Tuesday, September 30, 2014

மிஸ்டர் கழுகு: 'மிஸ்டர் விசுவாசம்!'

''செப்டம்பர் மாதம் செப்​டம்பர் மாதம்
 வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்'' - என்று பாடியபடியே ரீ-என்ட்ரி கொடுத்தார் கழுகார்!
''இருக்கிற டென்ஷன்ல என்ன பாட்டு? அ.தி.மு.க  தலைமைக் கழகத்துக்குப் போனதை ஆரம்பியும்'' என்று நாம் அவசரம் காட்டினோம்.
''நான் பாடின பாட்டுக்கும் சொல்லப்​போற விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கு. பன்னீருக்கு ரெண்டாவது லட்டு தின்ன சான்ஸ் கிடைச்சிருக்கு. முதல்வர் நாற்காலி என்கிற முள் கிரீடத்தை சூட்டிக்கொள்ளப் போகும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அக்டோபர் மாதம் வந்தாலே அதிரடித் திருப்பம் நடக்கும்.
2001 சட்டசபைத் தேர்தலில் இரண்டா​வது முறையாக ஆட்சியில் அ.தி.மு.க அமர்ந்த நேரம் அது. முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் சான்ஸ் அடித்தது அப்போதுதான். சட்டசபை நடைமுறை பற்றியே அப்போது அறியாதவராக முதல் வரிசையில் கடைசி ஆளாக அமர்ந்திருந்தார் அவர். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தபோது வருவாய்த் துறை அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் 'மானிய கோரிக்கை’ என்பதைக்கூட சரியாக உச்சரிக்க முடியாமல் 'மாணிக்க கோரிக்கை’ என சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த வரிசையில் முதல் ஆளாக அமர்ந்திருந்த ஜெயலலிதா புன்னகைத்தபடியே இருந்தார். 2001 ஜூன் மாதத்தில் அரங்கேறியது இந்தக் காட்சி. ஆனால், அதே ஆண்டு செப்டம்பரிலோ ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வர்.''
 
''ம்!''
''டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் 2001-ல் ஜெயலலிதா முதல்வராகத் தொடர முடியாமல் போனது. 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா விருப்பப்படி நடந்து கொண்டார். அந்தப் பணிவுக்கும் விசுவாசத்துக்கும்தான் இப்போது இரண்டாவது சான்ஸ் அவருக்குத் தரப்பட்டது. கடந்த முறை அவர் பெயரை டிக் அடித்தது சசிகலா. ஆனால், இப்போது டிக் அடித்தது ஜெயலலிதா. 26-ம் தேதி இரவு இரண்டு ஃபைல்களை ஜெயலலிதா தயார் செய்தார். ஒன்று 'ஏ’ ஃபைல். இன்னொன்று 'பி’ ஃபைல். ஏ ஃபைலில் இருந்த பெயர் செந்தில் பாலாஜி. பி ஃபைலில் இருந்த பெயர் ஓ.பன்னீர்செல்வம்.''
''அப்படியா?''
''பன்னீர்செல்வத்தை முன்பு தேர்வு செய்தபோது, 'இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை உங்களுக்கெல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரைத் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன். அதற்கு ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார் ஜெயலலிதா. அப்படிச் சொல்ல முடியாத சூழ்நிலையில் சிறையில் இருக்கிறார் இப்போது!''
''முதல்வர் பதவிக்குப் பலரின் பெயரும் அடிபட்டதே?''
''ம்... ஓ.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய பெயர்கள் சொல்லப்பட்டன. பரப்பன அக்ரஹாரா கோர்ட்டில் இருந்து இரண்டு முறை வெளியே வந்த ஜெயலலிதா சந்தித்தது ஓ.பன்னீர்செல்வத்தைத்தான். தண்டனை அறிவிக்கப்பட்டு ஜெயிலுக்குக் கிளம்புவதற்கு முன்பு பன்னீர்செல்வத்திடம், 'எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடக்க வேண்டும். நீங்கள்தான் பொறுப்பாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். தீர்ப்புக்கு மறுநாள் காலை ஜெயலலிதாவை ஜெயிலில் சந்தித்துவிட்டு சென்னைக்கு வரக் காத்திருந்தார் பன்னீர்செல்வம். ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மறுத்துவிட்டதாம் சிறை நிர்வாகம். அதன் பிறகே அங்கிருந்து அவசரமாக சென்னைக்குக் கிளம்பியிருக்கிறார். அவர் அங்கிருந்து கிளம்பும்போதே எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சென்னையில் தயாரானது.''
''இது மற்ற அமைச்சர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?''
''நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டும் தெரியுமாம். அவர்கள்தான் சென்னையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தலைமைக் கழகத்துக்கு ஓ.பி.எஸ் வந்தபோது வெளியே கூடியிருந்த பலரும் அவருக்குக் கைகொடுத்து வாழ்த்துச் சொன்னார்கள். மகளிர் அணியைச் சேர்ந்தவர்களோ, 'அம்மா...அம்மா!’ என்று கதறியழுதனர். அதில் உச்சகட்டமாக அமைச்சர் கோகுல இந்திரா தலைவிரி கோலமாக தலையிலடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறினார். எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கட்சி அலுவலகத்துக்குள் போனார் ஓ.பி.எஸ் கூட்டம் தொடங்கியதும் முதலில் நத்தம் விஸ்வநாதன்தான் ஆரம்பித்தார். ''இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனாலும் அம்மாதான் நமக்கு எப்போதும் நிரந்தர முதல்வர். என்றாலும் நம் இதயத்தில் எல்லாம் அவர்தான் நிறைந்திருக்கிறார். அவரின் பொற்பாதங்களை வணங்கி, அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வர் பதவிக்கு புரட்சித்தலைவி அம்மாவின் உத்தரவுப்படி கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முன்மொழிகிறேன்!’ என்று சொல்லும்போது கதறி அழுதார். அதை அவைத்தலைவர் மதுசூதனன் வழிமொழிந்தார். மதுசூதனனும் கண் கலங்க... அங்கிருந்த பெண் எம்.எல்.ஏ-க்கள் எல்லாம், 'அம்மா... அம்மா...’ என்றபடி கதறியழ ஆரம்பித்துவிட்டனர். இதில் தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களான மா.ஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஆறுபேர் வந்தார்கள். இவர்களிடம் கையெழுத்து பெறப்பட வில்லை. ஒரு முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் இந்த அளவுக்கு சோகமாக நடந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும்.''
''பன்னீரின் ரியாக்ஷன்?''
''அந்த ஹாலில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை நோக்கி கும்பிட்டவரின் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. சோகம் அப்பிய முகத்துடன் எல்லோரையும் பார்த்து வணக்கம் சொன்னார் பன்னீர்செல்வம். 4.30 மணிக்கு ராகு காலம் தொடங்குவதால் அதற்கு முன்பே அவசரமாகக் கூட்டத்தை முடித்தார்கள். ஆறு மணிக்கு கவர்னர் மாளிகையில் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தனர். கூட்டம் முடிந்ததும் உடனே கவர்னர் மாளிகைக்குக் கிளம்பிச் செல்லவில்லை. ஆறு மணிக்கு ராகு காலம் முடிந்த பிறகே கவர்னர் மாளிகைக்குப் போனார்கள். அதன் பிறகும் அ.தி.மு.க அலுவலகத்தில் கூட்டம் குறையவில்லை.''
''பெங்களூரில் ஜெயலலிதாவைப் பார்க்க ஷீலா பாலகிருஷ்ணன் சென்றிருந்தாரே?''
''ஞாயிற்றுக்கிழமை காலை ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம்மோகன் ராவ் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெங்களூரு சென்றிருந்தனர். ஆனால், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சிறைத் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 'நான் தமிழக அரசின் தலைமை ஆலோசகர். எனக்குச் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்!’ என்று ஷீலா பாலகிருஷ்ணன் கர்நாடகாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலருடனும் பேசினார். ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. காலையில் இருந்து மாலை வரை நால்வரும் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. சிறை வாசலிலேயே காத்திருந்தவர்கள் ஆறு மணிக்குப் பிறகுதான் அங்கிருந்து திரும்பியிருக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தாலும் அரசின் சிறப்பு ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் செயல்படுவார் என்று சொல்கிறார்கள். இது சம்பந்தமாக பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா அறிவுறுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். பெங்களூரில் தங்கி ஜெயலலிதாவை சந்தித்த பிறகே ஷீலா சென்னை திரும்புவாராம்!''
''பதவியேற்பு எப்போது?''
''திங்கள்கிழமை அன்று பதவியேற்பு விழா இருக்கும். 29-ம் தேதி சென்னையில் கவர்னர் கலந்து கொள்ளும் ஒரு விழா இருந்தது. திடீரென அதனை ரத்து செய்துவிட்டார் கவர்னர். 'நாளை பதவியேற்பு விழா இருக்கிறது’ என்று அதற்குக் காரணம் சொல்லப்பட்டதாம். திங்கள்கிழமை பன்னீர் பதவியேற்கும்போது கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளரைச் சந்திக்க ஜெயலலிதாவின் வக்கீல்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். அக்டோபர் 5 வரைக்கும் அங்கு தசரா விடுமுறை என்பதால் பெயில் சம்பிரதாயங்கள் அதுவரை தொடங்குவதும் சந்தேகம்தான்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

Sunday, September 28, 2014

பதவி இழந்தார் ஜெயலலிதா; சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!




சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தினுள் இருக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார். 
ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர். அவர்கள் தற்போது தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர்
ஓ.பி.  எஸ். உடன் பேசிய ஜெயலலிதா
இதனிடையே நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதா, திடீரென வெளியே வந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசிவிட்டு சென்றார்.

பாதுகாப்பு
ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முற்பகல் 11 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.
தீர்ப்பு இன்று கூறப்படுவதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீஸார், ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
ஜெயலலிதா பெங்களூர் புறப்பட்டார்
இந்த வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றார்.  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார்.  சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்தம்
தமிழ்நாட்டுக்கு வரும் கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பின் முடிவை அறிந்த பிறகு பேருந்துகளை இயக்க கர்நாடக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளும் தமிழக எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, ஓசூர் இடையே பேருந்து, கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் படையெடுப்பு
தமிழக அமைச்சர்கள் அனைவரும் தீர்ப்பை அறிவதற்காக பெங்களூர் வந்து முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க. வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.
வழக்கு விவரம்
தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதுவரை 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 17 நாட்கள் தனது வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார் தனது தரப்பு வாதங்களை 25 நாட்கள் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (செப்.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 

Saturday, September 27, 2014

மங்கள்யான், செவ்வாயை எட்டிய பதைபதைப்பு நிமிடங்கள்...

விண்ணில் பிழை திருத்தம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்- கன்ட்ரோல் ரூமிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்


பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் த.வி. வெங்கடேஸ்வரன்.
பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் த.வி. வெங்கடேஸ்வரன்.
நகம் கடிக்கும் தருணம் என்பார்களே அதுதான் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் நேற்று முன்தினம் இருந்த நிலை. பெங்களூரை அடுத்த பீன்யா எனும் இடத்தில் உள்ள விண்கல கட்டுப்பாட்டு மையத்தில் (Mission Operations Complex MOX) எங்கும் பரபரப்பு சூழ்ந்திருந்தது. அறுபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் குழுமி இருந்தாலும்கூட, இரைச்சலே இல்லை; அடிக்குரலில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு, சீட்டு நுனியில் பதற்றத்துடன் உட்கார்ந்து கணினித் திரையில் வரும் தரவுகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தனர். அவர்களுடைய பதைபதைப்பு குறையவில்லை. கண்களில் பதற்றமும் உடலில் சோர்வும் தெளிவாகத் தெரிந்தது.
சரியாக எட்டுமணி. எங்கும் மகிழ்ச்சி அலை, உற்சாகக் கூச்சல், இன்ப அதிர்ச்சியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் சொல்லி வைத்ததுபோல எழுந்தனர், ஒருவரை ஒருவர் கட்டி ஆரத் தழுவினர்.
ஆம், இந்திய விண்கலம் செவ்வாயை அடைந்துவிட்டது. செவ்வாயின் பாதை யில் அது புகுந்தது உறுதிபடுத்தப்பட்டது.
பின்னடைவும் சீரமைப்பும்
செவ்வாய்க்கு மிக அருகே 512 கி.மீ. தொலைவில் விண்கலம் கடந்து சென்றது என்றும், 24 நிமிடங்களுக்குப் பதிலாக சுமார் 23 நிமிடங்கள்தான் இன்ஜின் இயங்கியது என்றும், அதிலேயே தேவையான வேகக்குறைப்பு கிடைத்துவிட்டது என்றும், பின்னர் கிடைத்த தகவல்களைக் கொண்டு உறுதி செய்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். மேலும், சோதனை அளவில் செவ்வாயின் புகைப்படத்தையும் எடுத்துள்ளனர். எதிர்பார்த்தது போல் 248 கி.மீ. x 79,916 கி.மீ. பாதையை எட்டியது என்றும் தெரிவிக்கின்றனர்.
இன்ஜின் இயங்கியபோது அதில் மொத்தம் இருந்த 280 கிலோ எரிபொருளில், 250 கிலோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 கிலோ எரிபொருளைக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு மேல் விண்கலத்தை இயக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பதைபதைப்பு ஏன்?
இருந்தாலும்கூட, நேற்று முன்தினம் காலை கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் பதைபதைப்புடன்தான் இருந்தனர். இருக்காதா பின்னே? `வாராது வந்த மாமணியை' போல செவ்வாய் நோக்கி அனுப்பப்பட்ட மங்கள்யான் என செல்லமாக அழைக்கப்படும் ‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’ விண்கலம் அந்த நேரம் முக்கிய கட்டத்தில் இருந்தது.
காலை நான்கு மணிக்கு அதன் இடைநிலை அண்டெனா (medium gain antenna) எதிர்பார்த்தபடி இயக்கம் பெற்றது. சுமார் 6:56 மணிக்கு இருபத்தியொரு நிமிடத்துக்கு நீளும் விண்வெளியில் குட்டிக்கரணம் அடிக்கும் இயக்கம் தொடங்கியது. 7:17 மணிக்கு அதன் திரவ இன்ஜின் இயங்கியது. அடுத்த நான்கு நிமிடங்களில் விண்கலம் செவ்வாயின் பின்புறம் சென்றது. செவ்வாயின் பின்புறம் சென்ற பிறகு, பூமியோடு விண்கலம் தொடர்புகொள்ள முடியாது. எனவேதான், விஞ்ஞானிகள் பதைபதைப்புடன் இருந்தனர்.
முக்கிய தருணங்கள்
செவ்வாயின் பின்புறம் விண்கலம் இருந்தபோதுதான் மிகமிக முக்கிய இயக்கங்கள் நிகழவேண்டும். செவ்வாய்க்கு பின்புறம் விண்கலம் மறைந்து இருக்கும் போதுதான் விண்கல வேகம் குறைக்கப்பட்டு செவ்வாயின் பாதையில் புகவேண்டும்.
விண்கலத்தை செவ்வாய் நோக்கி செலுத்துவது ஒரு வகையில் மாங்காயை நோக்கி கல்லை எறிவது போலதான் என்றாலும், மாங்காயை நோக்கி வீசப்படும் கல் நெத்தியடி போல சரியாக மோதவேண்டும். ஆனால், செவ்வாய் கிரகம் நோக்கி வீசப்படும் விண்கலம் செவ்வாயில் மோதிவிடக்கூடாது. செவ்வாய் அருகே சென்ற பின், அதன் வேகம் குறைந்து, செவ்வாயின் ஈர்ப்பு புலத்தில் தவழ்ந்து விழ வேண்டும்.
வேகக் குறைப்பு
எனவே, செவ்வாய் அருகே விண்கலம் செல்லும்போது எதிர்திசையில் நெக்கிப்பொறியை (thruster) இயக்கி எதிர்விசை தரவேண்டும். எதிர்விசையால் விண்கல வேகம் மட்டுப்படும். இந்த நேரத்தில் இன்ஜின் செயலிழந்து போனால், கேட்ச் பிடிக்கத் தவறிய பந்துபோல செவ்வாயின் பிடியிலிருந்து விண்கலம் தவறிவிடும்.
விநாடிக்கு 22.1 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் அந்த விண் கலத்தை விநாடிக்கு 4.316 கி.மீ. என்ற வேகத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும். வேகம் கூடிவிடவும் கூடாது; குறையவும் கூடாது. இது முள்ளில் விழுந்த சேலையை அகற்றுவது போல மிக மிக சிக்கல் மிகுந்த பணி.
சவாலான நிமிடங்கள்
அதுமட்டுமல்ல, செவ்வாய் சுற்றுப்பாதை யில் மங்கள்யான் புகும்போது செவ்வா யின் இரவு நேரத்தில் வலம் வரும். அதனால் சூரிய ஒளியிலிருந்து விண்கலம், மின்சாரம் தயாரித்துக்கொள்ள முடியாது. எல்லா இயக்கங்களுக்கும் தேவையான மின்சாரத்தை தன்னிடம் உள்ள மின் கலனிலிருந்துதான் பெறவேண்டும்.
அந்த தருணத்தில் மங்கள்யான் சுமார் 200 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தது. எனவே, அங்கிருந்து ரேடியோ தகவல் பூமியை வந்தடைய சுமார் பன்னிரெண்டு நிமிடங்கள் பிடிக்கும். எனவே, இன்ஜின் இயங்கினாலும்கூட, காலதாமதத்துக்குப் பிறகே தரவுகள் பூமியை வந்து அடையும்.
கடைசி கவுன்ட் டவுன்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற இந்த நிலையில்தான் விஞ்ஞானிகள் இருந்தனர். சரியாக 8 மணிக்கு செவ்வாயின் பின்புறமிருந்து மங்கள்யான் வெளிப்படும். அப்போது அதன் முக்கிய அண்டெனா இயங்கி பூமியுடன் தொடர்புகொள்ள வேண்டும். அதற்குத்தான் விஞ்ஞானிகள் காத்துக்கிடந்தனர். அவ்வாறு வெளிப்படும்போது வரும் தகவல்தான் விண்கலத்தில் திட்டமிட்ட வேகக்குறைப்பு அடைந்ததா, செவ்வாயின் பாதையில் புகுந்ததா என்பதை அறியமுடியும்.
சரியாக எட்டு மணிக்கு விண்கலத்திலிருந்து “தேன் வந்து பாய்வது போல” அந்தத் தகவல் வந்தது. விண்கலம் விநாடிக்கு 1,099 மீட்டர் வேகத்தை அடைந்தது என்ற தகவல் கட்டுப்பாட்டு அறையை வந்து சேர்ந்ததுதான் தாமதம், அனைவர் மனதிலும் நிம்மதிப் பெருமூச்சு. இந்திய விண்கலம் செவ்வாயின் பாதையில் புகுந்துவிட்டது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
சிகரம் தொட்டவை
செவ்வாய்க்கு செல்லும் பயணம் கடினமானது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில், 30 தோல்வி கண்டிருக்கின்றன. 21 ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. சமீபத்தில் ஜப்பான், சீனா அனுப்பியவையும் தோல்வியே கண்டன. உலகில் செவ்வாய்க்கு சென்ற நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமல்ல, முதல் ஆசிய நாடு, முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு என்ற கூடுதல் பெருமைகளையும் இந்தியாவுக்கு இஸ்ரோ ஈட்டித் தந்துள்ளது.
செப்டம்பர் 22-ம் தேதி மங்கள்யான், திட்டமிட்ட பாதையில் 99.5% தொலைவை பழுதின்றிக் கடந்துவிட்டது. அன்றுவரை 297 நாட்கள் உறங்கிக் கிடந்த இன்ஜின் பழுதில்லாமல் சோதனை இயக்கத்தில் இயங்கியது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. 440 நியூட்டன் நெக்கிப்பொறி எஞ்சின் எனும் இந்த இன்ஜினில் திரவ எரிபொருளும் ஆக்சிஜனும் சேர்ந்து கலவையாகி எரியும். அவ்வாறு எரியும்போது உந்துவிசை ஏற்படும். இந்த இன்ஜின் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதிதான் கடைசியாக இயக்கப்பட்டது. அதன் பிறகு இந்த செப்டம்பர் 22-ல் தான் இயக்கப்பட்டது.
இந்த இன்ஜின் செப்டம்பர் 22 பிற்பகல் 2.30 மணிக்கு வெறும் 3.968 விநாடிகளே இயக்கப்பட்டது. அதற்கு 596 கிராம் எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த உந்துவிசையால் விண்கலம் கூடுதலாக விநாடிக்கு 2.14 மீட்டர் வேகம் பெறவேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இருந்தாலும் விநாடிக்கு 2.18 மீட்டர் கூடுதல் வேகம் கிடைத்துள்ளது. இந்த வேறுபாட்டால் விண்கலத்தின் இயக்கத்துக்கு எந்த பாதகமும் இல்லை என இஸ்ரோ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விண் பிழை திருத்தம்
ஓரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அதுபோல இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை இயக்கம் செய்துவிட்டு உறங்கியிருந்த இன்ஜினை தட்டி எழுப்பும் பணியை மட்டும் செய்யவில்லை அதே இயக்கத்தைக் கொண்டு விண்கலப் பாதையில் தேவையான பிழை திருத்தத்தையும் செய்துவிட்டனர். விண்வெளியில் பத்து மாதம் சென்றபோது ஏனைய வான் பொருட்கள் மங்கள்யானின் மீது தாக்கம் செலுத்தியதால், அதன் பாதையில் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது.
இதே பாதையில் பிழை திருத்தப்படா மல் விண்கலம் சென்றிருந்தால் செவ்வாயி லிருந்து 700 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது, செவ்வாயின் தடத்தில் புகுந்திருக்கும். ஆனால், திட்டமிடப்பட் டிருந்ததோ 500 கி.மீ. இந்த பிழை திருத்தத்துக்குப் பிறகு எதிர்பார்க்கும் 500 கி.மீ. உயரத்தில் செவ்வாயின் தடத்தில் விண்கலம் புகும் என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இப்போது திட்டமிட்ட பாதையில் மங்கள்யான் சென்றுள்ளது மட்டுமல்ல, இதுவரை மங்கள்யானில் எந்தப் பழுதும் இல்லை. அதில் உள்ள ஐந்து அறிவியல் கருவிகளும் சரிவர இயங்குகின்றன. திட்டமிட்ட பாதையில் மங்கள்யான் சென்றுகொண்டிருக்கிறது. செவ்வாய் பாதையில் மங்கள்யான் புகுந்துள்ள இந்தத் தருணம், இந்திய அறிவியல் புதிய சகாப்தம் படைப்பதற்கான அடையாளம் என்பதில் சந்தேகம் இல்லை.

வெள்ளை மாளிகை வாசலில் படம் எடுக்க நின்ற மோடிக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்பு கம்பள வரவேற்பு


கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ
கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ
சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.
அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு இந்தியாவில் இருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. இதை ஏற்று இரு கட்சிகளும் மாநில கட்சித் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
கடந்த 1994-ல் நடந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் குஜராத் மாநில பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த மோடி, ஆந்திர மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த ஜி.கிஷண் ரெட்டி, கர்நாடகா மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த அனந்தகுமார் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றனர்.
அந்த சமயத்தில் மூவரும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வாசல் முன்பு நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தி இந்துவிடம் மோடியுடன் படத்தில் இருக்கும் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:
‘அந்தப் படம் எடுக்கும்போது எங்களுடன் இருந்த மோடி நம் நாட்டின் பிரதமராவார் எனவும் அதே மாளிகையின் சிறப்பு விருந்தினராக செல்வார் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனினும் அப்போதே அந்த நாட்டை நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் மோடி அதிக ஆர்வம் காட்டினார். அங்கிருந்த லிபர்டி சிலை உட்பட பல விஷயங்களை பார்த்து அது நம் நாட்டில் செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நாட்டு அரசின் நிர்வாகங்கள் பற்றி பல்வேறு கேள்விகளை மோடி எழுப்பினார்.
அரசு கூட்டங்களைவிட அங்கிருந்த குஜராத் மக்கள் நடத்திய கூட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டி இருந்தது. எங்களையும் அழைத்து சென்று அந்த கூட்டங்களில் மோடி பேசியதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
தற்போது தெலங்கானா மாநில பாஜகவின் தலைவராக இருக்கும் கிஷண் ரெட்டி, அந்த மாநில அம்பர்பேட் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்.
சிறியவகை பழைய கேமராவில் எடுத்த இருபது படங்கள் அவரிடம் இருந்துள்ளன. இப்போது மோடி அமெரிக்காவுக்கு செல்வதை ஒட்டி அதை எடுத்து பார்த்தபோது படங்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதில் இரண்டை மட்டும் பத்திரமாக எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் ரெட்டி.

மிஸ்டர் கழுகு: பெங்களூரு பிரளயம்


பெங்களூரு பரபரப்பு காட்சிகளுக்​காகத்தான் கழுகாருக்கு காத்திருந்தோம். நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்தச் செய்திகளை அள்ளி வந்தார் கழுகார்!

''இந்த இதழை உமது வாசகர்கள் பரபரப்புடன் வாசிக்கத் தொடங்கி இருக்கும்போது பெங்களூரில் இருந்து செய்திகள் வர ஆரம்பித்து இருக்கும். அதற்கு முன்னதாக நடந்த பதைபதைப்பு க்ளைமாக்ஸ் காட்சிகளை உம்மிடம் விவரிக்கிறேன். வழக்கை 18 வருடம் இழுத்தடித்தாகிவிட்டது. தீர்ப்புத் தேதியை இழுத்தடிக்கும் வேலைகள் இறுதி வரைக்கும் எப்படி நடந்தது தெரியுமா?'' என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.
''இறுதி விசாரணை முடிந்ததும், தீர்ப்புத் தேதியை அறிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'இந்த வழக்கில் இன்னும் கூடுதலாக சில ஆவணங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது. எனவே, தீர்ப்புத் தேதியை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்றார்.  அந்தத் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தீர்ப்புச் சொல்லும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் இடத்தை மாற்றச் சொல்லி மனுவைக் கொண்டுபோன நேரத்தில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி சார்பில் அல்சூர்கேட் போலீஸாரும் ஒரு மனுவைக் கொண்டு வந்தனர். அதில், 'இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர். அவருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க இந்த நீதிமன்ற வளாகம் சரியான இடம் அல்ல. ஏனென்றால், கடந்த 2012-ம் ஆண்டில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இங்கே வந்து ஆஜரானபோது, கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அவற்றைக் கருத்தில் கொண்டு தீர்ப்புச் சொல்லும் இடத்தை மாற்ற வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, பரப்பன அக்ரஹாராவில் நீதிமன்றம் செயல்பட்டது. அது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியான இடம். எனவே, அங்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டிருந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'தீர்ப்புச் சொல்லும் நாளன்று நீதிமன்றம் பரப்பன அக்ரஹாராவில் செயல்படும்’ என்று உத்தரவிட்டார். அத்துடன், 'இங்குள்ள ஆவணங்களை புதிய இடத்துக்கு மாற்றுவதற்கு இரண்டு மூன்று நாள்கள் தேவைப்படும். அதனால் தீர்ப்புத் தேதியை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்றும் சொன்னார்!''
''ம்!''
''27-ம் தேதி தீர்ப்பு, அன்றைய தினத்தில் மாற்றம் இல்லை என்று அனைவரும் நினைத்தனர். ஜெயலலிதா தரப்பு எந்த மூவ்மென்டும் இல்லாமல்தான் இருந்தனர். ஆனால், இந்த முறை பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியிடம் இருந்து நேரடியாக ரியாக்ஷன் வந்தது. அவர் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவை நேரில் சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், 'தீர்ப்புக்காகக் குறிக்கப்பட்டுள்ள 27-ம் தேதியன்று பெங்களூரில் தசரா கொண்டாட்டம், விநாயகர் சிலை ஊர்வலங்கள், டி20 கிரிக்கெட் என்று பல பரபரப்பான நிகழ்ச்சிகள் உள்ளன. அந்த நாளில் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ள ஒரு மாநில முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்குவது சிரமம். எனவே, வேறொரு தேதிக்கு தீர்ப்பை மாற்ற வேண்டும்’ என்று கேட்டிருந்தார். மனுவை படித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'பெங்களூரில் மொத்த போலீஸ் எண்ணிக்கை எவ்வளவு?’ என்று கேட்டார். அதற்கு எம்.என்.ரெட்டி, '16 ஆயிரம் பேர்’ என்று பதில் சொன்னதும், 'இதை ஏன் நீங்கள் அன்றே சொல்லவில்லை. தசரா கொண்டாட்டம், விநாயர் சிலை ஊர்வலம் நடப்பது எல்லாம் உங்களுக்கு அன்றே தெரியும்தானே! பிறகு ஏன் கடைசி நேரத்தில் இதுபோன்ற கோரிக்கைகளுடன் வருகிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்துள்ளார்.  பிறகு, 'அவர்களில் 5 ஆயிரம் பேரை நீதிமன்றப் பாதுகாப்புக்கு அனுப்பினாலும், மீதி 11 ஆயிரம் பேரை வைத்து பெங்களூரு சிட்டியின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளலாமே?’ என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன், 'இனிமேல் தீர்ப்புத் தேதியை ஒத்திவைக்க முடியாது. வேண்டுமென்றால் டி20, விநாயகர் சிலை ஊர்வலங்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி, ரெட்டியை திருப்பி அனுப்பிவிட்டார்!''
''என்ன ஆச்சு பெங்களூரு போலீஸுக்கு?''
''இரண்டு விதமான காரணங்களைச் சொல்கிறார்கள். 'ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து உளவுத் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகள் பெங்களூரு வந்தார்கள். அவர்கள், தேவையில்லாத விஷயங்களைக் கேட்டு கர்நாடக போலீஸ் அதிகாரிகளை பயமுறுத்திவிட்டார்கள். ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருப்பதால் ஏராளமான கண்டிஷன்களைப் போட்டார்கள். இதனால் பயந்துபோன கர்நாடக போலீஸார் இப்படி நாளைக் கடத்துகிறார்கள்’ என்றும், 'பெங்களூரு போலீஸாரை தங்கள் வசப்படுத்தி இப்படி இழுக்கச் சொல்கிறார்கள்’ என்றும் இரண்டு விதமான செய்திகள் உலா வருகின்றன. ஆனால், இதற்கு நீதிபதி குன்ஹா இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியின் பக்கமாக ஜெயலலிதா தரப்பு திரும்பியது!''
''அங்கு என்ன நடந்தது?''
''தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.ராஜாராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை திடீரென சந்தித்தார்கள். 'ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கிறார். அவரது உயிருக்கு விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களால் ஏற்கெனவே அச்சுறுத்தல் உள்ளது. காவிரி பிரச்னையில் அவர் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளதால் கர்நாடகத்தில் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. எனவே 27-ம் தேதி பெங்களூருக்கு வரும் ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்க கர்நாடகா நீங்கலாக வேறு ஏதாவது மாநிலத்தில் தீர்ப்பை வழங்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார்கள். இதனை ஒரு மனுவாகக் கொடுத்தார்கள். 'இதற்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை நீங்கள் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் கொண்டு போய் கொடுங்கள்’ என்று சொன்னார். இவர்கள் அந்த மனுவை எடுத்துக்கொண்டு பதிவாளரிடம் போனார்கள். இப்போது அந்தப் பதவியில் இருப்பவர் ரவீந்திரா மைதானி. 'இப்படி ஓர் அதிகாரம் உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக வேண்டுமானால் தாக்கல் செய்து பாருங்கள்’ என்று சொன்னார்!''
''ஓஹோ!''
''உச்ச நீதிமன்றத்துக்குப் போனால் அவர்கள் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்ற குழப்பம் இவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் தயங்கியபடி கடந்த 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் ஓடியது. இந்த நிலையில் பெங்களூரு நீதிபதி குன்ஹா முன்பு ஆஜரான பெங்களூரு போலீஸ் அதிகாரி, 'நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்’ என்று 25-ம் தேதி காலையில் வந்து மனு கொடுத்தனர். அதனை குன்ஹா வாங்கி வைத்துக் கொண்டார். இப்போது பிரச்னை முடிந்தது மாதிரி தெரிந்தது. இனி ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் 27-ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. உடனே டெல்லியில் வேறு மூவ் ஆரம்பித்தது!''
''அப்படியா அது என்ன?''
''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் உச்ச நீதிமன்ற பதிவாளரையும் இரண்டு வழக்கறிஞர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்கள் இருவரும் ஒரு புதிய மனுவைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சார்பாக வழக்கறிஞர் என்.ராஜாராமன் அந்த மனுவை தாக்கல் செய்தார். பொதுநல வழக்காக இதனைத் தாக்கல் செய்தார்கள். 'நீதிபதி குன்ஹா 27-ம் தேதி தீர்ப்பு தருவதில் உறுதியாக இருக்கிறார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் அவர் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பை நீதிபதி ஏற்க முடியுமா? போலீஸாரால் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்ன பிறகும் நீதிபதி அதனை ஏற்க மறுக்கிறார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநிலத்துடன் நல்லுறவு இல்லை. ஏற்கெனவே கன்னட அமைப்புகள் முதல்வர் மீது கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால் தீர்ப்பு தரும் நீதிமன்றத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறோம் அல்லது தீர்ப்புச் சொல்லும் நாளன்று முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு 25-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு  நம்பர் ஆகிவிட்டது. 31959/ 2014 என்பதுதான் அந்த நம்பர் என்ற தகவல் சென்னைக்குச் சொல்லப்பட்டது. '26-ம் தேதி காலையில் இதனை விசாரணைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்று அந்த வழக்கறிஞர்கள் இருவரும் முழுவீச்சில் இறங்கினர்.
'விசாரணைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பினால் போதும், அதன்மூலமாக ஒரு வாரம் இழுத்துவிடலாம்’ என்று நினைக்கிறது இந்தத் தரப்பு!''
''அப்படியானால்...?''
''27-ம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டால்தான் உறுதி. அதுவரை எதுவும் உறுதி இல்லை!''
''குன்ஹா என்ன நினைக்கிறாராம்?''
''சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்குக் கீழ், நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எழுதுவார். இதைத்தான் 'ஆபரேஷன் போர்ஷன்’ என்பார்கள். தன்னுடைய லேப்டாப்பில் தானே அவற்றை டைப் செய்துள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லை. அந்த நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் தவிர வேறு எதற்காகவும் யாரையும் நீதிபதி சந்திக்கவில்லை. தினமும் காலை 11 மணிக்கு நீதிமன்றம் வருகிறார். தனது சேம்பரில் உட்கார்ந்து விடுகிறார். மாலை 5 மணிக்குத்தான் செல்கிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.''
''தீர்ப்பளிக்கும் இடம் தயாராகிவிட்டதா?''
''பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள காந்தி சதனில்தான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காந்தி சதன் ஜெயலலிதா தரப்புக்கு புதிதல்ல. கடந்த 2011-ம் ஆண்டு நேரில் ஆஜராகி சாட்சி அளித்த இடம்தான் அது. மற்ற நாள்களில் சிறைக் கைதிகளுக்கான கவுன்சிலிங் மற்றும் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் இடமாக காந்தி சதன் செயல்படுகிறது. இங்குதான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது!'' என்ற கழுகார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கு பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்!
''சில மாதங்களுக்கு முன்னால் பெயர் குறிப்பிடாமல் நான் சொன்ன விஷயம் ஒன்று இப்போது வெளிப்படையாக வெடித்துள்ளது. ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சலுகை விலைக்கு அரசு நிலம் தரப்பட்டது. அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். 'தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட எத்தனையோ திட்டங்களை முடக்கும் அ.தி.மு.க அரசு இதனை மட்டும் அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டது’ என்றும் சொல்லியிருந்தேன். அதனை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு போய்விட்டார்கள்!''
''அப்படியா?''
''வழக்கறிஞர் கலைமணி என்பவர், 'இன்றைய மதிப்பில் சுமார் 188 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.44 ஏக்கர் நிலத்தை வெறும் 33 கோடி ரூபாய்க்கு அரசாங்கம் விற்றுள்ளது. இந்த விற்பனையில் பலமுறைகேடுகள் நடந்துள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் பலர் வெகுவாக ஆதாயம் அடைந்துள்ளனர். அடிமாட்டு விலைக்கு விற்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கேட்டிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், 'இந்த விவகாரத்தில் உரிய தீர்ப்பு வரும் வரை குறிப்பிட்ட அந்த இடத்தில்  நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே எந்த வேலைகளையும் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு போட்டுள்ளார். 'ஆளும் தரப்புக்கு ஆலோசகராக உள்ள ஓர் அதிகாரிதான் இதில் ஆதாயம் அடைந்தவர். அதை வைத்து விரைவில் மற்றொரு வழக்கு நேரடியாக அந்த அதிகாரியின் மீதே பாயப்போகிறது’ என்றும் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு எழுந்து பறந்தார் கழுகார்.
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், என்.ஜி.மணிகண்டன்
''நான் துறவி!?''
எத்தனை கோஷ்டிகள் எதிர்த்து நின்றாலும் அத்தனையும் சமாளித்து வளர்ந்து வரக்கூடியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தன்னுடைய பெயர் ராசிதான் தன்னைக் காப்பாற்றி வருவதாக அமைச்சர் நினைக்கிறாராம். அரசியலில் பெரிய பதவிகளைக் கைப்பற்ற ஆசைப்பட்ட ராஜேந்திர பாலாஜி நியூமராலஜி நிபுணர்களிடம் ஆலோசனை செய்ய திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள்கோயில் சுவாமி ரொம்பவும் பிரசித்தம். 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமானது. அதனால் பாலாஜி என்ற பெயரை உங்கள் பெயரோடு சேர்த்தால் நன்றாக வருவீர்கள் என்று கூறினார். 2004-ம் ஆண்டு அதுவரை கே.டி.ராஜேந்திரனாக இருந்தவர், பிறகு கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆனார். பெயர் மாற்றின நேரமோ, என்னமோ தெரியவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் சிவகாசி எம்.எல்.ஏ-வான கே.டி.ராஜேந்திர பாலாஜி அடுத்த இரண்டு மாதத்தில் 2011-ல் மாவட்டச் செயலாளர் ஆனார். அதற்கு அடுத்த இரண்டு மாதத்தில் அமைச்சர் பதவியும் தேடி வந்தது. ஒரே ஆண்டில் எம்.எல்.ஏ, அமைச்சர், மாவட்டச் செயலாளரானது இவராகத்தான் இருக்கும்.
சமீபத்தில் இவர் மீது புகார் கிளம்பியபோது, ''அண்ணே எனக்கு என்ன குடும்பமா... குட்டியா.. நான் எதுவும் இல்லாத துறவி'' என்று சொன்னாராம். இப்போதும் அப்படித்தான் சொல்லி வருகிறாராம்!
''சோனியாவுக்கு விருந்து வைத்திருந்தால்...!''


கடந்த 24ம் தேதி மாலை அ.தி,மு.க சார்பில் ஸ்ரீரங்கம் வடக்குதேவி தெருவில்  அறிஞர் அண்ணாவின் 106-வது பிறந்தநாள்  பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக மைக் பிடித்த ஃபாத்திமா பாபு, பெங்களூரு வழக்கு பற்றி பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார்.
''தினமும் அம்மா. இரவு 11.30 மணிக்கு உறங்கப்போகிறார். அடுத்து அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து நமக்காக உழைக்கத் தொடங்குகிறார். இப்படி ஒருநாளின் 24 மணி நேரத்தில் 21 மணிநேரம் மக்களுக்காக உழைக்கும் தலைவர் அவர். அவர் யாருக்கும் அஞ்சான்.
கருணாநிதியைப்போல் கைதுக்கு அஞ்சி நாடகம் நடத்தியவர் இல்லை. போலீஸார் வழக்கில் கைது செய்ய வந்தபோது தானே முன்வந்து போலீஸாருக்கு முழு ஒத்துழைப்புத் தந்தார் என்பதை நாடறியும்.
சர்க்காரியா கமிஷனின் நடவடிக்கைக்கு பயந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி. ஒருவேளை அம்மா நினைத்திருந்தால் சோனியா காந்தியை போயஸ் கார்டனுக்கு  அழைத்து டீ பார்ட்டி கொடுத்திருந்தால் இப்போதுள்ள எல்லா வழக்குகளும் வாபஸ் வாங்கப்பட்டிருக்கும். ஆனால்,  அதைச் செய்தாரா அம்மா? இல்லை. காங்கிரஸ் துரோகத்தை அம்பலப்படுத்தி வெற்றி பெற்றார். அதேபோல அவர் மீதான வழக்கில் வெற்றி நிச்சயம்'' என்று சொல்லி முடித்தார்.
மாற்றம் தந்ததா பெங்களூரு?


உளவுத் துறையில் கடந்த இரண்டே முக்கால் வருடம் ஐ.ஜி பதவியில் இருந்தார் அம்ரேஷ் பூஜாரி. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெங்களூரு விசிட் குறித்த பந்தோபஸ்து ஏற்பாடுகளை கவனிக்க கடந்த வாரத்தில் அங்கே அம்ரேஷ் விசிட் போயிருந்தார். திரும்பி வந்ததும், முதல்வரை கோட்டையில் சந்தித்துப் பேசினார். அடுத்த நாளே... அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். போலீஸ் துறையின் டம்மியான பதவியான போலீஸ் அகாடமிக்கு அம்ரேஷ் தூக்கியடிக்கப்பட்டார்.
அம்ரேஷ் தரப்பில், 'அவரது மகன் ப்ளஸ் டூ படிப்பதால், உடன் இருந்து கவனிக்க நேரம் தேவைப்படுவதால் டம்மி பதவிக்குக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார்' என்கிறார்கள். ஆனால், போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''ஐ.பி.எல் விவகாரத்தில் தொடர்பு உடைய சிலருடன் அம்ரேஷ§க்கு தொடர்பு இருந்ததாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை ரிப்போர்ட்டில் ஓர் இடத்தில் வருகிறது. இந்த ரிப்போர்ட் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்துக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.  அதையடுத்துதான், முதல்வர் நடவடிக்கை எடுத்து மாற்றினார்'' என்கிறார்கள்.  
''சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரத்தில் இவரிடம் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய அசைன்மென்டை சரிவர நிறைவேற்றவில்லை. சென்னை எழும்பூரில் தனியாக இருந்த 'எம்மா’ என்கிற முதியவரை கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளியை சென்னை மாநகர போலீஸ் நெருங்கியபோது, அம்ரேஷ் பெயரைப் பயன்படுத்தினார்கள். குழப்பம் ஆன விசாரணை அதிகாரிகள் உடனே இதுபற்றி கமிஷனரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, குற்றவாளியை கைது செய்துவிட்டனர். ஆனால், கைது செய்த அதிகாரி அடுத்த சில நாட்களில் சென்னையைவிட்டே தூக்கியடிக்கப்பட்டார். ஆவின் கலப்பட ஊழல் விவகாரத்தில் உரிய நேரத்தில் உளவுத் துறை மூலம் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க அம்ரேஷ் தவறிவிட்டாராம்'' என்று சொல்லி சிலர் அடுக்குகிறார்கள்.
''கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே, டி.ஜி.பி ராமானுஜத்துக்கும் அம்ரேஷ§க்கும் பனிப்போர் நடந்து வந்தது. முன்பெல்லாம் இவர் நேரடியாகவே முதல்வருக்கு உளவுத் தகவல்களை சொல்லிவந்தார். ஆனால், அதற்கு தடை விதித்து டி.ஜி.பி அலுவலகம் மூலம்தான் முதல்வருக்கு தகவல்கள் போகவேண்டும் என்று சொல்லப்பட்டதாம்'' என்றும் சொல்கிறார்கள்.

Friday, September 26, 2014

குறட்டை தானேன்னு நினைக்காதீங்க…

சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்’ என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:
1குறட்டை ஏன் வருகிறது? இது நோய் தானா?

மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். உடலுக்கு தேவையான ஆக்சிஜனை உள்ளே செலுத்தி, கார்பன் – டை – ஆக்சைடை வெளியேற்றுகிறோம். சுவாசிக்கும்போது, காற்று செல்லும் வழியில் அடைப்பு ஏற்படுவதால், குறட்டை வருகிறது. இது ஒரு நோய் தான்; எந்த சந்தேகமும் வேண்டாம். மூக்கில் சதை வீக்கம், மூக்குத்தண்டு வளைவு, மூக்கை ஒட்டிய, தாடைப் பகுதிகளில் ஏற்படும் தசை வீக்கம் போன்ற காரணங்கள், குறட்டை வர வாய்ப்புள்ளது.
2. ஆண்களுக்கு மட்டுமே குறட்டை வரும் என்பது சரியா?
‘ஆண்களுக்கு மட்டும் தான் குறட்டை வரும்; பெண்களுக்கு வராது. குண்டாக இருந்தால் தான் குறட்டை வரும்; ஒல்லியாக இருப்பவர்களுக்கு வராது’ என்ற, எண்ணம் பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறு. இரண்டு தரப்பினருக்கும் குறட்டை வர வாய்ப்புள்ளது. ஆண் – பெண், குண்டு – ஒல்லி என்ற பாகுபாடெல்லாம் குறட்டைக்கு கிடையாது.
3. குறட்டை விடுவோருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?
மூக்கில் காற்று உட்புகும் முன்புற பகுதியில் தசை வீக்கம், நாக்கின் பின் பகுதியில் வீக்கம், நாக்கு அகலமாக இருத்தல், தாடை, தொண்டை பகுதியில் கொழுப்பு சேர்ந்து, தசையில் ஏற்படும் தளர்ச்சியாலும் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. காற்று எளிதாக செல்ல முடியாமல் தடை ஏற்படுவதால், உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால், சிலர், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பதறி அடித்து எழுவர். இது, முற்றிய நிலை.
4. குறட்டை விடுவோருக்கு எந்த மாதிரியான பாதிப்பு வரும்?
குறட்டை விடுவோருக்கு ஆரம்பத்தில் லேசான சத்தம் வரும்; அடுத்து, பக்கத்து அறையில் இருப்போரையும் பாதிக்கும் வகையில், சத்தம் அதிகமாகும். அடுத்த நிலையில் தான், மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை வரும். இதுதான், குறட்டை பாதிப்பின் முற்றிய நிலை.
இதனால், நுரையீரல் பாதிக்கும், இதய நோய்கள் வரும். படிப்படியாக உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைய வாய்ப்புள்ளது.
5. குறட்டைக்கும், அவர்களின் செயல்திறனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
குறட்டை விடுவோர், காலையில் எழுந்ததும் சோர்வுடன் காணப்படுவர். சுறுசுறுப்பு இன்றி, மந்தமாக இருப்பர். சிந்தனை திறன் குறையும். இது, செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். திறம்பட செயல்பட முடியாமல், பணியில் பின்னடைவு ஏற்படும்; அலட்சியமாக இருந்தால் வேலை இழப்புக்கும் வழி வகுத்துவிடும். இத்தகையோர், உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி விழுவர். டிரைவர்களாக இருந்தால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான், குறட்டை விடுவோரை, ‘பைலட்’களாக எடுப்பதில்லை என, விமானத் துறையில் கொள்கை முடிவே உள்ளது.
6. குறட்டை சிக்கலுக்கு தீர்வு காண என்ன வழி?
குறட்டை அளவைக் கண்காணித்து, போதிய அளவில், ஆக்சிஜன் செல்வதை உறுதி செய்ய வேண்டும். ‘எண்டோஸ்கோபி’ செய்து, மூக்கு, நாக்கு, தொண்டை பகுதிகளில் பரிசோதித்து, எதனால் அடைப்பு ஏற்படுகிறது என, அறிய வேண்டும். நாக்கு அகலமாக, தடிமனாக இருந்தாலும் சிக்கல் வரும். மூக்கு அடைப்பு நீக்கல், மேல் தாடைப் பகுதியை வெளியிலும் நீட்டுதல், நாக்கின் அளவை சிறிதாக்குதல், கழுத்தின் தசைப் பகுதியை இறுகச் செய்யும் அறுவை சிகிச்சைகள் செய்வதால் குறட்டை பிரச்னை தீரும்.
7. இசைக்கருவிகள் வாசித்தால் குறட்டை போகும் என்கின்றனரே உண்மையா?
தொண்டையின் சதைப்பகுதியை இறுகச் செய்ய மூச்சுப் பயிற்சி அவசியம். இதற்காக, ‘டெக்ரிடோ’ என்ற இசைக்கருவி வந்து விட்டது. மூக்கு வழியாக காற்றை இழுத்து, வாய் வழியாக ஊத வேண்டும். பெரிதாக இருந்த இசைக்கருவி, தற்போது சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளது; இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. யோகாவில் இதற்கான
பிரத்யேக பயிற்சிகள் உள்ளன.
8. சிக்கலின்றி தூங்க பிரத்யேக இயந்திரம் வந்துள்ளதாக கூறுகின்றனரே?
உண்மை தான். ‘ஸ்லீப்பிங் மெஷின்’ என்று பெயர். சூட்கேஸ் வடிவில் இருக்கும்; தானியங்கி வசதியுடன் கூடிய கருவி, 50 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. தடையின்றி தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் என்பதால், நிம்மதியாக தூங்கலாம்.
இதை பயன்படுத்துவதால், குறட்டை பிரச்னை தீர்ந்து விடாது; தூக்கத்திற்கான தற்காலிக தீர்வு தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்குள், உரிய பயிற்சிகள் செய்து உடல் எடை குறைத்தல், தாடைப் பகுதி தசைகளை இறுகச் செய்தல் போன்ற குறட்டையைப் போக்கும் முயற்சிகள் எடுப்பது அவசியம்.
9. குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவர் என, கூறுவது சரியா? குறட்டையால் மற்றவர்களுக்கு பாதிப்பு வருமா?
‘குறட்டை விட்டுகிட்டு எப்படி நிம்மதியா தூங்குறான் பாரு…’ கிராமங்களில் கூறுவது உண்டு. உண்மையில் குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவதில்லை; மற்றவர்களையும் சரியாக தூங்க விடுவதில்லை. குறட்டை விடுவோரின் அருகில் படுப்போருக்கு, ரத்த அழுத்த பாதிப்பு வரும். இந்த பாதிப்பு நாளடைவில், இதய நோய்கள் வரை கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, உரிய நேரத்தில் அளவான சாப்பாடு, எளிதான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், குறட்டை பிரச்னை வராமல் தப்பலாம்.
டாக்டர். ஜி.கணநாதன்,
இயக்குனர், காது, மூக்கு, தொண்டை பிரிவு,
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை.

‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்… தவிர்ப்பது எப்படி?

மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!
என்னென்ன ஆபத்துகள்?
தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்… அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் ‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படித் தவிர்க்கலாம்?
பிரச்னைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக்’ (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்… போயே போச்!
தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.
ஆபத்துதவி ஆப்ஸ்!
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதி லிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ‘நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொண்டால், ‘ஆபத்துதவி’யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.
பின்குறிப்பு: 
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:https://play.google.com/store/apps/details?id=com.zayaninfotech.security

மங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பெங்களூரு:மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை பெற்றது. புகைப்படங்கள் தௌிவாக உள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் – செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
வண்ணப் புகைப்படங்கள்:
செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காக விண்ணில் வெற்றி்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாயின் மேற்பரப்பை காட்டும் வகையிலான 5 போட்டோக்களை, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. இந்த படங்கள் தௌிவாக உள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்கள்யானின் படங்களை இஸ்ரோ பேஸ்புக் மூலம் வௌியிட்டுள்ளது.

மோடி பார்வையிட்டார்:
மங்கள்யான் வெற்றிகரமாக எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ள செவ்வாய் கோள் புகைப்படங்களை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் கோட்டீஸவர ராவ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், பிரதமர் மோடியிடம் வழங்கினர். அவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை பாராட்டினார்.
முதல் படம்:
செவ்வாய் கிரகத்தி்ன் மேல்பரப்பை மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. செவ்வாயின் மேற்பரப்பு குறித்த அறிவியல் ஆய்விற்கு தேவையான வகையில் படங்களை எடுக்கும் திறன் இந்த கேமராவிற்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கிட்டத்தட்ட 7300 கி.மீ., தொலைவில் இருந்து இந்த படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.

மங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பெங்களூரு:மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை பெற்றது. புகைப்படங்கள் தௌிவாக உள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் – செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
வண்ணப் புகைப்படங்கள்:
செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காக விண்ணில் வெற்றி்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாயின் மேற்பரப்பை காட்டும் வகையிலான 5 போட்டோக்களை, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. இந்த படங்கள் தௌிவாக உள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்கள்யானின் படங்களை இஸ்ரோ பேஸ்புக் மூலம் வௌியிட்டுள்ளது.

மோடி பார்வையிட்டார்:
மங்கள்யான் வெற்றிகரமாக எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ள செவ்வாய் கோள் புகைப்படங்களை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் கோட்டீஸவர ராவ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், பிரதமர் மோடியிடம் வழங்கினர். அவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை பாராட்டினார்.
முதல் படம்:
செவ்வாய் கிரகத்தி்ன் மேல்பரப்பை மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. செவ்வாயின் மேற்பரப்பு குறித்த அறிவியல் ஆய்விற்கு தேவையான வகையில் படங்களை எடுக்கும் திறன் இந்த கேமராவிற்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கிட்டத்தட்ட 7300 கி.மீ., தொலைவில் இருந்து இந்த படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.

‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி

புதுடில்லி: ‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது அரசியல்நோக்கமற்ற ஒரு பொறுப்புத்தன்மை மிகுந்தது. இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல என்றும் பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் நடந்த இத்திட்ட துவக்க விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இத்திட்டம் என்பது ஒரு அழைப்பும் இல்லை , கோஷமும் இல்லை. இது சிங்கத்தின் முதல் காலடி . இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல்படி: ‘மேக் இன் இந்தியா ‘-திட்டம் தொடர்பாக விமர்சனங்கள் வருகிறது. மேக் இன் இந்தியா என்பது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. கட்நத அரசின் மீது கொள்கை அடிப்படையிலான குறைபாடுகள் இருந்தது. சமீபகாலமாக தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை ஏற்பட்டு வருவதை பார்க்க முடியும். இந்த நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றி . 120 கோடி மக்கள் மீது தொழில் நிறுவனம் நம்பிக்கை வைக்க வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் இந்தியாவை விட்டு செல்ல மத்திய அரசு விரும்பாது. இவர்களுக்கு நான் எந்த வொரு உறுதியும் அளிக்க விரும்பவில்லை. செயல்பாட்டை நீங்களே பார்த்து கொள்ளலாம். எப்.டி.ஐ. என்பது ( பர்ஸ்ட் டெவலப் இந்தியா ) அன்னிய முதலீடு இந்தியாவின் முதல் வளர்ச்சிக்காரணி ஆகும்.
இதனை பெறுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உலகின் உற்றபத்தி மையமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். நமது குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். உலகமே இன்று ஆசியாவை உற்றுநோக்கி கவனித்து வருகிறது. ஆசியாவில் இருந்து எந்தவொரு தொழில் நிறுவனமும் வெளியேற கூடாது. உலகமே ஆசியாவை நோக்கி வரத்துவங்கியிருக்கின்றன. இந்ததேசம் உங்களுடையது . உங்கள் நிறுவனங்கள் உலகஅளவில் ஜொலிக்க வேண்டும். இது இந்தியாவை பலமடைய செய்யும். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, இலாபம், தேவைகள் நிறைந்து இருக்கின்றன. நான் தொழில் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கிறேன் நீங்கள் நஷ்டமடைய மாட்டீர்கள். நாட்டின் தேவைக்கேற்ப சிறந்த தொழில்கள் துவக்க முன் வரவேண்டும்.
‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் சிங்கத்தின் முதல் காலடி எடுத்து வைப்பதற்கு சமம் ஆகும். இந்த திட்டத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அறிவுத்திறன் மேம்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகள் மேம்பாட்டுக்கு திறன் பெரும் உதவியாக இருக்கும். மங்கள்யான் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்தன் மூலம் நமது இளைஞர்கள் அறிவுத்திறன் உலகிற்கு பறைசாட்டப்பட்டுள்ளது. இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது.
சுற்றுலாதுறையை நாம் மேப்படுத்த வேண்டும். நமது நாட்டில் பல்வேறு வளங்கள் உள்ளன. இதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
‘மேக் இன் இந்தியா ‘உலக அளவிலான வளர்ச்சிக்கு உதவும். இது ஒரு பிரசாரம் இல்லை. இது ஒரு கோஷமில்லை, இது ஒரு அழைப்பு அல்லை. பொறுப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கு மாநில, மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். வங்கி கணக்கு துவக்கம் இந்தியாவின் வளர்ச்சியை காட்டியுள்ளது. மாநில அளவிலான முதலீடு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும். இங்கு வந்திருக்கும் தொழில் துறையினர் உலக அளவிலான சந்தையில் ஜொலிக்க வேண்டுமென்றால் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஒபட்சுமேன் { Ombudsman }

அன்புள்ள நண்பர்களே… மிக மிக முக்கியமான செய்தி 
ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் 
இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை. 
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். 
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. 
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். 
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். 
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. 
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். 
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார். 
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். 
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக 
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html 
ஆதங்கமாக தெரிவித்துள்ளார். 
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. 
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். 
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். 
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது . 
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } 
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html 
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். 
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. 
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. 
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது. 
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை 
TO READ MORE { Ombudsman } 
http://www.rbi.org.in/scripts/AboutUsDisplay.aspx?pg=BankingOmbudsmen.htm 
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS 
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html 
via Vidiyal Welfare Trust.

பணம்… பணம்… பணம்! சேமிப்பு

ணம் சம்பாதிப்பதைவிட, அதை புத்திசாலித்தனமாக செலவழிப்பதிலும், சேமிப்பதிலுமே இருக்கிறது லைஃப் ஸ்டைலின் வெற்றி. கிரெடிட் கார்டு தொடங்கி, ஹோம்லோன் வரை ஒவ்வொரு விஷயத்திலும் தேர்ந்தெடுப்பது முதல் பயன்படுத்துவது வரை தேவை… அதீத கவனம்! எப்படி என்று பார்க்கலாமா?!
நமக்குப் பிறகும் குடும்பத்துக்கு!
ஆயுள் காப்பீடுகளில், டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகமுக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டும்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானத்தைப்போல 10 மடங்கு தொகைக்கு கவரேஜ் எடுக்கலாம். இளம்வயதிலே இந்தப் பாலிசியை எடுக்கும்போது, பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். அதாவது 30 வயதுடைய நபர், 30 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய நினைத்தால், ஆண்டு பிரிமியம் 9 ஆயிரம் ரூபாய்தான். இது மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் போல ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
சுற்றுலாவுக்கும் சேமிப்போம்!
அடுத்த ஆண்டு, சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா… தேதி உறுதியாகத் தெரிந்தால், தேவைப்படும் தொகைக்கு ஆர்.டி அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இன்றே முதலீட்டை ஆரம்பியுங்கள். தேதி உறுதியாகவில்லை எனில், வங்கிக் கணக்கு அல்லது குறுகியகால டெபாசிட், ஃப்ளக்ஸி டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
தகதக தங்கம்!
தங்கத்தில் முதலீடு எனும்போது, தங்க நகைச் சீட்டுத் திட்டங்கள், தங்கக் காசுகள் என்று சிந்திப்பதைத் தவிர்க்கலாம். நகைச் சீட்டு என்பது சரிவர நெறிப்படுத்தப்படவில்லை என்பதால், ரிஸ்க் உங்களைச் சேர்ந்ததே! தங்கக் காசுகளை விற்கும்போது 23% கழிவு இருக்கும் என்பதால் இதுவும் நமக்கு நஷ்டமே. கோல்டு இ.டி.எஃப் அல்லது கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் தங்கம் உலோகமாக இல்லாமல் யூனிட்களாக சேமிக்கப்படுவதால், கழிவின்றி அன்றைய விலைக்கு யூனிட்களை விற்று, தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு முக்கியம்!
ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்காவது மருத்துவ காப்பீடு எடுப்பதுதான் இக்காலத்துக்கு நல்லது. மேலும் அடிக்கடி வரும் சின்னச் சின்ன மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகையை, வங்கிக் கணக்கு அல்லது ஃபிக்ஸ்ட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்து, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
ஓய்வுக் காலத்துக்கு!
இன்றைய நிலையில் இருவர் உள்ள குடும்பத்துக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் தேவை. இதுவே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு பணவீக்கம் 7 சதவிகிதம் என்றிருந்தாலே சுமார் 58 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். எனவே, ஓய்வு காலத்துக்குத் திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகையுடன் கூடுதல் தொகையையும் முதலீடு செய்யலாம். வி.பி.எஃப் (VPF) எனப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு, தற்போது 8.75% வட்டி வழங்கப்படுகிறது. நீண்டகால தேவைகளுக்கும், 500 ரூபாய் முதல் 1,50,000 வரை பி.பி.எஃப் (PPF) திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் சுமார் 3.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  வி.பி.எஃப், பி.பி.எஃப் திட்டங்களுக்கு கூட்டுவட்டி விகிதம் கணக்கிடப்படும். வருமான வரிச்சலுகையும் உண்டு.
கல்வியும் செல்வமும்!
குழந்தைகளின் உயர் கல்விக்கு, கிட்டத்தட்ட 13 – 15 வருடங்களுக்கு முன்பிருந்தே சேமித்து வரலாம். அதாவது ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் 2 ஆயிரம் ரூபாயை அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், 13,37,014 ரூபாய் கிடைக்கும். இதில் உங்களின் முதலீடு என்பது 3,60,000 ரூபாய்தான். கல்லூரியில் சேரும் காலத்துக்கு முன்பே நாம் டார்கெட் செய்த தொகை வந்துவிட்டால், அப்போதே பணத்தை எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துவிட வேண்டும் அப்போதுதான் சந்தையின் ஏற்ற இறக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
திருமணத் தேவைகளுக்கு!
பிள்ளைகளின் திருமணத்தை நடத்த இன்றைக்கு 10 லட்ச ரூபாய் தேவைஎனில், 20 வருடங்கள் கழித்து 70 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இதுபோன்ற நீண்டகால தேவைகளுக்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நல்ல வருமானம் தரும். அதாவது எஸ்.ஐ.பி முறையில் மாதம் 4,675 ரூபாய் என, 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில், 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், உங்களுக்குச் 70 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் நீங்கள் மொத்தமாக 11.22 லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்திருப்பீர்கள்.
வீட்டுக்கடன் விதிகள்!
வீடு வாங்குவதற்குத் தேவையான முழு பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்குவது முடியாத காரியம். அனைத்து வங்கிகளுமே கடன் கொடுக்கின்றன. வட்டி விகிதமும் பரவாயில்லை ரகம்தான். வீட்டின் மதிப்பில் 80 சதவிகிதத்துக்குதான் கடன் கிடைக்கும். மீதமுள்ள தொகையை நீங்கள்தான் போட வேண்டும். உங்களின் சம்பளம், கடனைத் திரும்ப செலுத்தும் தகுதி, சிபில் ஸ்கோர் ஆகியவற்றை பொறுத்துதான் கடன் கிடைக்கும்.
கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கடன் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திப் பராமரித்தால் மட்டுமே பலன். இல்லையென்றால், வட்டிக்கு வட்டி என்று ஓய்ந்துவிட வேண்டியதுதான். வட்டி விகிதம் குறைந்தபட்சம் 24 – 36% என்பதால், இ.எம்.ஐ. முறையில் பொருட்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில் செலுத்தவில்லை எனில் அபராதம் இருக்கும். ஒழுங்காச் செலுத்தவில்லையெனில், உங்களின் பெயர் சிபில் (Credit Information Bureau (India) Limited) ரிப்போர்ட்டில் சேர்ந்துவிடும். பிறகு, உங்களால் வேறு எந்த வங்கியிலுமே கடன்கள் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்படும்!
சேமிப்பு வாகனம்!
பொதுத்துறை வங்கிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்கள் 16 – 18% வரையிலான வட்டியில் கடன் தருகின்றன. எனவே, சேமிப்புப் பணத்தில் வாகனம் வாங்குவதே சிறந்தது. அடுத்த வருடம் பைக் வாங்க வேண்டும் எனில், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) முறையில் வங்கிகளில் முதலீடு செய்யலாம். இதில் 7.5 – 9% வரை வட்டி கிடைக்கும். அதாவது, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தினால், ஓராண்டு முடிவில் சுமார் 38 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் வாங்கவிருக்கும் பைக்கின் விலையைப் பொறுத்து, மாதாந்திர தொகையை அதிகரிக்கலாம்.