Monday, November 26, 2012

தமிழக கான்ஸ்டபிள் ஒருவரே தேசிய தலைவர் பிரபாகரனை முதல் முதலாக அதிகாரபூர்வமாக கைது செய்த நபர் !


ஒருவரே தேசிய தலைவர் பிரபாகரனை முதல் முதலாக அதிகாரபூர்வமாக கைது செய்த நபர்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களின் பெயரை, தமிழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை தொடர்பான வழக்கில் இருந்து நீக்க வேண்டும்” என செஷன்ஸ் நீதிமன்றத்தில், தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், மக்கள் அறிந்திராத சில உள்ளகத் தகவல்களை நாம் இங்கே பிரசுரித்துள்ளோம். 1980 பதுகளில் நடைபெற்ற இச் சம்பவத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சரி வாருங்கள் விடையத்துக்குச் செல்லலாம் !

இங்கு குறிப்பிடப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், சென்னை பாண்டி பஜாரில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் ஒரு தலைமுறையே மாறிவிட்டது. அன்று அங்கு என்ன தான் நடந்தது ? விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும், பிளாட் இயக்க தலைவர் உமா மகேஸ்வரனும், இலங்கைக்கு வெளியே, சென்னை பாண்டி பஜாரில், பொதுமக்கள் நடமாடிய ஒரு தினத்தில், தமக்கிடையே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். 1982-ம் ஆண்டு, மே மாதம் 19-ம் தேதி இது நடைபெற்றது. அதற்கு முன்னரே இரு தரப்புக்கும் முறுகல் நிலை இருந்தது என்பது யாவரும் அறிந்த விடையம். மே மாதம் 19-ம் தேதி, சென்னை பாண்டி பஜாரில் உள்ள உணவகம், ஒன்றுக்கு வந்தனர் உமா மகேஸ்வரனும், அவரது இயக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும். உணவை அருந்திய பின்னர், இந்த இருவரும் உணவகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட தமது மோட்டார் பைக்கை நெருங்கியபோது, வெளியே பிரபாகரன் நிற்பதை கவனித்து விட்டார் உமா மகேஸ்வரன்.

பிரபாகரனுடன் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் நின்றிருந்தார். பாண்டி பஜாரில் பிரபாகரனை கண்டவுடன், அவர் தம்மை சுடுவதற்கு வந்துள்ளார் என நினைத்துவிட்டார் உமாமகேஸ்வரன். அவர் தம்மை சுடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என தம்மிடமிருந்த துப்பாக்கியை உருவினார் உமா மகேஸ்வரன், கிட்டத்தட்ட அதே எண்ண ஓட்டத்துடன், அதே கணத்தில், தம்மிடம் இருந்த துப்பாக்கியை உருவினார், பிரபாகரன். இது தான் அங்கே நடந்தது. உண்மையில் சிலவேளைகளில் இவ்விருவரும் தற்செயலாகக் கூடச் சந்தித்து இருக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர், தவறாக நினைத்துவிட்டனர். இருவரும் துப்பாக்கியை உருவியதுடன் நிற்கவில்லை, சுடத் தொடங்கினார்கள். பாண்டி பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரம் அது. பிரபாகரனுடன் வந்த ராகவனே உமாமகேஸ்வரன் துப்பாக்கியை உருவியதைப் பார்த்து, முதலில் சுட ஆரம்பித்தார். இச் சமரில் இருவரும் காயப்படவில்லை, ஆனால் உமா மகேஸ்வரனுடன் வந்த கண்ணன் மீது துப்பாக்கி சூடு பட்டு ரத்தம் வழிந்தது.

உமா மகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டதில் இருந்து பிரபாகரன் தப்பித்துக் கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்களின் கவனம், பிரபாகரன், மற்றும் ராகவன் மீது படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர, பிரபாகரனும் ராகவனும் பாண்டி பஜாரில் இருந்து தப்ப முயற்ச்சி செய்தனர். இதேவேளை தப்ப முயற்சித்த பிரபாகரனை மக்கள் உதவியோடு ஒருவர் மடக்கிப் பிடித்தார். தமிழக காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அவர். பெயர் மாணிக்கம். மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார். இவர் ஒருவரே தேசிய தலைவர் பிரபாகரனை, முதல் முதலாக அதிகாரபூர்வமாக கைது செய்த ஒரே நபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பாண்டி பஜாரில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸ்காரர் மாணிக்கம், பொதுமக்கள் துணையுடன் பிரபாகரனையும், ராகவனையும் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கண்ணனையும், மாம்பலம் போலீஸ் பின்னர் கைது செய்தது.

தப்பிச் சென்ற உமா மகேஸ்வரனால் சில தினங்கள் தலைமறைவாக இருக்க முடிந்தது. 6-வது தினம் (மே 25-ம் தேதி), கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில், உமா மகேஸ்வரனை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, உமா மகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டதில், தமிழக காவல்துறையை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். பிரபாகரன், உமா மகேஸ்வரன், ராகவன், கண்ணன், நிரஞ்சன் ஆகிய ஐந்து பேரும், சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த செய்தி இலங்கைக்கு சென்றது. அந்த நாட்களில், இலங்கையில் அதி தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நபர்களில் பிரபாகரன் மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோர் அடங்கியிருந்ததால், இலங்கை மகிழ்ச்சியில் குழித்தது. இலங்கையின் அப்போதைய துணை பாதுகாப்பு அமைச்சர் டி.பி.வீரபிட்டிய, இந்த இருவரையும் கைது செய்த தமிழக காவல்துறைக்கு 10 லட்சம் ரூபா பரிசை அறிவித்தார்.

அத்துடன், தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு செல்ல இலங்கை ஐ.ஜி.பி.யாக இருந்த ருத்ரா ராஜசிங்கம் என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு. ருத்ரா ராஜசிங்கம் சென்னை வந்து இறங்கினார். அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பேபி சுப்ரமணியம், ப.நெடுமாறனை சந்தித்து பிரபாகரனை நாடுகடத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இது நடைபெற்றது 1982 - ம் ஆண்டு. அப்போது ப.நெடுமாறன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி (தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்) ஆரம்பித்திருந்தார். நெடுமாறன், தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டார். பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் நாடு கடத்தாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தினார். கருணாநிதி கொடுத்த ஐடியாவின்படி, சர்வ கட்சி கூட்டம் ஒன்றை கூட்டினார். இது நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் உட்பட ஈழ விடுதலைப் போராளிகள் குழுக்கள் எதுவும் பெரிதாக பிரபலமாக இருக்கவில்லை. எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு ஏதும் இருந்ததில்லை. பிரபாகரன் என்றால் யார் என்று தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வேளையில் வழக்கறிஞர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் நெடுமாறன் ஐயாவோடு இருந்தார்.

சர்வ கட்சிகளும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாக, பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துவதில்லை என்ற முடிவை எடுத்தது மத்திய அரசு. தமிழக சிறையில் கைதிகளாக இருந்த இவர்கள் இருவரும் அப்போது இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டிருந்தால், ஈழப் போராட்டம் எப்போதோ முடிந்து போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகிய இருவரையும் இந்தியாவில் இருந்து நாடு கடத்தாமல் செய்ததில் பங்கு வகித்தவர், தற்போது ஈழ ஆதரவாளர்கள் பலராலும் திட்டித் தீர்க்கப்படும் கருணாநிதி என்பது பலருக்கும் தெரியாது. கருணாநிதி மற்றும் நெடுமாறன் போன்ற நபர்களின் தலையீட்டால் தான், அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜீ.ஆர் இவ்விடையத்தில் கவனம் செலுத்தவேண்டி நேரிட்டது. மத்திய அரசு, “இவர்களை நாடு கடத்த முடியாது” என அறிவித்ததையடுத்து, வெறும் கையுடன் திரும்பிச் சென்றார் ருத்ரா ராஜசிங்கம்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பிரபாகன், உமா மகேஸ்வரன் இருவரையும் கண்டிஷன் பெயிலில் விடும் தீர்ப்பு வழங்கப்பட்டது. கண்டிஷன் என்ன? இருவரும் நாட்டை விட்டு வெளியேற கூடாது. வழக்கு முடியும்வரை இருவரும் ஒரே நகரத்தில் இருக்க கூடாது என்பது ஆகும். உமா மகேஸ்வரன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் வழக்கு முடியும்வரை தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டது கோர்ட். அதையடுத்து உமா மகேஸ்வரன் சென்னையில் பெருஞ்சித்தனார் இல்லத்திலும், பிரபாகரன் மதுரையில், நெடுமாறன் இல்லத்திலும் தங்கியிருந்தனர். சிறிதுகாலம் மதுரையில் இருந்த பிரபாகரன், தலைமறைவாகி, இலங்கை சென்றுவிட்டார். இவர் மீது ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு, 7-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து பிரபாகரன் அவர்களது பெயரை நீக்கவேண்டும் என்றே தற்போது கோரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட சிலர் வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தமிழ சி.பி.சி.ஐடி யினர் தெரிவித்துள்ளனர். இது தான் தற்போதைய நிலை.

No comments:

Post a Comment