Friday, August 31, 2012

அருள்வாக்கு - கல்யாண குணங்கள்!



உலகத்திலுள்ள நல்லது-கெட்டது, அழகு-அவலக்ஷணம், இன்பம்-துன்பம் எல்லாமே பிரம்மத்திடமிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை அடையும்போது நல்லது, கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.

ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈசுவரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அந்த நிர்குணத்திலிருந்தே சகல குணங்களும் தோன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச் சிதறலில் (refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா? அப்படியே நிர்குணப் பிரம்மம்மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈசுவரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிர்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார ஸாகரத்தில் தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப் படைத்து வைத்துக் கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

எனது இந்தியா (காதலுக்கு எதிரியா அக்பர்?! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



அக்பரின் அந்தப்புரத்தில் எண்ணிக்கையற்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி நாதிரா. அவள், இளவரசன் சலீம் மீது ஆசைகொண்டாள் என்பதற்காக அக்பர் அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் என்றும் ஒரு கதை இருக்கிறது. லாகூரில் உள்ள அனார்கலி நினைவு மண்டபத்தில் நாதிரா என்ற பெயர் காணப்படுகிறது. ஆகவே அது, நாதிராவின் நினைவாக சலீம் எழுப்பிய மண்டபம் என்றும் கூறப்படுகிறது.

அக்பரின் மூன்றாவது பிள்ளையும் பின்னாளில் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் ஆட்சி செய்தவருமான சலீம் குறித்து 'மொகல் இ ஆசாம்’ படத்தில் சொல்லப்படும் பல நிகழ்வுகள் கட்டுக்கதையே. அவை, வரலாற்றுக் குறிப்புகளைவைத்துப் பின்னப்பட்ட கதைகள் என்பதால், நிஜம்போலத் தோன்றுகின்றன. அக்பர் தனது ஆளுகைக்கு உட்பட்ட மன்னர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்காக பல பெண்​களைத் திருமணம் செய்துகொண்டார். அதில் ஒருவர் ராஜபுதனத்தைச் சேர்ந்த ஜோதாபாய். அவருக்குப் பிறந்த பிள்ளைதான் சலீம். ஒரு மான்சப்​தராக தனித்து நிர்வாகம் செய்யும்படி இளவயதிலேயே சலீம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். 12 வயதில் காபூல் பகுதியின் தளபதியாக இருந்த அவனுக்குத் தனித்த அதிகாரம் வழங்கப்பட்டது. 16 வயதில் மன்பவாவதி என்ற ஆம்பர் இளவரசியைத் திருமணம் செய்து இருக்கிறான். அந்தப் பெண் சலீமின் தாய்வழி ராஜபுதனத்தைச் சேர்ந்தவள்.

மாமன்னர் ஜஹாங்கீராக சலீம் முடிசூட்டப்பட்ட பிறகு, அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்​கள் இருந்தனர். ஜஹாங்கீர் 12 திருமணங்களைச் செய்து இருக்கிறார். அவற்றில், தனது 42-ம் வயதில் வங்காளத்தின் புர்த்வான் பகுதியின் கவர்னரான ஷேர்கானின் மனைவியான நூர்ஜஹானை வலுக்கட்​டாயமாகக் கவர்ந்து தனது அந்தப்புர அழகியாக்கி, பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆகவே, எந்த வயதில் அவர் அனார்கலியைக் காதலித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை, அக்பரின் அந்தப்புர பெண்களில் ஒருத்தியாக அனார்கலி இருந்திருக்கலாம் என்​கின்றனர். அப்படி என்றால், அவள் சலீமைக் காதலித்த சம்பவம் உண்மையா என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது. அரண்மனைப் பெண்களில் இருந்த நாதிராதான் அனார்கலி, மெஹர்னிசா என்ற பெண்தான் அனார்கலி, ஷர்புனிசா என்ற பெண்தான் அனார்கலியாக குறிப்பிடப்படுகிறாள் என்று மூன்று விதக் கருத்துக்கள் நிலவுகின்றன.

அக்பரின் விருப்பத்துக்குரிய ஆசைநாயகியான அனார்கலியை, சலீம் விரும்பி இருக்கிறான். அது பிடிக்காமல் அவளை உயிரோடு புதைக்கும்படி அக்பர் உத்தரவிட்டார். இது, அப்பாவுக்கும் மகனுக்குமான போட்டி. மற்றபடி, அக்பர் காதலுக்கு எதிரி அல்ல என்று முகமது பஷீர் என்ற உருது ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அனார்கலி பல்வேறு ரூபங்கள் எடுத்ததற்கு முக்கியக் காரணம் 'வில்லியம் பின்ஞ்ச்’சின் குறிப்புகளே. பின்வந்தவர்கள், அந்தக் குறிப்புகளை அப்படியே நகலெடுத்த காரணத்தால் அது உண்மைச் சம்பவமாக உருப்பெறத் தொடங்கியது. மேலும் நாடகமாக, திரைப்படமாக, நீள்கவிதையாக மக்கள் மனதில் அனார்கலி பதிந்துவிட்டதால் அது வரலாற்றின் பகுதியாக​வே மாறியது. ஓர் சாதாரண மனிதன் இன்று, மாமன்னர் அக்பரை நினைவுகொள்வதற்கு அனார்கலி கதை மட்டுமே காரணமாக இருக்கிறது. வரலாற்றில் புனைவு எவ்வளவு வலிமையானது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணம்.

எப்படி இறந்தார் புத்தர்?

அனார்கலி கதைக்காவது நினைவு மகால் ஒன்று சான்றாக இருக்கிறது. ஆனால், பன்றிமாமிசம் சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் புத்தர் இறந்து​போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்​களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது. உயிர்க் கொலை​யை மறுக்கும் புத்த பிக்குகள் பன்றி மாமிசம் சாப்பி​டுவார்​களா? புத்தர், பன்றி மாமிசம் சாப்பிடக்​கூடியவரா? மாமிச உணவை உண்பது பௌத்த தர்மத்துக்கு எதிரானது இல்லையா? என்று பல கேள்விகள் எழக்கூடும்.

புத்த மதத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று ஹீனயானம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஒரு அவதார புருஷர் அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர். தனது நல்லொழுக்க நெறிகளின் மூலம் உயர்ந்த நிர்வாண நிலையை அடைந்து புத்த​ராக மாறியவர். ஆகவே, அவரது ஞானநெறியைப் பின்பற்றி வாழ்வதே இந்தப் பிரிவினரின் நோக்கம். இரண்டாவது பிரிவு மஹாயானம். இது, ஹீனயானத்​தில் இருந்து மாறுபட்டது. மஹாயானம் என்பதற்கு சிறந்த வழி அல்லது பெரிய வழி என்பது அர்த்தம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஓர் அவதார புருஷர். புத்தரின் போதனைகளைத் தொகுத்து வாழ்வியல் அறமாக மாற்றி புதிய நியதி​களுடன் கட்டுப்பாடுகளுடன் புத்தத் துறவிகளாக வாழும் முறையை மஹாயானமே அறிமுகம் செய்து​வைத்தது.

சீனா, கொரியா, வியட்நாம், தய்வான், திபெத் முதலிய நாடுகளுக்கு மகாயானம் மிக வேகமாகப் பரவியது. மகாயான பௌத்தத்தில் இருந்தே தாந்த்ரீக பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. இது திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற இடங்களில் பரவிக் காலூன்றியது. மஹாயானமே, புத்தருக்கு சிலைகள்வைத்து வழிபடுவதை முதன்மையாக்கியது. ஹீனயானத்தைச் சேர்ந்தவர்களுக்கு சைவ உணவுக் கட்டுப்பாடு கிடையாது. மான், பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகளின் மாமிசத்தைச் சாப்பிடலாம் ஆனால், தங்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், மஹாயானப் பிரிவில் உணவுக் கட்டுப்பாடு முக்கியமானது. அவர்களுக்கு மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது கட்டாயம். புத்தர் காலத்தில், துறவிகள் மாமிசம் சாப்பிடுவது இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. 'ரிக்வேத கால ஆரியர்கள்’ என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், ஆரியர்களில் மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை. பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க மான் மற்றும் பசுவின் மாமிசம் மிகவும் அவசியமான ஒன்றாகும்’ என்று  குறிப்பிட்டு இருக்கிறார்.புத்தரின் கடைசி நாளைப்பற்றி பரிநிர்வாண சூத்திரத்தின் 16-வது சூத்திரம் குறிப்பிடுகிறது. அதன்படி, சுந்தா என்ற கொல்லனின் மாந்தோப்பில் புத்தர் தங்கியிருந்தார். புத்தருக்கு என்று பிரத்யேக உணவுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அதைத் தனக்குப் பரிமாறும்படி சுந்தாவைக் கேட்டுக்கொண்டார் புத்தர். சுந்தா பரிமாறிய உணவை ருசித்த புத்தர், உணவு கெட்டுப்போய் இருக்கிறது. அதை அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிடுங்கள் என்று கூறினார். உணவு முழுவதையும்  மண்ணுக்குள் புதைத்துவிட்டார் சுந்தா. சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள் புத்தர் வாந்தி எடுத்தார். கூடவே, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. சுந்தா தந்த உணவால்தான் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று அவன் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, தான் பரிநிர்வாணம் அடையும் நேரம் வந்துவிட்டது. ஆகவே, புத்தரது கடைசி உணவைத் தந்த பெருமை அவனுக்கு உண்டு என்று சொன்ன புத்தர், அடுத்த சில மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 80 என்கிறது அந்தச் சூத்திரம்.

சுந்தா தந்த உணவு பன்றி மாமிசம். அது, புத்தருக்கு ஒப்புக்கொள்ள​வில்லை. ஆகவே, அவர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள். இது தவறான தகவல். புத்தர் உண்டது பன்றி மாமிசத்தை அல்ல. அவர் உண்டது காளான் உணவு. அதுவும் நச்சுத்தன்மை உடைய காளான். அவை,  காட்டில் பறிக்கப்பட்ட காளான்கள். காளானைச் சமைத்து உண்பது புத்தத் துறவிகளின் வழக்கம். அன்று, புத்தர் சாப்பிட்ட உணவும் காளானே. அது, கெட்டுப்போய்விட்டது என்பதால்தான் வேறு யாரும் சாப்பிட்டுவிடாமல் புதைத்துவிடும்படி புத்தர் சொல்லி இருக்கிறார். சூக்ரமாத்வா என்ற வார்த்தைக்கு பன்றிகள் விரும்பிச் சாப்பிடக்கூடியது என்பதுதான் அர்த்தம். ஆனால், சில வரலாற்று ஆய்வாளர்களால் பன்றி மாமிசம் என்று அர்த்தப்படுத்தப்பட்டுவிட்டது. அது, தவறு என்கிறார்கள் பௌத்தத் துறவிகள். பன்றி மாமிசம் சாப்பிட்டு, புத்தர் இறந்து போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது.  19-ம் நூற்றாண்டில்தான் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த சூத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போதுதான், இந்தச் சர்ச்சை மேலோங்கத் தொடங்கியது. அதுவரை, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டாரா, இல்லையா என்ற கேள்வி இந்தியாவிலும் மேற்குலகிலும் முக்கியமாகக் கருதப்படவே இல்லை. இவ்வளவு ஏன்... சீனாவில் எழுதப்பட்ட எந்த புத்த நூலிலும் இப்படியான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை. உணவு ஒவ்வாமையால் புத்தர் இறந்தார் என்றுதான்  சீன பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

புத்தம் தழைத்தோங்கி இருந்த காலத்தில், இந்தியா முழுவதும் துறவிகள் முழுமையான சைவ உணவுப் பழக்கத்தைத்தான் கைக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எவ்விதமான உணவை யாசகம் பெறலாம் என்பதற்கான குறிப்புகளில் நெய், காய்கறிகள், தேன், அரிசி, ஊறவைத்த பயறு வகைகள், பழங்கள், தயிர், கரும்புச் சாறு, தானியங்கள், பால் முதலியவையே இடம்பெற்று இருக்கின்றன. புத்தர் என்ன உணவுகளைச் சாப்பிட்டார் என்ப​தைப் பற்றி 'சுத்த விபாங்கம்’ உள்ளிட்ட பல நூல்களில் தகவல்கள் காணப்படுகின்றன. பாலில் வேகவைக்கப்பட்ட அரிசி, பார்லி கஞ்சி, வேகவைக்​கப்பட்ட சோளம், மாம்பழத் துண்டுகள் கலந்த சோறு, அவித்த காய்கறிகள், தேன் போட்டுப் பிசைந்த மாவு உருண்டைகள், வேகவைத்த மாமிசம், உலர்ந்த பழங்கள், தயிர், நெய், பழச் சாறுகள், குருணைக் கஞ்சி போன்றவையே அந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவர், பன்றி மாமிசம் சாப்பிட்​டதைப்​பற்றி வேறு எந்த நூலிலும் ஒரு தகவலும் கிடையாது.

ஆகவே, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டுஇறந்து​போனவர் என்பதை இகழ்ச்சியான ஒரு குற்றச்சாட்​டாக உருமாற்றியது அன்றைய அரசியல் காரணங்களே. மற்றபடி, அவர் சாப்பிட்டது காளானா இல்லை பன்றி மாமிசமா என்பதைத் தெளிவாக்க இன்றும் எவராலும் முடியவில்லை. புத்தர் எப்படி இறந்தார் என்பது முக்கியம் இல்லை. எப்படி வாழ்ந்தார்? என்ன போதித்தார்? அதை ஏன் நாம் கைவிட்டோம் என்பதுதான் முக்கியம். இன்று, அதைப்பற்றி எந்த விவாதமும் இந்தியாவில் நடக்கவில்லை என்பது ஆதங்கமாகவே இருக்கிறது.

எனது இந்தியா (அனார்கலியின் காதல்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



ரலாற்றில் புனைவு கலந்துவிடும்போது, அதைத் தனித்துப் பிரித்து எடுக்கவே முடியாது. முற்றிலும் உண்மையாக வரலாறு எழுதப்படுவது இல்லை. அதன் இடை​வெளியைப் புனைவுகளே பூர்த்திசெய்கிறது. பல நேரங்களில் வரலாற்று உண்மைகளைவிட, புனைவையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். இரண்டு முக்கியமான வரலாற்றுப் புனைவுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்று, அக்பரின் மகன் சலீம் அடிமைப் பெண்ணான அனார்கலியைக் காதலித்தான். அது பிடிக்காத அக்பர், அனார்கலியை உயிரோடு சமாதி கட்டிவிட்டார் என்பது. மற்றொன்று, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டு ஜீரணமாகாமல் இறந்துபோனார் என்பது. இந்த இரண்டும் உண்மையா? அல்லது யாரோ கட்டிவிட்ட கதைகள் சரித்திர உண்மைகள் என்ற பெயரில் உலவுகின்றனவா?

அனார்கலி பற்றி 'மொகல் இ ஆசாம்’ என்ற ஹிந்தித் திரைப்​படம் வெளியான காலத்தில் இருந்து இன்று வரை வாதப்பிரதி​வாதங்கள் நடக்கின்றன. அனார்கலி என்ற நடனக்காரி உண்மையிலேயே இருந்தாளா? அவள் சலீமைக் காதலித்த குற்றத்துக்காக உயிரோடு புதைக்கப்பட்டாளா? என்ற கேள்விகள் இன்றும் இருக்கின்றன. இதே நிகழ்வின் மாற்று வடிவம்போலவே கம்பரின் மகன் அம்பிகாபதி, சோழ இளவரசி அமராவதியைக் காதலித்த கதையும் இருக்கிறது.வரலாற்றின் ஊடாக இப்படியான புனைவுகள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. அதை, முழுவதும் பொய் என்று புறந்தள்ளவும் முடியாது. இதோ இருக்கின்றன சான்றுகள் என்று நிரூபிக்கவும் முடியாது. அவை, மக்களின் நம்பிக்கை உருவாக்கிய கதைகள்.அனார்கலி கதையை நிரூபிக்க, லாகூரில் அனார்கலிக்காக கட்டப்பட்ட நினைவு மஹால் இருக்கிறது.

ஷாஜகான் தனது காதலியின் நினைவாக தாஜ்மகால் கட்டப்படு​வதற்கு இதுவே முன்னோடி என்கின்றனர். இன்றும் லாகூரில் அனார்கலி பஜார் என்ற வீதி இருக்கிறது. அதை ஒட்டியே அந்த நினைவு மண்படம் இருக்கிறது.  அங்கே, சலீம் எழுதிய பிரிவுக் கவிதை ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த மஹால், நாதிரா என்ற நடன மங்கையின் நினைவாகக் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இவைதான் அனார்கலி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்கின்​றனர் ஒரு சாரார்.

ஆனால், அனார்கலியை உருகிஉருகிக் காதலித்த சலீம் தனது நினைவுக் குறிப்பில் அனார்கலியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதவில்லை? அக்பரின் வாழ்க்கைக் குறிப்புகளிலும் அனார்கலி பற்றி ஒரு தகவலும் இல்லை. இவை தவிர, லாகூரின் வரலாற்றை விவரிக்கும் பஞ்சாப் சரித்திர நூல்களில் அனார்கலி பற்றி ஒரு சொல்கூட கிடையாது. ஆகவே, இது ஒரு கட்டுக்கதை. சுவராஸ்யத்துக்காகப் புனையப்பட்ட கதையை நிஜம் என்று மெய்ப்பிக்கப் போராடுகின்றனர். வரலாற்றில் இதற்கான எந்த நேரடிச் சான்றுகளும் இல்லை என்று மறுக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.



'மொகல் இ ஆசாம்’ இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு காவியம். ஆசிப் இயக்கத்தில் 1960-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். கவித்துவமான வசனங்களைக் கொண்ட இந்தப்படம் சலீம்-அனார்கலி ஜோடியின் காதலைக் கொண்டாடுகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள பிரித்வி ராஜ்கபூரைப் பார்த்தால், அக்பர் இப்படித்தான் இருந்திருப்பார், இப்படித்தான் பேசியிருப்பார் என்று தோன்றும். அத்தனை கச்சிதமான நடிப்பு. அதுபோலவே, சலீமாக நடித்துள்ள திலிப்குமார், அனார்கலியாக நடித்துள்ள மதுபாலா ஆகியோரின் நடிப்பும் அற்புதம்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, வட இந்தியா எங்கும் அனார்கலியின் கதை நாடகமாகவும், கதைப் பாடலாகவும் பொதுமக்களிடம் பிரபலம் ஆகியிருந்தது. இந்தப் படத்தின் இமாலய வெற்றி, அனார்கலியை காதலின் ஒப்பற்ற நினைவுச் சின்னமாக்கியது.

அனார்கலி கதை எங்கிருந்து தொடங்கியது? வரலாற்றில் இப்படி ஓர் புனைவை யார் உருவாக்கியது? 1608-ம் ஆண்டு முதல் 1611-ம் ஆண்டு வரை இந்தியாவில் சாயப் பொருட்களை விற்பதற்காக பயணம் மேற்கொண்ட 'வில்லியம் பின்ஞ்ச்’ என்ற கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த வெள்ளைகாரர்தான் அனார்கலி கதையை முதலில் பதிவுசெய்தவர். அவர், லாகூரில் உள்ள ஒரு மலர்த் தோட்டத்துக்குள் புராதனமான சமாதியைக் கண்டதாகவும், அந்தச் சமாதி அக்பரின் ஆசை நாயகிகளில் ஒருத்தி இறந்துபோனதற்காக கட்டப்பட்டது எனவும், அவள் பெயர் அனார்கலி, அவளை இளவரசன் சலீம் காதலிப்பதை விரும்பாத அக்பர், அனார்கலியைக் கொன்றுவிட்டார் என்றும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் வில்லியம் பின்ஞ்ச்.

இந்தக் கட்டுகதைதான் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. வில்லியம் பின்ஞ்சுக்கு முன், அனார்கலி - சலீம் காதல் குறித்து வேறு எந்த சரித்திரப் பதிவுகளும் இல்லை. பின்ஞ்சைப் போலவே, இந்தியாவுக்குள் பயணம் மேற்கொண்ட 'எட்வர்ட் டெர்ரி’ என்ற வெள்ளைக்காரர், தானும் லாகூரில் இந்தக் கதையைக் கேள்விப்பட்டதாகவும், அது உண்மை என்பதை நிரூபணம் செய்யும் நினைவு மண்டபத்தை தான் பார்த்ததாகவும் தனது குறிப்பேட்டில் எழுதிவைத்து இருக்கிறார்.

இந்த இரண்டு வெள்ளைக்காரர்களின் குறிப்பு​களையும் நம்பிய உருது வரலாற்று ஆசிரியர்கள், லாகூரில் உள்ள நாதிரா நினைவு மஹாலை இந்தக் கதையோடு இணைத்து விட்டனர். அப்படி உருவானது​தான் அனார்கலி - சலீம் காதல் கதை.

அனார்கலியின் காதலை மறக்க முடியாத சோக நாடகமாக உருமாற்றியவர் உருது நாடக ஆசிரியரான சையத் இமிதியாஸ் அலி. அவர்தான் அனார்கலியின் காதல் கதையை முதலில் நாடகமாக எழுதி வெற்றி கண்டவர். 1922-ம் ஆண்டு அவரது நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தைத் தழுவியே 'மொகல் இ ஆசாம்’ படம் தயாரிக்கப்பட்டது.

லாகூரைச் சேர்ந்த இமிதியாஸ் அலி, சிறுவயதில் தான் கேட்ட கதைகளைக்கொண்டு அனார்கலியைப் பற்றி ஒரு நாடகத்தை எழுத விரும்பினார். அதற்காக அவர் உருது வரலாற்று ஆசிரியர்களைத் தேடிச்சென்று விவரங்களைச் சேகரித்து இருக்கிறார். நேரடிச் சான்று​கள் கிடைக்காதபோதும், ஜெயின்கானின் மகளை சலீம் காதலித்து இருக்கிறான், அது அக்பருக்குப் பிடிக்கவில்லை என்ற அபுல்பாசல் எழுதிய நாட்குறிப்​பைக்​கொண்டு தனது நாடகத்தை எழுதி இருக்​கிறார். நாடகத்தின் முன்னுரையில், இது கற்பனையான நாடகம், இதில் உள்ள வரலாற்றுத் தகவல்களுக்கு எந்தச் சான்றுகளும் கிடையாது என்று இமிதியாஸ் அலியே குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சோக ரசம் சொட்டும் அந்தக் காதல் நாடகத்​தை வெகுவாக ரசித்த மக்கள் அது வரலாற்​றில் மறைக்கப்பட்ட உண்மை என்று நம்பத் தொடங்​கினர்.
அதற்குத் துணைசெய்வதுபோல அமைந்தது இமிதியாஸ் அலி வெளியிட்ட நாடக நூலின் முகப்பில் இருந்த அனார்கலியின் படம். அனார்கலி எப்படி இருப்பாள் என்ற ஓவியத்தை முகப்புச் சித்திரமாக முதன்​முதலில் வெளியிட்டவர் இமிதியாஸ் அலி. அந்த ஓவியத்தின் பிரதிகள்தான் இன்றும் அனார்கலியைச் சித்திரிக்கும் ஓவியமாக உலவுகின்றன.

இமிதியாஸ் அலிக்காக அனார்கலி ஒவியத்தை வரைந்தவர் அவரது நண்பரும் புகழ்பெற்ற ஓவியருமான அப்துல் ரஹ்மான் சுக்தி. அனார்கலி என்பதற்கு மாதுளை மலர் என்று பொருள். ஆகவே, அப்துல் ரஹ்மான் மொகலாய நுண்ணோவிய மரபில் வரையப்படுவதுபோல கையில் மலரோடு உள்ள இளம் பெண்ணாக அனார்கலியை எழிலோடு வரைந்து இருக்கிறார். இந்தச் சித்திரம் அனார்கலி உண்மையான பெண் என்று நம்புவதற்குப் பெரிதும் துணை செய்தது.

அந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதைத் திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சியில் பலர் இறங்கினர். 1923-ம் ஆண்டு, மும்பையில் மௌனப் படமாக அனார்கலி தயாரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேசும் படம் உருவான காலத்தில் இமிதியாஸ் அலியே தனது நாடகத்தைத் திருத்தி எழுதி அனார்கலி என்ற பேசும் படம் தயாரிக்க உதவி செய்தார். அதன் பிறகு வங்காளத்திலும், 1953-ம் ஆண்டு நந்தலால் ஜஸ்வந்த் லால் இயக்கத்தில் ஹிந்தியிலும் அனார்கலி கதை படமாக வெளியானது. 1960-ல் ஆசிப் இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக 'மொகல் இ ஆசாம்’ வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் கண்டது. அது முதல், அனார்கலியின் கதை மக்கள் மனதில் மாறாத வரலாற்றுச் சம்பவமாகப் பதிவாகிவிட்டது.

அனார்கலி கதை முழுவதும் கற்பனை இல்லை. அதனுள் வரலாற்று உண்மைகள் புதையுண்டு இருக்கின்றன. அபுல் பாசல் எழுதியுள்ள 'அக்பர் நாமா’வில் அக்பருக்கும் இளவரசர் சலீமுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்றும், மன்னரது அந்தப்புரத்துக்குள் சலீம் அனுமதியின்றி நுழைந்தார் என்றும், அவரைக் கடுமையாகத் தண்டிக்கும்படி அக்பர் உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்​​பட்டு இருக்கிறது.

26,000 கோடி! திரும்ப எடுப்பது எப்படி?



ல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்திடம் பணமில்லை என்று கேட்டிருக்கிறோம். ஆனால், நமது வங்கிகளில் முதிர்வு அடைந்த ஃபிக்ஸட் டெபாசிட், உபயோகத்தில் இல்லாத சேமிப்புக கணக்கு, முடிந்துபோன பிராவிடெண்ட் ஃபண்ட் கணக்கு, முதிர்வு பெற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஆகியவற்றில் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 

நம்பித்தான் ஆகவேண்டும். காரணம், இது அரசே தரும் உண்மைத் தகவல்.

இப்படி கேட்பாரற்றுக் கிடக்கும் பணம், ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் எடுக்க மறந்த பணமாகக்கூட இருக்கலாம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

பிராவிடெண்ட் ஃபண்ட்..!

கேட்பாரற்றுக் கிடக்கும் பணத்தில் பெரும்பகுதி பிராவிடெண்ட் ஃபண்டில்தான் இருக்கிறது. இதில் மட்டும் 22,600 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. இதற்கு பல காரணங்கள். பலர் ஒரு நிறுவனத்தில் ஒரு சில மாதம் வேலை பார்த்துவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறிவிடுகிறார்கள். இவர்கள் சம்பளத்திலிருந்து எடுக்கப்பட்ட பி.எஃப். பணத்தை திரும்பப் பெறுவதே இல்லை. காரணம், இத்தொகை சிறிதாக இருப்பதால் அதற்காக அலைய விரும்புவதில்லை.

அடுத்து, வேலை பார்த்த நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருப்பது. அதனால், பி.எஃப். பணத்தைத் திரும்ப பெறும் விண்ணப்பத்தில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கையெழுத்திட மறுப்பது, அப்படியே கையெழுத்துப் போட்டாலும் அந்த படிவத்தை பி.எஃப். அலுவலகத்திற்கு அனுப்பாமல் இருப்பதால், நான்கைந்து ஆண்டு வேலை பார்த்தவர்கள்கூட தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்காமலே இருக்கின்றனர்.

இன்னும் சிலர் நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்பத் தராமலே வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள். கடனை கட்டாததால், கடனுக்கான தொகையை பி.எஃப். பணத்திலிருந்து அந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இப்படி செய்ய நிறுவனத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே, அந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். சிலர், பி.எஃப்.-ல் இருக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவ்வாக இல்லாத பி.எஃப். கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது.

பி.எஃப். பணத்தை எப்படி பெறுவது?

பி.எஃப்-ல் இருக்கும் பணத்தை திரும்பப் பெற வேலை பார்த்த நிறுவனத்தின் பி.எஃப் எண், ஊழியரின் பி.எஃப். எண் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். வேலை பார்த்த நிறுவனத்துடன் சுமூகமான உறவு வைத்திருந்தால் பணத்தைத் திரும்ப பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஒருவேளை நல்ல உறவு இல்லை எனில், அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி, அதை பிராவிடெண்ட் ஃபண்ட் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தந்தால், அவர் உங்கள் விண்ணப்பத்தை ஏரியா என்குளோஸ்மென்ட் ஆபீஸருக்கு அனுப்பி, உண்மை நிலையை விசாரிக்கச் சொல்லி, அதன்படி முடிவெடுப்பார். ஒருவேளை நிறுவனம் மூடப்பட்டு இருந்தால், அதற்கான சான்றுகளோடு வங்கி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

பி.எஃப்.-ல் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற வங்கிக் கணக்கு எண் (ஜாயின்ட் அக்கவுன்ட் கூடாது), சரியான முகவரி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை கொடுப்பது முக்கியம். இவற்றில் எது இல்லை என்றாலும் உங்களின் பி.எஃப். பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

வங்கிச் சேமிப்பு கணக்கு!

வங்கிச் சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டும் 425 கோடி ரூபாய் (கடந்த மார்ச் 2012 நிலவரம்) திரும்பப் பெறாமலே கிடக்கிறது. இவற்றில் வேலை நிமித்தமாக ஊர் மாறிச் செல்பவர்கள் விட்டுச்செல்லும் தொகை,  இறந்து போனவர்களின் கணக்கு போன்றவற்றில் மட்டுமே அதிகத் தொகை இருக்கிறது. இறந்தவர்களின் வாரிசுகள் நாமினியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அந்த  பணத்தை சட்டரீதியாக கேட்டு பெறலாம். இதற்கு நாமினியாக இருப்பவர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றைக் கொடுத்து அந்த பணத்தைப் பெறலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட்..!
தன் பிள்ளைகள், பேரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என ஃபிக்ஸட் டெபாசிட்டில் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பணத்தைப் போட்டு வைத்திருப்பார்கள் சிலர். இந்த விவரத்தை குடும்பத்தில் யாரிடமும் சொல்லாமலே ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் இறந்துவிடுவார்கள்.  

உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா /பாட்டி டெபாசிட் ஏதும் செய்திருந்த விவரம் தெரிந்தால் அதற்கான ஆதாரங்களை தேடி பார்க்கலாம். இல்லை எனில், அந்த வங்கியின் கிளைக்குச் சென்று விசாரிக்கலாம். டெபாசிட் இருப்பது உறுதி செய்யப்பட்டபிறகு, தகுந்த வாரிசுச் சான்றிதழை பெற்று பணத்தைப் பெறலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்தால், அவர்கள் ஒன்றுகூடி அந்த பணத்தை யாரிடம் ஒப்படைக்கலாம் என்பதை முடிவு செய்து, அதை வங்கிக்குத் தெரியப்படுத்தி, பணத்தைப் பெறலாம். இதற்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட்ட ரசீது இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.  
இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..!

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதிர்வுத் தொகை சுமார் 3,000 கோடி ரூபாய் கோரப்படாமலே கிடக்கிறது. பிரீமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியாதவர்கள் பாலிசிகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். இந்த பாலிசிகளை சரண்டர் செய்தால் குறைந்த அளவு பணமே கிடைக்கும் என்பதால் பணத்தைத் திரும்ப எடுக்க அவர்கள் முயற்சிப்பதில்லை. அதன் விளைவே இந்த துறையில் முடங்கிக் கிடக்கும் 3,000 கோடி ரூபாய். மூன்று வருடம் கட்டாயம் கட்டிவிட்டால் சரண்டர் தொகையை வாங்கலாம்.    

இனிமேலாவது நாம் பரிவர்த்தனை செய்யும் எல்லா நிதி சம்பந்தமான விவரங்களையும் கணினியிலோ அல்லது டைரிகளிலோ குறித்து வைப்பதோடு மட்டுமல்லாமல் நம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிகிற மாதிரி செய்வோமே!

Thursday, August 30, 2012

காந்தி,நேரு வழியில் சென்றால் நாம் அரசியலுக்கு லாயக்கில்லை என்று அர்த்தம். இளங்கோவன்


திரும் புதிருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஜெயந்தி நடராஜனும் ஒரே மேடையில் கைகோக்​கிறார்கள் என்ற பரபரப்பைக் கிளப்பியது, கடந்த 25-ம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா. 
காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேசிய முன்​னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ''பெரிய பதவியில் இருந்த நேரத்தில்கூட, தொண்டர்களை சந்தித்தார் காமராஜர். ஜி.கே.வாசன், ப.சிதம்பரம்கூட பிஸி​யான சமயத்திலும் தொண்டர்களை சந்திக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்து சென்ற இன்னொரு மத்திய அமைச்சர் (ஜெயந்தி நடராஜன்) தொண்டர்களைச் சந்திப்பதே இல்லை. கட்சி வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவது இல்லை'' என்று பரபரப்பைக் கிளப்பி இருந்தார். அந்தப் பேச்சில் ப.சிதம்பரத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. இதுபற்றி காங்கிரஸ் மேலிடத்தில் ஜெயந்தி புகார் சொல்லவே, ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிச் செயலாளர் மோதிலால் வோரா, விளக்கம் கேட்டு இளங்கோவனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 'தொண்டர்களைச் சந்திக்காமல் வணிகர்களை மட்டுமே சந்திக்கும் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று அந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளித்து மேலும் சூட்டைக் கிளப்பினார் இளங்கோவன்.  
இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார் எழுதிய 'வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஜி.கே.வாசன், வைரமுத்து, சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், குமரிஅனந்தன், யசோதா, நாமக்கல் ஜெயக்குமார் போன்ற பலரும் மேடையில் அமர்ந்து, விழா தொடங்கிய பிறகுதான் ஜெயந்தி நடராஜன் மேடை ஏறினார்.
முதலில் பேசிய குமரி அனந்தன், ''எனது தம்பியை வி.ஜி.பன்னீர்தாஸிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கட்டி வேலைக்குச் சேர்த்தேன். இன்று இந்த அளவுக்கு வசந்தகுமார் வளர்ந்திருக்கிறார்'' என்று பெருமிதப்பட்டார்.
''சொந்தமாக வீடு கட்டுவது, பிள்ளைகளுக்குத் தந்தை ஆவது, புத்தகம் எழுதுவது இந்த மூன்று விஷயங்கள்​தான் மனிதன் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். மூன்றையும் நிறைவு செய்திருக்கிறார் வசந்தகுமார். தொழிலோடு மட்டுமல்ல தமிழோடும் வாழ்ந்திருக்கிறார்'' என்று கலகலப்​பைத் தொடங்கி வைத்தார் வைரமுத்து.
அடுத்துப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ''500 ரூபாய் அட்வான்ஸ் கட்டி வேலைக்குச் சேர்ந்த வசந்தகுமார், இப்போது 1,000 கோடி சொத்து சேர்த்திருக்​கிறார்'' என்று சொல்லி மலைக்க​வைத்தார்.
அழைப்பிதழில் பெயர் இருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனும் இளங்கோவனும் அதுவரை விழாவுக்கு வரவில்லை. இறுதியாகப் பேசுவதாக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென மைக் பிடித்து, வசந்தகுமாரை அவசரமாகப் பாராட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றார். அதன் பிறகே, சொல்லி வைத்தது போல், இளங்கோவனும் ஞானதேசிகனும் மே​டைக்கு வந்தனர்.
மைக் பிடித்த இளங்கோவன், ''நிலக்கரி விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை பி.ஜே.பி. உருவாக்கி வருகிறது. அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்வதற்குக் காரணமே, நாம் திருப்பி அடிக்காமல் போனதுதான். இப்படித்தான் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்த (தி.மு.க. ஸ்பெக்ட்ரம்) தவறை நாம் சுமந்துகொண்டு இருந்தோம். பி.ஜே.பி. ஆளும் மாநில அரசுகள் எடுத்த முடிவுப்படிதான் நிலக்கரியை ஏலம் விடவில்லை என்று எடுத்த எடுப்பிலேயே உரிய பதிலைச் சொல்லி நாம் திருப்பி அடித்திருந்தால், அவர்கள் காணாமல் போயிருப்பார்கள். ஆனால் நாம் பெருந்தன்மையுடன், விவாதம் நடத்தலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் நூறு பொய்களைச் சொன்னால் நாம் ஒரு பொய்யாவது சொல்ல வேண்டாமா? பொய் சொல்லாமல் அர சியல் நடத்த முடியுமா? காந்தி நேரு வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் சாமியார் ஆக வேண்டியதுதான். அவன் அயோக்கியன் என்றால் நாமும் அந்த அளவுக்கு மாறினால்தான் உறைக்கும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அரசியலுக்கு லாயக்கில்லை என்று நம்மை ஒதுக்கி விடுவார்கள்...'' என்று சொந்தக் கட்சியையும் தி.மு.க-வையும் உரசிப் பார்த்த இளங்கோவன் விழா விவகாரத்துக்கு வந்தார்.
''தான் செய்யும் தொழிலில் கூட காம​ராஜர், சோனியா படத்தைப் போடும் துணிச்சல் வசந்தகுமாருக்கு இருக்கிறது. ஆனால், அவருக்கு உரிய மரியாதை கட்சியில் கிடைக்கிறதா என்பது வேறு. காங்கிரஸ் என்றால் இப்படித்தான் இருக்கும். இப்படிப் பேசுவதற்கு காங்கிரஸில் சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அதற்கும் சில (ஜெயந்தி) நேரங்களில் இடையூறு வந்துவிடுகிறது. காங்கிரஸ் ஒரு கடல். ஒன்றும் இல்லாதவர்கள் எல்லாம் ஓடத்தில் இருப்பார்கள். கட்சிக்காக உழைத்தவர்கள்கூட கரை ஒதுங்கிக் கிடப்​பார்கள். காங்கிரஸை விட்டால் இந்த மக்களுக்கு வேறு வழியும் இல்லை. காரணம் மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. மற்ற கட்சிகள் தங்கள் குடும்பத்துக்காகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றன. அவர்கள் சரியில்லை என்று வேறு ஒருவரைக் கொண்டு வந் தால்... குடும்பம் இல்லாதவர்கள்கூட அதைவிட மோசமாக நடக்கிறார்கள். காலில் மண் படக்கூடாது என்பதற்காக மலை மேல் உட்கார்ந்து கொள்​கிறார்கள்'' என்று ஆளும் கட்சியையும் ஒரு கடி கடித்தார்.
ஜெயந்தியும் இளங்கோவனும் முட்டி மோதுவார்கள் என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தவர்கள், 'நல்லாத்தான் பேசுறார். ஆனா, ஜெயந்திம்மா இருக்கிறப்ப வராம பயந்துபோய் பம்மிட்டாரே...’ என்று புலம்பியபடி கிளம்பினார்கள்.

டர்ர்ராக வைக்கும் பி.ஆர்.பி. டர்ன் - ஓவர்! கிடுகிடுக்கும் கிரானைட் ரகசியங்கள்


மூன்று நாட்களுக்கும் மேலாக கஸ்டடியில் வைத்துக் கசக்கியும், 'கிரானைட் கிங்’ பி.ஆர்.​பழனிச்சாமியின் வாயில் இருந்து உருப்படியான தகவல் எதையும் கறக்க முடியவில்லை. அதனால், 'மீண்டும் கஸ்டடியில் எடுப்போம்’ என்ற முடிவோடு, 27-ம் தேதி காலையிலேயே அவரை மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டது போலீஸ். 
முரண்டு பிடித்த பி.ஆர்.பி.!
பி.ஆர்.பி-யை மூன்று நாட்கள் போலீஸ் கஸ்ட​டியில் வைத்து விசாரிக்க, ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு 7.30 மணிக்கு அனுமதி கிடைத்தது. 'அவருக்கு ஓய்வு தேவை; கூடிய மட்டும் பகலில் விசாரணை  நடத்துங்க’ என்று, பி.ஆர்.பி-யின் டாக்டர்கள் அட்​வைஸ் கொடுத்ததால், அடுத்த நாள் காலையில்தான் விசார​ணையைத் தொடங்கியது போலீஸ். ஆனாலும், பிரயோஜனம் இல்லையாம். இதுகுறித்து தனிப்படை போலீஸார் நம்மிடம் பேசுகையில், ''நாங்க என்ன கேட்டாலும் எப்படிப் பதில் சொல்றதுன்னு பக்காவாய் கிளாஸ் எடுத்து அனுப்பி இருக்காங்க. எதைக் கேட்டாலும், 'எனக்குத் தெரியாது; சண்முகநாதனுக்கும் (பி.ஆர்.பி. நிறுவன மேனேஜர்) என் பையன்களுக்கும்தான் தெரியும்’னே சொல்லி எஸ்கேப் ஆகிடுறார். 'உங்க வீட்ல எவ்வளவு நகைகள் இருக்கு’ன்னு கேட்டதுக்கு, 'எனக்குத் தெரி யாது; ஆடிட்டரைத்தான் கேக்கணும்’னு பதில் சொன்னார். 'எந்தெந்த அரசியல்வாதிகளுக்குப் பணம் குடுத்திருக்கீங்க... உங்களால பலன் அடைஞ்ச அதிகாரிகள் யார் யார்?’னு கேட்டதுக்கு, 'நாங்க சட்டத்தை மீறி எந்தக் காரியமும் செய்யலை. அதனால யாருக்கும் பணம் குடுக்கலை’னு கூலாகப் பதில் சொன்னார்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் இறுக்கிப் பிடிச்சதும், 'நெஞ்சு வலிக்குது’னு சொல்லிட்டார்.
ராத்திரியே ஜி.ஹெச்-சுக்கு அழைச்சுட்டுப் போயி, செக்கப் பண்ணினோம். 'எல்லாம் நார்மல்’னு டாக்டர் சொல்லிட்டார். 'இனிமே ஆக்ட் குடுத்தா, நாங்கவேற மாதிரி டீல் பண்ணு​வோம்’னு அவங்க ஆளுங்களுக்கு எச்சரிக்கை செஞ்சோம். அதுக்குப் பிறகு நெஞ்சு வலி வரலை(?)'' என்றார்கள்.
போட்டுக் கொடுத்த செக்யூரிட்டி!
ஸ்பாட்டில் வைத்து விசாரிப்பதற்காக பி.ஆர்.பி-யை 25-ம் தேதி மாலை 5 மணிக்கு கீழையூர் சி.சி.கண்​மாய்க்குக் அழைத்து வந்தார் ஏ.டி.எஸ்.பி. மயில் வாகனன். அரசு நிலத்தில் அத்துமீறி கிரானைட் கற்கள் வெட்டப்​பட்டு இருந்ததைக் காட்டி விளக்கம் கேட்டார் மயில்வாகனன். 'ஆயுத பூஜைக்கு மட்டும்தான் இங்கே நான் வந்திருக்கேன். அதனால என்ன நடந்திருக்குன்னு எனக்குத் தெரியலை. சண்முகநாதனைத்தான் கேக்கணும்’ என்று பதில் சொன்னாராம்.
அடுத்ததாக, இ.மலம்பட்டி ஏரியாவில் உள்ள குவாரிக்குப் பயணம். அங்கு, பி.ஆர்.பி-​யைக் கீழே இறக்கி, 'இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் கற்களை வெட்டிட்டு மறுபடியும் பூமிக்குள் போட்டு புதைச்சிருக்கீங்க’ என்று கொக்கி போட்டார் ஏ.டி.எஸ்.பி. 'இதெல்லாம் வேஸ்ட் கல். அதை வேற என்ன பண்ணச் சொல்றீங்க?’ என்று பாய்ந்தார் பி.ஆர்.பி.
அவர் வேஸ்ட் என குறிப்பிட்ட கற்கள் அனைத்​திலும் நம்பர் குறியீடுகள் இருக்கவே, அங்கிருந்த செக்யூரிட்டி பாண்டியை அழைத்து ஏ.டி.எஸ்.பி. விசாரித்தார். 'வெளிநாட்​​டுக்கு ஏற்றுமதி​யாகும்
கல்லுன்னா இந்த மாதிரி மார்க் பண்ணி வைப்பாங்க சார்’ என்று தன்னை அறியாமல் முதலாளியைப் போட்டுக் கொடுத்தார் செக்யூரிட்டி.
தொடரும் கிரானைட் வேட்டை
26-ம் தேதி திருவாதவூர் ஏரியாவில் உள்ள பி.ஆர்.பி. மற்றும் சிந்து கிரானைட்ஸ் குவாரிகளுக்குள் புகுந்தார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. அங்கே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாவுக்கு உள்ளும் கிரானைட் கற்களை அத்துமீறி வெட்டி எடுத்துக் குவித்திருந்ததைப் பார்த்து மிரண்ட கலெக்டர், அந்தக் குவாரிகளுக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிட்டார். சிந்து கிரா​னைட்ஸ் கம்பெனிக்காக சுமார் 40 சென்ட் மேய்ச்சல் புறம் போக்கை ஆக்கிரமித்துக் கட்டப்​பட்டு இருந்த பக்கா கட்​டடத்தையும் இடித்துத்தள்ள உத்தரவிட்டார். ஓவா மலை ஏரியாவில் இரண்டு ஊருணிகளே உருத்தெரியாமல் அழிக்கப்பட்டிருந்ததை பார்த்தவர், அங்கும் குவிக்கப்பட்டிருந்த கற்களை முழுமையாக அளவீடு செய்ய உத்தரவிட்டார்.
தொடரும் கைதுகள் மிரட்டும் தகவல்கள்
மதுரா கிரானைட்ஸ் அதிபர்களில் ஒருவரான பன்னீர் முகமது போலீஸில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதே நிறுவனத்தில் சூப்பர்வைஸராக இருந்த முன்னாள் வி.ஏ.ஓ. சொக்கலிங்கத்​தைக் கைது செய்திருக்கும் போலீஸார், பி.ஆர்.பி-யின் பினாமியாகக் கருதப்படும் ஜி.ஜி. கிரானைட்ஸ் அதிபர் ஜி.கோபால​கிருஷ்ணனின் சித்தி மகன் பிரசாந்தையும் போலி பெர்மிட் விவகாரத்தில் கைது செய்திருக்கிறார்கள். ஜி.ஜி. கிரானைட்ஸ் தொடர்புடைய சதீஷ் என்பவரை முதலில் விசாரித்து விடுவித்தது போலீஸ். 'அவர்தான் மாஸ்டர் மைண்ட்’ என்று பிரசாந்த் உதிர்த்த தகவலை அடுத்து, சதீஷை மறுபடியும் தேடுகிறார்கள். சேப்பாக்கம் கனிமவளத் துறை அலுவலகத்தில் கணக்கு அதிகாரியாக இருந்த சீனிவாசன், அங்கு பணியில் இருந்துகொண்டே, ரெங்கசாமிபுரத்தில் உள்ள சிந்து கிரானைட்ஸ் அலுவலகத்துக்கும் கடந்த எட்டு வருடங்களாக அட்வைஸராக இருந்திருக்கிறார். இப்போது, பி.ஆர்.பி-யின் வரவுசெலவு விவகாரங்களைக் கவனிக்கும் அவரது ஆடிட்டரான கான் என்பவரையும் கஸ்டடிக்குள் கொண்டு வந்துள்ளது போலீஸ்.
சிக்கியது 2,000 ஏக்கர்!
பி.ஆர்.பி-யின் சொத்து விவரங்களைத் தேடி தமிழகம் முழுவதும் உள்ள குவாரி தேசங் களுக்குப் படை எடுத்த 13 தனிப்படைகள், இதுவரை தந்திருக்கும் தகவல்களே மலைக்க வைக்கின்றன. மதுரையைத் தவிர்த்து அதை ஒட்டியுள்ள மூன்று மாவட்டங்களில் மட்டுமே பி.ஆர்.பி. பெயரில் இருக்கும் அசல் சொத்துக்கள் 2,000 ஏக்கருக்கு மேல் வருகிறதாம். சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத் துறை தலைவர் மூலமாக பி.ஆர்.பி. சம்பந்தப்பட்ட சொத்து ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது போலீஸ். மணப்பாறை அருகே மூன்றெழுத்து கிரானைட் கம்பெனிக்காக 150 ஏக்கர் நிலம் வாங்கினார்களாம். அந்த இடத்தின் மையத்தில் சுமார் 10 ஏக்கர் நிலம் இன்னொரு நபரிடம் இருந்ததாம். அந்த இடத்தைக் கொடுக்க அவர் மறுத்ததால், தங்களது இடத்தைச் சுற்றி அகழி போல் பள்ளம் தோண்டிவிட்டதாம் கிரானைட் தரப்பு. இதைப் பார்த்து மிரண்டுபோனவர், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். பி.ஆர்.பி-யின் சொத்துத் தேடலின்போது இந்த விவகாரமும் போலீஸ் பார்வைக்கு வந்திருக்கிறது.
திகைக்க வைக்கும் டர்ன்-ஓவர்!
பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2004-05 தொடக்கத்தில் இருந்து இந்த ஜூன் மாதம் வரை, 'கேங் ஸ்டாஃப் என சொல்லப்படும் பெரிய வகை பிளாக் கற்களில் 83,742.495 கன மீட்டர் உற்பத்தி செய்திருக்கிறதாம். இதற்கு அப்படியே எக்ஸ்போர்ட் க்ளியரன்ஸ் வாங்கி இருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் மினி கேங் ஸ்டாஃப் என்ற 'ஸ்லாப்’ வகைக் கற்களில் 83,87,683.83 சதுர மீட்டர்  உற்பத்தி செய்து அதில் 60,87,967.3 சதுர மீட்டருக்கும், டைல்ஸ் வகை கிரா னைட் கற்களில் 20,00,921.44 சதுர மீட்டர் உற்பத்தி செய்து, 17,48,811.07 சதுர மீட்டருக்கும் எக்ஸ்போர்ட்ஸ் க்ளியரன்ஸும் வாங்கி இருக்கிறார்கள்.  தங்களிடம் இல்லாத கிரானைட் ரகங்களே இல்லை என்று பெயர் எடுப்​பதற்காக, இத்தாலியில் இருந்து குறிப்பிட்ட சில வகை கிரானைட் கற்களை இறக்குமதி செய்து பாலீஷ் போட்டும் மார்க்கெட்டில் விட்டிருக்கிறார்கள். இப்படி 2004 முதல் இந்த ஜூன் மாதம் வரை இத்தாலியில் இருந்து 724.879 கன மீட்டர் கிரானைட் கற்களை இறக்குமதி செய்திருக்கிறது பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
2006-07 நிதி ஆண்டில் இருந்து கடந்த ஜூன் வரை பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 1,790 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரத்து 172 ரூபாய்க்கு டர்ன்-ஓவர் காட்டி இருக்கிறது. இதில், 95 கோடியே 97 லட்சத்து 4 ஆயிரத்து 527 ரூபாய்க்கான டர்ன்-ஓவர் மட்டுமே வரிவிதிப்புக்கு உட்பட்டது. இதே காலகட்டத்தில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் டர்ன்-ஓவர் 24 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 236 ரூபாய். இதில் 36 லட்சத்து 20 ஆயிரத்து 163 ரூபாய் டர்ன்-ஓவர் மட்டுமே வரிவிதிப்புக்கு உட்பட்டது. இவை அனைத்துமே பி.ஆர்.பி. நிறுவனங்கள் கொடுத்திருக்கும் 'ஒயிட்’ கணக்கு வழக்கு விவரங்கள். அப்படியானால் பிளாக்?
கிரானைட் புள்ளி வீட்டில் குடியிருந்த டி.எஸ்.பி.
போலி பெர்மிட் விவகாரத்தில் நடவடிக்கையை முடக்கிப்போட்ட இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை பாயலாம் என்று கடந்த இதழில் எழுதி இருந்தோம். அதன்படியே, மெடிக்கல் லீவில் இருந்த ராமகிருஷ்ணன் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக, வெங்கடா​ஜ​லபதியின் பெயர்கொண்ட இன்னொரு இன்ஸ்​பெக்டர் மீதும் விசாரணை நடக்கிறது. நாகமலை புதுக்கோட்டை ஏரியாவில் சுமார் ஒரு கோடிக்கு இவர் கட்டியிருக்கும் ஆடம்பர பங்களாவுக்குப் பணம் வந்த ரூட்டைத் துழாவுகிறது தனிப்படை. இதேபோல், பி.ஆர்.பி. மீதான நிலஅபகரிப்பு புகார்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த டி.எஸ்.பி. ஒருவர், இப்போது வழக்கில் சிக்கி இருக்கும் கிரானைட் ஓனர் ஒருவரின் வீட்டில்தான் குடி இருந்தாராம். ஆட்சி மாறியதும் வடக்கு மாவட்டத்தில் டம்மியான இடத்துக்குத் துரத்தப்பட்டார். அங்கு பணியில் சேராமலேயே அவரைப் பக்கத்து மாவட்டத்துக்கு 'விஜயம்’ செய்ய வைத்த கிரானைட் தொடர்புகள் குறித்தும் விசாரணை போகிறது. ஒரே நம்பர்​​களில் லாரிகளை ஓடவிட்ட திருச்சியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவரின் பினாமியான 'மாணிக்க’மான லாரி ஆபரேட்டரும் சீக்கிரமே சிக்கலாம் என்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ்-களுக்கும் ஆப்பு காத்திருக்கிறது!
விசாரணை வளையத்தில் மதுரையை ஆண்ட முன்னாள் கலெக்டர்கள் சந்திரமோகன், மதிவாணன், காமராஜ் மீதும் கூடிய சீக்கிரமே நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் போலி பெர்மிட்களைத் தயாரித்து மேலூரில் இருந்து ஆந்திராவுக்கு கிரானைட் கற்களைக் கடத்தியவர். இந்த பெர்மிட்களில் சந்தேகம் இருப்பதாக ஆந்திராவில் இருந்து தமிழகத் தலைமைச் செயலருக்குப் புகார் வருகிறது. அந்தப் புகார், அப்போது கலெக்டராக இருந்த காமராஜுக்கு வருகிறது. காமராஜ் அதை எஸ்.பி-க்கு அனுப்பி, மேலூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.
விசாரணையில், போலி பெர்மிட் போட்டது உண்மைதான் எனத் தெரியவந்து பிரசாந்தைக் கைதுசெய்து ஆவணங்களைக் கைப்பற்றுகிறார் இன்ஸ்பெக்டர். ஆனால், பிறகு என்ன நடந்ததோ, அவற்றைக் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை; ஸ்டே ஷனிலும் வைக்கவில்லை. இதில் இன்னொரு குழப்பம். பிரசாந்த்தின் பெயரை 'பிரகாஷ்’ என்று கலெக்டர் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படியே எஃப்.ஐ.ஆர். போட்டவர்கள் குற்றப் பத்திரிகையில் 'பிரசாந்த் என்ற பிரகாஷ்’ என கோல்மால் செய்து இருக்கிறார்கள். இந்த வழக்குத் தொடர்பான ஸ்டேஷன் ரெக்கார்டுகளில் எஃப்.ஐ-ஆரின் கார்பன் காப்பியும் மிஸ்ஸிங். நடவடிக்கை வரப்போகிறது என்றதும் ஜெராக்ஸ் காப்பியைக் கொண்டுவந்து திணித்திருக்கிறார்கள். இதற்காகத்தான் ராமகிருஷ்ணன் இப்போது சஸ்பென்ட்!
தலைமறைவாக இருக்கும் பி.ஆர்.பி-யின் மகன் உள்ளிட்ட உறவுகளின் வரவுக்காகக் கண்ணிவைத்துக் காத்திருக்கிறது காவல்துறை!

பத்தாம் வகுப்பு மாணவியை வேட்டையாடிய போலீஸ். குடியாத்தம் கொடூரம்


ந்தக் கட்டுரை, இளம் பெண்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட். சட்டம்- ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீஸ் ஒருவர் தவறு செய்ய... அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையே அவருக்கு உடந்தையாக இருந்திருக்கிறது. குடியாத்தம் பகுதியில் நடந்திருக் கும் இந்தக் கொடுமையை அம்பலத்துக்குக் கொண்டு வருகிறோம். 
பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவரது பெயர், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் பெயரும் மறைக்கப்பட்டு உள்ளது.
''பக்கத்தில் இருக்கிற ஸ்கூல்ல நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு 15 வயசு. ஒரு அண்ணா வும் ஒரு அக்காவும் இருக்காங்க. அவங்களும் நான் படிக்கிற ஸ்கூல்லதான் படிக்காங்க. எங்க அப்பா டீக்கடை வச்சிருக்கார். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு டீக்கடையைப் பார்த்துப்பேன். போனமாசம் 4-ம் தேதி, எங்க ஊர்ல தேர்த் திருவிழா நடந்திச்சு. அதுக்காக ஸ்கூல்ல லீவு விட்டு இருந்தாங்க. அப்போ வேலூர்ல இருந்து பாதுகாப்புக்கு போலீஸ் வந்து இருந்தாங்க. நான் டீக்கடையைப் பார்த்துக்கிட்டு இருந்தப்பத்தான் 'அவர்’ பழக்கமானார். என்கிட்ட சகஜமாப் பேசினார். 'நான் ஆயுதப் படைப் பிரிவில் வேலூரில் இருக்கேன்’னு சொன்னார். நானும் படிக்கிற விஷயத்தைச் சொன்னேன். தினமும் என்னைப் பார்த்து சிரிப்பார். 6-ம் தேதி என்கிட்ட வந்து, 'உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்னையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். எங்க வீட்டுல சொன்னா சம்மதிக்க மாட்டாங்க. அதனால் நாம ரெண்டு பேரும் வீட்டைவிட்டு ஓடிப்போயிடுவோம்’னு சொன்னார். எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா அவரு தலையில அடிச்சு சத்தியம் செஞ்சார். அதனால் வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம அவர்கூட ஆம்பூர் வந்துட்டேன். அங்க இருந்து மெட்ராஸுக்குக் கூட்டிட்டுப் போயிட்டார். தாம்பரத்தில் அவரோட ஃப்ரெண்ட் வீட்டில் தங்கினோம். அந்த வீட்டில் ஃப்ரெண்டோட அம்மா, அப்பா எல்லோரும் இருந்தாங்க. அதனால நாங்க மட்டும் அன்னிக்கு நைட்டு தனியா ரூம் எடுத்துத் தங்கினோம். அப்ப, 'நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொல்லி, ஆசைக்கு இணங்கவெச்சுட்டார். அடுத்த நாளே, 'நான் வேலைக்குப் போகணும். இல்லைன்னா சந்தேகப்படுவாங்க’னு சொல்லி என்னை அவங்க வீட்டில் விட்டுட்டுப் போயிட்டார். எனக்கு அப்ப பயமாயிருந்தது.
ஆனாலும் தினமும் ரெண்டு தடவை போன் பண்ணினார். 'எங்க வீட்டில் சொல்லி இருக்கேன். அம்மாவும் அப்பாவும் சம்மதம் சொன்னதும் வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்’னார். அதுதான் கடைசி. அதுக்குப் பிறகு எனக்கு போன் பண்ணவே இல்லை. அவருடைய போனும் ஸ்விட்ச்ஆஃப் ஆகிடுச்சு. எனக்கு அப்பத்தான் சந்தேகம் வந்துச்சு. ஆனா, அதுக்குள்ள நான் இங்கே இருக்கிற விஷயம் எப்படியோ தெரிஞ்சு என் வீட்ல இருந்து வந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. என் வாழ்க்கையே நாசமாப்போச்சு. இனிமே என்ன பண்றதுன்னே தெரியல. போலீஸில் புகார் கொடுத்து இருக்கோம். எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிவெச்சாலே போதும்ணா'' என்று அழத் தொடங்கினார்.
அவரது தந்தையிடம் பேசினோம். ''எல்லாம் என் தப்புங்க. பொண்ணு, கடையில் இருக்கும்போது நான் கவனிப்போட இருந்திருக்கணும். அதனாலதான் ஒரு போலீஸ்காரன், அவ வாழ்க்கையை நாசமாக்கிட்டான். இப்பவும் அந்தப் பையன் எப்படி இருப்பான்னு எனக்குத் தெரியாது. நான் இல்லாத சமயம் வந்து பொண்ணுகிட்ட அன்பாப் பேசி நடிச்சு, ஏமாத்திட்டான். போன 21-ம் தேதி என் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது. நான் திரும்ப அந்த நம்பருக்குக் கால் பண்ணும்போது, 'உங்க பொண்ணு இந்த அட்ரஸ்ல இருக்கா. கூட்டிட்டுப் போயிடுங்க’ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க. அதுக்குப் பிறகு அந்த நம்பரை யாரும் எடுக்கவே இல்லை. உடனே நான் கடவுளை வேண்டிக்கிட்டு மெட்ராஸுக்குப் போய், என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்தேன். போலீஸில் புகார் கொடுத்து இருக்கோம். அவங்களாவது என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தருவாங்கன்னு நினைக்கிறோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் பேசினோம். ''அவங்க கொடுத்த புகாரின்படி அந்தப் பையனைப் பிடிச்சு விசாரிச்சோம். அவனுக்கும் இந்தப் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று ஒரே போடாகப் போட்டார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவி நம்மை தொடர்புகொண்டு ''என்னை  அழைத்துச் சென்றது போலீஸ்காரர் இல்லை'' என்று நடுக்கத்துடன் தெரிவித்தார்.
காவல்துறையினரின் மிரட்டல்தான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணமா என்பது தெரிய வில்லை.
தங்களைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றும் கயமைத்தனத்தை, இனியாவது காவல் துறை நிறுத்த வேண்டும். ஒரு மாணவிக்கு கொடுமை இழைத்தவர் காக்கிச் சட்டைக்காரர் என்பதற்காக விட்டுவிட முடியுமா? காவல் துறை களங்கம் இல்லாமல் செயல்படும் என்றே நம்பிக் காத்திருக்கிறோம்.

தினுசு தினுசா ஏமாத்துறாங்கப்பா! ஈமு, நாட்டுக் கோழியைத் தொடர்ந்து அகர் மரம்


மு கோழியை வைத்து ஏமாற்றப்பட்ட அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள், நாட்டுக் கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய், டேட்டா என்ட்ரி என்று வரிசையாகப் புகார்கள் கிளம்பவே, கொங்கு மண்டலம் அதிர்ந்து கிடக்கிறது! 
ஈரோடு நசியனூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும், நந்து கொப்பரா பவுல்ட்ரி கேட்டில் ஃபார்ம்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு, சேலம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுத்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கொப்பரைத் தேங்காய், நாட்டுக் கோழி, உயர்ரக ஆடு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் ஏமாந்த தொகை 100 கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. கம்பெனியின் எம்.டி. நந்தகுமாரும், அவருக்கு மூளையாகச் செயல்பட்ட ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.
நாட்டுக் கோழித் திட்டத்தில் ஏமாந்த சேலம் இருப்பாலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், ''ஒன்றரை லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், 300 நாட்டு கோழிக் குஞ்சுகளைத் தருவார்கள். அவர்களே பண்ணை அமைத்துக் கொடுத்து தீவனம், மருந்து, ஊசி எல்லாம் போடுவதாகவும் சொன்னார்கள். கோழிக் குஞ்சுகளைக் கவனமாக மூன்று மாதம் வளர்த்துக் கொடுத்தால், வாரம்தோறும் 2,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடன் வாங்கித்தான் ஒன்றரை லட்ச ரூபா கட்டினேன். சொன்னபடியே 300 நாட்டுக் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்தவங்க, மூன்று வாரங்கள் சம்பளமும் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு வரலை. என்னை மாதிரி எங்க ஊரில் மட்டும் பணத்தைக் கட்டி நான்கு பண்ணைகள் போட்டிருக்காங்க. எங்களைப் பார்த்து 20-க்கும் மேற்பட்டவங்க வைப்புத் தொகை கட்டி ரெண்டு மாசமாகுது. அவங்களுக்குக் கோழிக் குஞ்சுகளும் தரலை. ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவங்க ஏமாந்து இருக்காங்க'' என்றார் கவலையுடன்.  
சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ராணி, கொப்பரைத் தேங்காய் ஸ்கீமில் பணம் கட்டி ஏமாந்துள்ளார். ''எங்க வீட்டுக்காரர் மூட்டை தூக்கும் தொழிலாளி. நானும் ஏதாவது தொழில் செஞ்சா குடும்பக் கஷ்டம் தீரும்னுதான் இந்த ஸ்கீம்ல சேர்ந்தேன். ஒரு லட்சம் வைப்பு நிதியாகக் கொடுத்தால், வாரா வாரம் வெள்ளிக்கிழமை 4,000 கொப்பரைத் தேங்காய் போடுவாங்க. அதை உறிச்சு, தேங்காயை உடைச்சுக் காயவைச்சுக் கொடுத்தால், வாரத்துக்கு 3,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாச் சொன்னாங்க. அதனால், வட்டிக்குக் கடன் வாங்கிப் பணத்தைக் கட்டினோம். ரெண்டு வாரம் தேங்காய் போட்டாங்க. அதுக்குப் பிறகு வரலை. கம்பெனியில் போய் பார்த்தால், பூட்டிக்கிடக்குது'' என்று கண்ணீர் சிந்தினார்.
சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் பேசியபோது. ''இவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில்தான் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள். அத்தனை புகார்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் அதிரடிகள் அரங்கேறும்'' என்றார்.
ஈரோடு சென்னிமலை தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், '''பண்ணைக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகும். இந்த மூன்று மாதங்களுக்கும் நிறுவனங்கள் சொல்லும் கணக்குப்படி, செட் அமைத்துக் கொடுத்து தீவனம் தந்து, பராமரிப்புத் தொகையையும் கொடுப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ஒரு பண்ணைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு பெரிய சந்தையும் கிடையாது. கோழி மற்றும் ஆடு பற்றி நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தங்களுடைய பேராசை காரணமாக ஏமாறுகிறார்கள்.
ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்றவர்கள் என்றும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்கின்றனர். இதை ஏன் கால்நடைத் துறையோ மாவட்ட நிர்வாகமோ கவனிப்பது இல்லை? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்பது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்'' என்றார்.
கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவிடம் பேசினோம். ''தனியார் நாட்டுக் கோழிப் பண்ணைகளுக்கு அரசு அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறோம் என்று தனியார் ஒப்பந்தப் பண்ணைகள் கூறினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்தச் சிக்கல்கள் போதாது என்று இப்போது, 'அகர் மரம் வளர்ப்போம்... அரசனாய் வாழ்வோம்!’ என்ற புதிய திட்டம் கொங்கு மண்டலத்தில் பரபரக்கிறது. 'ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 200 மரக்கன்றுகளும், ஆறு வருடங்களுக்கு வருட போனஸ் 10 ஆயிரம் ரூபாயும், 6-வது வருட இறுதியில் 10 லட்ச ரூபாயும் கொடுப்போம்’ என்று தூண்டில் போடுகிறார்கள். 'மச்சி இந்த ஸ்கீம் நம்பிக்கையாத் தெரியுதே... பணம் கட்டலாமா?’ என்று ஏமாறத் தயாராகிறது இன்னொரு குரூப்!

Tuesday, August 28, 2012

தூத்துக்குடி உப்பு விஷமாகுது!


இந்தியாவின் உப்பு உற்பத்தியில் முதலிடம் குஜராத். இரண்டாம் இடம் தமிழகம். காரணம், தூத்துக்குடி உப்பு உற்பத்தி; கிட்டத்தட்ட 25000 ஏக்கர்கள். அவை இன்று பெருகிவரும் அனல் மின்நிலையங்கள், தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டு விஷமாகி வருகின்றன.

பளீரென்று வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்பு ரத்தச் சிவப்பாக மாறுவது உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

முன்பு உப்பு உற்பத்திக்குத் தேவையான நீரை, கடலிலிருந்து நேரடியாக உப்பு வயல்களுக்குக் கொண்டு வரப்பட்டு, உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. கால மாற்றத்தாலும் கடல் மாற்றத்தாலும், கடலில் கலக்கும் கழிவுகள், மீன் உணவு, கெமிக்கல் தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து போனது. இதனால் உப்பு உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. 50 அடி ஆழத்திலேயே உப்பு உற்பத்திக்குக் கிடைத்த நீர், இப்போது 200 அடி ஆழத்தில்தான் கிடைக்கிறது.

இச்சூழலில் தூத்துக்குடி வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள் அபரிமிதமான கழிவுகளை வெளியேற்றுகின்றன. தவிர அனல்மின் நிலையத்திலிருந்து உயரமான சிம்னிகள் (குழாய்கள்) வழியாக புகையோடு வெளியேறும் நச்சுத்துகள்களும் வெளியேறி, காற்றில் கலந்து உப்பளங்கள் மீது படிகின்றன. இதனால் உப்பின் தரம் குறைவதுடன், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலையை அடைகிறது.

மாவட்டத்தின் தென்கடற்கரைப் பகுதியிலிருக்கும் ஆறுமுக நேரியில் சுமார் 4000 ஏக்கர் உப்பளங்கள், தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் மட்டுமே மாசுபட்டு வருகின்றன. அத்துடன் மணவாளக்குறிச்சி மணல், ரசாயன மாற்றம் செய்யப்பட்டு யுரேனியம் பிரித்தெடுக்கப்படுவதும் தூத்துக்குடியில்தான்.

மேலும்,தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் உப்பளங்களுக்கு மத்தியிலுள்ள நிலத்தில் பாத்திகட்டிச் சேகரிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் சேர்ந்துதான் உப்பு வயல்கள் சிவப்பு நிறமாக, உற்பத்தியாகும் உப்பும் சிகப்பு நிறமாகி விடுகிறது. நஞ்சான இந்த உப்பு தவறுதலாக உணவுக்கான உப்புடன் கலந்தால், உண்டவர்கள் கதி அதோகதிதான்.

சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரசாய னக் கழிவுகள் எல்லாம் மழைக் காலங்களில் கடம்பா குளத்தின் வடிகால் ஆறுகள் மூலமாக அருகில் இருக்கும் கடலில் கலக்க, கடல்நீர் நிறம் மாறுவதுடன், கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை கடல் தாவரங்களும் அழிந்து விடுகின்றன.

இதேநிலை தொடர்ந்தால் ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற சொல் வழக்கு, ‘மாசுபட்டு விஷமான தூத்துக்குடி உப்பு குப்பையிலே’ என்று மாறினாலும் ஆச்சர்யமில்லை.


ஓ பக்கங்கள் - விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி! - ஞாநி



நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால், டி.வி.களில் தோன்றுவதால், பரவலாகப் பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி. என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வி.ஐ.பி. என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லோரும் சமம்.

வி.ஐ.பி. என்றால் என்ன அர்த்தம்? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்-போர்ட்டில் ஒருமுறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப் பாட்டு சக்கரவர்த்தி வந்ததும் எல்லோரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழிவிட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெற குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.

நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐந்நூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரைச் சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.

க்யூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி. என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை வோட்டுச் சாவடியிலிருந்து ஏர்-போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பி.க்கு என்ன தான் இருக்க முடியும்? மலம் கழிக்கும் அவசரத்தைத் தவிர வேறெதற்கும் இந்தச் சலுகையைத் தரமுடியாது.

வி.ஐ.பி.யின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாகச் சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி. கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பி.களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னைத் துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பி.யைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பி.கள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலைக் கீழே எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பி.களின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது!

சிகிச்சையில் ஒரு வி.ஐ.பி.க்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனத்தில் அலைமோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.

மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.

உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி. பிரச்னை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.

எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்பட வேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.

விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.

காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்லச் சீர்குலைந்து வந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.

விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகி, பல காலம் ஆயிற்று. அதன்பின் அதில் புற்றுநோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் க்ரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.

வி.ஐ.பி. என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் வி.ஐ.பி. என்ற வரையறையோ, யாருக்கும் சலுகையோ கிடையாது.

எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.

மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்ற போது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி. என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பி. யாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகி விட்டார்.

அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள், அவர் இறந்த பின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி. மனநிலை. எனக்கு எல்லோரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன்.

மருத்துவச் சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பி.க்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி. உயிர், சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.

விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணையச் செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள், ‘விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விட முடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்திக் குற்றத்தை நிரூபித்து, தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் - விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி. என்பதால் முதலில் காப்பாற்றப் படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.

உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்துக் கவனிப்பவர்கள் மருத்துவ மனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப்பெரிய சொத்து.

எனக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு அவற்றிலிருந்து மெல்ல மெல்ல முழுமையாகக் குணமடைய ஆறு வாரங்கள் தேவைப்படும் நிலையில், சென்ற இரண்டு வாரங்கள் ஓ பக்கங்களை எழுத முடியாமல் போய்விட்டது. எனக்கு முகம் தெரியாத எண்ணற்ற வாசகர்கள் என்னை நலம் பெற வாழ்த்தியதுதான் ஒருவன் எழுத்தாளனாக இருப்பதில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாய். அறுவை அனுபவங்களைப் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

இந்த வாரக் கேள்வி

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து வேலை பார்த்த ஆயிரக்கணக்கானோர் பதற்றமான மனநிலையில் ஊர் திரும்பியது வருத்தமான விஷயம்தான். ஆனால் எனக்கு ஒரு அடிப்படைச் சந்தேகம். ஏன் இத்தனை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து பிழைக்க வேண்டியிருக்கிறது? அந்த மாநிலங்களில் விவசாயம், தொழில் இவற்றின் நிலை என்ன? ஏன் அங்கே வேலை வாய்ப்புகள் இல்லை? அதற்கு யார் பொறுப்பு?

இந்த வார பதில்

தியேட்டர்களில் கூட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று சினிமா பிரமுகர்கள் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள்:

இதோ பதில்: காரணம் 1: குப்பையாக படம் எடுக்கிறீர்கள். 2. பெண்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்பாதபடி படம் எடுக்கிறீர்கள். 3. பெரும்பாலான தமிழ் டி.வி. சேனல்கள் தாங்களே சினிமா கொட்டகை மாதிரி இருக்கின்றன. 4. கொட்டகைக்கு வந்து காஃபி சாப்பிட்டாலே திவாலாக்கிவிடுகிறீர்கள். அண்மையில் ஒரு சாதாரணக் கொட்டகையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 30 கொடுத்து படம் பார்த்தேன். கேன்டீனில் மோசமான காஃபி குடித்தேன். விலை: பத்து ரூபாய்.

இந்த வாரப் பூச்செண்டு!

கட்சி சார்பு இல்லாமல் மக்கள் சார்பாகச் செய்திகளை வழங்கி வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து இரண்டாம் ஆண்டில் நுழையும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு!

வெளிவராத தகவல்-பளபளக்கும் கோடிகள்!



தமிழ்நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் கிரானைட் தொழிலின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ் நாட்டில் மட்டும் கோடானுகோடிகள் கிரானைட்டில் புரள்வதாக, செய்திகள் படபடக்கின்றன. ஆனால் உண்மை நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்"- என்கிறார் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி. கடந்த 30 வருடங்களுக்கு மேல் கிரானைட் தொழிலில் இருக்கும் வீரமணி, மத்திய அரசின் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்ஸிலின் கனிமவள ஏற்றுமதி பிரிவின் தலைவர். இது தொடர்பான உலக அமைப்புகளிலும் பங்கு வகிக்கிறார்.

மத்திய அரசின் சட்டத்தின் கீழ் இந்தத் தொழில் நடக்கிறது. மத்திய அரசின் சட்டத்தையொட்டி மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப பல விதிகளை வகுத்துக் கொள்ளலாம். இதில் சிறு கனிமங்கள் என்ற பிரிவின் கீழ் ‘கிரானைட்’ வருகிறது. கனிம வகைகள் பல. அணுசக்திக்குத் தேவையான கனிமங்கள், இரும்புத் தாது, பாஸ்பேட், நிலக்கரி, அரிதான கற்கள்... என்று பற்பல தேவைகளுக்கு கனிமங்கள் இருக்கின்றன.

கட்டடத்துக்கு வெளிப்புறச் சுவர்களில் கிரானைட் பதிப்பது, தரையில் பதிப்பது, சமையலறை, வாஷ்பேஸின் போன்ற இடங்களில் பதிப்பது என்று கிரானைட் கற்கள் பயன்பாடு (கறுப்புக் கற்கள்) பல வகைகள். அடுத்து நினைவு மண்டபங்கள், சமாதிகள் கட்ட பயன்படுத்தும் உயர்வகையான கறுப்புக் கற்கள். மற்றொரு வகை பொறியியல், மற்றும் ஆய்வுக் கூடங்களில் மேஜைகளாகப் பயன்படுத்தக் கூடியவை. நம் ஊரில் இருப்பது போல் அல்லாமல் வெளிநாடுகளில் வேகத் தடைகளை, கருங்கற்களைக் கொண்டு அரை மி.மீ. நீளத்தில் அமைப்பார்கள். நடை மேடைகளிலும் பயன்படுத்துவார்கள். சிலைகள், படங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டவென்று கிரானைட்டின் பயன்பாடுகள் அதிகம். வெட்டியெடுத்த கற்களை அப்படியே பயன்படுத்த முடியாது. பயன்பாட்டுக்கு ஏற்ப அதை மேம்படுத்திப் பளிச்சிட வைக்க வேண்டும். இதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உண்டு. 12 வகையாக ஃபினிஷிங் செய்கிறோம். பத்தாயிரம் டன் எடையுடைய கல்லைக் கூட வைரக் கம்பியால் தேவைக்கேற்ப ஸ்லைஸ் போடுகிறோம்.

கறுப்புக் கற்களைத் தவிர சாம்பல் நிறக் கற்களும் உண்டு. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் மிகச் சிறந்த கறுப்புக் கற்கள் கிடைக்கின்றன. பொதுவாகவே எரிமலைகள் வெடித்துக் கிளம்பிய பின்னர் இறுகிப் போய் பூமியின் மத்தியிலிருந்து வெளிவந்தவைதான் இந்தக் கற்கள். இந்த மாற்றம் கோடிக் கணக்கான ஆண்டுகளில் நிகழ்வது. கலர் கிரானைட் என்று நூறுவிதமான உயர்ரகக் கற்கள் இருக்கின்றன. இளமையான கல் என்றால் 60 கோடி ஆண்டுகள். முதிர்ந்த கல் என்றால் நூறு கோடி ஆண்டுகள்.

1978க்குப் பிறகு கிரானைட் தொடர்பான கொள்கை தமிழ்நாட்டில் திருத்தப்பட்டு ‘தமிழ்நாடு கனிமவள நிறுவனம்’ ஏற்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில் அரசு கனிம நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல காலமாய் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் 1978க்கு வேறு பல மாநிலங்களுக்கு தொழில் செய்யக் கிளம்பி விட்டனர். ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில், கிரானைட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கிரானைட் தொழில் தொடர்பான மிகச் சிறந்த கொள்கை ஆந்திராவில் அமல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் கரீம் நகர் மற்றும் ஓங்கோல் பகுதிகளில் மிகச்சிறந்த, தரமான கிரானைட் வெட்டியெடுக்கப்படுகின்றன. வெண்புள்ளிகள், வெடிப்புகள் இருக்கும் கற்கள் ஏற்றுமதிக்கு ஏற்றவையல்ல. எண்பது சதவிகிதம் சேதாரம் இருக்கும். இந்திய அளவில் ஐயாயிரம் கிரானைட் நிறுவனங்கள் இருக்கின்றன. நான்காயிரம் குவாரிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த கிரானைட் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 22 முதல் 25 சதவிகிதம்தான்.

உலகில் எண்பது நாடுகள் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. உலகச் சந்தையில் நமக்கு பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் கடும் போட்டி. நமது உற்பத்தியில் பத்து சதவிகிதம்தான் நமது தேவைக்கு. தொண்ணூறு சதவிகிதம் ஏற்றுமதிதான். 2000-2001ம் ஆண்டில் நாம் 1954 கோடிக்கு ஏற்றுமதி செய்தோம். 2011 - 12ம் ஆண்டில் அது 6000 கோடி. இந்திய அளவில் இந்தப் பத்தாண்டுகளில் 43000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறோம். தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டத்தில் 11500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இங்கு 120 நிறுவனங்கள் (டாமின் உட்பட) ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இது மத்திய அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள். சராசரியாக பார்த்தால் ஒரு வருடத்தில் சுமார் 100 கோடி அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி நடந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் (அரசு நிறுவனம் உட்பட) ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு நிறுவனம் மட்டும் லட்சம் கோடி, ஆயிரக்கணக்கான கோடிகள் என்று எப்படி ஏற்றுமதி செய்திருக்க முடியும்? மற்றொரு ரகசியம்! மிக உயர்ந்த ரகக் கற்கள் கிடைப்பதாகச் சொல்லும் தென் தமிழகக் கற்களை அமெரிக்க இறக்குமதியாளர்கள் விரும்புவதில்லை. நான் ஏற்றுமதி செய்த கற்கள் அமெரிக்காவில் இரண்டு லட்சம் கட்டடங்களிலும் ஜப்பானில் 65 கட்டடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு சதவிகிதம் கூட தமிழ்நாட்டுக் கற்கள் கிடையாது.

நமது நாட்டு மலைகளை கிரானைட்டுக்காக வெட்டியெடுப்பதை விட, வீடுகட்ட மற்றும் சாலை போட பயன்படுத் தப்படும் கருங்கல் ஜல்லிக் கற்களுக்காக வெட்டியெடுப்பது அதிகம். ஒரு பக்கம் இந்தியாவின் கிரானைட் ஏற்றுமதி வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று குளறுபடிகளும்; தனி மனிதர் செயல்பாடுகளும் தொழிலின் முன்னேற்றத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுவது வருத்தமான விஷயம்தான்.