரியாதையையும் அர்த்தபுஷ்டியான சிரிப்போடு ஏற்றுக்கொண்டார் சசிகலா. விழாவுக்கு வந்திருந்த சசிகலாவைப் புகைப்படம் எடுக்க பத்திரிகைகள் முயன்றபோது 'அவங்க விரும்ப மாட்டாங்க. எடுக்காதீங்க, எடுக்காதீங்க’ என்று பாய்ந்து, மறைத்து அதிகப்படி விசுவாசம் காட்டினார் மக்கள் செய்தி தொடர்புத் துறை அதிகாரி ஒருவர். அடுத்த சில நொடிகளில், மேடையில் என்ட்ரி ஆனார் முதல்வர். ரிப்பன் வெட்டி பாங்க் ஆஃப் இண்டியாவின் ஏ.டி.எம்-மைத் திறந்துவைத்த முதல்வர், தனக்காக அந்த வங்கி வழங்கிய விசேஷமான ஏ.டி.எம். கார்டையும் பெற்றுக்கொண்டார். விழாப் பேருரை ஆற்றிய முதல்வர், ''இந்த வங்கியின் சேவையை இங்கிருக்கும் மக்கள் பயன்படுத்தி சேமிக்கும் பழக்கத்தை வளர்த்து, தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தால் பெற முடியாத விஷயங்களும் இந்த உலகத்தில் உண்டு. பணத்தால் நல்ல கட்டிலை வாங்கலாம், மெத்தை மற்றும் தலையணையை வாங்கலாம். ஆனால் நிம்மதியான தூக்கத்தை வாங்க முடியுமா? பணத்தால் நல்ல சத்தான ஆகாரத்தை வாங்க முடியும். ஆனால் பசியை வாங்க முடியுமா? ஆக பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை'' என்று தத்துவார்த்தமாகப் பேசி, இரண்டு குட்டிக் கதைகளும் சொல்லி முடித்தார்.

மேடையில் இருந்து சற்று தொலைவில் நின்ற இரு அமைச்சர்களின் கார்களில் தொற்றிக்கொள்ள நிர்வாகிகளுக்குள் செம போட்டி. அமைச்சர் தாமோதரனின் மடியில் அமர்ந்து பயணித்தார் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை. இந்தக் கார்களில் இடம் கிடைக்காதா என்று அலைபாய்ந்த ஈரோடு மற்றும் திருப்பூரின் பெண் மேயர்கள் மல்லிகா மற்றும் விசாலாட்சிக்கு 'இடமில்லம்மா. நகருங்க’ என்று பெப்பே காட்டிவிட்டுப் பறந்தனர்.
நிகழ்ச்சி க்யூட்டாக நடந்து முடிந்த சந்தோஷத்தில் இருந்த முதல்வரை, ஒரு புகார் ஃபைல் கடும் அப்செட் ஆக்கியிருக்கிறதாம். அதாவது ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் பொதுப் பணித் துறை அமைச்சரான கே.வி.ராமலிங்கத்துக்கும், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான ஆர்.என்.கிட்டுசாமிக்கும் இடையில் பெரும் யுத்தமாம். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா அமைச்சர்களையும் கலந்துகொள்ள அழைக்கலாம் என்று எம்.எல்.ஏ. தரப்பு சொன்னால், 'இந்த மாவட்ட அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கமும், தோப்பு வெங்கடாசலமும் போதுமே. எதுக்கு எல்லாரும்?’ என்று எதிர்க் குரல் வருகிறதாம். சின்னச்சின்ன பிரச்னைகளுக்கும் முட்டல் மோதல் இருப்பதால், அழைப்பிதழ்கூட முடிவு செய்ய முடியவில்லையாம். இந்த விவகாரம்தான் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக்கிய அ.தி.மு.க. புள்ளியான செங்கோட்டையனைக் கழற்றிவிட்ட நிலையில், தீரன் சின்னமலை விழாவை வைத்து நடக்கும் மோதல் ஜெயலலிதாவுக்குக் கடும் கோபத்தை மூட்டியதாம். அதனால், இது தொடர்பாக சில முக்கிய உத்தரவுகளைப் போட்டுவிட்டு சில அப்பாயின்ட்மென்ட்களுக்கு ஓகே சொல்லி இருக்கிறாராம்.
விழாவில் சசிகலா தலை காட்டத் தொடங்கி இருப்பதையும், முக்கியப் புள்ளிகளுடன் சந்திப்பு நடக்க இருப்பதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் நிர்வாகிகள்... கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் விரைவில் இருக்கலாம் என்று மிரள்கிறார்கள்!

வருகிறதா அடுத்த சி.டி.? திக்குமுக்காடும் அமைச்சர்


ர்ச்சைகள், தகராறுகள் மூலமாகவே மக்களால் அறியப்படுபவர் என்றால், அது தொழி லாளர் நலத் துறை அமைச்சர் செல்லப் பாண்டியன்தான்! 
'தலைமறைவு சின்னத்துரை... சிக்கலில் செல்லப்பாண்டியன்’ என்ற தலைப்பில், அமைச்சர் செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங், சில பெண்களோடு உல்லாசமாக இருந்தது குறித்த கட்டுரையை ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம்.
இந்த ஆதாரங்களைக் கொடுத்த சின்னத்துரையைத் தேடும் நடவடிக்கையை தற்காலிகமாக போலீஸார் நிறுத்தி இருக்கிறார்கள் என்றாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் ஏகத்துக்கும் பரபரப்பைக் கிளப்பிய அந்தச் செய்தியால் எப்போதும் ஏசி போட்டது போல இருக்கும் கொடநாட்டிலும் அனல் பறந்ததாம். ''கட்சியினரால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரும் அளவுக்கு சம்பவங்கள் நடப்பதைக் கண்டு முதல்வர் எரிச்சல் அடைந்திருக்கும் நேரத்தில், இந்தத் தகவல் மேலும் அவரை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. எனவே கூடுதல் விவரங்களைச் சேகரிக்க சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம். விரைவில் சென்னைக்குத் திரும்பும் முதல்வர், பெரிய அளவில் களையெடுப்பு நடத்த இருக்கிறார். அந்தக் களையெடுப்பில் செல்லப்பாண்டியனுக்கும் நிச்சயம் பதவி பறிபோகும்'' என்கிறார்கள் எஸ்டேட் வட்டாரத்தினர்.
ஆனால் இந்த விவகாரத்தை அமைச்சர் செல்லப்பாண்டியன் தரப்பில் வேறு விதமாகச் சொல்கிறார்கள். ''நகருக்கு வெளியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்னு அம்மா வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், தங்களோட சுய லாபத்துக்காக அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல், சில அ.தி.மு.க-வினரே தடுக்கிறார்கள். 'அம்மா அறிவித்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன்’ என்று அமைச்சர் சபதம் போட்டு செயல்பட்டு வருகிறார். அதனால் அமைச்சரை முடக்கவே இந்த சி.டி. மேட்டரை வெளியேவிட்டுள்ளார்கள்'' என்று வித்தியாசமான காரணத்தைச் சொல்கிறார்கள்.
சரி இந்த விவகாரத்தில் போலீஸின் அடுத்த நடவடிக்கை என்ன?
தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரனிடம் பேசினோம். ''யாருமே புகார் கொடுக்கலை. அதனால் நாங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூலாகச் சொன்னார்.
அடுத்து சில சி.டி-களும் விரைவில் உலா வர இருக்கிறது என்பதுதான் இப்போது தூத்துக்குடி டாக். ஆக, தூத்துக்குடியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது!

எனது இந்தியா (இந்தியாவின் அரண்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



காளி ஆற்றுக்கும் டீஸ்டா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி நேபாள இமயமலை. இந்தப் பகுதியில்  எவரெஸ்ட், கஞ்சன் ஜங்கா, தவளகிரி, அன்னபூர்ணா ஆகிய சிகரங்கள் உள்ளன. டீஸ்டா ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து பிரம்மபுத்திரா ஆறு வரை உள்ள பகுதி அஸ்ஸாம் இமயமலை. பர்மா பகுதியில் இந்த மலையின் உயரம் குறைந்து தாழ்ந்த குன்றுகளாகக் காணப்படுகின்றன. இவை, பாட்காய் குன்றுகளில் இருந்து உலூஷாய் குன்றுகள் வரை வடக்குத் தெற்காக அமைந்துள்ளன. இமயமலை, இந்தியாவுக்கு ஓர் அரணாக விளங்கியபோதும், பல்வேறு நாட்டு வணிகர்களின் நுழைவாயிலாகவும் விளங்கி இருக்கிறது. சீனாவின் பட்டுச் சாலை இமயத்தில்தான் நுழைகிறது. இதனால் அரேபிய, பெர்ஷிய, சீன வணிகர்களின் பண்பாட்டுக் கலப்பை இங்கே நாம் காணலாம்.

இமயமலைப் பகுதியை பல்வேறு சிறிய இனக் குழுக்களைச் சேர்ந்த அரசர்களே ஆட்சி செய்துவந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியின் புராதனப் பெயர் காஷ்தேஸ். அதாவது, காஷ் இன மக்களின் தேசம் என்பதாகும். இவர்கள் மத்திய இமாலயப் பகுதியில் வசித்த மலைவாசிகள். இவர்களின் வழியாக உருவானவர்களே சத்ரி இனம். இயற்கையை வணங்கி வந்த காஷ் இன மக்கள், புத்த மதம் தோன்றிய பிறகு, பௌத்தர்களாக மாறினர்.இந்திய நிலவியல் சர்வே முடிவில் 1852-ல் எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதன் உச்சிக்கு ஏறி சாதனை செய்ய வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் மலையேற்றக் குழுவினர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 1924-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, பிரிட்டிஷ் மலையேற்றக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் மலூரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகிய இருவரும், எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியில் மலையேறத் தொடங்கினர். ஆனால், இருவரும் காணாமல் போய்விட்டனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பனியில் உறைந்துகிடந்த ஜார்ஜ் மலூரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கைப்பையில் கிடைத்த பொருட்களையும் நாட்குறிப்பையும்கொண்டு அவர்கள் பனிப் புயலில் சிக்கி இறந்துபோனது தெரியவந்தது.


இவர்களைப் போலவே 10 பேர் எவரெஸ்ட் உச்சியை அடைய முயற்சி செய்துள்ளனர். அதில் ஒருவரும் வெற்றிபெறவில்லை. இதில், 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல வருடங்களாக, உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மலையேறுபவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவால். 1953-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி, எட்மண்ட் ஹிலாரி என்ற நியூசிலாந்து வீரரும் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நேபாளியான டென்சிங் நார்கேயும், எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர். இன்றுவரை முன்னோடி சாதனையாக அது கருதப்படுகிறது. இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்ட்டின் உச்சியை 1,200-க்கும் மேற்பட்டோர் தொட்டு இருக்கின்றனர்.

இதில், ஷெர்பா அப்பா எனப்படும் நேபாளி ஆக்சிஜன் உதவி இல்லாமல் எவரெஸ்ட்டில் பயணம் செய்து அதன் உச்சியை அடைந்து இருக்கிறார். அதோடு, 13 வருடங்களில் 12 முறை எவரெஸ்ட் உச்சியை அடைந்த வீரரும் இவர் ஒருவரே!ஷெர்பா எனப்படும் நேபாளிகள் புத்த மதத்தைத் தழுவியர்கள். இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குஇடம்பெயர்ந்தவர்கள். யாக் எனப்படும் எருதுகளைப் பராமரித்து அதை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஷெர்பா என்றால், கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்று பொருள். இன்று வரை, எவரெஸ்ட் மலையேற்றத்துக்குத் துணைபுரிகின்றவர்கள் இந்த ஷெர்பாக்கள்தான். இவர்கள் பனிக் கரடி போன்றவர்கள். எவ்வளவு மோசமான பனிப்பொழிவின்போதும் இவர்களால் மலையேற முடியும். அதோடு, வழிகாட்டுதலில் இவர்களைப் போல துல்லியமாக எவரும் செயல்பட முடியாது. 


எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் அடைவதற்கு துணையாக 400 பேருக்கும் அதிகமானோர் உதவி செய்து இருக்கின்றனர். மலையேற்றக் குழுவிலேயே 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மலையின் ஒவ்வொரு தளத்திலும் முகாம் அமைக்கவும் அவர்களுக்குத் தேவையான உணவு சமைக்கவும், சுமைகளைத் தூக்கி வரவும், மருத்துவம் செய்யவும், வழிகாட்டவும் 40-க்கும் மேற்பட்டோர் உடன் வருவார்கள்.

ஒரு முறை எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு ஒரு ஆளுக்குக் குறைந்தபட்சம் ஆகும் செலவு 75,000 டாலர். இந்திய மதிப்பில் 40 லட்ச ரூபாய். பணம் இருந்தால் மட்டும் மலை ஏறிவிட முடியாது. இதற்காக, நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காகக் காத்திருப்பவர்களின் பட்டியலில் இப்போது 2,000 பேர் இருக்கிறார்கள். இவ்வளவு சிரமங்களைத் தாண்டி மலை ஏறி எவரெஸ்ட் உச்சியை அடைந்த டென்சிங், தனது மலையேற்ற அனுபவங்களை தொகுத்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். நேபாளிக் குடும்பம் ஒன்றில் பிறந்த டென்சிங், சிறு வயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது 11-வது வயதிலேயே மலை ஏறத் தொடங்கினார். அதோடு, பிரிட்டிஷ் மலையேற்றக் குழுவில் கூலியாக வேலை செய்துகொண்டு, இமயமலையின் பல்வேறு சிகரங்களுக்கு சென்றுவந்து இருக்கிறார்.

தனது சுய முயற்சியால், மலையின் நுட்பங்களை அறிந்த டென்சிங், ஹிலாரியுடன் இணைந்து 1953-ம் ஆண்டு எவரெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார். முந்தைய ஆண்டு அவர் மேற்கொண்ட இதே பயணம் கடுமையான பனிப் புயல் காரணமாகப் பாதியில் கைவிட நேர்ந்தது. ஆகவே இந்த முறை, அவர்கள் மிகக் கவனமாகப் பயணம் செய்தனர். எவரெஸ்ட்டின் உச்சியில் முதலில் யார் கால்வைத்தது என்று, பத்திரிகை பேட்டியில் டென்சிங்கிடம் கேட்டபோது, தங்கள் இருவரில் யார் முதலில் கால்வைத்தது என்பதை, தான் ஒருபோதும் சொல்லப்போவது இல்லை என்றும், இது ஒரு கூட்டு முயற்சி என்றும் கூறினார். ஆனால், புகைப்படங்கள் நிரூபிக்கும் சாட்சி எவரெஸ்ட் உச்சியில் டென்சிங் மட்டுமே நிற்கிறார் என்பதே.இதை மறுக்கும் ஹிலாரி, டென்சிங்குக்குப் புகைப்படம் எடுக்கத் தெரியாது என்ற காரணத்தால் அவரை, தான் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதனால் மட்டுமே தன்னைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.எவரெஸ்ட் மலையேற்றத்தில் வெற்றி பெற்ற​வர்​களை​விடவும், பாதிப் பயணத்தில் இறந்து​போனவர்​களின் எண்ணிக்கை அதிகம். பனிப் பொழிவில் சிக்கிக்கொண்டோ அல்லது எதிர்பாராமல் உடல்நலக் குறைவு ஏற்பட்டோ இறந்துபோனவர்கள் அதிகம். தனது பயணம் ஒன்றில் ஒரு பனிப்பாறையை தான் உடைத்தபோது, பல வருடத்துக்கு முன், மலையேறச் சென்ற ஒரு வெள்ளைக்காரனின் உடல் அப்படியே உறைந்துபோயிருந்ததை மீட்டு எடுத்ததாக டென்சிங் நினைவு கூர்கிறார். மலையேற்றத்துக்கு விருப்பம் இருந்தால் மட்டும் போதாது. கடுமையான உடற்பயிற்சியும் மனப்பக்குவமும் தேவை. காரணம், உயரம் அதிகமாக அதிகமாக உடல் தன் இயல்பை இழந்துவிடுவதோடு மிகப் பெரிய தனிமை மனதை வெகுவாக பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் அது பைத்திய நிலைக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லும் டென்சிங், அதுபோன்ற நேரங்களில் நான் தனியாக மலையேறவில்லை என்றும், தன்னோடு புத்தரும் உடன் இருக்கிறார் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.


எவரெஸ்ட் உச்சியை அடைந்தபோது, டென்சிங் தன்னை மறந்து கூச்சலிட்டார். 15 நிமிடங்கள் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சியில் தனியாக நின்றுகொண்டு இருந்த டென்சிங், உலகம் எத்தனை பிரம்மாண்டமானது, அழகானது என்று தன்னை அறியாமல் அழுததாக விவரித்து இருக்கிறார். பௌத்த நம்பிக்கைகொண்ட டென்சிங், எவரெஸ்ட் உச்சியில் எதையாவது காணிக்கையாகப் புதைத்துவிட்டு வர விரும்பினார். அதன்படியே தனது மகள் நீமாவின் விருப்பப்படி அவள் கொடுத்து அனுப்பிய நீல நிறப் பேனா ஒன்றையும், கொஞ்சம் இனிப்புகளையும் எவரெஸ்ட் உச்சியில் புதைத்துவிட்டு வந்தார். இன்றும், உலகின் உச்சியில் ஒரு பேனா மிக நிசப்தமாகப் புதையுண்டு கிடக்கிறது.

டென்சிங்குக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், சரளமாக அவரால் ஏழு மொழிகளில் பேச முடியும். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வெற்றியின் காரணமாக, பிரிட்டிஷ் அரசின் மிக உயர்ந்த விருது டென்சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசும் அவரைக் கௌரவித்தது. இவற்றைவிட, புத்தரின் கருணைதான் இந்தச் சாதனையை தனக்கு வழங்கியது என்று நம்பும் டென்சிங், மலையேறுபவர்களுக்கான நிறுவனம் ஒன்றை நிறுவி, இமயமலைப் பயணத்துக்கு உதவி செய்து வந்தார். 1986-ம் ஆண்டு டார்ஜிலிங்கில் இறந்துபோன டென்சிங்கின் வாழ்வு, ஓர் எளிய மனிதனின் கடுமையான உழைப்புக்கும், இயற்கையைப் புரிந்துகொண்ட ஒரு மனதுக்கும் கிடைத்த வெற்றி. டென்சிங்கின் மகனும் இன்று, எவரெஸ்ட் மலையேறி சாதனை செய்து இருக்கிறார். இன்றும் மனிதனின் காலடி படாத சிகரங்களில், சூரியன் தனியே ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது.

'இமயமலை ஓர் அன்னை. அதன் உயர்ந்த மார்பகங்கள்தான் சிகரங்கள். அந்த மார்பில் இருந்து பாலை அருந்தியவன் நான். ஆகவே, அந்த அன்னைக்கு என்றும் கடமைப்பட்டவன்’ என்கிறார் டென்சிங். மலையை ஒருபோதும் மனிதனால் வெற்றிகொள்ள முடியாது. அது, இயற்கையின் புதிர். அதோடு இணைந்து வாழ்வது மட்டுமே சாத்தியமானது என்று, தனது நூலில் பல முறை குறிப்பிட்டு இருக்கிறார் டென்சிங். இமயம் சுட்டும் உண்மையும் அதுதான்.

எனது இந்தியா (இமயம் எனும் அரண் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



ஒரு தேசத்தின் நிம்மதியை அதனுடைய எல்லைப் பாதுகாப்பே முடிவு செய்கிறது. எல்லைகள் யாவும் மனிதர்கள் வகுத்துக் கொண்டது என்ற போதும் அவற்றை உருவாக்குவதும் கட்டிக் காப்பதும் எளிதானது அல்ல. வெறும் படைபலத்தால் மட்டுமே எல்லைகளைக் காப்பாற்றி விடமுடியாது. அதற்கு உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு தேசப்பற்றும், உறுதியான காவல் நடவடிக்கைகளும், கவசம் போல தடுப்பு அரண்களும் அவசியம். அந்த வகையில், இந்தியாவின் எல்லை உறுதியானது. காரணம், அது மனிதர்கள் உருவாக்கிய எல்லைக்கோடு அல்ல. இயற்கையாகவே அமைந்த அரண். ஒரு கவசம் போல இந்தியாவை பாதுகாக்கிறது இமயம்.

இமயமலையின் வரலாறு இந்தியச் சரித்திரத்தில் மிக முக்கியமானது. அது வெறும் மலைத்தொடர் மட்டுமின்றி இந்திய நாகரிகத்தின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது. இமயமலையின் ஊடாகத்தான் இந்தியச் சமூகத்தின் தொன்மை நினைவுகள் புதையுண்டு இருக்கின்றன. மகாபாரதம் போன்ற இதிகாசம் சுட்டிக்காட்டும் வாழ்க்கைமுறைஇமயமலையோடு தொடர்பு உடையதே. இமயமலையைச் சேர்ந்த வனப்பகுதியில் பூர்வகுடி மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர். புராதனச் சிற்றரசர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்து இருக்கின்றனர். மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவைப் பொத்திப் பாதுகாக்கும் உள்ளங்கையைப் போலவே திகழ்கிறது இமயம்.

மகாகவி காளிதாசன், மலைகளின் அரசன் என்று இமயத்தை புகழ்ந்து பாடி இருக்கிறார். ஞானிகள், துறவிகள், வரலாற்று ஆய்வாளர்கள், கவிஞர்கள் என்று பலராலும் புகழ்ந்து பாடப்படும் இமயம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் நெருக்கடியால் இன்று சூழப்பட்டு இருக்கிறது. இந்த மலையில் இருக்கும் அரியவகை விலங்குகளும், தாவரங்களும் அழிந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இமயம் என்றால் ஒரு பிரம்மாண்டமான மலை என்ற பொதுப்பிம்பம் நமக்கு இருக்கிறது. அது உண்மை அல்ல. இமயமலை என்பது ஒரு நீண்ட மலைத்தொடர். இந்தியாவின் பத்து மாநிலங்களை இணைக்கும் ஒரு சங்கிலித்தொடர். பிறை வடிவ அரண் போல அமைந்து இந்தியாவை பாதுகாக்கிறது இமயமலை.

உலக வரலாற்றில் இரக்கமற்ற தண்டனைகளை தந்த கொடூர மன்னர் என செங்கிஸ்கான் பற்றி அழுத்தமான பிம்பம் ஒன்று பதிந்து இருக் கிறது. அதேநேரம், அவரது ஆளுமைத்திறன் காரணமாக சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றுசேர்த்து  புத்தம் புதிய தேசத்தை உருவாக்கி ஒரு மகா பேரரசை அமைத்தவர் என்றும் செங்கிஸ்கான் புகழப்படுகிறார்.

செங்கிஸ்கான் தனது படையை பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் வீரர்கள் கொண்ட தனித் தனிப்பிரிவுகளாக அமைத்துச் செயல்பட்டார். இப்படி, படையை டிவிசன்களாகப் பிரிப்பது அதுதான் முதன்முறை. இவரது மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணம் செய்தனர். வழியில், உணவோ நீரோ கிடைக்காவிட்டால் குதிரையைக் கொன்று அதன் உதிரத்தைக் குடிப்பது இவர்களது வழக்கம்.

செங்கிஸ்கானின் நிஜப்பெயர் தெமுசின். கி.பி. 1162-ம் ஆண்டு பிறந்தவர். இவர் உருவாக்கிய மங்கோலியப் படை, எதிரிகளைக் கொன்று குவித்து வடசீனா முழுவதையும் கைப்பற்றியது. ஐம்பதாயிரம் வீரர்களுடன் இந்தியா நோக்கி புயலென வந்து கொண்டிருந்த செங்கிஸ்கானை வழிமறித்து தடுத்தது இமயமலையே. அவர், அரசியல் நெருக்கடி காரணமாக ஆப்கான் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி விடவே இந்தியா தப்பித்தது.

மங்கோலியப்படை சென்ற இடங்கள் எல்லாம் வன்கொலைகள், கற்பழிப்புகள் நடைபெற்றன. ஓய்வு இல்லாமல் படை நடத்திச்சென்று நகரங்களைத் தாக்கி தீ வைத்து வெறியாட்டம் ஆடியது செங்கிஸ்கானின் படை. தன்னால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் ஒரு முடியைப் பிடுங்கி தனது கொடியில் தொங்க விடுவது செங்கிஸ்கானின் வழக்கம். அப்படி, மயிர்களால் ஆன கொடிமரம் ஒன்று அவர் கூடவே இருந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். 1227-ல் செங்கிஸ்கான் இறந்த போதும் அவர் கல்லறையில் இருந்து உயிர்பெற்று எழுந்து வந்து ஒரு உலகப் பேரரசை நிறுவுவார் என்று மங்கோலியர்கள் இன்றுவரை நம்புகின்றனர். ஒருவேளை, இந்தியாவுக்குள் செங்கிஸ்கான் படை நுழைந்து இருந்தால் இந்தியா சிதறுண்டு போயிருக்கும் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். இந்த ஆபத்தில் இருந்து காத்தது இமயமலை.

இன்னும் முழுமையாக ஆராயப்படாத இமயமலை, உறைபனி மூடி மேகங்கள் உரசும் எழில் கொண்டது. ஹிம் என்றால் பனி. ஆலயா என்றால் கோயில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை, கடவுளின் வீடு என்றே இந்தியர் நம்புகின்றனர். பௌத்தர்களும் அதை புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகின்றனர். பௌத்த மற்றும் இந்து மதத் துறவிகள், இமயமலையை வழிபடுவதை ஒரு புனிதச் சடங்காகவே இன்று வரை கருதுகின்றனர். உலகிலேயே மிக உயரமானதும் நீளமானதுமான இமயம், 2500 கி.மீ. தூரம் வரை அறுபடாமல் நீண்டு செல்லும் ஒரு மலைத்தொடர்.மூன்று மலைத்தொடர்களாக  அமைந்துள்ளது இமயம். இதில் உள்இமயம் எனப்படும் ஜான்ஸ்கர் மலைத்தொடர், சிந்து ஆற்றின் வளைவுக்கு அருகில் உள்ள நங்க பர்வதத்தில் தொடங்கி தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியாகச் சென்று பிரம்மபுத்திரா ஆற்றின் முகப்பை அடைகிறது. இந்த மலைத்தொடரின் உயரம் 7,000 மீட்டர். சராசரி அகலம் 25 கிமீ.

நடு இமயம் எனப்படும் பங்கி தொடரின் உயரம், 5000 மீட்டருக்கும் அதிகமானது. இதன் அகலம் 80 முதல் 100 கிமீ. புற இமயம் எனப்படும் சிவாலி, 15 முதல் 50 கிமீ அகலம் கொண்டது. அதன் உயரம் 9,000 மீட்டர். இதன் தென்சரிவு செங்குத்தானது. வடசரிவில் டிராய் காடுகள் அடர்ந்துள்ளன. சிவாலிக் குன்றுகளுக்கும் தாழ்ந்த இமயத் தொடர்களுக்கும் இடையில் உள்ள வண்டல் மண் நிறைந்த அகன்ற தட்டையான பள்ளத்தாக்குகள் 'தூன்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கொரு உதாரணம் டேராடூன்.

இந்தியாவின் வளமைக்குக் காரணமான பல முக்கிய ஆறுகள் இமயமலையில்தான் உற்பத்தி ஆகின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக இமயமலைத் தொடர் அமைந்துள்ளது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி மற்றும் யாங்சி போன்ற ஆறுகள் இமயமலையில் ஓடும் முதன்மை ஆறுகள். இந்த ஆறுகள் பெரும்பாலும் பெண் பெயரில்தான் அழைக்கப்படுகின்றன. இதில் விதிவிலக்கு பிரம்மபுத்திரா. அதுமட்டுமே ஆண் பெயரைக் கொண்டது.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியைச் சேர்ந்த இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் வழியாக ஓடி வங்கதேசத்துக்குள் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ. ஓடும் இந்த ஆறு இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ. தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலேயே பிரம்மபுத்திரா பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, 10 கி.மீ. அகலம் கொண்டது. பிரம்மபுத்திரா நதியை நம்பியே அருணாசல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் விவசாயம் இருக்கிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் சீனா ஓர் அணையைக் கட்டி நீர்மின் திட்டத்துக்காக பயன்படுத்தியது. இப்போது மேலும் ஓர் புதிய அணை ஒன்றைக் கட்டி இந்தியாவுக்கு நீர் வரத்தை குறைக்க சீனா முயற்சி செய்கிறது.

இமயத்தில் இருந்து இந்துகுஷ் நீண்டு செல்கிறது. கிழக்கே லுஷாய் மலைகள் உள்ளன. இந்துகுஷ், வட ஆப்கானிஷ்தானில் உள்ள மலைத்தொடர். காபூல் மாநிலம் இந்த மலைத்தொடரை தொட்டுக் கொண்டே இருக்கிறது. இது, கடக்க முடியாத மலைத்தொடர். கணவாய்களே அதன் வாசல். ஆகவே இவை, இந்தியாவின் வட எல்லை அரணாக விளங்குகின்றன. தமிழின் சங்க இலக்கியத்தில் இமயம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பிறகு, இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று அகநானூற்றுப் பாடலில் குறிப்பு இருக்கிறது.

கொண்டல் மழை, இமயத்தைத் தீண்டிப் பொழியும் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். இப்படி, இமயம் குறித்து நிறைய உதாரணங்களை நாம் இலக்கியச் சான்றுகளாகக் காண முடிகிறது. மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பங்களை ஆராய்ந்துள்ள அறிஞர்கள், அவை இமயத்தைச் சேர்ந்த சிற்பிகளின் துணையோடு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர். காரணம், அர்ச்சுனன் தபஸ் சிற்பத்தில் காணப்படும் கங்கையும், அங்குள்ள ஆடு, குரங்கு, மான் போன்றவையும் இமயத்தில் மட்டுமே காணப்படுபவை என்கின்றனர். குறிப்பாக, மாமல்லபுரம் சிற்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் பாலுசாமி, இமயத்தின் தாவரங்கள், விலங்குகளே இந்தச் சிற்பங்களில் காணப்படுபவை என்று உறுதியாகக் கூறுகிறார்.

உலகத்திலேயே உயர்ந்த மலையாக அறியப்படும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்கின்றனர்.  சுமார் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியக் கண்டம் தனியாக ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து பயணித்து வடக்கு நோக்கி நகர்ந்து இருக்கிறது. அது, வட கண்டத்துடன் மோதி இடைப்பட்ட கடலடி பகுதி மேல் எழுந்து இமயமலையாக உருவாகி உள்ளது. இந்தப் பாறைகளிலிருந்து, பல கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன. அதை ஆராய்ந்த போது, இமயமலை கடலின் அடியில் இருந்தது என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில்ஒன்பது சிகரங்கள் இமயமலையில் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கே 2, நங்கபர்வத், அன்ன பூர்னா, கஞ்சன்ஜங்கா மற்றும் எவரெஸ்ட். இமய மலைச் சிகரங்களை மூடியுள்ள பனியானது ஆண்டு முழுவதும் உருகுவது கிடையாது. மலையின் மேல் சுமார் இருபது அடி தடிமனுக்கு பனி மூடிய நிலையில் உள்ளது. இமயமலைப் பகுதி, இந்திய நாகரிகங்களின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேதான் இந்தியாவின் புராதன சிந்துச்சமவெளி நகர நாகரிகம் தொடங்கி இருக்கிறது.

சர் சிட்னி புராடு (Sir Sidney Burraud) என்ற அறிஞர் இமயமலையைப் பல பிரிவுகளாகப் பிரித்து உள்ளார். அதன்படி, சிந்து ஆற்றுப் பகுதியில் உள்ளது பஞ்சாப் இமயமலை. இது, 134 கி.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்டது. வட மேற்கில் இருந்து தென்கிழக்காக இதில் பள்ளத் தாக்கு அமைந்துள்ளது. இதில்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. சட்லஜ் ஆற்றுக்கும் காளி ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதி, குமான் இமயமலை.  இதில் நந்தாதேவி, பத்ரிநாத், கேதார்நாத், மானச கங்கோத்ரி போன்ற மலை உச்சிகள் உள்ளன.

ஈ....


ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது :

 
பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிகவும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராளமான கிருமிகள் குடியிருக்கும் இடம்தான் இவற்றின் வாழ்விடம். நூறுக்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனையோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடும் ஈயானது, தன்னுடைய வாழ்நாளில் 75 முதல் 150 முறை முட்டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக்களை உற்பத்தி செய்கிறது என்று கணக்கிட்டுக்​கொள்​ளுங்கள்.கழிவுகளில் குடியிருக்கும் ஈ, உணவாக உட்கொள்​வதும் அந்தக் கழிவுகளைத்​தான். ஈக்களின் கால்களில் பிசின் போன்ற வட்டமான ஒரு உறுப்பு உள்ளது. கழிவுகளின் மீது உட்காரும்​போது இந்தப் பிசின் போன்ற பகுதியில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு அந்த ஈக்கள் உணவுப் பொருட்களின் மீதோ அல்லது நம் உடலின் மீதோ உட்காரும்போது, கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் சென்றுவிடுகின்றன.
 
டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, போலியோ, மஞ்சள் காமாலை, காச நோய், ஆந்த்ராக்ஸ், கண் அழற்சி, வயிற்றுப் புழுக்கள் போன்ற பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கும் காரணியாக விளங்குகின்றன ஈக்கள். இந்த ஈக்களால் ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இவை எல்லாம்  ஆரம்பத்தில் சாதாரண வியாதிகளாகத்தான் தோன்றும். ஆனால், கண்டு​கொள்ளவில்லை என்றால் பெரிய ஆபத்தாகி விடும். உதாரணமாக வயிற்றுப்போக்கு தொடர்ச்​சியாக இருக்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மஞ்சள் காமாலை, ஆந்த்​ராக்ஸ் போன்றவையும் உயிருக்கு உலை வைக்கக்கூடியவை.அதனால் குப்பைகளைத் தேங்க விடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகாமல் தடுக்க முடியும். உணவுப் பொருட்களை மூடி வைத்தே பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஈக்களால் பிரச்னை இல்லை. சுற்றுப்புறம் என்பது நம் வீடு மட்டும் அல்ல; பொது இடங்களையும் சேர்த்துத்தான். பக்கத்துத் தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரில் உள்ள ஈ, உங்கள் வீட்டுக்குப் பறந்துவர ஒரு நிமிடம்கூட ஆகாது. ஆகவே கவனம் தேவை!
 

அருள்வாக்கு - தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?



‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால் தான் சொல்கிறோம் போலிருக்கிறது! இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும் அது கூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால். சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது. ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

பதில்கள் தேடும் கேள்விகள்... - ஓ பக்கங்கள், ஞாநி


நீ ஆணா, பெண்ணா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நெருக்கடியை நம்மில் பெரும்பாலோர் சந்திப்பதே இல்லை.
  
ஆனால் இந்த நெருக்கடியை சந்திக்க வேண்டி வருவோரின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதன் அடையாளமாகத் தான் இன்று விளையாட்டு வீரர்கள் பிங்கியும் சாந்தியும் இருக்கிறார்கள்.

இந்திய தடகள வீராங்கனைகளான இருவரின் வாழ்க்கையும் அவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியால் நரகமாக்கப்பட்டுவிட்டது. இவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ளுவதற்கு முதலில் இயற்கை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும், ஆண், பெண் என்ற வரையறை இயற்கை ஏற்படுத்தியதல்ல. நாம் ஏற்படுத்தியதுதான். இயற்கை நாம் ஆண் என்று சொல்லும் வடிவத்துக்கும் பெண் என்று சொல்லும் வடிவத்துக்கும் இடையில் எண்ணற்ற வடிவங்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அறிவியல் அவற்றை அறிந்திருக்கிறது. ஆனால் சமூக ரீதியில் அவற்றுக்கெல்லாம் நாம் உரிய பெயர் சூட்டி வகைப்படுத்தி அங்கீகரிக்கத் தவறியிருக்கிறோம் என்பதுதான் அசல் பிரச்னை.

உடல்ரீதியாக அறிவியல் முற்றிலும் இது ஆண் உடல் என்றும் இது பெண் உடல் என்றும் வரையறுக்கும் உடல்கள் அமையப் பெறாமல் இரு தன்மைகளும் வெவ்வேறு விகிதங்களில் அமைந்த உடல்களைப் பெற்றவர்களை நம் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களுக்கு உடல் எப்படி இருந்தபோதிலும் மன ரீதியாக தன்னை ஆண் என்று உணர்ந்தால் ஆணாகவும், பெண் என்று உணர்ந்தால் பெண்ணாகவும் அறிவித்துக் கொள்ளும் உரிமையை நம் சமூகம் வழங்குகிறதா? அல்லது இரண்டுமில்லாத மூன்றாம் பாலினம் என்று தன்னை அறிவித்துக் கொண்டால், அதற்குரிய சட்ட அங்கீகாரமும் சமூக வசதிகளும் இன்னமும் இல்லையே?

இந்தத் தீர்க்கப்படாத சமூக சிக்கல்களை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்தும் விதத்தில்தான் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகள் அமைகின்றன.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கிக்கு இப்போது வயது 26. பதினேழு வயதிலேயே ஆசிய உள்விளையாட்டுரிலே ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றவர். பின்னர் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம். அடுத்து ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம். தொடர்ந்து விபத்துகளினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிங்கி மறுபடியும் தேறி வந்து களத்தில் இறங்கியபோது, அவருக்கு எதிராக அவருடன் இருந்த ஒரு பெண் பாலியல் வன்முறை புகார் கொடுத்ததையடுத்து கைதானார். பிங்கி ஆண் என்றும் தன்னிடம் கட்டாய உடல் உறவு கொள்ள முயன்றார் என்றும் புகார். கைது செயப்பட்ட பிங்கிக்கு பாலியல் சோதனைகள் செய்யப்பட்டன.

தனியார் மருத்துவமனையில் பிங்கிக்கு நடந்த உடல்சோதனையின் வீடியோ படங்கள் செல்போன்களிலும் இணையத்திலும் பரப்பப்பட்டன. தனியார் மருத்துவமனை சோதனை பிங்கியை ஆண் என்று முடிவு செய்தது. ஆனால் இதை பிங்கி ஆட்சேபித்ததையடுத்து அரசு மருத்துவ மனையில் சோதனைகள் செய்யப்பட்டன. அதில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அடுத்து பிங்கியின் குரோமோசோம் பேட்டர்ன் சோதனை செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

பிங்கி மீது முதலில் பாலியல் வன்முறை புகார் செய்த பெண் தான் பொய்ப் புகார் கொடுத்ததாக இப்போது சொல்லியிருக்கிறார். பிங்கிக்கு அரசு கொடுத்த நிலத்தை அவரிடம் வாங்கிய அவதார் சிங் தூண்டுதலில் பொய்ப் புகார் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த அவதார் சிங் ஏற்கெனவே கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்திய குற்றத்தில் கைதானவர். அவர் மனைவி ஜோதிர்மயியும் தடகள வீராங்கனை. பிங்கியுடன் சேர்ந்து ஓடியவர். மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யாக இருந்தவர்.

பிங்கிக்கும் ஜோதிர்மயி கணவருக்கும் நிலத்தகராறு, பணத்தகராறு என்பது தனி விஷயம். அரசு விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்த நிலத்தை அவதார் சிங் அவர்களை மிரட்டி கம்மி விலைக்கு வாங்கிக் கொள்கிறார் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. 

ஆனால் இந்த பணத் தகராறினால், பிங்கியின் பாலின அடையாளம் பிரச்னையாக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அவர் தடகளப் போட்டிகளில் மெடல்கள் வென்றபோதெல்லாம் யாரும் அவரை ஆணா பெண்ணா என்று கேட்கவில்லை.

அடையாள சர்ச்சையில் சிக்கி சீரழிக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் சாந்தி சவுந்தரராஜன். இப்போது 31 வயதாகும் சாந்தி 11 சர்வதேச மெடல்களும் 50 உள்ளூர் மெடல்களும் வென்றவர். 2006ல் கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சில சக வீரர்கள் ஆட்சேபித்ததையடுத்து அவருக்கு பாலியல் சோதனை செய்யப்பட்டது. அவரை பெண்ணாகக் கருத முடியாது என்று முடிவு செய்து கொடுத்த மெடல் பறிக்கப்பட்டது.

உண்மையில் சாந்தியின் பிரச்னை வேறு. பெண்ணாகவே பிறந்தபோதும் ஆண்ட் ரோஜென் சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம் என்ற குறைபாட்டுடன் அவர் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குறைபாட்டினால், பெண் உடல் இருந்தபோதும் பெண் தன்மைக்குரிய சுரப்புகள் பாதிக்கப்படுகின்றன.

சாந்திக்காக இந்திய அரசோ, தமிழக அரசோ, ஆசிய விளையாட்டு நிர்வாகத்துடன் சண்டையிட்டதாகத் தெரியவில்லை. இப்போது சாந்தி வறுமையினால் தினக்கூலி வேலைக்குச் செல்வதாக செய்திகள் வெளியானபின், அரசு தரப்பில் இருந்து ஆதரவுக் குரல்கள் வருகின்றன. முதலில் சாந்தி ஏன் தினக் கூலியானார் என்பதே மர்மமாக இருக்கிறது. 2006ல் அவரது மெடல் பறிக்கப்பட்டபோதும் கூட, அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சாந்திக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தார். ஓராண்டு கழித்து மனஉளைச்சலினால் சாந்தி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தருவதற்கான மையத்தை சாந்தி தொடங்கி நடத்தி வந்தார். அதில் 2009ல் 68 பேர் பயிற்சி பெற்றதாகவும் அவர்களில் சிலர் சென்னை மாரத்தானில் பரிசுகள் வென்றதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் மூன்றே வருடங்களில் சாந்தி தினக்கூலியானது ஏன் என்று புரியவில்லை. பரிசுப் பணம் சாந்தியின் சகோதரி திருமணச் செலவிலும் சகோதரர் படிப்புச் செலவிலுமாக தீர்ந்துபோய் விட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மையானால், லட்சக் கணக்கில் தங்களுக்காக செலவு செய்த சாந்தியை அவரது சகோதரரும் சகோதரியும் தினக்கூலியாளாக போக விட்டுவிட்டது நம் குடும்ப அமைப்பின் கோளாறையே காட்டுகிறது.

இப்போது மத்திய விளையாட்டு அமைச்சர் அஜமக்கான் தென் ஆப்ரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்காக அந்த நாட்டு அரசு போராடியதைப் போல சாந்திக்காக இந்திய அரசு போராடுமென்று அறிவித்திருக்கிறார்.

இந்தியாவைவிடப் பின் தங்கிய நாடாகக் கருதப்படும் தென் ஆப்ரிக்கா காஸ்டர் செமன்யாவுக்காகப் போராடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்தியா இதுவரை சாந்திக்காக செய்யவில்லை. 2006ல் மெடல் பறிக்கப்பட்ட உடன் போராடாமல் விட்டுவிட்டு 2012ல் என்ன, எப்படி போராடுவார்கள் என்று தெரியவில்லை.

காஸ்டர் செமன்யாவின் விஷயத்தில் மிக முக்கியமான அம்சம் அவர் ஆணா பெண்ணா என்று நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவைக் கூட பகிரங்கப்படுத்த அவர் தடை வாங்கியிருப்பதுதான்.

செமன்யா 2008ல் உலக ஜூனியர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர்.

செமன்யா 2009ல் 800 மீட்டர் ஓட்டத்திலும் 1500 மீட்டர் ஓட்டத்திலும் உலக ரிக்கார்டுகளை ஏற்படுத்தியதும், அவரது பாலியல் அடையாளத்தை சோதிக்க சர்வதேச தடகளக் கூட்டமைப்பு நட வடிக்கை எடுத்தது.

உடனே இதற்கு பெரும் எதிர்ப்பு பல்வேறு விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்ல, தென் ஆப்ரிக்க அரசிடமிருந்தே வந்தது. செமன்யாவுக்கு சரியான ஆலோசனை சொல்ல தவறியதற்காக அவரது கோச் ராஜினாமா செய்தார். தென் ஆப்ரிக்க அரசின் அறிவுரைப்படி செமன்யா, மிகப்பெரிய சட்ட நிறுவனத்தை தன் வக்கீலாக நியமித்தார். சோதனை முடிவுகளை வெளியிட கோர்ட்டில் தடை வாங்கப்பட்டது. தனக்கு தந்த மெடலையும் பணத்தையும் செமன்யா வைத்துக் கொள்ளலாம் என்று தென் ஆப்ரிக்க அரசு அறிவித்தது. ஒரு பெண் எப்போது பெண் தன்மையற்றவராகக் கருதப்படுவார் என்பது பற்றிய சர்வதேச தடகளக் கூட்டமைப்பின் விதிகள் தெளிவாக இல்லை என்று தென் ஆப்ரிக்க அரசு கூறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வருட லண்டன் ஒலிம்பிக்சில் தென் ஆப்ரிக்க அணியின் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வர இருப்பவர் செமன்யாதான்.

செமன்யா விஷயத்தில் தென் ஆப்ரிக்க அரசு நடந்துகொண்டதைப் போல இங்கே சாந்திக்கு நடக்காமல் போனதற்குக் காரணம், இங்கே இருக்கும் மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி, விளையாட்டுத் துறையிலும் கொள்கைகள் சீராக இல்லை. பாலியல் அடையாளங்கள் பற்றிய அரசுக் கொள்கை என்பது ஒன்று இல்லவே இல்லை.

மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டியதும் சாந்திக்காகக் குரல் கொடுத்து ஓடிவரும் தொழிலதிபர்களும் அரசியல் வாதிகளும் இதையும் இன்னொரு தானதர்மமாகக் கருதாமல், இப்போதேனும் தெளிவான பாலியல் அடையாளக் கொள்கையை நம் அரசுகள் வகுக்க வற்புறுத்தவேண்டும்.

அவை உருவாகும்வரை சாந்திகளும் பிங்கிகளும் நம் சமூகத்தில் சர்ச்சைகளாகவும் கேலிப் பொருட்களாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை.

இந்த வார யோசனை!

கொடநாட்டுக்கு அதிகாரிகளை ஜெயலலிதா அடிக்கடி வரவழைப்பதால், அங்கே போவரும் வழிகளை நன்றாக பராமரிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே ஜெயலலிதா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டமாக தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அங்கே போயிருந்து ஆட்சி நடத்தும்படி பரிந்துரைக்கிறேன்.

இந்த வாரத் திட்டு!

காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரங்களை நடத்துவதற்காக தன் அமைச்சக வேலைகளை கவனிக்காமல் வேலை நிறுத்தம் செத ஷரத் பவாருக்கு இ.வா.தி. பல மாநிலங் களில் வறட்சி மிரட்டும் நேரத்தில் விவசாய அமைச்சர் வேலைக்குச் செல்லாமல் ஸ்டிரைக் செதது கேவல மானதாகும்.  

அருள்வாக்கு - சூரிய வெளிச்சம் போல ஆனந்தம்...


ஆனந்தம் என்பதுதான் நம் ஆத்மாவின் ஸ்திரமான, சாசுவதமான ஸ்வபாவம். எதிலும் பட்டுக் கொள்ளாமல், துக்கலேசமேயில்லாமல், தன்னில் தானாக இருக்கிற சாந்த நிலையில் இருப்பதுதான் ஆனந்தம்.
அந்த ஆனந்தம் சூரிய வெளிச்சம்போல சர்வ வியாபகமாகப் பரந்து இருப்பது. ஆனால் நமக்கு அது தெரியவில்லை. மரத்தடியில் சூரிய வெளிச்சம் தெரியாத மாதிரி, மாயையின் நிழலில் இருக்கிற நமக்கு இந்த ஆனந்தம் தெரியவில்லை. மரக்கிளை ஆடும்போது இடுக்கு வழியே துளித் துளி வெளிச்சம் வருகிற மாதிரி கோபம், கர்மம், வீரம், பயம், சோகம் இத்யாதி உணர்ச்சிகள் ஆட்டம் போடுகிற போது, ஆனந்தத்தின் ஒளி துளித் துளி நம் மேல்படுகிறது. நல்ல உணர்ச்சி, கெட்ட உணர்ச்சி எதுவானாலும் நாம் ஒன்றை உணருகிறோம் என்றால் அதற்கு ஆத்மாதானே அடிப்படை? அதனால் எந்த ரஸத்தை அனுபவித்தாலும், ஆத்மாவின் ஸ்வபாவமான ஆனந்தம் அதற்குள் கொஞ்சம் ‘டால்’ அடித்துக் கொண்டு தான் இருக்கும். இப்படியில்லாமல் மரத்தை விட்டு வெளியிலே வந்துவிட்டால், முழு ஸூர்ய வெளிச்சம். கிளைகள் பலவிதமாக ஆடுகிறபோது, பல தினுசாக விழுந்த துளித் துளி வெளிச்சமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்த முழு வெளிச்சம் அதுதான்.
சூரிய வெளிச்சத்தில் கலர் இல்லை. அந்த மாதிரி சாந்தத்தில் தனியாக ஒரு உணர்ச்சி, ஒரு ரஸம் இல்லை என்பது ஒரு அபிப்பிராயம். ஆனாலும் ஸூர்ய வெளிச்சத்திலிருந்துதான் இத்தனை கலர்களும் வந்திருக்கின்றன. ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் ஸூர்ய வெளிச்சத்தைப் பிரித்து (Split) பண்ணிப் பார்த்தால் அதிலிருந்தே ஏழு கலர்களும் வருவதைப் பார்க்கலாம். ஸயன்ஸ் நிபுணர்கள் ஸூர்ய வெளிச்சத்தில் இன்னின்ன கலர்கள் இன்னின்ன விகிதத்தில் இருக்கின்றன என்று அளவிட்டிருக்கிறார்கள். அதே விகிதத்தில், இந்த ஏழு கலர்களைக் கலக்கிற போதெல்லாம், அத்தனை கலர்களும் சேர்ந்து வெள்ளையாகிவிடுகின்றன!
ஒரு உணர்ச்சியும் இல்லாத சாந்தத்தில்தான் அத்தனை உணர்ச்சிகளும் பிறந்திருக்கின்றன; அந்த உணர்ச்சிகளுக்கு ஆஸ்பதமான ஸகல ஜீவர்களும் காரியங்களும் அதற்குள்ளேயே அடக்கம்; சாந்த ஆத்மாதான் இத்தனையும்.
- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள் மழை -- 63

ஒழுக்க நெறிகள்!



நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக  நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு 
எல்லாவற்றையும்விடக் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத்  தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மைவிடக்  கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த  தப்புக்களையெல்லாம் விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம்.

இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி  கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவதில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப்  பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக இதில் ஈடுபடக்கூடாது.  ஒருவனிடம் தப்புத் தெரிந்தால், அதை நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாக அவனிடமே 
சொல்ல வேண்டுமே ஒழிய, அந்தத் தப்பை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவது வெறும்  கோழைத்தனம்தான். இப்படிப் புறங்கூறுகிறபோது அங்கே அந்தப் பையன்  இல்லாதிருக்கலாம் – ஆனால் எங்கேயும் உள்ள ஸ்வாமி அங்கேயும் இருக்கிறார்.  என்றைக்கோ ஒரு நாள் அவர் தண்டித்து விடுவார். அதற்கு யாரும் தப்ப முடியாது.

பொய், பயம், பொறாமை, நிந்தனை ஆகிய அழுக்குகளைப் போக்குகிற சோப்பு, சீயக்காய்,  அரப்பு, வாசனைப் பொடி மாதிரி சத்தியம், தைரியம், விட்டுக் கொடுக்கிற சுபாவம்,  இன்சொல் ஆகியன இருக்கின்றன.

இப்படியே நம் மன அழுக்கைப் போக்குகிற நல்ல குணங்கள் பல இருந்தாலும்கூட, வேறொரு  ஜலம் இல்லாவிட்டால் இந்த நல்ல குணங்கள் மாத்திரம் நமக்கு மனத்தூய்மையைக்  கொடுக்க மாட்டா. அந்த ஜலம்தான் தெய்வ பக்தி. எல்லா அழுக்குகளும் நீங்குவதற்கு,  கங்கா ஸ்நானமாக இருப்பது ஸ்வாமியிடம் செய்கிற பிரார்த்தனைதான்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய 
ஸ்வாமிகள்

Wednesday, July 25, 2012

பனிலிங்கம் தரிசனத்தை காரணம் காட்டி இந்தியாவிலிருந்து தப்பிக்க நித்தி திட்டம்?




தினம் ஒரு பிரச்னையை சந்தித்து வரும் நித்தியானந்தா, ஒட்டுமொத்த சிக்கல்​களில் இருந்தும் தப்பிக்கும் வழியை ஒரு​வழியாகக் கண்டுபிடித்து விட்டார் என்கிறார்கள் சில சீட கோடிகள். ஆம், பனிலிங்க தரிசனம் என்று இந்தியாவை விட்டுக் கிளம்பி, எல்லைக்கு வெளியே தொல்லைகள் இன்றி இருக்க எண்ணமாம்! 
நித்திக்கு விழுந்த மரண அடி!
குஜராத்தைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தொழில் அதிபரான பாபெட்லால் சாவ்லா, 'அமெரிக்காவில் வேதிக் காலேஜ் தொடங்குவதற்காக நித்தியானந்தா என்னிடம் பணம் கேட்டார். அவர் மீதிருந்த நம்பிக்கையில் நித்தியானந்தா ஃபவுண்டேஷனுக்கு 1.565 மில்லியன் டாலர் வழங்கினேன். அந்தப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும்’ என்று கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். ஜூன் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசார​ணையில் நித்தி சார்பாக அவரது சீடர்கள் ஆஜராகி தீர்ப்பின் வீரியத்தைக் குறைக்க ரொம்பவே போராடினர். ஆனாலும், 'நித்தி ஃப்ராடு’ என தலையில் குட்டியது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து, ஜூலை 19-‍‍ம் தேதி வெளியான‌ தீர்ப்பில், 'பாபெட்​லால் சாவ்லாவிடம் நித்தியானந்தா ஃபவுண்​டேஷன் 1.565 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.5 கோடி) வாங்கியது உண்மை. அதை, நித்தியானந்தா ஃபவுண்டேஷன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும், சாவ்லா இந்த  வழக்குக்காக பலமில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார். எனவே, வழக்கின் செலவுத் தொகையையும் (இதுவும் பல கோடிகள் வரும்) திருப்பி அளிக்க வேண்டும்.
2004‍-ம் ஆண்டு 'லாபம் தராத தொண்டு நிறுவனமாக’ பதிவு செய்யப்பட்ட நித்தி​யானந்தா ஃபவுண்டேஷனின் ஆவணங்களைத் தணிக்கை செய்தபோது, இது லாபத்துக்காக இயங்கியது எனத் தெளிவாகத் தெரிகிறது. நித்தியானந்தா ஃபவுண்டேஷனின் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்பட்ட‌ சுவாமி நித்தியானந்தா, இன்றுவரை தொடர்ந்து, நித்தியானந்தா ஃபவுண்டேஷனுக்கு ஒரு ஏஜென்ட் போல செயல்பட்டுள்ளார். பாபெட்லால் சாவ்லா போன்ற பலரிடம் நித்தியானந்தா ஃபவுண்டேஷன் பணம் பறித்து இருக்கிறது. எனவே, நித்தியானந்தா ஃபவுண்டேஷன் ஒரு ஃப்ராடு பவுண்டேஷன்‌ என்பதும் தெளிவாகி இருக்கிறது!'' என்று அதிரடித் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஸ்டீவன்.
நிம்மதி இழந்த நித்தி!
அமெரிக்க கோர்ட்டின் அதிரடித் தீர்ப்பைக் கேட்டதும், 'நித்தியானந்தா ஃபவுண்டேஷனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அந்தத் தீர்ப்பு என்னைப் பாதிக்காது’ என்று உடனடியாக மீடியாக்களிடம் அலறினார் நித்தி.
ஆனால், தன்னுடைய அமெரிக்க சீடரான கோபால் ரெட்டி ஷீலத்திடம், 'உட‌னடியாக இந்த வழக்கில் அப்பீல் செய்ய வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். இதுபற்றி சொல்லும் சிலர், ''நித்தியானந்தா ஃபவுண்டேஷன் லாப நோக்கம் இல்லாத தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில்தான் 2004‍-ல் இருந்து இதுநாள் வரை வரி ஏதும் செலுத்தவில்லை. மேலும், நித்தியானந்தா ஃபவுண்டேஷன் மூலம் பெற்ற பணத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்தத் தீர்ப்பின் மூலம் நித்தியானந்தா ஃபவுண்டேஷன் லாபம் தரக் கூடிய நிறுவனம் என்பது உறுதியாகி இருப்பதால், இதுவரை நடந்த வரி ஏய்ப்புக்கு வட்டி போட்டு வசூலிக்க அமெரிக்க அரசு முடிவெடுக்கும். அப்படி நடந்தால் நித்திக்குத் தலைதூக்க முடியாத பணச்சுமை ஏற்படும். மேலும், நித்தியின் ஏற் றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் மூலமாக சிலைகளை விற்பனை செய்த விவகாரமும் வெளி​யே வரும். அதனால் நித்திக்கு ஆபத்துதான்'' என்கிறார்கள்.

தப்பிக்கிறாரா நித்தி?!
நித்தியானந்தாவின் சமீபகால நடவடிக்கை குறித்துப் பேசுகிறார், அவருடன் இருக்கும் நிர்வாகி ஒருவர். ''அமெரிக்க கோர்ட்டில் இருந்து தீர்ப்பு வந்த​ததில் இருந்தே சுவாமி ரொம்பவும் டென்ஷனாகி விட்டார். யாரிடமும் முன்பு போன்று சகஜமாகப் பேசுவது இல்லை. சுவாமிக்கு இப்போதைக்கு நேரம் சரியில்லை என்பதால் பரிகாரம் தேடி‌ சிவபெருமானின் இருப்பிடமான கைலாய மலைக்குப் போகத் திட்டமிட்டு இருக்கிறார். ஜூலை 27‍-ம் தேதி கிளம்புகிறார். அங்கே 48 நாட்களுக்கு அக்னி சூழ் பிரவேச யாகத்தில் ஈடுபட இருக்கிறார். சுவாமிக்கு நெருங்கிய ஏழு பேர் மட்டும் உடன் செல்ல இருக்கிறோம்.
அங்கே சென்று வந்த பிறகு மதுரையில் முழுநேரமாக ஆன்மிகத்தில் இறங்கி ஜொலிப்பார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு கைலாய யாத்திரை இருப்ப​தால், கர்நாடக சி.ஐ.டி-யின் ஆண்மை பரிசோதனையில் கலந்து கொள்ள மாட்டார். அவர் வழக்கு விவரங்களை எங்களுடைய லீகல் டீம் பார்த்துக்கொள்ளும். ஆனால், ஆண்மை பரிசோத‌னையைப் பார்த்து சுவாமி அஞ்சவில்லை என்பதை மட்டும் மறக்காமல் எழுதுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், நித்தியின் முன்னாள் சகாக்களோ, ''ஆர்த்தி ராவ் கூடிய விரைவில் மீடியாக்கள் முன் தோன்றி நித்தி குறித்த பல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கப் போகிறார். அது மட்டுமில்லாமல், சி.ஐ.டி. போலீஸின் ஆண்மைப் பரிசோதனையைக் கண்டு நித்தி பயப்படுகிறார் என்பதே உண்மை. அதனாலேயே பனிலிங்க தரிசனம் என்ற பெயரில் இமயமலைக்குச் செல்லும் நித்தி, அப்படியே நேபாளம் சென்று, முடிந்த வரை அங்கேயே தங்கிவிடும் முடிவில் இருக்கிறார்'' என்று எச்சரிக்கையாகச் சொல்கிறார்கள்.
நித்தி சீரியலின் அடுத்த எபிஸோடையும் பார்ப்போமே...!

விற்கப்பட்ட சிறுமிகள் 37.... பாதிக்கப்பட்ட சிறுமிகள் 17..


கேரளச் சிறுமியான 15 வயது சத்யாவின் மரணம் குறித்து, 'கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து... பெரம்பலூரில் சிதைக்கப்பட்ட கேரளச் சிறுமி!’ என்ற தலைப்பில் கடந்த வாரம் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், 'தவறை மறைக்கத் துணை போன மருத்துவமனைகள் மற்றும் விலை போன தமிழக காவல் துறை அதிகாரிகள் மீது சட்டம் பாய்வது எப்போது?’ என்று கேள்வி எழுப்பி இருந்தோம். 
முதல் கட்டமாக, குற்றத்தை மறைத்த பெரம்பலுர் காவல் நிலைய எழுத்தர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் மயில்சாமிக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயலாம்.
வீட்டு வேலைக்காக வந்த சத்யாவைக் கற்பழித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், ஜெய்சங்கர், மகேந்திரன், அன்பரசு ஆகியோர் கடந்த 19-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆண்மைப் பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர். ராஜ்குமாரை தவிர்த்த மூவருக்கும் 11.50-க்குள் பரிசோதனை முடிந்துவிட்டது. ஆனால் ராஜ்குமார் மட்டும் மாலை 4 மணி வரை இழுத்தடிக்கவே, கடுப்பான மருத்துவர்கள் அவரை மிரட்டிதான் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவில் நான்கு பேரும் ஆண்மைத்தன்மை உள்ளவர்கள் என மருத்துவரால் சான்றளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உமாபதி களமிறங்கி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில், கேரளாவில் போடப்பட்ட வழக்கில் புரோக்கர்களான பன்னீர் செல்வம், ஹரிகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து பீர்மேடு சப்-ஜெயிலில் அடைத்துள்ளனர் கேரள போலீஸார். விசாரணையில் பன்னீரும், விஜயகுமாரும் ஒரே வீட்டில் பெண் எடுத்த வகையில் சகலைகள் எனவும், இருவரும் தமிழ்நாட்டுக்கு பல சிறுமிகளை அனுப்பி இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் மீது கேரளாவில் போடப்பட்ட வழக்கின்படி, ஏஜென்டுகளாக இருந்து ஆள் கடத்தல், கொலை மற்றும் பெண்ணை கொடூரமாக கற்பழித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கேரள அரசின் குழந்தைகள் நலவாரியம் இடுக்கி மாவட்டத்தில் விசாரணையில் இறங்கிய நேரத்தில், சத்யாவின் பெற்றோர் சந்திரன் மற்றும் சுசிலாவும் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் அளித்துள்ளனர்.
'சத்யாவுக்கு நோய் இருந்தது. அதற்காக பீர்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். சத்யா ஒரு பையனைக் காதலித்தாள். அதனாலேயே சத்யாவை இடம் மாற்றி வேறு ஊருக்கு படிக்க அனுப்பினோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். பீர்மேடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல வாரியத்தினர் விசாரித்தபோது, கடந்த இரண்டு மாதங்களில் சத்யா உட்பட அந்த ஊர்க்காரர்கள் எவரும் சிகிச்சைக்கு வரவில்லை என்று பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறார்கள். சத்யா படித்த வ.உ.சி. நினைவுப் பள்ளியில் விசாரித்த குழுவினரிடம், சத்யாவின் ஆசிரியர்களும் தோழிகளும் சத்யா யாரையும் காதலிக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அந்தக் குழுவின் விசாரணை முடிந்துவிட்டது. அதன்படி, இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சத்யாவைபோன்று 37 பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளுக்காக தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்களாம். பணத்துக்கு ஆசைப்பட்டு தவறான தகவல்களைத் தந்த சத்யாவின் பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று கேரள அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் சத்யாவுக் காகப் போராடி வரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பிஜுமோளிடம் பேசினோம். ''சத்யாவின் மரணத்துக்குப் பிறகு ஆய்வு செய்ததில் வீட்டு வேலைக்குச் சென்ற ஏராளமான பெண்களில், 17 பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சத்யாவின் அக்கா நித்யா உட்பட பலர் புரோக்கர்களால் விற்பனை செய்யப்பட்டிருக்கிறார்கள். மெடிக்கல் ரிப்போர்ட்டில் சத்யா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கு இரு மாநிலப் பிரச்னையாக இருப்பதால், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கேரள சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளேன். என் கோரிக்கை சபையில் அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சத்யாவின் மரணம் - புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது'' என்றார்.  
சத்யாவின் இறப்பு குறித்து பத்திரிகை களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியாகியும், இறுதிச் சடங்குக்குக் கூட அவரது அக்கா நித்யா வரவில்லை. அதனால் நித்யா இப்போது உயிரோடுதான் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இரு மாநில போலீஸும் தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதால், விரைவில் பல திருப்பங்களும் அதிரடி கைதுகளும் அரங்கேறலாம்!