Wednesday, July 13, 2011

கலாநிதி மாறனும், காவல் நிலையத்தில் காலடி வைக்கிறார்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் கைது, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கின்றது. சக்சேனாவின் பாஸ் கலாநிதி மாறனை விசாரணைக்கு நேரில் வருமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சக்சேனா மீதான குற்றச்சாட்டு, திரையுலக வர்த்தகத்தில் அடாவடித்தனம் செய்தது, பண மோசடி செய்தது ஆகிய இரண்டும்தான். இந்த வகையில் மூன்று வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. பதிவான வழக்குகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகவுள்ளது என்பதும் நன்றாகத் தெரிகின்றது.

குற்றம் சாட்டப்படும் ஒவ்வொரு சம்பவமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சம்மந்தப்பட்டதாகவே உள்ளது.

இதனால், சன், டிவி குழும நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனை இந்த வழக்குகளுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலாநிதி இதற்குள் காலடி எடுத்து வைக்கும் நிமிடத்திலிருந்து, இந்த மிரட்டல்-கம்-மோசடி வழக்குகள் அரசியல் முக்கியத்துவம் பெறப்போகின்றன.

இதோ இன்று (13ம் தேதி), அதற்கான வேளை வந்துவிட்டது.

இன்று காலை 10 மணிக்கு, கலாநிதி மாறனை கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி, கே.கே.நகர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். தமிழகத்தில் அடுத்த சில வாரங்களுக்கு தலைப்புச் செய்திகளை கலாநிதி மாறனும், தனது சகோதரர் தயாநிதி மாறனுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

தயாநிதியா, கலாநிதியா தலைப்புச் செய்திகள் அதிக இடம் பெறுவார்கள்? போட்டி கடுமையாகத்தான் இருக்கும்!

No comments:

Post a Comment