Thursday, September 25, 2014

மங்கள்யான் ஹீரோக்கள்

கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார் தெரியுமா:

ராதாகிருஷ்ணன்: இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள், செயல்பாடுகளுக்கு இவரே முதல் பொறுப்பு. கேரளாவின் திருச்சூரை சேர்ந்த இவர் 1971ல் பி.எஸ்.சி., (எலக்ரிக்கல் இன்ஜினியரிங்) முடித்தார். இதன் பின் 1971ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். 1976ல் பெங்களூர் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்தார். ஐ.ஐ.டி., காரக்பூரில் 2000ல் பி.எச்டி., பட்டம் பெற்றார். 2009 அக்., 31ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார். இஸ்ரோ அனுப்பிய "சந்திராயன்-1' விண்கலத்தில் இவரது பங்கு முக்கியமானது. 40 வருட விண்வெளி துறை அனுபவம் உடையவர். மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 

அண்ணாதுரை: மங்கள்யான் திட்ட இயக்குனராக இருப்பவர். தமிழகத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் 1980ல் இளநிலை இன்ஜினியரிங் பட்டமும், 1982ல் முதுநிலை இன்ஜினியரிங் பட்டமும் பெற்றார். 1982ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். ரிமோட் சென்சிங் தொடர்பான செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கிறார். இவர் இந்த செயற்கைக்கோளுக்கான செலவு, கட்டமைப்பு, அது செல்லும் திசை, செலுத்துவதற்கான நேரம், செயற்கைகோளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித்தார். இவர் ஏற்கனவே இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் திட்ட இயக்குனராகவும் இருந்தார்.பூமிக்கும், செவ்வாய்க்கு இடையிலான காலநிலை போன்றவற்றை பலமுறை கணித்து, செயற்கை கோள் ஏவக்கூடிய தருணத்தை குறித்தது இவர் தான். இவர் இஸ்ரோ அனுப்பிய பல்வேறு செயற்கைகோள் பணிக்கு திட்ட இயக்குனராக இருந்துள்ளார். தமிழகத்தின் 10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரைப் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. 

ராமகிருஷ்ணன்: இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருக்கிறார். மங்கள்யான் செயற்கைக்கோள் செலுத்தும் பொறுப்புக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., முடித்தார். இவர் 1972ல் இஸ்ரோவில் சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மேம்பாட்டு வளர்ச்சியில் இவர் பணி மகத்தானது. ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ராக்கெட் ஏவுவதற்கான நிலைகள் ஆகியவற்றை கணிப்பது இவரின் பணி. மங்கள்யான் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைத்ததற்கு இவர் தான் பொறுப்பு.

இது குறித்து அவர் கூறியது: செவ்வாய்க்கு நாம் அனுப்பிய செயற்கை கோள் முற்றிலும் நமது உள்நாட்டு உபகரணங்களை வைத்து தயாரித்ததில் பெருமை. இந்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதற்கான மொத்த நேரம் 48 நிமிடமாக இருந்தது. மற்ற பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுவதற்கான நேரத்தை விட இது இருமடங்கு.

எஸ்.கே. சிவக்குமார்:மைசூருவை சேர்ந்த இவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக இருக்கிறார். இவர் 1976ல் இஸ்ரோவில் சேர்ந்தார். எம்.டெக்., முடித்துள்ளார். இந்திய செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், திட்டமிடுதல்; இயக்குதல் போன்றவற்றில் இவரது பணிகள் அதிகம். இஸ்ரோ முதன் முதலாக உள்நாட்டு தயாரிப்பில் வெற்றிகரமாக அனுப்பிய செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர் இவரே.

மங்கள்யான் வெற்றி குறித்து இவர் கூறியது: "செவ்வாயில் நமது குழந்தை தவழ்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு குழந்தைக்கான ஆப்பரேஷன் போலத் தான் இருந்தது'.

பி.குன்ஹிகிருஷ்ணன்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் திட்ட இயக்குனராக ஒன்பதாவது முறையாக பதவி வகிக்கிறார். இவர் 1986ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட 8 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளின் மிஷன் திட்ட இயக்குனராக இருந்தார். நவ., 5ல் மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி25/மார்ஸ் ராக்கெட்டின் திட்ட இயக்குனரும் இவரே. ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து, அதிலிருந்து செயற்கைக்கோள் சரியாக பிரிந்து சுற்றுவட்டப்பாதையில் இணையும் வரை நடக்கும் நிகழ்வுகளுக்கு இவரே பொறுப்பு.மற்ற ராக்கெட்டுகளை இந்த மங்கள்யான் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பு, காலநிலை மற்றும் ஏவுவதற்கான கால நேரம் உள்ளிட்ட விஷயங்கள் இவருக்கு சவாலாக அமைந்தது.

சந்திரடாதன்:இவர் எரிபொருள் ஒழுங்குமுறை அமைப்பின் திட்ட இயக்குனர். 1972ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். இவர் எஸ்.எல்.வி., - ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். முப்பது ஆண்டுகளாக எஸ்.எல்.வி., - 3, ஏ.எஸ்.எல்.வி., மற்றும் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.

ஏ.எஸ்.கிரண்குமார்:செயற்கைக்கோள் அப்ளிகேஷன் மையத்தின் திட்ட இயக்குனராக இருக்கிறார். இவர் 1975ல் இஸ்ரோவில் சேர்ந்தார். எலக்ட்ரோ - ஆப்டிகல் இமேஜிங் சென்சாரின் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. சந்திராயன் - 1 விண்கலத்திலும் இவரது பணி இருந்தது. ராக்கெட்டின் மூன்றுவிதமான இயங்குதிறனுக்கு (மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன் சென்சார், தெர்மல் இன்பிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர்) இவரே பொறுப்பு.

எம்.ஒய்.எஸ்.பிரசாத்:சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருக்கிறார். 1975 - - 1994 வரை இஸ்ரோவின் லாஞ்ச் வெகிக்கிள் வளர்ச்சி பணியில் பணியாற்றினார். டி-டாம் மற்றும் எஸ்.எல்.வி., - 3 (நாட்டின் முதல் உள்நாட்டு தயாரிப்பு ராக்கெட்) ஆகிய திட்ட பணியில் இவரது பங்கு முக்கியமானது. 1998 - 2005 வரை இஸ்ரோவின் முதன்மை கட்டுப்பாட்டு வசதியின் இயக்குனராக இருந்தார். ராக்கெட்டின் பாதுகாப்பு திறன்களுக்கு இவரே பொறுப்பு.

எஸ்.அருணன்:மங்கள்யான் திட்டப்பணியின் இயக்குனராக இருப்பவர் எஸ்.அருணன். மேலும் இவர் மங்கள்யான் செயற்கைக்கோள் வடிவமைப்பு குழுவில் இவரும் ஒருவர். தமிழகத்தின் திருநெல்வேலி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். 1984ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்.300 நாட்களுக்குப் பின், மீண்டும் இயக்கக்கூடிய வகையில் இந்த மங்கள்யானில் சோலார் மின்திறன் செல்; மற்றும் புதிய நேவிகேஷன் மையம் ஆகியவற்றை வடிவமைத்தார்.

பி.ஜெயக்குமார்: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் திட்டத்தின் இணை இயக்குனராக இருக்கிறார். ராக்கெட் சோதனை நேரத்தில் தொடங்கி விண்ணில் ஏவப்படும் வரை, இவரே பொறுப்பு.

எம்.எஸ்.பன்னீர்செல்வம்:ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தின் தலைமை பொது மேலாளராக இருக்கிறார். எவ்வித தடங்கல் ஏற்படாமல், ராக்கெட் ஏவுவதற்கான அனைத்து விதமான கால அட்டவணைகளை தயாரித்து கொடுக்கும் பணி இவருடையது.

கேசவராஜூ:இவர் மங்கள்யான் செயற்கைக்கோள் இயக்குனர்.

கோட்டீஸ்வர ராவ் - இஸ்ரோ சயின்டிபிக் செயலர்



'மங்கள்யான்' கடந்த பாதை:



● 2013 நவ., 5: மங்கள்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
● நவ., 7: பூமி சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
● நவ., 8: பூமியின் சுற்று வட்டப்பாதையில் 2-வது முயற்சி,
● நவ., 9: 3-வது சுற்று முயற்சி.
● நவ., 11: 4-வது கட்ட முயற்சி.
● நவ., 12: 5-வது கட்ட முயற்சி.
● நவ., 16: 6-வது கட்ட முயற்சி.
● டிச., 1: மங்கள்யான் செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து வெளியேறியது.
● டிச., 4: பின்னர் 9.25 லட்சம் கி.மீட்டர் பயணம்.
● டிச., 11: விண்வெளியில் முதல் கட்ட பாதையில் சரியாக செலுத்தப்பட்டது.
● 2014 ஜூன் 11: சரியாக செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் பயணம், 2-வது கட்டமாக மீண்டும் சரி செய்யப்பட்டது.
● செப்., 22: செவ்வாய் ஈர்ப்பு விசை பாதைக்குள் நுழைந்தது. 10 மாதங்களாக செயல்படாமல் மங்கள்யான் செயற்கைக்கோளில் விண்கலத்தில் உள்ள முக்கிய திரவநிலை நியூட்டன் 440 இயந்திரத்தை சுமார் 4 வினாடிகள் இயக்கினர். இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
● செப். 24: ஏற்கனவே திட்டமிட்டதைப் போல, மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது.



முதல் முயற்சியில் வரலாறு:



செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முயற்சி, 1960லியே மேற்கொள்ளப்பட்டது. சோவியத் யூனியன் சார்பில், '1எம் நம்பர் 1' என்ற விண்கலம், 1960 அக்., 10ல் அனுப்பப்பட்டது. இது செவ்வாயின் சுற்றுவட்டப்பாதைக்கு செல்ல முடியாமல், தோல்வி அடைந்தது. அதன்பின், நான்கு முறை முயற்சித்து, சோவியத் யூனியன் தோல்வி கண்டது.
*அமெரிக்கா, 1964 நவ., 5ல், 'மாரினர் 3' என்ற விண்கலத்தை, முதன்முறையாக செவ்வாய்க்கு அனுப்பியது. அது, ஏவும்போதே தோல்வியில் முடிந்தது. 20 நாட்கள் கழித்து, மீண்டும், நவ., 28ல், 'மாரினர் 4' என்ற விண்கலத்தை அனுப்பியது. இது, வெற்றியில் முடிந்தது. இதன்மூலம், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை, அமெரிக்கா பெற்றது.
*சோவியத் யூனியன், 1971ல் செவ்வாய்க்கு அனுப்பிய, 'மார்ஸ் 3' விண்கலம் வெற்றி பெற்றது. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய, இரண்டாவது நாடு என்ற பெருமையை, சோவியத் ரஷ்யா பெற்றது.
*முதல்முறை தோல்விக்குப் பின், 2003 ஜூன் 2ம் தேதி, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இரண்டாவது முறையாக, செவ்வாய்க்கு, 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலத்தை, அனுப்பியது.
*ஜப்பான் 1998லும், சீனா 2011லும், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய முயற்சிகளில் தோல்வி அடைந்தன.
*செவ்வாய்க்கு, செயற்கைகோள் அனுப்பிய நாடுகளின் பட்டிய லில், நான்காவதாக,இந்தியா இணைந்துள்ளது. இந்தியா மட்டுமே, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment