Wednesday, December 26, 2012

பெங்களூருவில் புது சசிகலா! புதிய நீதிபதியின் அதிரடிப் பாய்ச்சல்.



16 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு​கொண்டே போகும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணா​வின் அதிரடிப் பாய்ச்சலால் மீண்டும் சூடு பிடித்து விட்டது. 
பெங்களூரு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் கேள்வி கேட்டு முடிப்ப​தற்குள் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு, அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் திடீர் ராஜி​னாமா, ஆவணங்களைப் பார்வையிட மனு போன்ற காட்சிகள் அரங்கேறின. புதிய நீதிபதி நியமனம் நடந்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தாமதித்து வந்த சசிகலா, இப்போது பெங்களூரு கோர்ட்டில் 'பவ்யமாக’ பதில் சொல்கிறார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரங்கேறிய‌ காட்சிகள் இங்கே...
பெங்களூரு குளிர் பிடிச்சிருக்கு!
18-ம் தேதி இரவே பெங்களூரு வந்து இறங்கினார் சசிகலா. அவருக்கு முன்பே பெங்களூரு வந்த வக்கீல் படை கேபிடல் ஹோட்டலில் காத்திருந்தனர். கடந்த முறை, தனியாக வந்த சசிகலா இந்த முறை சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து வந்திருந்தார். சுதாகரனும் இளவரசியும் ஏனோ வரவில்லை. பெங்களூருவில் நிலவும் அதிகப்படியான குளிரை ரசித்துக்கொண்டே, 'பெங்களூரு குளிர் நல்லா இருக் குல்ல’ என அதிகாலையிலே உற்சாகமாக வாக்கிங் போனாராம். அதன்பிறகு, தன்னுடைய வக்கீல் மணி சங்கரிடமும் செந்திலிடமும் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்து விட்டு, சரியாக 10.35 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வெள்ளைக் காரில் உற்சாகமாக வந்து இறங்கினார். கடந்த முறை வாக்குமூலம் அளிக்க பெங்களூரு வந்தபோது, ஜெயலலிதாவுடன் பிரிவு என்பதால் சுணக்கமாகக் காணப்பட்ட சசி, இந்த முறை வைரக் கம்மல், புது டிசைன் நெக்லஸ், சிவப்பு ரத்தினக் கல் மோதிரம் எனப் புதுப் பொலிவோடு வந்திருந்தார். சசிகலாவை வரவேற்பதற்காக ஏராளமான வக்கீல்களும் கரை வேட்டி கட்டாத ரத்தத்தின் ரத்தங்களும் வந்திருந்தனர்.
நீதிபதியின் திடீர் கேள்வி!
கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த சசிகலா சிறிது நேரம் வக்கீல்களிடம் பேசிவிட்டு, சரியாக காலை 11 மணிக்கு குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து கொண்டார். நீதிபதி 11.20-க்கு வந்ததும், 'ஏன் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள். முன்னாடி வாங்க’ என அழைத்ததும், நீதிபதியின் முன்பு போடப்பட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார். வழக்கமாக தன் னோடு கொண்டுவரும் கைக்குட்டை, சின்ன கைப்பை, கறுப்புக் கண்ணாடி, பிளாஸ்க், ஒரு ஃபைல், அதில் கட்டாக வெள்ளைத் தாள்களுடன் ஆஜராகி இருந்தார். இதுவரை 632 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்த சசிகலாவிடம், 'எவ்வளவு படித்தி ருக்கிறீர்கள்?’ என நீதிபதி திடீரென ஒரு கேள்வி கேட்கவே ஷாக்காகி, பதில் சொல்ல முடியாமல் திணறினார். உடனே அவரது வக்கீல் மணிசங்கர், 'எஸ்.எஸ்.எல்.சி.’ என்று எடுத்துக்கொடுத்ததும் சசிகலாவும் அப்படியே பதில் சொன்னார். 'அப்போ உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது...
ஓகே.?’ என்றபடி சந்தேகக் கண்ணோடு சசிகலாவைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸை அழைத்தார் நீதிபதி.
மீண்டும் பிட்!
கோர்ட்டுக்கு உற்சாகமாக வந்த சசிகலா, நீதிபதி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும் செம அப்செட். முதல்நாள் முழுக்கவே ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், வினோத் வீடியோ விஷன், ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்வி​கள் என்பதால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது’ என்றும் 'உண்மை’ என்றும் பதில் சொன்ன சசிகலா, சில கேள்விகளுக்கு மட்டும் தன்னுடைய ஃபைலில் இருந்த வெள்ளைத் தாளின் ஒரு புறத்தில் மெலிதாக பென்சிலில் எழுதிக்கொண்டு வந்திருந்ததை லாகவமாகப்‌ பார்த்துப் பதில் சொன்னார் 'சசிகலா காப்பி அடிக்கிறார்’ என்று சொல்லி கோர்ட்டையே கலக்கிய அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா அன்று இல்லை.  
'சுதாகரன்... இளவரசியா? ஐ டோன்ட் நோ!’
சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி​யான சுதாகரன், நான்காவது குற்றவாளியான இளவரசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கண்களை மூடிக்​கொண்டு, 'தெரியாது’ என்ற பதிலையே சொன்னார். ஆனாலும் நீதிபதி விடாமல் சுதாகரன், இளவரசி தொடர்பான கேள்விகளையே 20-க்கும் மேல் கேட்க, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நெக்ஸ்ட் பிராப்பர்ட்டிஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுதாகரனும் இளவரசியும் பங்குதாரர்கள். ஆனால் அவர்கள் செக் கொடுத்தது, டி.டி. கொடுத்தது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது’ என்றார் சசிகலா. இதைக் கேட்ட கன்னட மீடியாவினர், 'ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கேள்வி கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. நான் சைலன்ட் பார்ட்னர் மட்டும்தான். சசிகலாவுக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று சொல்லித் தப்பித்தார். இவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்கிறாரே’ என்று சந்தேகம் கிளப்பினர்.
மேலிடத்து உத்தரவு?
மதிய இடைவேளைக்குப் பிறகு, கேள்விகள் இன்னும் வேகமெடுத்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் 'எனக்குத் தெரியாது’ என்ற பதிலை மட்டுமே மீண்டும் மீண்டும் சொன்னார் சசிகலா. ஒரு சில கேள்விகளுக்கு மட்டும், 'முதல்வர் ஜெயலலிதாவும் நானும் பல நிறுவனங்களுக்குப் பங்குதாரர்களாக இருந்ததால், எங்கள் சொந்த வங்கிக் கணக்கு மட்டுமின்றி, நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணம் அடிக்கடி பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது’ என்று தெளிவாகச் சொன்னார். அடுத்து நீதிபதி, 'நமது எம்ஜிஆர் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து உங்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதே?’ என்று கேட்டதும், 'அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், செய்திகள் தொண்டர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'நமது எம்ஜிஆர்’ பத்திரிகை 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது ஜெயா பப்ளிகேஷனின் துணை நிறுவனம். 'நமது எம்ஜிஆர்’ நாளிதழைப் பெற தொண்டர்களிடம் 12 ஆயிரம் ரூபாய் சந்தாவாகப் பெறப்பட்டு, அதை வங்கியில் டெபாசிட் செய்தோம். மேலும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களில் கிடைத்த லாபமும் 'நமது எம்ஜிஆர்’ நாளிதழுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்றார். முதல் நாள் முடிவில் சசி கலாவிடம் 110 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார் நீதிபதி பாலகிருஷ்ணா.
அசமந்த வியாழன்!
இரண்டாவது நாளும் முழுக்க முழுக்க ஜெயா பப்ளிகேஷன், ஜெயா பிரிண்டர்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளே கேட்கப்​பட்டன. தயாரித்து வந்திருந்த 'மறைப்பு’ குறிப்புகளைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமலே பதில் அளித்தார் சசிகலா. நீதிபதி பாலகிருஷ்ணா 1993 - 94 காலகட்டத்தில் நடந்த அத்தனை வங்கிக் கணக்குகளையும் சல்லடை போட்டு இரண்டரை பக்க அளவுக்குக் கேள்விகள் தயாரித்திருந்தார். ஆனால் சசிகலா கொஞ்சமும் மெனக்கெடாமல், 'தெரி யாது’, 'உண்மை’, 'உண்மையாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாகப் பதில் அளித்தார். நீதிபதியின் நீண்ட கேள்விகளை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் தமிழில் சசிகலாவிடம் தெளிவாகச் சொல்லி, அதை அவர் சின்சியராகக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஆனால், ஒற்றை வார்த்தையில் கேசுவலாகப் பதில் சொன்னதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் சசிகலாவின் மனநிலையை முழுதாகப் புரிந்து கொண்ட நீதிபதி, 'என்ன.. இந்த கேள்விக்கும் பதில், தெரியாதுதானே?’ என்று சொல்லி சசிகலாவுக்கு ஷாக் கொடுத்தார்.
இரண்டாவது நாள் முழுக்க ஆமை வேகத்தில் பயணித்ததால் 83 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆக மொத்தம் வியாழன் வரை சசிகலாவிடம் இருந்து 825 கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால் வெள்ளியன்றும் விசாரணை தொடர்கிறது.
பகல் முழுவதும் கோர்ட்டில் இருக்கும் சசிகலா, மாலை நேரங்களில் வெளியே கிளம்பி விடுகிறார். கலர் கலராக சுடிதார், தொப்பி அணிந்து கொண்டு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கருடா மால் ஆகிய இடங்​களுக்கு ஹாயாக ஷாப்பிங் போகிறார். அதனால், கோர்ட்டுக்கு வரும்போது விதவித​மான வாட்சுகள், வளையல்கள், மோதிரங்கள் பளபளக்கின்றன.
இப்படியே போனால் வழக்கு இன்னும் மூன்றே மாதங்களில் முடிந்துவிடும் என்ற குரல் கோர்ட் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது. வேறு முட்டுக்கட்டை வராமல் இருக்குமா?

No comments:

Post a Comment