Thursday, May 31, 2012

உங்கள் கவனத்துக்கு... 90% விலை இறங்கிய பங்குகள்!




அதிரடி தள்ளுபடி என்பார்களே, அதை நம் பங்குச் சந்தையில் பட்டவர்த்தனமாகப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரங்களுக்கும் குறைந்த விலையில் நமக்குக் கிடைக்கின்றன. சில நல்ல பங்குகள்கூட 50 சதவிகித தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
ஆனால், சில பங்குகள் 90 சதவிகித விலைக்கழிவில் கிடைக்கின்றன. இந்த பங்குகள் ஏன் 90 சதவிகிதம் வரை விலை இறங்கின? இந்த பங்குகள் மீண்டும் உயர வாய்ப்பு இருக்கிறதா? இவற்றை வாங்கலாமா? என பல கேள்விகளை டெக்னிக்கல் அனலிஸ்ட் ஸ்ரீராமிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு விளக்கமான பதிலைச் சொன்னார் அவர்.
''இருபது வருடங் களுக்கு மேல் சந்தையைப் பார்த்தவன் என்கிற முறையில் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். சரிவு, வீழ்ச்சி என்பது அனைவருக்கும் பொது வானது. அது தனிமனிதனாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி, ஏன் நாடு களுக்கேகூட சரிவு என்பது சில காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது.
தத்துவார்த்த ரீதியில் எந்த ஒன்றும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் எகிப்து சாம்ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது. இப்போது நாம் அதைப் பற்றி பேசுகிறோமா? அவ்வளவு ஏன், சில வருடங்களுக்கு முன்புவரை ஜப்பான் உலகத்திற்கு மாடலாக இருந்தது. இன்றைக்கு ஜப்பானை யாரும் அப்படி பார்ப்பதில்லை. அதனால் சரிவு என்பது அனைவருக்கும் பொதுவானதே.
சரி, சரிவு ஏன் வருகிறது? இதற்கு பல காரணங் கள் இருக்க வாய்ப்புண்டு. ஒட்டு மொத்தமாக அந்த துறையே பிரச்னையில் சிக்கி இருக்கலாம். அந்நிறுவனத்தின் தலைவர்கள் ஏதாவது சில தவறான முடிவு களை எடுத்திருக் கலாம். அல்லது பணப் பிரச்னை போல ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கலாம். இதனால் அதன் பங்கு சரிந்திருக்கலாம்.
 இந்த சாத்தியம் அனைத்து பங்குகளுக்கும் இருக்கிறது. மிக சிறப்பான பங்குகள் என்றால் 80 முதல் 90 சதவிகிதம் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. மீடியமான நிறுவனங்கள் 90 முதல் 95 சதவிகிதம் வரை சரிய வாய்ப்புண்டு. ஆனால், 98 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்த பங்குகளும் உண்டு. இந்த பங்குகளை நாம் வாங்கக் கூடாது.
தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் தங்களது 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டி ருக்கிறது. சில பங்குகள் 90 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருக்கிறது. இந்த பங்குகள் எல்லாம் மீண்டும் மேலே வருமா என்று கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால், சில பங்குகள் மீண்டும் நன்றாக உயர வாய்ப்பு இருக்கிறது. கடந்த காலத்தில் தரை தட்டிய பங்குகள் மீண்டும் எப்படி உயர்ந்தது என்று சொல்கிறேன்.
முதலாவதாக, பாட்டா பங்கினை எடுத்துக் கொள் வோம். அந்த பங்கு மார்ச் 1999-ம் ஆண்டு 258 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதன்பிறகு மார்ச் 2009-ம் ஆண்டு 24 ரூபாய் என்ற விலைக்கு சரிந்தது. பங்கு விலை சரிந்தவுடன் பல நெகட்டிவ் செய்திகள் வந்தன. அதை எல்லாம் தாண்டி அந்த பங்கு மெள்ள மெள்ள தொடர்ந்து உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 100 ரூபாய் என்ற நிலையில் வர்த்தக மானது. அதன்பிறகு இந்த பங்கு தொடர்ந்து உயர்ந்து 900 ரூபாய்க்கு மேலே சென்றது.
இதேபோல ஐ.டி.சி., ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டி.டி.கே. பிரெஸ்டீஜ் மற்றும் டாரன்ட் பார்மா உள்ளிட்ட பல பங்குகளை உதாரணமாக காட்ட முடியும். இந்த பங்குகளின் சார்ட்டை எடுத்து பார்த்தால் அவற்றின் வரலாறு நமக்கு தெரியும். இந்த பங்குகளை நான் உதாரண மாக காட்டுவதை வைத்து, நான் இந்த பங்குகளை பரிந்துரை செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பங்கு களின் விலை இன்னும் சில சதவிகிதம் உயரும் என்றாலும் பெரிய அளவில் வருமானம் கொடுக்கும் என்று சொல்ல முடியாது'' என்றவரிடம், ''தற்போது 90 சதவிகித சரிவில் இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாமா?'' என்று கேட்டோம்.
''தற்போது சரிந்திருக்கும் அத்தனை பங்குகளும் மீண்டும் இதே போல உயரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், சில பங்குகள் உயர வாய்ப்பிருக் கிறது'' என்றபடி நம் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.
''90 சதவிகிதம் சரிந்த பங்கு களில் முதலீடு செய்யும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலில், அந்த பங்கின் பிஸினஸ் எப்படி இருக்கிறது, எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, தற்போதைய நிலையில் இன்ஃப்ரா துறை கொஞ்சம் பிரச்னையில் இருந்தாலும் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இரண்டாவது, அந்நிறுவனத்தின் கார்ப்பரேட் கவர்னன்ஸ் எப்படி இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். இதைப் பார்த்து முதலீடு செய்து விட்டால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.
இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்க் என்றாலும் அதற்கான ரிவார்ட் (வருமானம்) மிக அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கு இரண்டு ரிஸ்கு கள் இருக்கின்றன.
முதலாவது, நாம் முதலீடு செய்யும் பங்கு எத்தனை நாளைக்கு பிறகு மேலே ஏறும் என்று தெரியாது. இரண்டாவது, புரமோட்டர்கள் டீலிஸ்ட் செய்யவும் வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
நீங்கள் சொல்வதுபோல நல்ல பிஸினஸ் எதிர்காலம், நல்ல கார்ப்பரேட் கவர்னன்ஸ் இருக்கும் பங்குகளை எதாவது பட்டியலிட முடியுமா?'' என்பது தவிர நம் அடுத்த கேள்வி வேறு என்னவாக இருக்க முடியும்.
நிச்சயமாகத் தருகிறேன். ஆனால் அந்த பட்டியலில் உள்ள பங்குகளை நீங்கள் கொஞ்சம் கவனமாக ஃபாலோ செய்ய வேண்டுமே தவிர, உடனடியாக அவற்றை வாங்குவதற்காகத் தரவில்லை. தவிர, அரச மரத்தைச் சுற்றி வந்த உடனே அடிவயிற்றைத் தொட்டுப்பார்க்கக் கூடாது. இவை நீண்ட காலத்துக்கு மட்டுமே'' என்று முடித்தார்.

மூன்றே மாதங்களில் ரூ.1151 கோடி நஷ்டத்தை சந்தித்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.

King Fisher Airlines loss Rs.1151 crores within three months.


கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதுவரை கண்டிராத அளவு மோசமான இழப்பை சந்தித்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.1151.53 கோடி இழப்பீட்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.355.55 கோடியாக இழப்பீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
2005-ம் ஆண்டு மே மாதத்திற்கு பின் கிங்பிஷர் விமான நிறுவனம் எந்த லாபத்தையும் பெறவில்லை. விமான எரிபொருளின் விலை ஏற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, இவை அனைத்தும் நிறுவனத்திற்கு 70 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 
 
கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்த நிறுவனத்தின் மொத்த கடன் தொகை ரூ.7,057.08 கோடியாகும்.

ஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை



ஸ்ட்ரீட் ரேஸ்.... சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பரபரப்பான நகர டிராஃபிக்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப்படும் பைக் ரேஸ் பயங்கரங்களை அறிவீர்களா?'கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று போலீஸார் அடித்துச் சொன்னாலும், 'வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன்றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில ரேஸ்களின் விதிகள்... பைக்கின் கிளட்ச், பிரேக் முதலியவை பயன்படுத்தக் கூடாது, சிக்னல் சிவப்புக்கு நிற்கக் கூடாது என்றெல்லாம் திகில் கூட்டுகின்றன.

இந்த பைக் ரேஸ்கள் எப்படித்தான் நடத்தப்படுகின்றன?

ஆதி முதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சித்தேன். நண்பரின் நண்பர் மூலம் பென்சில் ஸ்ட்ரெட்ச் மற்றும் ஜிக்ஜாக் பைக் ரேஸ்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.பென்சில் ஸ்ட்ரெச் என்றால், சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஒரே நேர்க்கோட்டில் பறந்து இலக்கை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பது. லயோலா கல்லூரி சாலையில் வைத்து கறுப்பு கரிஷ்மாவை உறுமவைத்துக்கொண்டு இருந்தான் அந்தச் சுள்ளான். பில்லியனில் ஏறி அமர்ந்தால், ஒட்டகத்தின் மீது அமர்ந்ததுபோல செம உயரம். செமத்தியாக உறுமிவிட்டு எடுத்த எடுப்பில் எழுபதைத் தொட்டது கரிஷ்மாவின் ஸ்பீடாமீட்டர். ஒரே நொடியில் உயிர் பயத்தைக் காட்டிவிட்டான் சுள்ளான். கண்களை மூடிக்கொண்டேன்.  கார்ட்டூன் படங்களில் வில்லனை ராக்கெட் நுனியில் கட்டி அனுப்புவார்களே... சத்தியமாக அப்படித்தான் இருந்தது. டிராஃபிக் இல்லாத அந்த அதிகாலை வேளையில் நம்பினால் நம்புங்கள்... முழுதாக ஒரே நிமிடம்தான்... மூன்று கிலோ மீட்டர்களைக் கடந்து ஸ்கைவாக் அருகே வந்து சேர்ந்தோம். பைக்கை நிறுத்திய நொடி விருட்டென்று தாவி இறங்கினால் கண்களில் பூச்சி பறக்க... காலுக்குக் கீழே சாலை நழுவியது!'ஈவ்னிங் சிக்ஸ்... ஹாரிங்டன் ரோடு... ஜிக்ஜாக்!'' என்று சங்கேத பாஷைபோலச் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டான் சுள்ளான்.மாலை 6 மணி... போக்குவரத்து நெரிசலில் பிதுங்கி வழிந்துகொண்டு இருந்தது ஹாரிங்டன் சாலை. குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு அந்த பல்சரில் ஏறி அமர்ந்தேன். கியர் தட்டிப் புறப்பட்டு நூறைத் தொட்ட பின் அதில் இருந்து இம்மியும் குறையவில்லை வேகம். அவ்வளவு நெரிசலிலும் பாம்பு போல வளைந்து நெளிந்து பறந்தது பைக். முன் பின் செல்பவர்கள் பைக்கின் உறுமல் சத்தத்துக்கே வழிவிட்டுத் தெறித்தார்கள். 'ஜஸ்ட் மிஸ்’ஸில் சிக்னல் சிவப்பைக் கடந்தான் பையன். டிராஃபிக் கான்ஸ்டபிள் ஊதிய விசில் பகீர் கிளப்பியது. மாநகரப் பேருந்துக்கும் மெட்ரோ வாட்டர் லாரிக்கும் நடுவே லேசாக உரசி சைக்கிள் கேப்பில் பறந்தது பைக்.  ஸ்டெர்லிங் சாலை பெட்ரோல் பங்க்தான் எண்ட் பாயின்ட். பைக்கில் இருந்து இறங்கி நீண்ட நேரத்துக்குப் பிறகும் வயிற்றைக் கலக்கிக்கொண்டே இருந்தது.

'பிரதர்... இதெல்லாம் தப்பு இல்லையா? பப்ளிக்கை இப்படித் தொந்தரவு பண்ணலாமா? போலீஸ் பிடிச்சா என்ன சொல்வீங்க?'' என்று கேட்டேன். ''ஹ... எங்களை சேஸ் பண்ணிப் பிடிக்க சென்னை சிட்டி யில ஒரு போலீஸ்கூடக் கிடையாதுங்க. ஏன், சோழாவரம் பைக் ரேஸர்கள்கூட எங்களைப் பிடிக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கு டிராக்குல மட்டும்தான் ஓட்டத் தெரியும். டிராஃபிக்ல ஓட்ட எங்களுக்குத்தான் தெரியும். சரி... வாங்க அடுத்து மவுன்ட் ரோட்ல ஒரு ஜெர்க் போடலாமா?'' என்று அழைத்தான். தலைக்கு மேலே கும்பிடு போட்டு இடத் தைக் காலி செய்தேன்.பிறகு, பைக் ரேஸ் விவரங்களை விசாரித்தால், டாப் கியரில் கிறுகிறுப்பு தட்டுகிறது.டிராக் ரேஸ்களைப் போலவே பக்கா பகீர் விதிமுறைகளுடன் சென்னையில் நடக்கின்றன ஸ்ட்ரீட் ரேஸ்கள். ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 7 வரை பல பிரிவுகளாகப் பிரித்து விதவிதமாக ரேஸ் நடத்துகிறார்கள். பல்ஸர் 180, பல்ஸர் 220, யமஹா ஆர்-15, கரிஷ்மா, அப்பாச்சி, யமஹா ஆர்.எக்ஸ் 100 இவையே ரேஸுக்கான பைக்குகள்.

ஃபார்முலா 1: ரேஸுக்கு அறிமுகமாகும் பொடிப் பையன்களுக்கான வரவேற்புப் பிரிவு. அதிகாலை அல்லது இரவு 10 மணிக்கு மேல் வெறிச்சோடிய சாலைகளில் நடக்கும். பைக்கை டியூன் செய்யக் கூடாது. அடையாறு பாலம் தொடங்கி கலங்கரை விளக்கம் சிக்னலுக்கு முன் முடியும் இந்த ரேஸ். ஐந்து நிமிடங்களுக்குள் வந்து சேர வேண்டும். 1,000 ரூபாய் அல்லது பீர் பார்ட்டி... இதுதான் பந்தயம்.

ஃபார்முலா 2: தாம்பரம், மதுரவாயல், கானாத்தூர் புறநகர் பைபாஸ், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பக்கம் பகல் நேரங்களில் நடக்கும் ரேஸ். டபுள்ஸ் கட்டாயம். 10 கி.மீ. பயண தூரம். பைக் டியூனிங் கூடாது. சைலன்ஸரின் உள்ளே இருக்கும் மப்ளரை வெட்டக் கூடாது. ஹெல்மெட் கட்டாயம். பந்தயத் தொகை 5,000 தொடங்கி 10 ஆயிரம் வரை!

ஃபார்முலா 3: காந்தி சிலை டு ராயபுரம் அல்லது காந்தி சிலை டு திருவான்மியூர் ரூட். பைக் நன்றாக ஓட்டத் தெரிந்த ரேஸர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும். மிதமான போக்குவரத்து இருக்கும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணிக்குள் ரேஸுவார்கள். ஹெல்மெட் அணியக் கூடாது. பந்தயம் பணம் மட்டுமே. 10 ஆயிரம் தொடங்கி 20 ஆயிரம் வரை.

ஃபார்முலா 4: காந்தி சிலையில் இருந்து ராயபுரம் சென்று அங்கு குறிப்பிட்ட நபரிடம் இருக்கும் ரகசிய எண் எழுதப்பட்ட அட்டையை வாங்கிக்கொண்டு, ஜெமினி வழியாக வடபழனி லட்சுமண் - ஸ்ருதி சிக்னல் வரை சென்று அங்கு இன்னோர் அட்டையைப் பெற்றுக்கொண்டு காந்தி சிலை வர வேண்டும். டபுள்ஸ் கட்டாயம். பந்தயத்தை நடத்துபவர்களின் பிரதிநிதிகள் பயண தூரம் முழுக்கப் பயணித்துக் கண்காணிப்பார்கள். நேரக் கணக்கு இல்லை. முதலில் வருபவரே வெற்றியாளர். பந்தயத் தொகை 20 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை.

ஃபார்முலா 5: சென்னையின் குறிப்பிட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே இதில் பங்கெடுக்கிறார்கள். பல்ஸர் மற்றும் அப்பாச்சி பைக்குகளில் பூந்தமல்லி நெடுசாலையில் தாசப்ரகாஷ் ஹோட்டல் அருகே தொடங்கி, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா வரை. காலை மற்றும் மாலையின் பீக் ஹவர்களில் மட்டுமே இந்த ரேஸ் நடக்கும். 5,000 தொடங்கி 20 ஆயிரம் வரை பந்தயம். சைலன்சரில் சின்ன மாற்றம் மேற்கொள்வதன் மூலம் செம விர்ர்ர்ரூம் சத்தத்தையும் அதிக புகையையும் கிளப்பு வார்கள்.  

ஃபார்முலா 6: மெக்கானிக்குகளுக்கு இடையே  நடத்தும் ரேஸ் இது. கலங்கரை விளக்கு முதல் திருவொற்றியூர் வரை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஒரு டீமூக்கு இரண்டு பைக்குகள். டபுள்ஸ் கட்டாயம். இரண்டில் எந்த பைக் முந்தி னாலும் அணிக்கு வெற்றிதான். மொத்தம் ஐந்து அணிகள் களத்தில் இருக்கும். பந்தயத் தொகை 50 ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை. போட்டி தொடங்கும் முன்னே நடுவரின் சாட்சிக் கையெழுத் துடன் பந்தயத் தொகைக்குப் பத்திரம் எழுதிவிடுவார்கள். பெரும்பாலும் பல்ஸர் 220-தான் இந்தப் பந்தயத்தில் பறக்கும். குறிப்பிட்ட ஐந்து இடங்களில் பைக்கை ஜிக்ஜாக் செய்து, மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஸ்பாட்டில் ஆட்கள் இருப்பார்கள். பீக் ஹவரில் நகர நெரிசலில் தொடங்கி வட சென்னையின் புழுதி பறக்கும் சாலை கன்டெய்னர் லாரி டிரைவர்கள் வரை கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவார்கள் இந்த ரேஸர்கள். சைலன்சர் மட்டும் அல்ல, இன்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்குகளிலும் சிற்சில மாற்றங்களை மேற்கொண்டு பைக்கின் வேகத் திறனை அதிகரிப்பார்கள்.

ஃபார்முலா 7: செம டெரர் ரேஸ் இது தான். தேர்ந்த மெக்கானிக்குகள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள்எனக் கலந்து கட்டிய ரேஸர்கள் பங்கெடுக்கும் ரேஸ். இரண்டு இரண்டு பைக்குகளாக 10 அணிகள் களம் இறங்கும். ஒரே சாலையில் அத்தனை பைக்குகளும் சென்றால் சிக்கிக் கொள்வார்கள் என்பதால், ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு ரூட். அனைத்து ரூட்டுகளும் சரியாக ஐந்து கி.மீ. தூரம் இருக்கும். ஹெல்மெட் அணியக் கூடாது. சைடு ஸ்டாண்டை மடக்கக் கூடாது. பைக்கை ஜிக் ஜாக் செய்து ஐந்து இடங் களில் தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். சமயங்களில் பந்தயத் தொகையைப் பொறுத்து பைக் பிரேக்கின் க்ரிப் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். சிக்னலில் நிற்கக் கூடாது. இவை இந்த ரேஸின் கண்டிப்பான விதிமுறைகள்.

கடும் போக்குவரத்து நெரிசலில் மட்டுமே நடக்கும் இந்த ரேஸில் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடிக்க மாட்டார்கள். கியர்கள் மூலமே வேகத்தைக் கட்டுப்படுத்தி, முழு த்ராட்டிலிலேயே பறப்பார்கள். எவ்வளவு போக்குவரத்து நெரிசலிலும், வளைந்து நெளிந்து கட் அடித்துச் செல்வது இவர்களின் முதுகெலும்பைச் சிலிர்க்கச் செய்யும் ஸ்பெஷாலிட்டி. ரேஸின்போது வேறு வழி இல்லாமல் சிக்னலில் வண்டியை நிறுத்தியவர்கள், போலீஸிடம் மாட்டியவர்கள், தடுமாறிக் கீழே விழுந்தவர்கள், விபத்தை ஏற்படுத்தியவர்கள் வாழ்நாள் முழுக்க மீண்டும் ரேஸில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.இந்த ரேஸில் கலந்துகொள்ளும் பைக்குகளின் மதிப்பு ஏழெட்டு லட்சங்களை நெருங்கும். தவிர, ரீ-மாடிஃபிகேஷனுக்கு ஓரிரு லட்சங்களை இறைத்திருப்பார்கள். பந்தயத் தொகை ஒரு லட்சம் தொடங்கி 10 லட்சம் தாண்டியும் எகிறும். அதிக ரேஸ்களில் ஜெயித்த பைக்கும் சமயங்களில் பந்தயமாக வரும். இதில் பெரும்பாலும் பைக்கை ஓட்டுபவர் பணம் கட்ட மாட்டார். குதிரைப் பந்தயத்தில் குதிரையை ஓட்டும் வீரன்போலத்தான் இதில் பைக்கை ஓட்டு பவரும். உயிரைப் பணயம் வைத்து பைக் ஓட்டுபவருக்குச் சம்பளம் 10 ஆயிரம் மட்டுமே. ஜெயித்த ரேஸர்களுக்கு பந்தயத் தொகையைப் பொறுத்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் வரை போனஸ் கிடைக்கும்.இந்த ரேஸ் கொடுக்கும் விறுவிறு போதை இளைஞர்களைச் சுண்டி இழுக்கிறது. ஆனால், இதன் மறுபக்கம்... தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ, வாகன விபத்துகளில் ஏற்படும் தலைக் காயம் உண்டாக்கும் பகீர் விளைவுகளைப் பட்டியலிடுகிறார். ''தலைக் காயம் ஏற்படும்போது மண்டையின் சருமம் கிழிந்து, மண்டையோட்டு எலும்புகள் நொறுங்கும். மூளையைப் பாதுகாக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துவிடும். மூளையின் உள்ளே நிரம்பியிருக்கும் திரவம் ரத்தம் கலந்து காதில் வழியும். கண்ணுக்குச் செல்லும் நரம்புகள் அறுந்து கண் பார்வை பாதிக்கும்.       மூளைக்கு ரத்தம் செல்லும் நாளம் வெடித்து, மூளையின் உள்ளேயும் ரத்தம் உறைந்துவிட்டால்... அது கிட்டத்தட்ட மரண நிலைதான். மூளையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் உயரும். மூளையின் செல்கள் இறந்ததாலும் ரத்த இழப்பாலும் உடனடியாக உடலின் தாதுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கும்! விபத்து நடந்த இடத்திலேயே அடிப்படை முதலுதவிகள் அளித்து உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கவில்லைஎன்றால், வாழ்க்கையே கேள்விக்குறியில் முடியும்!'' என்கிறார்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பைக் ரேஸ்கள் மிக அதிக அளவில் நடக்கும். போலீஸ் கண்காணிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் கொஞ்சம் கெடுபிடி காட்டினார்கள். இப்போது சிறுமி ஷைலஜாவின் மரணத்துக்குப் பிறகு கெடுபிடி இன்னும் இறுகி இருக்கிறது. இருந்தாலும் ஸ்ட்ரீட் ரேஸர்கள் அசருவதாக இல்லை. இப்போதும் தினமும் ஒரு ரேஸ் சென்னையின் ஏதோ ஒரு மூலையில் விறுவிறுத்துக்கொண்டேதான் இருக்கிறது.

விகடன்

இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து



இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இப்புதிய கொள்கைகளின்படி;

இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

தேசிய தொலைதொடர்பு கொள்கை 2012 என்ற இப்புதிய கொள்கைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செல்போன் சேவைகளை எளிமைப் படுத்தும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற்போல தரமான சேவைகளை வழங்குவதையும் இப்புதிய கொள்கை உறுதி செய்கிறது என்று மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.

தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த செல்போன் சந்தாதாரர் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது வரும் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. வேறு மாநிலத்திற்கு சென்றால், அங்கு 'மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி' எனப்படும் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் போது அதே செல்போன் எண்ணை தரமாட்டார்கள். இந்த நிலை, புதிய தொலை தொடர்புக் கொள்கையின் மூலம் மாற இருக்கிறது.

மீண்டும் குடும்பக்குத்து. பரிதாபத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.


மீண்டும் குடும்பக் குத்தாட்டம் மதுரையில் ஆரம்பம்! 
கருணாநிதியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மதுரையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம், மீண்டும் ஒரு பிரளயத்தை தி.மு.க. மேலிடத்தில் கிளப்பி​யுள்ளது. கடந்த 26-ம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மொத்தமே 20 பேர். ஆட்கள் குறைவு என்றதும், வாடகைக்கு ஆட்களைத் திரட்டி வந்த பிறகும் கலந்துகொண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டவில்லை என்பதுதான் சோகம்.
சமீபத்தில் அழகிரியின் அனுமதி இல்லாமலேயே மதுரைக்கு வந்த ஸ்டாலின், இளைஞர் அணி நேர்காணல், பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி​விட்டுத் திரும்பினார். அதனால், மதுரையிலும் கட்சி அவரது கைக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். 'அப்படி எல்லாம் இல்லை. என்றைக்கு​மே, மதுரைக்கு அண்ணன்தான் மன்னன்’ என்று சொல்லாமல் சொல்வதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நிர்​வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்​தார்களாம்.
மதுரை மாநகரில் மொத்தம் உள்ள 72 வட்டச் செயலாளர்களில் 66 பேர் ஆப்சென்ட். 9 பகுதிச் செயலாளர்களில் ஒருவர் மட்டுமே கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர் மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவியையும் வகிக்கும் ஜெயராமன். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறு பேரில் பொட்டு சுரேஷ், குருசாமி உள்ளிட்ட ஐந்து பேரைக் காணவில்லை. அதிதீவிர ஸ்டாலின் ஆதரவாளரான வேலுச்சாமி மட்டும் வந்திருந்தார். மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்களில் சிம்மக்கல் போஸ் மட்டும் ஆஜர். ஆக, 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டார்கள்.
வரவேற்றுப் பேசிய ஜெயராமன், 'தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின், அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆலோசனையின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தில்...' என்று தொடக்கத்திலேயே தற்காப்பு ஆட்டம் ஆடினார்.
'நான்தான் ராஜினாமா கடிதம் கொடுத்​துட்டேனே. அதை ஏத்துக்கிடாம கூட்டம் போடச் சொல்லி அசிங்கப்படுத்துறாங்களே...' என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் புலம்பிக்கொண்டே பேச எழுந்த தளபதி, அழகிரி பெயரையோ, ஸ்டாலின் பெயரையோ உச்சரிக்கவில்லை.
முன்னாள் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி மட்டும் அழகிரியை லேசாக உரசிப் பார்த்தார். 'நம்முடைய நண்பர்கள் சிலர் இங்கே வரவில்லை. ஏனோ, தெரியவில்லை. மதுரையின் நேரங்காலமோ என்னவோ! கழகம் கட்டளை இடுகிறது. நாம் இதை எல்லாம் செய்திட வேண்டும் என்று தலைமை கட்டளை இடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாம் எப்போதுமே போர்வீரர்கள் போல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எப்பேர்ப்பட்ட எதிரிகள் வந்தாலும் வீழ்த்த முடியும். படையைப் பலப்படுத்த வேண்டியவர்களே, அந்தப் படையைத் தடுத்து நிறுத்துவது சரியல்ல. நிர்வாகிகள் வராவிட்டாலும், ஒவ்வொரு வட்டத்தில் இருந்தும் ஒரே ஒரு தொண்டனாவது வந்திருப்பான் என்று நினைக்கிறேன். எனவே தலைமைக் கழகத்தின் உத்தரவுப்படி, தலைவரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதோடு, வருகிற 30-ம் தேதி பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி கழகத் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் படையெடுத்து வர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர், ­­'தம்பி நாங்க எல்லாம் அழகிரி, ஸ்டாலின் பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே கட்சியில இருக்கோம். என்னமோ இவங்கதான் கட்சி மாதிரி நடந்துக்கிறாங்க. மதுரையில, ஆர்ப்பாட்டம், மறியல், பட்ஜெட் விளக்கக் கூட்டம், சாதனை விளக்கக் கூட்டம், மொழிப்போர் தியாகிகள் கூட்டம், பொங்கல் விழா அது இதுன்னு ஆயிரம் நிகழ்ச்சிகளுக்கு அழகிரி பேரைப் போட்டு நோட்டீஸ் அடிச்சிருக்கோம். ஒரு நிகழ்ச்சியில்கூட அந்த மனுஷன் கலந்துக்கிட்டது கிடையாது. ஆனா, அவர் வர விரும்பாத ஒரு நிகழ்ச்சிக்குப் பேர் போடலைன்னு மாவட்ட நிர்வாகிகளை ஒதுக்கி ​வைக்கிறார்.
ஸ்டாலின் கொஞ்சம் பக்குவ​மானவர்னு நினைச்சோம். ஆனா, பிரச்னை வரும்னு தெரிஞ்சுக்கிட்டே அழகிரி இல்லாத நேரத்துல அவர் மதுரைக்கு வந்து பிரச்னையைக் கிளப்புறார். விளக்கம் கேட்டு நோட்டீஸ், கட்சியைவிட்டு நீக்கம்னா யாருக்கு அசிங்கம், கட்சிக்குத்தானே? தலைவரோட பிறந்த நாளைக் கொண்டாடுறதுலயுமா பாலிடிக்ஸ் பண்ணணும்? சென்னையில இருந்து கூட்டம் போடச் சொல்லி உத்தரவு வருது. கொடைக்கானல்ல இருந்துக்கிட்டு, 'ஒருத்தனும் போகாதே’னு உத்தரவு போடுறார் அழகிரி. கலைஞர் பிறந்த நாள் விழாவையும் இதே மாதிரி புறக்கணிச்சிடுவாங்களோனு கவலையா இருக்கு தம்பி. ஏன்னா, அழகிரி சொன்னா உதயசூரியனையேதோற்​​கடிக்கிற பயலுங்க இங்க அதிகம்'' என்றார் சோகமாக.
மதுரை அசிங்கத்தை தலைமை எப்படித் துடைக்கப்​போகிறதோ?

வருசநாடு... ஊத்தங்கரை... பழனிமலை... முருகமலை..தமிழகத்திலும் மாவோயிஸ்டுகள்?


செங்கொடி பூமியாய் தமிழகம் மாறிக்கொண்டு இருக்கிறது! 
சென்னையில் மாவோயிஸ்ட் இயக்கப் பொதுச் செயலாளர் விவேக் கைது செய்யப்பட்ட நேரத்தில், 'எனது பணியைத் தொடர்ந்து செய்ய வெளியில் ஆட்கள் இருக்​கிறார்கள். தமிழகத்தில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் மிக திருப்தியாக இருக்கிறது’ என்று சொல்லி இருந்தார். அப்படி என்றால் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் இருக்கிறார்களா என்று நக்சல் தடுப்பு போலீஸாரிடம் விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சி ரகம்.
''மாவோயிஸ்ட் சித்தாந்தத்தைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் என்று கணக்கிட்டால், தமிழகத்தில் தோராயமாக  6,000 பேரைக் குறித்து வைத்துள்ளோம்.  இதில் 1,000 பேர் வழக்கறிஞர்கள், 500 பேர் சட்டக் கல்லூரி மாணவர்கள். 2007-ம் ஆண்டு ஊத்தங்கரை, முருகமலை, வருசநாடு பகுதிகளில் நக்சல்கள் பயிற்சியில் ஈடுபடுவது வெளியே தெரிந்த பிறகே, நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸ் அணி உதயமானது. தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் நக்சல் தடுப்புப் போலீஸார் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இன்னும் நக்சல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.
கொடைக்கானல் - பழனி மலைப் பாதையில் ஒரு குழு, முருகமலை வனப்பகுதியில் ஒரு குழு, வருசநாட்டு மலைப் பகுதியில் ஒரு குழு, ஊத்தங்கரை பகுதியில் ஒரு குழு என நான்கு குழுக்கள் இருக்கின்றன. பின்தங்கிய மலைவாழ் மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அரசியல் பயிற்சி வகுப்பும், ஒரு சிலருக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கிறார்கள்.
அவர்கள் தங்கி இருக்கும் வருசநாடு, அடர்ந்த காட்டுப் பகுதியாகும். குமணந்தொழவு தொடங்கி வெள்ளி​மலை வரை சுமார் 624 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சுமார் மூன்று தலைமுறைகளாக பிற்படுத்தப்​பட்டோர், சீர்மரபினர், ஒடுக்கப்பட்டோர், ஆதிவாசிகள் என சுமார் 40 ஆயிரம் பேர் ஆங் காங்கே வாசிக்கிறார்கள்.
மே 1-ம் தேதி முதல் இந்தப் பகுதியை வனச் சரணாலயமாக மாற்றுவதாக அரசு அறிவித்து இருக்கிறது. அதனால் இவர்கள் எந்த நேரமும் இங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாவோயிஸ்ட்கள் இந்த மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கப் போவ தாகத் தெரி​கிறது. அதனால், தீவிரமாக கண்காணித்து வருகிறோம்'' என்று சொன்​னார்கள்.
இதுகுறித்து, வனத்துறை அலுவலர்களிடம் விசாரித்தோம். ''மலையில் வாழும் மக்கள் யாரையும், எதற்காகவும் வெளியேற்றப்போவது இல்லை. ஆனால், காடுகளில் வசிக்கும் மக்களால் இனி தங்களது தேவைக்காக கூடுதல் இடங்களைப் பயன்படுத்த முடியாது. இதுவரை செய்து கொடுத்த அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், குடிநீர் இணைப்பு போன்றவை நீடிக்கும். புதிய வசதிகள் எதையும் ஏற்படுத்த முடியாது'' என்றார்கள்.
ஆதிவாசிகள், பழங்குடியின​ருக்கான வன உரிமைச் சட்டம், 'காடுகளில் வசிக்கும் பழங்​குடியினர், ஆதிவாசிகளை எந்தக் காரணம்கொண்டும் வெளியேற்றம் செய்யக்கூடாது. அவர்கள் அனு​பவிக்கும் நிலங்களுக்கு விவசாயப் பட்டாவும், வீட்டுப் பட்டாவும் வழங்க வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு, வேளாண்மைக்கு முழு உரிமைகள் வழங்க வேண்டும்’ என்று சொல்கிறது. ஆனால் இவை பின்பற்றப்படுவது இல்லை. அதனால்தான் இந்தியாவில் நக்சல்கள் குறித்துப் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.பந்தமாந்தாயா கமிட்டி, 'நக்சல் என்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை இல்லை. மக்களுக்கு எதிரான பொருளாதார நடவடிக் கைகள் எடுப்பதாலும், பூர்வகுடி மக்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுவதாலும்தான் அவர்கள் ஆயுதம் எடுக்கிறார்கள். அரசின் கொள்கைகளில் மாற்றம் வந்தால்தான், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்’ என்று சொல்லி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள், ''வனச் சரணாலயம், புலிகள் சரணாலயம், வரையாடு சரணாலயம் என்ற பெயரில் உலக வங்கியிடம் இருந்து நிதி வாங்கி, அதை முறைகேடாகக் கொள்ளை அடிக்கவே மக்களை வெளியேற்றம் செய்கிறது அரசு. காடு வளர்ப்பு என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு காடுகளைத் தாரை வார்க்கப்போகிறார்கள். இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு மலைப் பகுதிகளில் எஸ்டேட்கள், தோட்டங்கள், மாளிகைகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை மீட்க எந்த அரசும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், பூர்வகுடி மக்களை மட்டும் விரட்டப் பார்க்கிறது.
மஞ்சம்பட்டி என்ற மலைக் கிராமத்​​தில் வாழ்ந்த 64 குடும்பங்களை சமீபத்தில் அரசு வம்படியாக வெளி​யேற்றம் செய்தது. அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்றாலும், அந்த மக்களால் கீழே உள்ள வாழ்க்கைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடிய​வில்லை. அதனால் பலர் மீண்டும் மலைக்குப் போகவே முயற்சி செய்கிறார்கள். அவர்கள் உரிமை மறுக்கப்படும் நேரத்தில் அவர்கள் மாவோயிஸ்ட்களாக மாறுகிறார்கள்'' என்று அரசை குற்றம் சாட்டினர்.
மக்களை வெளியேற்றுகிறோம் என்று சொல்லி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மாவோயிஸ்ட்​டுகளை உருவாக்குவதாக மட்டுமே அமைந்து​விட்டது!

கட்டண உயர்வால் கதறும் மக்கள்! மாதந்தோறும் கட்டுவது மாதிரி மாற்றக் கூடாதா?


வாட்டி எடுக்கும் கோடை வெயில் போதாது என்று, மக்களின் வயிறையும் எரிய வைக்கிறது, தமிழக மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு. 
கடந்த மார்ச் 30-ம் தேதி, தமிழ்நாடு மின்​சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி வீடு​களுக்​கான மின்கட்டணம், யூனிட் ஒன்றுக்கு 2.80 ரூபாயில் இருந்து 5.75 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணத்தை இந்த ஜூன் மாதம்தான் செலுத்தப் போகிறார்கள். முன்பை விட இரண்டு பங்கு அதிகமாகக் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் மக்கள். எதிர்பாராத கட்டண உயர்வால், மின்சார நுகர்வோர்கள் வெடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இந்தக் கூடுதல் தொகையை செலுத்துவதில் இருந்து விமோசனம் வேண்டி ஒரு கோரிக்கையை  முன்வைக்கிறார்கள்.
தமிழகத்தில் மின்வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து நீண்ட காலமாக, மாதம்தோறும் கட்டணம் செலுத்தும் முறைதான் இருந்து வந்தது. மாதத்தின் கடைசி 15 நாட்களில், கணக்கீடும் அடுத்த 15 நாளில் கட்டண வசூலும் செய்யப்பட்டது. திடீரென 87-ம் ஆண்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைகட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. இப்போது கட்டணம் கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், மாதம் தோறும் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.
இதுகுறித்துப் பேசும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நிஜாமுதீன், ''மின்சார நுகர்வோர்களில் 80 சதவிகிதம் பேர், வாங்கும் சக்தி குறைவானவர்கள். இப்போது அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கும் நிலையில் இவர்கள் இல்லை. இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால், ஒரே நேரத்தில் அதிக அளவில் கட்டணம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு மாதமும் என்றால் தொகை குறைவாக வரும், செலுத்துவதும் எளிது. இணையதளம் மூலம் அதிகம் பேர் மின் கட்டணம் செலுத்திவரும் நிலையில், நுகர்வோருக்கு வசதியாக மாதம்தோறும் கட்டணம் வசூலிக்கும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்'' என்றார், அழுத்தமாக.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியனோ, ''மின் வாரியத்தில் நவீனமயம் எனும் பெயரில், திட்டமிட்டுப் பணிஇடங்களை நிரப்பாமல் இருக்கிறார்கள். 9,000 பேர் செய்யவேண்டிய மின்கணக்கீட்டுப் பிரிவில் 2,500 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால், ஊழியர்களுக்கு அதிக வேலைப் பளுவும் நுகர்வோருக்குச் சிரமங்களும் ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதிதான், இன்றையக் கட்டணம் செலுத்தும் முறையின் பிரச்னைகள்.
மேலும் 88-ம் ஆண்டிலேயே அகற்றப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்று இலக்க மீட்டர்கள், இன்னும் ஏராளமான இடங்களில் இருக்கின்றன. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் வாரியப் பணியாளர் கணக்கீட்டுக்குச் செல்லும்போது, இந்த மீட்டர்களில் ஒரு சுற்று முழுவதும் சுற்றி முடித்து விடுகின்றன. அந்த மீட்டர்களின் அளவிடப்படாத மின்பயன்பாடு கணக்கில் இல்லாமல், மின் வாரியத்துக்கு பெரும் இழப்பாகிறது. மீண்டும் பழையபடியே மாதத்துக்கு ஒரு முறை கட்டண வசூல் எனக் கொண்டுவந்தால், வருவாய் சீர்குலைவு ஏற்படாமல் தடுக்க முடியும். நுகர்வோருக்கும் வசதியாகவே இருக்கும்'' என்றார்.
மின்சார நுகர்வோர்களின் இந்த நீண்ட காலப் பிரச்னை குறித்து, மின் வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபாலிடம் கேட்டோம். ''தமிழகத்தில் 1 கோடியே 40 லட்சம் வீட்டு மின்சார நுகர்வோர்கள் இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் 2,700 கட்டண வசூல் மையங்கள்தான் இருக்கின்றன. இந்த மையங்களில் அவ்வளவு வீட்டு நுகர்வோர்களும் மாதம்தோறும் திரண்டால், சமாளிக்க முடியாது. மொத்த சிஸ்டமும் பாதிக்கப்படும். போதுமான அளவுக்கு எங்களிடம் ஊழியர் இல்லை. 26 வருடங்களாக இரு மாதக் கட்டண முறை, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மாதத்துக்கு ஒருமுறை என மாற்றுவதால், நுகர்வோருக்கு எந்த லாபமும் இல்லை. பலபேர் புரியாமல் பேசுகிறார்கள். இதுகுறித்து அரசு பல முறை விளக்கம் கொடுத்து விட்டது. இருந்தாலும் இதை ஒரு குறையாக நினைப்பவர்கள், அரசுக்கு மனு கொடுக்கலாம்'' என்றார்.
மக்கள் கோரிக்கைக்கு விளக்கம் வேண்டாம், தீர்வுதான் வேண்டும்!

Wednesday, May 30, 2012

எனது இந்தியா! (செருப்பு ஊர்வலம் !) - எஸ். ராமகிருஷ்ணன்....



விஜய நகர ஆட்சியில் கிராம நிர்வாக முறையை கட்டோடு மாற்றி புதிய ஆயக்கர் முறை அறிமுகம் செய்யப்​பட்டது. அதன்படி, 12 பேர் அடங்கிய குழு கிராமத்தைப் பராமரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயக்கர் முறையில் உள்ள 12 பேரில் கர்ணம், மணியம், தலையாரி ஆகிய மூன்று பேரும் மன்னரால் நேரடியாக நியமிக்கப்படுவர். மற்றவர்களான தச்சு வேலை செய்பவர், குயவர், தட்டார், கருமார், புரோகிதர், செருப்புத் தைப்பவர், துணி துவைப்பவர், சவரத்தொழிலாளி, தண்ணீர் கொண்டுவருபவர் ஆகியோரை உள்ளுர் முடிவு செய்துகொள்ளும். கிராமத்தின் வரி வருவாய், நிலம் மற்றும் நீர்ப் பங்கீடு பராமரிப்பு குறித்த விவரங்களைப் பதிவு செய்வது கர்ணத்தின் வேலை. நேரடியாகச் சென்று வரி வசூலிப்பவர் மணியம். இவரோடு ஊரின் காவல் பணியைச் செய்பவர் தலையாரி. இவர்களுக்கு அரசின் மானியமாக நிலம் வழங்கப்படும். ஆனால் அதற்கு, அவர்கள் தனியே வரி செலுத்த வேண்டியது அவசியம். ஆயக்கர் முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது. இன்றும்கூட, கர்ணம், மணியக்காரர், தலையாரி குடும்பங்கள் இருப்பது இதன் மிச்சமே.விஜய நகர ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத மொழிகளின் இலக்கியங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்தன. தமிழ் அப்போது ஆட்சி மொழியாக இல்லை. ஆகவே, முக்கியத்துவம் பெறாமல் போனது. விஜய நகர மன்னர்களும் அவர்​களுக்குப் பின்வந்த நாயக்கர்​களும் கோயில்களைப் பராமரிப்பதிலும், உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். பாசன வசதியைப் பெருக்கும் நீர் நிலை​களை உருவாக்குவது, ஒவியம், இசை, நாடகம் உள்​ளிட்ட கலைகளை மேம்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டினர்.

விஜய நகரப் பேரரசு தன்னை கர்நாடக சாம்​ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக்கொண்டது. இதற்கும் இன்றைய கர்​நாடகத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாறாக, ஆந்திராவின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியை ஒட்டி விஜய நகரப் பேரரசு ஆட்சி செய்ததையே கர்நாடிக் என்று கூறுகிறார்கள். மொழியியல் அறிஞர் கால்டுவெல், 'கர் என்றால் கறுப்பு. நாடு என்றால் தேசம். கரிசல் நிலம் உள்ள பகுதி என்பதால் கர்நாடகம் என்று கூறியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் தருகிறார். 'விஜய நகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த காரணத்தால் தமிழகத்தின் சோழ மண்டலக் கடற்கரை, கர்நாடகக் கடற்கரை என்றானது. அதன் தொடர்ச்சியாகவே தெலுங்கில் இருந்து உருவான இசை, கர்நாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது’ என்கிறார் வரலாற்று அறிஞர் ரிச்சர்ட் ஸ்மித்.தொடக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் நதி வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்தன. பின்னர், விஜய நகரப் பேரரசின் ஆரவீடு மரபினர் வேலூரைத் தலைநகரமாகக்கொண்டு ஆளத் தொடங்கியதும்... வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையிலானதாக செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி எல்லை சுருங்கியது.செஞ்சி நாயக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர். இவர் பெயரால் கிருஷ்ணா​புரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது செஞ்சி. இன்றுள்ள செஞ்சிக் கோட்டையை வடி​வமைத்தவர் பெத்த கிருஷ்ணப்பரே. செஞ்சியில் உள்ள மூன்று குன்றுகளையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டு உள்ள பெருஞ்சுவர்களும் இவரால் கட்டப்பட்டவை. விஜய நகரப் பேரரசின் மிகச் சிறந்த மன்னராகக் கொண்டாடப்படுபவர் கிருஷ்ண தேவராயர். இவரது ஆட்சிக் காலத்தில் விஜய நகரப் படைகள் தொடர்ந்து வெற்றியைக் குவித்தன. கலைகளிலும் இலக்கியத்திலும் அதிக ஆர்வம்கொண்ட கிருஷ்ண தேவராயர், தொடர்ந்த படையெடுப்பின் வழியே விஜய நகரப் பேரரசை வலிமைமிக்கதாக மாற்றினார்.ஒரு முறை கிருஷ்ண தேவராயர், படைத் தளபதி நாகம நாயக்கனை மதுரையைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கி வருமாறு அனுப்பினார். நாகம நாயக்கர் மதுரையைக் கைப்பற்றி, தன்னையே மதுரை மன்னராகப் பிரகடனம் செய்துகொண்டார்.  இந்த அதிர்ச்சித் தகவலை அறிந்த கிருஷ்ண தேவராயர், நாகம நாயக்கரை வென்று வர அவரது மகன் விஸ்வநாத நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் .நாகம நாயக்கரை வென்று அவரை சிறைப்பிடித்து வந்து கிருஷ்ண தேவராயர் முன் நிறுத்தினர் விஸ்வநாத நாயக்கர். இந்தச் செயலைப் பாராட்டிய ராயர், விஸ்வநாத நாயக்கரை மதுரையின் சுதந்திர மன்னராக பிரகடனம் செய்ததாக சொல்லப்​படுகிறது.


மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னராக 1529-ல் விஸ்வநாத நாயக்கர் முடிசூடினார். இவரது அமைச்சராக இருந்தவர் அரியநாத முதலியார். இவரது வீர சாகசம் பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. இவர்தான் தென்னகத்தை 72 பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்களை நியமித்தார்.நாயக்கர்களின் வம்சம் அதன் பிறகு மதுரையில் தொடர்ந்து அரசாட்சி செய்தது. இவர்களில் குறிப்பிடத்​தக்க இரண்டு பேர், திருமலை நாயக்கரும் ராணி மங்கம்மாளும். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை புதுப் பொலிவு அடைந்தது. திருச்சியில் இருந்த தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றியவர் திருமலை நாயக்கரே. சைவ, வைணவ ஆலயங்களுக்கு நிறையத் திருப்பணிகள் செய்து இருக்கிறார். மதுரையைச் சுற்றி உள்ள ஏரிகள், நீர்நிலைகள் இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டு, விவசாயம் மேம்பாடு அடைந்தது. இவர், கி.பி. 1,623 முத்ல 1,659 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.இவரது ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதுதான் மதுரையில் இன்றும் நாம் காணும் நாயக்கர் மஹால். இன்றுள்ள மதுரையின் அமைப்பும், சத்திரங்களும் இவர் உருவாக்கியதே. ராணி மங்கம்மாள் 1689-ல்ஆட்சிக்கு வந்தார். இவர், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி. 1682-ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது, அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாதக் குழந்தை. எனவே, தன் மகனைக் காப்பாற்ற வேண்டி உடன்கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை, காப்பாளராக ஏற்றுக்கொண்டார்.இவருடைய ஆட்சிக் காலத்தில் நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சி விளங்கியது. அன்னையின் வழிகாட்டுதலில் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார். தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றைப் போரிட்டு மீட்டார். ஏழு ஆண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், அம்மை நோயால் 1688-ல் இறந்தார். மலேசியாவில் வாழும் வரலாற்று ஆய்வாளர் ஜேபி எனப்படும் ஜெயபாரதி தனது கட்டுரை ஒன்றில், முத்துவீரப்பர் காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். இதை நிரூபணம் செய்யும் சான்று எந்த வரலாற்று ஆவணத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், ஒரு மதுரை தன்னரசின் துணிச்சலை வெளிப்படுத்துவதாக இந்தச் சம்பவம் உள்ளது.ஒளரங்கசீப் காலத்தில் யானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து, அதன் மீது ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஒளரங்கசீப்பின் செருப்பு ஒன்றை வைத்து, ஊர் ஊராக ஊர்வலம் வந்தார்கள். கூடவே, ஜுல்பிர்கான் என்ற தளபதியோடு ஒரு படைப் பிரிவும் வரும். யாராவது மன்னர்கள், இந்தச் செருப்பை மதிக்கவில்லை என்றால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதற்குப் பயந்து, பல மன்னர்கள் யானையை எதிர்கொண்டு வரவேற்று செருப்பை வணங்கி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு நகரிலும், இந்தச் செருப்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மன்னரின் அரசாளும் இருக்கையில் வைக்கப்படும். அந்த மன்னர் விழுந்து வணங்கி ஒளரங்கசீப்புக்கு அடங்கிக் கப்பம் கட்டு​வதாக சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லையான காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தது. எல்லையில் இருந்தபடியே மன்னர் முத்துவீரப்பருக்குத் தகவல் அனுப்பினர். அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.   கோட்​டைக்குள் செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கி ​வந்தனர். முத்துவீரப்பரோ, அதை வணங்குவதற்குப் பதிலாக தன்னுடைய ஒரு காலை அந்தச் செருப்புக்குள் நுழைத்துக்கொண்டு தங்கத் தாம்பாளத்தை ஓங்கி எத்திவிட்டார்.

'முட்டாளே, உங்கள் டில்லி பாஷாவுக்கு மூளை இல்லையா? ஒரு காலுக்கு மட்டும் செருப்பை அனுப்பி இருக்​கிறானே? இன்னொரு செருப்பு எங்கே? எனக்கு வேண்டியவை இரண்டு செருப்புகள் அல்லவா?' என்று கேலியாகக் கேட்டார் முத்து வீரப்பர். பிறகு, அவர்களை அடித்து விரட்டினார். அதோடு, ஒளரங்கசீப் தன் செருப்பு ஊர்வலத்தை நிறுத்திக்கொண்டார் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.கணவர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இறந்தவுடன், முத்தம்மாள் உடன்கட்டை ஏறினார். அவரது மகன் விஜயரங்க சொக்கநாதருக்கு பட்டம் சூட்டப்பட்டது. விஜயரங்க சொக்கநாதரின் சார்பில் அவரு​டைய பாட்டியான மங்கம்மாள் பொறுப்​பாளராக பதவிஏற்று ராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1,706 வரை ஆட்சி நடத்தினார்.17 ஆண்டுகள் ஆட்சி நடத்திய மங்கம்மாள், போரை விரும்பாதவர். இவர், மதுரையில் பெரிய அன்னச்சத்திரம் அமைத்தார். அது, 'மங்கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. இப்போது, மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே, ராணி மங்கம்​மாளின் கோடைக்கால அரண்மனை. இதில் உள்ள தமுக்கம் மைதானத்தில்தான் அந்தக் காலத்தில் யானைச்சண்டை முதலான பொழுதுபோக்கு விளை​யாட்டுக்களும், அரச விழாக்களும் நடைபெற்றன. மங்கம்மாள் காலத்தில் உருவாக்கிய சாலைகள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் காலத்தில் உருவாக்கப்பட்ட சந்தைகள், சத்திரங்கள், தர்ம ஸ்தாபனங்கள் மக்களுக்கு  அரிய சேவை செய்தன.தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதி சிறையில் அடைத்தார். அதில் மனம் உடைந்துபோன ராணி மங்கம்மாள் 1706-ல் இறந்துபோனார். விஜயரங்க சொக்கநாதர் மறைந்த பிறகு, அவரது மனைவி மீனாட்சி, 1732-ல் தன் உறவினரான விஜயகுமாரன் என்ற பையனைத் தத்தெடுத்து அவனை ஆட்சிப் பொறுப்பில் அமரவைத்து தானே ஆட்சியை நடத்தினார். விஜயகுமாரின் தந்தை பங்காரு திருமலை தனக்கு ஆட்சியில் உரிமை வேண்டும் என்று மதுரையின் எதிரியான ஆற்காடு நவாபிடம் கோரிக்கை வைத்தார். இதற்காக, ஆற்காடு நவாபின் மருமகனும் திவானுமாகிய சந்தா சாகிப்புக்கு லஞ்சமாக நிறையப் பொன்னும் பொருளும் தந்தார்.இந்த நெருக்கடியை சமாளிக்க, சாந்தா சாகிப் தன்னை ஆதரிக்க ஒரு கோடி பகோடா தருவதாக உறுதி அளித்தாள் மீனாட்சி. அதைச் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்ட சாந்தா சாகிப், சதி செய்து ராணி மீனாட்சியை சிறையில் அடைத்தார். மனம் உடைந்த அவள், விஷம் குடித்து இறந்துபோனார். அதன் பிறகு, பங்காரு திருமலையையும் நயவஞ்சக சாந்தா சாகிப் கொன்று மதுரையை வென்றார். இப்படியாக 1736-ல் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தென்​னகக் கோயில்களைக் காப்பாற்றிய இந்துப் பேரரசு விஜய நகரம். அதன் காரணமாகவே நமது கலைச் செல்வங்கள் காப்பாற்றப்பட்டன. இல்லாவிட்டால், வட இந்தியாவைப் போல நிறையக் கோயில்கள் இடிபட்டும் கொள்ளையிடப்பட்டும் போயிருக்கக்கூடும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.விஜய நகரப் பேரரசின் நினைவுச் சின்னமாக உள்ள ஹம்பியை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ பராமரித்து வருகிறது. இடிபாடுள்ள ஹம்பியோடு சுழித்து ஒடும் துங்கபத்திரையின் நீரில் விஜய நகரப் பேரரசின் அழியாத நினைவுகளும் கரைந்து ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அருள்வாக்கு - புத்தியும் சக்தியும் தா!



ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்பொழுதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்தபோதிலும், போதும் எனும் மனநிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்டபாடில்லை. சிறு துயரத்தைக் கண்டுவிட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரை ஏற வழியென்ன?நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியெல்லாமே தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெறவேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்மஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரனாகிறான்.

பிற ஸ்திரீகளைத் தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தன்னுயிர் போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாயிருந்தாலும் உண்மையே பேச வேண்டும். சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும் சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அமெரிக்காவின் தூங்கா நகரம்!



உலகிலேயே அதிகமான டூரிஸ்ட்டுகளின் வாண்டட் லிஸ்டில் முதலிடம் நியூயார்க். இதன் டைம்ஸ்கொயருக்கு கடந்த ஆண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் மேல். நியூயார்க் நகரின் நடுவில் இரண்டு குறுகிய தெருக்கள் ஒரு பெரிய சாலையில் சந்திக்கு மிடத்திலிருக்கும் இந்தச் சதுக்கம், 100 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் அறிந்த புகழ் பெற்ற இடம். உலகத்தின் சாலைகள் சந்திக்குமிடம் ("The Crossroads of the World") என வர்ணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் நகருக்காகப் போராடி வென்ற டஃபி(Duffy) என்பவரின் நினைவாக அவரது சிலை நிறுவப்பட்டு டஃபி ஸ்கொயர் எனப் பெயரிடப்பட்டிருந்தது. நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 1904ல் நியூயார்க் டைம்ஸ் தினசரி தங்களுடைய பல மாடி அலுவலகக் கட்டடத்தை இங்கு எழுப்பியபோது, டைம்ஸ்கொயராக மாறியது. டஃபியின் சிலை இன்னுமிருக்கிறது. ஆனால், நியூயார்க் டைம்ஸ் இப்போது இங்கில்லை.

உலகின் முதல் மின்சார பல்புகளுடன் விளம்பரம், நியான் விளக்கு விளம்பரம், பிளாஸ்டிக் சைன்போர்ட், டிஜிட்டல் விளம்பரம் என பல விளம்பரப் புதுமைகளின் பிறப்பிடமான டைம்ஸ் கொயரை இன்று ஒரு சதுர அங்குலம் பாக்கியில்லாமல் ஆக்கிரமித்திருப்பது வீடியோவால்ஸ் எனப்படும் பிரமாண்டமான டிஜிட்டல் விளம்பரங்கள். ஒரு கட்டடத்தின் முகப்பைக் கூட விட்டுவைக்காமல் ஜம்போட் ரான்ஸ் என்ற மிகப் பெரிய (100அடி நீளம் 60 அடி உயரம்) வீடியோ திரைகளை நிறுவியிருக்கிறார்கள். அதில் அழகாக விளம்பரங்கள், ஐ மாக்ஸ் திரையில் தெரியும் படம் போல ஓடிக்கொண்டேயிருக்கின்றன. இந்த விளம்பரங்களுக்குக் கட்டணங்கள் மிக அதிகம். சீசன் காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு 10000 டாலர்கள். ஆனாலும் அடுத்த புத்தாண்டுவரை எல்லாம் புக்காகி விட்டதாம்.  

உலகிலேயே வாடகை இங்குதான் மிக அதிகம். ஆனாலும் இங்கு விளம்பரத்துக்காகவாவது ஒரு ஷோரூமோ, அலுவலகமோ இருப்பதை உலகின் எல்லா பெரிய நிறுவனங்களும் கௌரவமாகக் கருதுகின்றன. ‘எங்கள் நிறுவன விளம்பர உருவத்துடன் நடனமாடினால் சாக்லெட் இலவசம், எங்கள் கேமராவில் எடுக்கப்பட்ட உங்கள் குடும்பப் படத்தை பிரமாண்ட திரையில் உடனே பாருங்கள்’ என்ற ஆர்ப்பாட்டமான அழைப்புகளுடன் கலக்குகிறார்கள்... புகழ் பெற்ற லண்டன் மேடம் டூஸாட்டின் மெழுகுச்சிலை உருவங்களின் அரங்கம் டைம்ஸ்கொயரின் சமீபத்திய புதிய வரவு. ஹாலிவுட் நட்சத்திரம் மார்கன் ஃபிரீமேன் (Morgan Freeman) சாலை நடைபாதையிலேயே நம்மை வரவேற்கிறார். அருகிலிருக்கும் பிராட்வே தியேட்டர் டிஸ்ட்ரிக்ட்டில் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்கள். இங்கு தியேட்டர்களில் சினிமா மட்டுமில்லாமல் நாடகம், இசை, நடனம் எல்லாம் நிகழ்த்தும் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில பழைய தியேட்டர்களைப் பாரம்பரியச் சின்னமாக அதன் பழைய முகப்போடு நகர நிர்வாகமே பராமரிக்கிறது. எல்லா தியேட்டர்களுக்கும் ஒரே இடத்தில் டிக்கெட் தருகிறார்கள். அதன் பெயர் ‘சூபாக்ஸ் ஆபிஸ்’. சூ டிக்கெட்களுக்கு 20லிருந்து 50 சதவிகிதம் வரை டிஸ் கவுண்ட். படத்துக்குக் கூட்டம் குறைய, குறைய டிஸ்கவுண்ட் கூடுகிறது. சிலசமயம் முதல் நாளே சில காட்சிகளுக்குப் பின் கூட்டமே இல்லாவிட்டால் 50% டிஸ்கவுண்ட்டில் டிக்கெட். சினிமா உலகின் ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்’ என்ற சொல் இங்கிருந்துதான் பிறந்திருக்கிறது. டிக்கெட்டுகள் கொடுக்கும் கட்டடத்தின் பின்புறத்தில் அதன் மேல் தளத்திலிருந்து தரைவரை ஒரு ஃபைபர் கிளாஸ் காலரி. டிக்கெட் கொடுக்கும் முன் உட்கார்ந்து ஓடும் பிரமாண்ட விளம்பரங்களை வேடிக்கை பார்க்கலாம். எப்போதும் பல ஆயிரக்கணக்கானவர்களுடன் பரபரப்பாக இயங்கும் இந்தப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. வாங்கியதைச் சாப்பிட சாலையிலேயே இலவசமாக மேஜை, நாற்காலி வசதி. காஃபி கப்புடன் ரோட்டில் உட்கார்ந்து நிம்மதியாகப் படித்துக்கொண்டிருப்பவர்களையும் பார்க்க முடிகிறது. ஒரு டாலர்க்கு காஃபி குடித்தால் கூட கிரெடிட் கார்ட் தேப்பது அமெரிக்கர்களின் வாடிக்கை. ஆனால் வரும் டூரிஸ்ட்களின் வசதிக்காக இங்குள்ள பெட்டிக்கடைகளில் கூட ஏ.டி.எம். பொருத்தியிருக்கிறார்கள். 

உலகின் பல மொழிகளின் ஓசைப் பின்னணியில் பிரமாண்ட விளம்பரங்களின் ஒளி வெள்ளத்தில் நம்மை மறந்துலயித்து விடுவதால் நேரம் போவதே தெரிவதில்லை.டைம்ஸ்கொயர் தூங்குவதேயில்லை என்கிறது நியூயார்க் டூரிஸத்தின் விளம்பரம். ஆனால், பார்த்த நம்மையும் தூங்கவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

வாட்டர் பியூரிஃபயர்: எது பெஸ்ட்?


னித உடல் சிக்கல் இல்லாமல் இயங்க தினசரி குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் அறிவுரை. அதுவும் கோடையில் நம் உடலுக்கு வேண்டிய தண்ணீரின் தேவை அதிகம். பூமி மாசுபட்டு நீர் ஆதாரங்கள் கிட்டத்தட்ட விஷமாகிவிட்டது. நம் உடலை சுத்தப்படுத்த வேண்டிய தண்ணீரே அசுத்தமாக இருக்கிறது. இதனால் 75 சதவிகித நோய்கள் நம் நாட்டில் தண்ணீர் மூலம் பரவுகிறது.பழங்காலத்தில் தண்ணீரை சுத்தமாக்க அதை கொதிக்க வைத்தார்கள். இப்போதும் பல வீடுகளில் அதை செய்கி றார்கள். அப்படி செய்யும் போது தண்ணீரின் சுவை மாறி விடுகிறது. தவிர, பரபரப்பான நகர வாழ்க்கையில் இதை செய்வதற்கு நேரம் இருப்ப தில்லை. விளைவு, வாட்டர் பியூரிஃபயர்களை தேடிச் செல்லும் நிலை..!


வாட்டர் பியூரிஃபயர்கள் தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதை குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றி தருகிறது.இவை பாக்டீரியாக்கள், வைரஸ் போன்ற நுண்ணியிரி களை தண்ணீரிலிருந்து நீக்கு கிறது. இதன் மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. மேலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நைட்ரேட், ஆர்சனிக், குரோமியம், ஃபுளோரைட், பாதரசம் போன்ற வற்றை தண்ணீரிலிருந்து நீக்கும் வேலையைச் செய்கின்றன.நம் நாட்டில் ஏராளமான வாட்டர் பியூரிஃபயர்கள் விற்பனையாகின்றன. அவற்றில் நமக்கு ஏற்றதைத் தேர்வு செய்வது எப்படி என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. பொதுவாக இவற்றை வாங்கும்போது நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகின்றனவா? எந்த அளவுக்கு தண்ணீரை சுத்தப் படுத்துகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.ரசாயன சுத்திகரிப்பு, ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (ஆர்.ஓ), அல்ட்ரா வயலட் முறை, வடிகட்டுதல் உள்ளிட்ட முறைகளில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது. விலை ரூ.2,000 தொடங்கி 25,000 வரை இருக்கிறது. மின்சாரத்தில் இயங்குவது, மின்சாரம் இல்லாமல் இயங்குவது என இரு வகைகள் இருக்கின்றன.


சுமார் அரை டஜன் நிறுவனங்களின் 10 வகையான வாட்டர் பியூரிஃபயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அவற்றின் விலை, வாரண்டி, தரம், செயல்பாடு போன்றவை அலசி ஆராயப் பட்டதோடு, மற்ற பிராண்ட் களோடு ஒப்பிடப்பட்டன. இவை, இந்திய தர அமைப்பின் குறைந்தபட்ச தர அளவுகளுக்கு உட்பட்டிருக்கிறதா என்பதும் ஆராயப்பட்டது. இந்த ஆய்வு இந்திய அரசின் நுகர்வோர் துறையின் அனுமதியோடு நடத்தப்பட்டது. யூரேகா ஃபோர்ப்ஸ், வேர்ல்பூல், டாடா ஸ்வாட்ச், ஜீரோ பி சுரக்ஷா, ஹெச்.யூ.எல், கென்ட் உள்ளிட்ட பிராண்ட்கள் ஆராயப்பட்டது. முடிவுகளை அட்டவணைகளில் காண்க..! 

விகடன் 

ஐ.பி.எல். ஹீரோக்கள்!


ஐ.பி.எல்., இந்திய உள்ளூர்ப் போட்டி என்று சொல்லப்பட்டாலும், உலகக்கோப்பைக்கு நிகராக அந்தஸ்து பெற்றதற்கு முக்கிய காரணம், ரசிகர்கள். சென்னையிலும் பெங்களூருவிலும் எழுநூறு, ஆயிரம் ரூபாய் இல்லாமல் மேட்ச் பார்க்க முடியாது. ஆனாலும், அங்கெல்லாம்கூட ஒரு மேட்சிலும் மைதானம் காலி இல்லை. ஐ.பி.எல். சர்ச்சைகள், டி.வி. சேனல்களுக்கு சரியான தீனி அளித்தபோதும், ரசிகர்கள் கிரிக்கெட்டைத் தவிர மற்றவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஐ.பி.எல்.-ன் உண் மையான ஹீரோ, ரசிகர்கள்தான். இருந்தாலும் மைதானத்தில் ஹீரோவாக ஜொலித்தவர்கள் யார்?

க்ரிஸ் கெல் :

கெல் இல்லாத ஐ.பி.எல்.-ஐ நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு மனிதனால் இவ்வளவு லகுவாக சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா? இதிலுள்ள பெரிய வினோதம் என்ன தெரியுமா? 2011 ஐ.பி.எல். ஏலத்தில் கெலை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. ஏலத்தில் கெலை இரண்டே கால் கோடிக்குக்கூட வாங்க யாருமில்லாத நிலையில், டெரிக் நானஸ் காயத்தில் அடிபட்டபோது, டக்கென்று கெலைத் தம் பக்கம் இழுத்துக்கொண்டது பெங்களூரு.  கிட்டத்தட்ட காய்கறிக் கடையில் கொத்தமல்லி, கருவேப்பிலையை இலவசமாக வாங்குவதுபோல வெறும் 3 கோடி ரூபாய்க்கு கெலை வாங்கியது பெங்களூரு. (மும்பை, தினேஷ் கார்த்திக்குக்கு 11 கோடியும், பெங்களூரு, சோரூப் திவாரிக்கு 8.80 கோடியையும் அளித்ததோடு கெலின் ஏலத்தொகையை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்). கெல், இந்தத் தொகைக்கு ஒப்புக்கொள்ளாமல் ஏலத்துக்குச் சென்றிருந்தால் நிச்சயம் 11 கோடிவரை சம்பாதித்து டை பிரேக்கர் வழியாக வேறொரு அணிக்குப் போயிருக்கமுடியும். ஆனால், பெங்களூரு அணிக்கு விசுவாசமாக இருந்துவிட்டார் கெல். 

அஜிங்க்யா ரெஹானே:

ஓபனிங் பேட்ஸ்மேன்களில் சச்சின், ஷேவாக்குக்குப் பிறகு யார் என்பதற்கு விடை கிடைத்துவிட்டது. கம்பீருக்குத் தோள் கொடுக்கத் தயாராகிவிட்டார் அஜிங்க்யா ரெஹானே. ஆஸ்திரேலியா முத்தரப்புப் போட்டியில் ரெஹானாவுக்கு இடம் கிடைக்காதபோது எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால், அவமானத்தையே உரமாகக் கொண்டு ஐ.பி.எல்.-லில் ஜமாத்துவிட்டார். கோலி, ரைனா, ரோஹித் சர்மா, ரெஹானே என்றொரு எதிர்கால வரிசை உருவாகிவிட்டது. இவர் ஏற்கெனவே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டாலும் நிரந்தரமான ஓர் இடம் இல்லை. இந்த ஐ.பி.எல்., ரெஹானேவின் முழுத் திறமையும் காண்பித்து, புதிய தலைமுறையின் அடையாளமாக மாற்றியிருக்கிறது.

மார்னே மார்கல்:

ஓர் அற்புதமான ஓவரால் ஆட்டத்தின் போக்கையே மாற்றமுடியும் என்பதை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிரூபித்தார் மார்கல். இரண்டு ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்கிற நிலையில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து தில்லியின் வெற்றிக்கு வழிசெய்து கொடுத்தார் மார்கல். தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீன், பிலாண்டருக்கு மத்தியில் கவனம் பெறாத மார்கல், இந்த ஐ.பி.எல்.-லை தன்வசமாக்கிக் கொண்டார். எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷன் போல எக்கச்சக்க வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ள தில்லி அணியில் மார்கல் தான் பெரிய அண்ணன். இளம் இந்திய வீரர்களுக்கு பல ஆலோசனைகள் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார் மார்கல். ஐ.பி.எல்.-ன் மகத்துவங்களில் இதுவும் ஒன்று. ஐ.பி.எல். இல்லாவிட்டால் மார்கல், இந்திய அணி வீரர்களுக்கு வித்தைகள் சொல்லிக்கொடுப்பதெல்லாம் சாத்தியமாகுமா?

நரைன்:

இந்த வருட ஐ.பி.எல்., மேற்கு இந்தியத் தீவு அணி வீரர்களுக்கானது. கெல், நரைன், பொலார்ட், ப்ராவோ, கூப்பர் என்று எல்லாமே.இ.வீரர்களும் ஜொலித்தார்கள். இத்தனை பேர்களில், நரைன் சென்ற வருட சேம்பியன் லீக்கிலேயே அதிரடியாகப் பேசப்பட்டவர். இவர் பந்தை யாராலும் தொடக்கூட முடியவில்லை. எந்தப் பயிற்சியாளரிடம் இத்தனை வித்தைகளைக் கற்றார் என்று தெரியவில்லை. ஆனால் நரைன், கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அத்தனை தகுதிகளும் உள்ளவராக இருக்கிறார். 

ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.-லும் ஓர் இந்திய வீரருக்குத் திருப்புமுனையாக அமையும். தேசிய அணியில் இடம்பிடிக்க இதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடும். முதல் ஐ.பி.எல்.-லில் யூசுப் பதான், இரண்டாவது ஐ.பி.எல்.-லில் நெஹ்ரா , மூன்றாவது ஐ.பி.எல்.-லில் அஸ்வின், நான்காவது ஐ.பி.எல்.-லில் ராகுல் சர்மா என பல வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைவதற்கான கதவைத் திறந்தது, ஐ.பி.எல். இந்த வருடம் ரெஹானே தவிர சிகார் தவான், மந்தீப் சிங், பர்விந்தர் அவானா, டிண்டா போன்றோர் கவனம் பெற்றிருக்கிறார்கள். 

எனது இந்தியா! (விஜய நகரின் எழுச்சி !) - எஸ். ராமகிருஷ்ணன்....



கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 56 கி.மீ. தூரத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் சிதைந்துபோன கலைக்கூடம்போல இருக்கும் ஹம்பி நகரம்தான், ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய விஜய நகரம்! வெற்றியின் நகரம் என்று புகழ்ந்து சொல்லப்படும் விஜய நகரம், கி.பி. 1336-ல் உருவாக்கப்பட்டது. பாரீஸ் நகரைவிட, இரண்டு மடங்கு பெரியது. உலகின் மிகப் பெரிய நகரங்களில் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது. விஜயநகரில் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர் என்று, வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இன்று மிச்சம் இருப்பது அதன் சிதைந்துபோன இடிபாடுகள் மட்டும்தான். கோயில்கள், கல் மண்டபங்கள், கலைக்கூடங்கள் என்று, நகரின் மத்தியப் பகுதியில் சிதைவுகளை காணலாம். அந்தப் பகுதியின் பெயர்தான் ஹம்பி.ஹம்பி என்பது, கன்னடப் பெயரான ஹம்பேயில் இருந்து உருவானது. இது, துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும் என்​கின்றனர். இந்த நகரை விஜயநகர அரசர்களின் குல​தெய்​வமான விருபாக்ஷரின் பெயரைத் தழுவி விருபாக்ஷபுரம் என்றும் அழைக்​கின்றனர்.இஸ்லாமிய மன்னர்கள், தெற்குப் பகுதியில் படை எடுத்து வந்த​போது, அவர்களை எதிர்ப்பதற்காக,குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்தனர். அப்படி உருவாக்கப்பட்டதே விஜய நகரப் பேரரசு.

தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிற​மொழி பேசும் ஆட்சியாளர்களிடம் முதன் முதலில் கைமாறியது விஜயநகரப் பேரரசின் உருவாக்கத்​தால்தான். முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருநாதர் வித்​யாரண்யரின் வழிகாட்டுதல்படி கி.பி. 1336-ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர். இந்தப் பேரரசு உருவாக்கப்பட்டது குறித்து நிறையக் கருத்துக்கள் நிலவுகின்றன.'புக்கரும் ஹரிஹரரும் வாரங்கல் அரசரின் படைத் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்​கோடு நடந்த சண்டையில் தோற்று, இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அங்​கிருந்து, டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுமாறு கட்டாயப்​படுத்தப்பட்டனர். அதற்கு ஒப்புக்கொள்ளாத இருவரும், தப்பி வந்து தங்களது குரு வித்யாரண்யர் வழிகாட்டுதலில் விஜய நகரப் பேரரசை நிறுவினர்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது.'காகதீய அரசில் போர்ப் பணியாற்றிய ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருவான சிருங்கேரி அரசபீடத்தைச் சேர்ந்த வித்யாரண்யரை, துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ஆனைக்குந்தி என்ற மலை அடிவாரத்தில் சந்தித்தனர். இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். சிறு படைகளை இணைத்து புதிய அரசை உருவாக்கலாம் என்ற யோசனையை வித்யாரண்யர் கூறி இருக்கிறார். அதன்படி உருவாக்கப்பட்டதே விஜயநகரப் பேரரசு’ என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது எதுவுமே உண்மை இல்லை. ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருமே கர்நாடகத்தின் ஹொய்சால வம்சாவழி வந்தவர்கள் என்றும் ஒரு சாரர் அடித்துச் சொல்கின்றனர்.கி.பி. 1331-ல் தமது 36-வது வயதில் வித்யாரண்யர் சிருங்கேரி மடத்து பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது இயற்பெயர் மாதவர். கன்னட பிராமணரான இவர், விஜய நகரத்தைச் சேர்ந்த ராய வம்சத்துக்குக் குலகுருவாக இருந்தார். சர்வமத சங்கிரகம் என்ற நூலை இவர் எழுதி இருக்கிறார். சங்கமர், துளுவர், சாளுவர் மற்றும் ஆரவீட்டார் ஆகிய நான்கு குலத்தினர், விஜய நகரத்தை ஆட்சி செய்து இருக்கின்றனர். சாளுவர் மற்றும் ஆரவீட்டார் ஆகியோருக்கு தாய்மொழி தெலுங்கு. சங்கமர் மற்றும் துளுவர் ஆகிய இருவரும், கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள்.விஜயநகரப் பேரரசை நிறுவிய முதலாம் ஹரிஹரர், குருபா இனத்தைச் சேர்ந்தவர். இவர், சங்கம மரபைத் தொடங்கிய பாவன சங்கமரின் மூத்த மகன். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவது ஆகும். இவரது ஆட்சியின்போது, ஹொய்சாலப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இவருடைய தம்பிகளில் ஒருவர்தான் புக்காராயன் எனும் புக்கர்.தனது சகோதரன் ஹரிஹரருடன் இணைந்து, விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஹரிஹரரின் மறைவுக்குப் பின், புக்காராயன் அரசன் ஆனார். புக்கரின் 21 ஆண்டு கால ஆட்சியில்தான், நாட்டின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. தென்னிந்திய அரசுகளைத் தோற்கடித்து, அந்தப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.


1360-ல் ஆற்காட்டுச் சம்புவராயரும், கொண்டவிடு ரெட்டிகளும், புக்காராயனிடம் தோற்றனர். 1371-ல் மதுரையில் இருந்த சுல்தானைத் தோற்கடித்து, பேரரசின் எல்லைகளை தெற்கே ராமேஸ்வரம் வரை விரிவுபடுத்தினார் புக்கர். இவர் காலத்தில்தான், பேரரசின் புகழ்பெற்ற தலைநகரமாக விஜய நகரம் மாறியது. 40 கி.மீ.(அவர் தூரத்தை லீக் என்ற அள வீட்டில் குறித்திருக்கிறார்) அளவு பெரியதாக இந்த நகரம் இருந்தது என்கிறார், பெர்னாவோ நுனிஸ் என்ற போத்துக்கீசியப் பயணி. இவர் ஒரு குதிரை வணிகர். இன்று உள்ள ஹம்பி, அதன் அருகில் உள் கமலாபுரா கிராமம், அங்கிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள ஹோஸ்பெட் ஆகியவையும் விஜய நகருக்குள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார்.1420-ம் ஆண்டு இந்த நகரைப் பார்வையிட வந்த நிகோல கோண்டி என்ற இத்தாலியப் பயணி, இந்த நகரம் 60 மைல் சுற்றளவுகொண்டது என்று வியந்து கூறி இருக்கிறார். அதுபோலவே, 1522-ல் விஜயநகரத்துக்கு வந்த போர்த்துக்கீசிய யாத்ரீகர் பயாஸ், இது ரோம் நகரைப்போல அழகான பூந்தோட்டங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  துங்கபத்திரை ஆற்றின் அழகும், அதை ஒட்டி அமைக்கப்பட்ட மாடமாளிகைகளும் கண்ணைக் கவருகின்றன. 2892 கி.மீ. நீளமுள்ள கடற்கரைகொண்டது விஜய நகரம் என்று பாராட்டி இருக்கிறார்.14-ம் நூற்றாண்டில் தொடங்கி 200 ஆண்டு களுக்கும் மேலாக இந்த நகரம் புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. விஜய நகரப் பேரரசில் கிராம எல்லைகளைக் குறிக்க திரிசூல அடை யாளம் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடப்பட்டன. அந்தக் கற்களை, பிற்காலத்தில் சிறுதெய்வமாக மக்கள் வழிபடத் தொடங்கினர் என்கிறார் பர்போசா. விஜயநகர ஆட்சியின்போது கோட்டைச் சுவருடன் உள்ள சிறிய நகரங்கள் பல உருவாக்கப்பட்டு இருந்தன. நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வசித்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரஷ்யப் பயணி நிக்கிதின்.விஜய நகரப் பேரரசின் படைப் பிரிவில் 24,000 குதிரைகளும், ஒரு லட்சம் வீரர்களும் இருந்தனர். ஒரு படை வீரனுக்கு மாதச் சம்பளம் ஐந்து வராகன். படைப் பிரிவின் தலைமை அதிகாரிக்கு ஆண்டுக்கு 47,000 வராகன். மெய்க்காப்பாளருக்கு ஆண்டுக்கு 600 முதல் 1,000 வராகன் வழங்கப்பட்டது.


விஜய நகர அரண்மனையில் மல்யுத்தம் புகழ்பெற்று விளங்கியது. அங்கே, ஆயிரம் மல்லர்கள் இருந்தனர். அரசனின் அனுமதியோடு வரையறை செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி இவர்கள் மற்போர் செய்வது வழக்கம். புக்கரின் மகனான குமார கம்பணன் காலத்தில், துருக்கி சுல்தானின்  தளபதியாகஇருந்த அலாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை நகரம் கவனிப்பு இல்லாமல் இருந்தது. 1371-ல் குமார கம்பணன்,  மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவி கங்கம்மா தேவி எழுதிய 'மதுரா விஜயம்’ என்ற சம்ஸ்கிருதக் காவியம் இந்த நிகழ்ச்சியை விரிவாக வர்ணிக்கிறது. அதன் பிறகு விஜய நகரத்துக்கு, மதுரை கப்பம் கட்டியது.இந்தக் காலகட்டத்தில், தெலுங்கர்களும் கன்னடர்களும் அலுவலர்களாகவும் போர் வீரர்​களா​கவும் வணிகர்களாகவும். கூலி ஆட்களாகவும் தமிழ்​நாட்டில் குடியேறினர்.விஜய நகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக முறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. சோழர் காலத்தில் மண்டலம், கோட்டம்,  நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டு இருந்தன. விஜய நகர ஆட்சிக் காலத்தில், ராஜ்யம், கோஷ்டம், சீமை, ஸ்தலம் எனப் பிரிக்கப்பட்டன. இவற்றில், நாடு என்பதே சீமை என அழைக்கப்பட்டது. இன்றும்கூட, உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை நாட்டுச் சரக்கு என்றும் வெளியூர்ப் பொருட்களை சீமைச் சரக்கு என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாகவே, வெள்ளைக்காரர்களை சீமைக்காரர் என்று அழைத்தனர். வெள்ளைக்காரன் விற்பனை செய்த பொருட்கள் சீமைத் துணி, சீமைச் சாராயம், சீமைச் சரக்கு என அழைக்கப்பட்டன.தமிழகத்தில் பிற்கால சோழர் காலம் தொட்டு கிராமத் தன்னாட்சி முறை நடைமுறையில் இருந்தது. வரி வாங்கவும், கோயில் குளங்களைப் பராமரிக்கவும் பஞ்ச காலத்தில் வரி தள்ளுபடி செய்யவும், கோயில் நிலங்கள், பொதுச் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிக்கவும் பாசன வசதி, சந்தை, தானிய சேமிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தானே திட்டமிட்டு வகுத்துக்கொண்டு உள்ளுர் வருவாயை உரு​வாக்கிக்கொள்ளும் உரிமை கிராமத்துக்கு இருந்தது.

விகடன் 

ஜகம் நீ... அகம் நீ..! - 7



வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோயில் அழகுறத் திகழ்கிறது. இது வியாச முனிவர் வழிபட்ட ஆலயம். இங்கே நுழைவாயில் அருகில் கொட்டகை போட்டுத் தங்கியிருந்தாராம் மகாபெரியவா. ''முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, மைசூர் மகாராஜா ஜெயசாமராஜ உடையார் எல்லாம் வந்து மகாபெரியவாளைத் தரிசித்து உரையாடியது இங்கேதான்'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் வைத்தியநாதன். உள்ளே நுழைந்து வணங்கி வழிபடுகிறோம் ஸ்ரீவியாச சாந்தாலீஸ்வரரை.''இன்னிக்கு பிரதோஷம். நிறைய கூட்டம் வரும்'' என்றார் ஆலய குருக்கள். உடனே, ''அடடே... அப்படியானால் இன்னிக்கு பிரசாதம் கொடுத்தால் பெரியவா ஆசீர்வாதம் எல்லாருக்கும் கிடைக்கும்னு சொல்லுங்க'' என்ற வைத்தியநாதன், சங்கரபக்த ஜன சபை சார்பாக பிரதோஷம்தோறும் பிரசாதம் வழங்க, குருக்களிடம் ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே வல்லபாசார்யர் என்னும் குஜராத்திய ஞானியின் மடமும் உள்ளது.'மிக நன்று! மகாசீலர்கள் பாதம் பதிந்த மண்ணைத் தரிசிக்கும் புண்ணியம் நமக்கும் வாய்த்ததே’ என உள்ளுக்குள் உவகை பொங்க, சின்னகாஞ்சிபுரத்துக்கு நடக்க ஆரம்பித்தோம்.சின்னகாஞ்சிபுரத்தில் மிக அற்புதமாய் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபுண்ணியகோடீசுவரர். கோயில் சிறியதுதான் என்றாலும், திருப்பெயருக்கு ஏற்ப புண்ணியம் கோடி தருவதில் கீர்த்தியானவர் இந்த ஸ்வாமி என விளக்கிச் சொன்னார் வைத்தியநாதன். அவரைத் தரிசித்து முடித்து, வேகவதி நதிக்கரையில் எழுந்தருளும் ஸ்ரீவேகவதீஸ்வரரைத் தரிசிக்கச் சென்றோம். இங்கேயும் மகா பெரியவா தங்கியிருந்தாராம்.

மகா பெரியவா, மடத்தில் இருக்காமல் இப்படிக் கோயில்களில் வந்து தங்கியிருக்க விரும்பியது ஏனாம்?!'ஒரு விஷயம் அவர் மனசுல பட்டதுன்னா பட்டதுதான். எப்பவும் பகவான் பக்கத்துலேயே இருக்கணும்னு நினைச்சிருக்கலாம். ஆனால், இதுபற்றி யாரும் அவரிடம் கேட்டதில்லை. ஒரு கோயில்ல சில நாள் இருக்கணும்னு அவருக்கு தோணித்துன்னா, அங்கே தங்கிடுவார். ஒருவேளை... இந்த மாதிரியான சின்ன சின்ன கோயில்களுக்கும் ஜனங்கள் திரளா வந்து வழிபடணும்னு அவர் நினைச்சிருக்கலாம். இன்னிக்கு அது நடக்குது இல்லையா?! மகாபெரியவா தங்கியிருந்த கோயில்... அவர் வழிபட்ட தலம்னு எவ்வளவோ பேர் தரிசிக்க வருகிறார்கள் இல்லையா?'' என விளக்கம் தருகிறார் வைத்தியநாதன்.அவர் சொல்வதும் வாஸ்தவம்தான். பெரியவா தங்கியிருந்தார் என்றால், அதற்கு விசேஷம் ஏதாவது நிச்சயம் இருந்திருக்கும் என்று நம்பிக்கையோடு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நிறையவே இருக்கிறார்கள். மகாபெரியவா மக்களைச் சந்திக்கும் பொருட்டு ஒவ்வோர் இடமாகத் தேடிப் போய் அமர்ந்து அருள்பாலித்தது ஒருபுறம் இருக்க, புராதனமான கோயில்கள் மக்களின் புழக்கம் இல்லாமல் போய்விடக்கூடாது என்ற அவருடைய அக்கறையும் இதில் வெளிப்படுகிறது.சேஷாத்திரி மடத்துக்கு வந்தோம். இங்கே மடத்தின் பின்னே மகாபெரியவா தங்கியிருந்த இடம், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஒரு வில்வமரத்துடன் திகழும் தோட்டம் போன்ற அந்த இடத்தில், பெரியவா விஸ்ராந்தியாக இருப்பாராம். மடத்தின் பக்கத்திலேயே மகாபெரியவாளுக்கு கனகாபிஷேகம் நடந்த வீடு உள்ளது.அந்த வீட்டின் முன்பகுதியில் உள்ள இடத்திலேயே கனகாபிஷேக வைபவமும் அதையட்டிய விசேஷங்களும் நிகழ்ந்தனவாம். தெரு முழுக்க ஜனக்கூட்டம் திரண்டு நின்று, மகாபெரியவாளின் கனகாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தார்களாம். அன்று மணக்கால் நாராயண சாஸ்திரிகள், எசையனூர் சுப்பிரமணிய கனபாடிகள், அப்பாகுட்டி சாஸ்திரிகள் முதலானோரும் மகாபெரியவாளுடன் இருந்தார்களாம்.

முன்பு காஞ்சி சங்கர மடம் இருந்த இடத்தையும் காண்பித்த வைத்தியநாதன், 'இப்போ இருக்கிற இடத்துக்கு வருவதற்கு முன்னாடி சங்கர மடம் இங்கேதான் இருந்தது. இப்ப இங்கே வேத பாடசாலை செயல்படுது'' என்கிறார். மடம் இருந்த இடம் என்பதால் தெய்வீகமாகத் திகழ்கிறது சூழல். அங்கிருந்து ஓரிக்கை கிராமத்துக்குச் சென்றோம். பாலாற்றங்கரையில் இருக்கும் அழகிய கிராமம் அது.'மகா பெரியவா அடிக்கடி இங்கே வருவார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மட்டப்பாறை வெங்கட் ராமய்யரின் சம்பந்தி வெங்கட கிருஷ்ணய்யர் வீட்டில் பலமுறை தங்கியிருக்கார். அவங்க குடும்பத்தை, 'என் மன்றம் குடும்பம்’னு சொல்லுவாங்க. பெரியவா இங்கே மூன்று முறை வியாச பூஜை பண்ணியிருக்கார்...'' என வைத்தியநாதன் விவரித்தபடி வர, பெரியவா தங்கியிருந்த அந்த வீட்டை அடைந்தோம்.அந்த வீட்டில்... கோட்டை அடுப்பு வைத்தது, பக்கத்து அறையில் சுவாஸினி பூஜை பண்ணினது, பி¬க்ஷ வாங்கிக் கொள்ளும் ரூம், சந்திரமௌலீசுவரர் பூஜை பண்ணின இடம், வருபவர்களிடம் எல்லாம் உட்கார்ந்து விசாரிக்கும் திண்ணை என்று எல்லா இடங்களையும் காட்டினார் அந்தக் குடும்பத்தின் மருமகள் சசிரேகா.தொடர்ந்து பேசிய வைத்தியநாதன், ஓரிக்கை கிராமத்து பாலாற்றங்கரையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விவரித்தார்:''விழுப்புரத்தில் சிறுவயதில் மகாபெரியவாளுடன் படித்த முஸ்லிம் நண்பர் ஒருவர், தன்னுடன் படித்தவரே இப்போதைய சங்கராச்சார்யார் என்று தெரிந்துகொண்டதும், அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தேனம்பாக்கம் வந்தார். 'பெரியவா பாலாற்றங்கரையில் இருக்கிறார்’ என்றதும் நேராக ஓரிக்கை- பாலாற்றங்கரைக்கே வந்துவிட்டார். வெகுநேரம் பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். புறப்படும்போது அந்த முஸ்லிம் நண்பர், 'நீங்க இப்போ பெரிய மகான். ஜனங்கள் எல்லோரும் உங்களை வந்து பார்த்து வாழ்த்து வாங்கிட்டுப் போறாங்க. உங்களைப் பார்த்ததன் ஞாபகமாக எனக்கும் நீங்கள் ஏதாவது தர வேண்டும். அதை நான் பத்திரமா வெச்சுக்குவேன்’ என்றார்.

பெரியவா சிரிச்சுட்டார். 'என்னைப் பார்த்தாய் அல்லவா?  நான் ஒரு சந்நியாசி.  என்கிட்டே என்ன இருக்கு?  உனக்கு நான் என்ன தர முடியும்? இந்தக் காஷாய வஸ்திரம் ஒண்ணுதான் எங்கிட்டே இப்போ இருக்கு!’ என்றார். உடனே அந்த நண்பர், 'சரி, அதில் ஒரு சிறு துண்டைத் தாருங்கள். போதும்’ என்றார். சட்டென்று தம்முடைய காவி வஸ்திரத்திலிருந்து ஒரு சின்ன துண்டைக் கிழித்து, தன் பால்யகால சிநேகிதனுக்குக் கொடுத்தார் மகாபெரியவா.அதைப் பெற்றுக்கொண்டபோது... அந்த முஸ்லிம் நண்பர் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது!