Wednesday, December 26, 2012

சோனியா காந்தி, மன்மோகன்சிங் நினைத்தது நடந்தது! மோடி மேஜிக்


சோனியா காந்தி, மன்மோகன் சிங் உட்பட எல்லோரும் எதிர்​பார்த்ததுதான். நரேந்திர மோடி மீண்டும் ஜெயித்து விட்டார். அரசியல் நோக்கர்கள் பலருமே கணித்தபடிதான் இருந்தது மக்கள் அளித்த முடிவும். 
தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைப்பதும் அதிலும் ஏறுமுகமாகவே இருப்பதும் அவருடைய மறுக்க முடியாத சாதனை. இந்த  வெற்றி பி.ஜே.பி-க்கு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் ஆசையை அதிகரித்து இருக்கிறது. அத்வானி, கட்கரி, சுஷ்மா சுவராஜ் போன்ற அந்தக் கட்சியின் தலைவர்கள் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் நரேந்திர மோடி.
எப்படி நடந்தது இந்த மாற்றம்?
இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தை, தன்னிறைவு பெற்றதாக மாற்றியதுதான் அவருடைய சாதனை. குஜராத்தில் சாராயக் கடைகள் இல்லை. மக்களை போதையில் ஆழ்த்தி வழிப்பறி செய்ய வில்லை. மின்சாரத் தட்டுப்பாடு கிடையாது. மாறாக, உபரி மின்சக்தி மாநிலமாக மாற்றி இருக்கி​றார். தண்ணீர்த் தட்டுப்பாடும் அறவே இல்லை.
அப்படி என்ன மோடி மஸ்தான் வேலைகளைச் செய்தார் மோடி?
2001-ல் அவர் முதலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போதுதான், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு நிகழ்ந்து இருந்தது. 2002-ல் அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த கரசேவகர்கள் வந்த ரயில் பெட்டி தீக்கிரையானது. முஸ்லிம் தீவிரவாதிகள்தான் தீ வைத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் மோடி. இந்து அமைப்பினர், முஸ்லிம் குடும்பங்களைக் குறி வைத்துத் தாக்கினர். வகுப்பு மோதலில் ஏறத்தாழ 800 முஸ்லிம்களும் 250 இந்துக்களும் கொல்லப்பட்டனர். 2,500 பேர் காயமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. உண்மையில் பாதிப்பு இன்னும் அதிகம் இருக்கும் என்றனர் சமூக ஆய்வாளர்கள். பூகம்பமும் மதக் கலவரமும் குஜராத்தைச் சீர்குலைத்து விடும் என நாடே நினைத்தது. ஆனால், மோடி நிலைமையை சமாளித்தார். முஸ்லிம் மக்களை முரட்டுத்தனமாக ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், வேகமான சீரமைப்புப் பணி களில் கவனம் செலுத்தினார். மோடியின் சாதுர்யம் அதுதான்.
அரசின் நிதி நிலைமையைப் பெருக்கும் திட் டங்களில் கவனம் செலுத்தினார். நர்மதை என்ற ஜீவ நதி இருந்தாலும் மாநிலத்தில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டி நீர் ஆதாரங்களைப் பெருக்கி, விவசாயிகளின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தீர்த்தார். வேளாண்மையில் அரசு எந்திரத்தை முழுமையாகத் திருப்பினார். பஞ்சு, கரும்பு, வேர்க்கடலை போன்றவை விளைச்சலில் சாதனை படைத்தன.
கூடவே, தொழில் துறையிலும் கவனம் செலுத்தி​னார். மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனம் தொடங்க முடியாமல் தத்தளித்த கார் தொழிற்சாலையை, இவர் குஜராத்துக்குக் கொண்டு வந்தது ஓர் உதாரணம். ஜிப்சம், மாங்கனீஸ், லிக்னைட், பாக்ஸைட், குவார்ட்ஸ் மணல் போன்ற கனிம வளங்களில் ஊழல் நடக்காமல் முறைப்படுத்தினார். பூரண மது விலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் வரியில்லா பட் ஜெட்டை நிலைநாட்டினார். மதவெறி அரசு என்ற பெயரை, மது வெறியில் இருந்து மீட்டதன் மூலம் திசை திருப்பினார்.
2007 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி​பெற்று ஆட்சி அமைத்தார். 2,063 நாட்கள் தொடர்ந்து ஆட்சி செய்தவர் என்ற சாதனையோடு இப்போது மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் மோடி.
கடந்த வியாழக்கிழமை குஜராத் தேர்தல் முடி வுகள் வெளியானது. ஆரம்பம் முதலே மோடி​யின் பி.ஜே.பி. கட்சியே முன்னிலை வகித்தது. மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட மோடி  ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வென்று இருக்கிறார். குஜராத்தின் மொத்த சட்டசபை தொகுதிகள் 182-ல் 115 இடங்களில் பி.ஜே.பி. வென்று தனிப் பெரும் பான்மை பெற்று இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளின்படி திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் மோடி. வாரிசு இல்லை, ஊழல் இல்லை என்பதுடன் இந்து ஓட்டுக்கள்தான் மோடி யின் இலக்கு.
90 சதவிகித இந்துக்களின் ஓட்டுகளுக்காக அவர் மதரீதியாகச் செயல்படுவதால், முஸ்லிம்களின் அச்சத்தைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க​வில்லை என்ற குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே இருக்கிறது. மோடி இந்தியப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இந்த மதவாதச் சாயத்தைத் துடைத்தால் முன்னேறலாம்!

No comments:

Post a Comment