மகன் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டிருக்க, தாய் கண்ணாம்பா பக்கம் பக்கமாய் வசனம் பேசி, 'மனோகரா’ படத்தில் சபதம் எடுப்பார். அதுபோலவே, தன் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டதும், சபதம் எடுத்துக்கொண்டு அரசியல் களத்தில் குதித்தார் விஜயம்மா. சொன்னபடியே, ஆட்சியில் இருக்கும் ஆந்திர காங்கிரஸ் கட்சியை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டார்.
எந்த ஜோடனையும் இல்லாமல் வெள்ளந்தியாகவே பேசுகிறார் விஜயம்மா...
''இந்த அளவுக்கு வெற்றியை எதிர்பார்த்தீர்களா?''

''சந்திரபாபு நாயுடுவும் சிரஞ்சீவியும், 'இது அனுதாபத்தால் கிடைத்த வெற்றி’ என்று சொல்கிறார்களே?''
''போட்டியிட்ட எட்டு தொகுதிகளிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களுடைய வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. சிரஞ்சீவி தம்பி பாவம்... சொந்தமாக கட்சி ஆரம்பித்து, தன் ரசிகர்களையும் தொண்டர்களையும் 'அம்போ’னு விட்டுட்டு காங்கிரஸில் போய் செட்டில் ஆயிட்டார். டெல்லியில் திட்டு வாங்காமல் தப்பிக்கத்தான் இப்படி ஏதாவது சொல்வார். நம்பாதீங்க. மக்கள் ராஜண்ணாவின் ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி.''

''காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதற்காக முழங்கால் வலியோடு பொட்டல் வெயிலில் ஆந்திராவின் அத்தனை மூலைக்கும் பாத யாத்திரை போனார் ராஜண்ணா. 37 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக வியர்வை சிந்தியவர், கடைசியில் அந்தக் கட்சிக்காகவே ரத்தமும் சிந்தி செத்துப்போனார். காங்கிரஸையும் பெரிய குடும்பத்தையும் (சோனியாவின் குடும்பம்) எந்த அளவுக்கு அவர் நேசித்தார் என்பது என்னைவிட ஆந்திராவின் அடிமட்ட காங்கிரஸ் தொண்டனுக்கு நன்றாகவே தெரியும். 'ராகுல் காந்தியை 2014-ல் பிரதமர் ஆக்க வேண்டும்’ என்று முதலில் வெளிப்படையாகச் சொன்ன முதல்வர் ராஜண்ணாதான். அப்படிப்பட்டவரைப் பறிகொடுத்து விட்டேன். அவரது உடலுக்கு முன்னால் நின்றுகொண்டு சோனியா காந்தி, 'நான் இருக்கேன்... அழாதீங்க. மிஸ்டர் ரெட்டி செய்ய வேண்டியதை நான் செய்வேன். நீங்க அழுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்’ என்று என் கையைப் பிடித்துச் சொன்னார். சத்தியம் செய்யாத குறைதான். ஆனால் அன்னையாக நினைத்த என்னை, இதுவரை அழ மட்டுமே வைத்திருக்கிறார் சோனியா. இதுநாள்வரை அவரை நான் எதிரியாக நினைத்ததே இல்லை. ஆனால், என் ஒரே மகனை வேண்டும்என்றே வேட்டையாடினால் சும்மா விடுவேனா?''
''அப்படியென்றால், உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பீர்களா?''
''ஒருபோதும் அப்படி ஒரு கீழ்த்தரமான அரசியலை நடத்த மாட்டோம். அப்படி நினைத்திருந்தால்,
எப்போதோ ஆட்சியைக் கவிழ்த்திருக்க முடியும். நானும் ஜெகனும் மக்களை நம்பி இருக்கிறோம். மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதே நேரத்தில், காங்கிரஸ் ஏற்படுத்தும் அத்தனை நெருக்கடிகளையும் சகித்துக்கொண்டு சும்மா இருக்கவும் மாட்டோம். 2014-ல் ராகுல் காந்தியின் திட்டங்களைக் காலி பண்ணி, ராஜண்ணா ஆட்சியை நிறுவுவோம். அதற்காக இப்போதே உழைக்கத் தயாராகி விட்டோம்!''

''ஜெகன் மீதான ஊழல் குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற புகார்களுக்கு உங்கள் பதில் என்ன?''
''நாங்கள் சுரங்கத் தொழிலை ராஜண்ணா உயிருடன் இருந்த காலத்திலேயே நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அவர் இருந்தபோது கண்ணுக்குத் தெரியாத ஊழல், இப்போது மட்டும் காங்கிரஸின் கண்ணுக்குத் தெரிகிறதா? ஜெகன் மீதும், என் கணவர் மீதும் ஆயிரம் குற்றச்சாட்டுகளை அடுக்கட்டும், வழக்குகளைப் போடட்டும். அதை எல்லாம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்று விட்டோம். அம்பேத்கரின் சட்டத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அங்கேயும் ஜெயித்துக் காட்டுவோம்.''
''ஜெகனை மீட்பதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை மீண்டும் காங்கிரஸோடு இணைக்கப் பேரம் நடக்கிறது என்று சொல்லப்படுவது உண்மையா?''
''பிரதமருக்கும், சோனியாவுக்கும், குடியரசுத் தலைவருக்கும், 'ஜெகனை மீட்டுத் தாருங்கள்’ என்று நான் எழுதும் கடிதங்களை வைத்து, ஆந்திர அரசியல்வாதிகள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதை இது. இப்போதுகூட பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறேன். ஆனால் உடைந்த கண்ணாடிகள் என்றுமே ஒட்டாது!'' என்றார் உறுதியோடு!
No comments:
Post a Comment