Saturday, July 30, 2011

அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!

அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம்.

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே அதற்கு ஏறுமுகம் தான்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில் விற்று ஏகப்பட்ட லாபம். ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத் தொட்டுள்ளது.

ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட். அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.

கணக்குக் கேட்ட சேரன்! கண் கலங்கிய பாரதிராஜா! - படப்பாளிகள் பாலிடிக்ஸ்


வில்லங்கமான சேரன் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிய அமீர்; சங்கடத்தில் நெளிந்த சமுத்திரக்கனி; உருக்கம் காட்டிய செல்வமணி; மேடையில் பதவியை ராஜினாமா செய்யத் துடித்த பாரதிராஜா;இவர்களைச் சமாதானப்படுத்திய ‘திடீர்’ நாட்டாமை கே.எஸ்.ரவிக்குமார்.இப்படிப் பல பரிமாணங்களைக் காட்டியது தமிழ்ப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.


வடபழநி கமலா தியேட்டரில் 13 ஜூலை அன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழா; படைப்பாளிகளுக்குள் இருக்கும் ‘ஈகோ’ யுத்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.பாரதிராஜா மேடையில் அனலில் பட்ட புழுவாய் நெளிந்து கொண்டிருந்தார். செல்வமணியிடம், ஏண்டா என்னை இப்படி வம்பில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறே?" எனக் கேட்டபடி இருந்தார்.முதலில் பேசிய செல்வ மணி, சங்க இருப்பு மூன்று கோடியே இருபதாயிரம் என கணக்குக் காட்டியவர். டி-40, இயக்குனர்கள் சங்கம் நடத்திய கலை விழாவில் வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய கமல், மரியாதைக்காக வந்த ரஜினி, மேக்கப் போட்டு மேடையில் மூன்று மணி நேரம் காத்திருந்த ராதா ரவி, கடைசி நேரத்தில் காலை வாரிய சன் டி.வி. என ஒவ்வொன்றாகப் புட்டுப் புட்டு வைக்க, கூட்டம் முழுதும் செல்வ மணிக்கு ஆதரவு தெரிவித்தது. ஒன்றரை மணி நேரம் பேசிய செல்வமணி ‘பிரியாவிடை பெறுகிறேன் பதவி ஏற்பு விழா நடக்கும்’ என்று தேர்தல் அதிகாரி கவிஞர் பிறை சூடனை அழைத்தார்.அதுவரை பதவி ஏற்பு விழா சுமுகமாக நடக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் மேடையேறிய சேரன், மைக்கைப் பிடித்து 2010 டிசம்பர் வரை செல்வமணி கணக்கு கொடுத்துள்ளார். 2011 ஜனவரி முதல் ஜூலை வரை வரவு செலவு கணக்கு கொடுத்தால்தான் பதவி ஏற்பு விழா. அதை இப்போதே இந்த மேடையில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியதும் அதை அமீரும், ஜனநாதனும் ஆதரிக்க, செல்வமணியோ என்னை பிளாக்மெயில் செய்கிறார் சேரன்" என்று சொல்ல, ஒரே கூச்சல் குழப்பம். வார்த்தைகள் வெடித்தன. கே.எஸ். ரவிக்குமார் மேடை ஏறி, சேரன் செய்வது நியாயமல்ல" என்று சேரனையும், அமீரையும் ஒரு பிடிபிடிக்க, கூட்டம் கே.எஸ். ரவிக்குமாரை ஆதரித்துக் கரவொலி எழுப்பியது. மொத்தக் கூட்டமும் சேரன் மீது கடுப்படைந்ததால் மூடு- அவுட்டான சேரன் மூலையில் ஓரமாக ஒதுங்கிக் கொண்டார்.


சேரனுக்கு இது தேவையா? என மொத்தக் கூட்டமும் கேட்பது போல் இருந்தது. தமக்கு எதிராகக் கரவொலி எழுப்பி, கை தட்டியவர்களைப் பார்த்து சேரன், கணக்குக் கேட்பது தவறா?" என்று கேட்டாலும் அவர் பக்கம் ஏனோ அனுதாபம் ஏற்படவில்லை.அதற்குப் பின்னர் பதவி ஏற்கும்போது சேரன், நான் வோட்டுப் போடாமல் தேர்வு செய்யப்பட்டேன், நான் அப்படித்தான் திமிராகத்தான் பேசுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்ற தொனியில் பேசியது, நிச்சயமாக அந்தக் கூட்டத்தில் சேரன் எல்லோர் மனத்திலும் ஒரு ‘மகா வில்லன்’ ஆகத்தான் தெரிந்தார். அதற்குப் பின் மைக் பிடித்த பாரதி ராஜா, கண்களிலே கண்ணீர்; குரல் தழுதழுத்தது.‘எனக்கு இது தேவையா?’ என அங்கலாய்ப்போடு, என் இனிய படைப்பாளிகளே, நான் சினிமாவில் உதவி இயக்குனராய் பத்து வருடம், இயக்குனராய் இருபத்தைந்து வருடம் என முப்பத்தைந்து வருடங்கள் கடந்து விட்டேன். மூன்று முதல்வர்களிடம் பழகிவிட்டேன். நான் நினைத்திருந்தால் அரசியலில் சேர்ந்து பெரும் புகழைச் சம்பாதித்திருப்பேன். நான் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் என மூன்று ஹாட்ரிக் படங்கள் கொடுக்கும் வரை சங்கம் எங்கு உள்ளது என்று தெரியாது. அதன்பின்தான் சங்கத்தில் சேர்ந்தேன். ஆனால் இன்று 2020 உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள். இருப்பு 3 கோடி என்கிறார்கள். அதனால் பெரிய கூச்சல். சரி, இருக்கத்தான் செய்யும்; தாய் உணர்வோடு இதை ஏற்றுக் கொள்கிறேன்.


இப்போதே ராஜினாமா செய்து விடுவேன். எனக்காக வோட்டுப் போட்ட 1300 பேர் வைத்துள்ள மரியாதை என்னை அப்படிச் செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த மேடையில் சேரன், சமுத்ரக் கனி இருவரும் துணைத் தலைவர்கள், அவர்களிடம் என் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைக்கிறேன்" எனக் கூறி அமர்ந்தார். சிக்கல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார். அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற இயக்குனர் அமீர், செல்வமணியை ஒரு பிடி பிடித்தார்.நாங்கள் என்ன சங்கப் பணம் 3 கோடியைக் கொள்ளையடிக்க, குறுக்கு வழியில் வந்துள்ளோமா? ஒன்றரை மணி நேரம் நல்லவர் போல் செல்வமணி பேசி கூட்டத்தின் அனுதாபத்தை வாங்கிக் கொண்டார். நாங்கள் கணக்குக் கேட்பது தவறா?" என்று பேசினாலும் கூட்டம் அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை.

கடும் எதிர்ப்புக்குப் பிறகு நன்றி கூறி முடித்துக் கொண்டார். மேடையில் வெயில் வாட்டத்தை விட வாடிப்போன வசந்த பாலன், மைனா சந்தோஷத்தை இழந்த பிரபு சாலமன், மங்காத்தா குஷி இல்லாத வெங்கட் பிரபு, ஆர்வம் காட்டாத ஸ்டேன்லி. இப்படி பதவி ஏற்பு விழா ஒரு யுத்த விழாவாகவே காட்சியளித்தது. பார்வையாளர்கள் மத்தியில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு கடைசி வரை இருந்தது.

- சுமதி, கல்கி

நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?

ஸ்பெக்ட்ரம் புயலில் காங்கிரஸ்

தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசாஜி, கனிமொழிஜி, தயாநிதிஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜி’ சிக்குகிறார் என்கிறார்கள். அவர், ப.சிதம்பரம்ஜி.

4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும். என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.

குற்றச்சாட்டு - 1:


2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!’ என்று பிரதமரே சொல்கிறார். இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?

குற்றச்சாட்டு - 2 :


டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது? ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே இதற்கு முழுப் பொறுப்பு?

குற்றச்சாட்டு - 3:


ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார். 'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும்தான்’ என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன’ என்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?

குற்றச்சாட்டு- 4 :


தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?''

இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!


ஜூனியர் விகடன்

முடிவுக்கு வராத மு.க. கலாட்டா!



ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டா வுக்கு இன்று வயது 15. கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!

'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக் கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின். ஆனால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது!


கோவையிலும் அதேதான். வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார் கள்! செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சுவார்த்தைகூட இல்லை.'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டி னார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தி யும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.

'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார். ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட் பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார். ஆனால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.


''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார். சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூலதனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள். நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன. இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்!

நன்றி - விகடன்

அடம் பிடிக்கும் முதல்வர் (அம்மா )

குழந்தைகள் அடம்பிடிக்கலாம்! அம்மா..?

டந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டபோது, 'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம், உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன் பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத் திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.


ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா. டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும், மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா?

இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக் கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின் 109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது. ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம்.ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, ''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.

கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப் புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க் கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை வழங்காவிட்டால், இது நாள் வரை பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.'நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவுஅறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல் அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81 பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.

ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும் நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!

அறிவியல்

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டவுடன், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், பிரம்மாண்டமான கப்பல் மட்டும் எப்படி மிதக்கிறது?


பார்ப்பதற்கு நீரின்மேல் மிதப்பதாகத் தெரிந்தாலும், கப்பல் ஓரளவு நீரில் அமிழ்ந்துதான் இருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான நீர் இடம்பெயர்ந்திருக்கும். வெளியே சூழ்ந்துள்ள நீரின் அழுத்தம், எடை காரணமாக கப்பல் நீரில் உண்டாக்கும் அழுத்தம் இரண்டும் சமமாக அமைவதாக கப்பல்கள் கட்டப்படுகின்றன. அதாவது, தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்த தத்துவம்தான் இதன் அடிப்படை.

காசநோயைக் கண்டுபிடித்தவர் யார்?


ராபர்ட் கோக் (Robert Kock) என்பவர்தான்,Tuberclosis bacillus என்னும் நுண்ணுயிரியைக் கண்டறிந்தார். காசநோய் ஏற்படுவதற்குக் காரணம் இந்தக் கிருமிதான். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், மருத்துவர் மற்றும் விஞ்ஞானியும்கூட. இவர் 1877ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ், 1882ல் மைக்கோபாக்டீரியம் என்ற காசநோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் லைபீரியோ காலரா எனும் நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றைக் கண்டறிந்தவர். அதற்காக இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

பார்வையற்றோர் கனவு காண்பது உண்டா?

“பிறவியிலேயே பார்வையற்றவர்கள் கனவு காண்பதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு எந்தப் பொருளின் வடிவமும் தெரிந்திருக்காது. நிறங்கள், காட்சிகள் பற்றிய பதிவுகள் எதுவுமே அவர்களுக்குள் இருக்காது. அதனால், அவர்கள் கனவு காண்பதில்லை. மாறாக, ஏழு வயதுக்கு மேல் பார்வையில்லாமல் போனவர்கள் கனவு காண்பார்கள். அவர்களுக்குள் வடிவங்கள், நிறங்கள் என்று பலப்பல பதிவுகள் ஏற்பட்டிருக்கும். அதனால், இது சாத்தியம்” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் சைக்காலஜி பேராசிரியர் வில்லியம் டார்ஹாஃப்.

சிலருக்கு சென்ட் போன்ற வாசனையை நுகர நேரிட்டால், தலைவலிக்கிறது என்கிறார்களே. அது ஏன்?

அந்த மணம், வாசனை நரம்புகளைத் தூண்டி விரியச் செய்கிறது. அதனால், அருகில் உள்ள ரத்தக் குழாய்களும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. தலை வலி ஏற்படுவதன் காரணம் இதுதான். அந்த இடத்திலிருந்து விலகிப் போய் விட்டால், தலைவலியும் நீங்கிவிடும்.

பிஷப் ஓ என்றொரு பறவை உண்டா?


Bishop's 'o' o எனப்படும் இந்தப் பறவையை Moloka'i 'o' o என்றும் சொல்வார்கள். கழுத்து, வயிறு மற்றும் வால்பகுதிகள் மஞ்சள் தீற்றியது மாதிரி காணப்படும் அரிய பறவை இது. IUCN நிறுவனம் அறிவித்துள்ள அரியவகைப் பறவைகளில் இதுவும் ஒன்று. இன்று படங்களாக, காட்சிப்பொருளாக மட்டுமே காணப்படுகின்றன. 1981ஆம் ஆண்டுக்குப் பின், இந்தப் பறவையைப் பார்த்ததாகப் பதிவில்லை. அதுதான் வருத்தமான விஷயம்!

நில மோசடி சில தகவல்கள்..

5 கோடிக்கு 50 லட்சம் தான்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவனாண்டி - பாப்பா தம்பதிகள். இவர்களுக்கு நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல இருந்த விவசாய நிலத்தை விற்று விடுவது என்று முடிவெடுத்தார்கள். ஐந்து கோடி மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நான்கு கோடி வரை கேட்டுப் பார்த்தனர் பலர். இந்த நிலையில்தான் மதுரை தி.மு.க. புள்ளியின் ஆட்கள், தம்பதிகளைச் சந்தித்தனர். மரியாதையா நிலத்தை எங்களுக்கு விற்றுவிடு," என்று மிரட்டினர். அந்த வயதான தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்தப் புள்ளியின் ஆட்கள் பயமுறுத்தி வெறும் 50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை கிரயம் செய்துவிட்டார்கள். பாவம் அந்தத் தம்பதிகள். லோக்கல் போலீஸ், மதுரை என்று அலைந்தும் பலனில்லை. அவங்ககிட்ட ஏன் மோதறீங்க?" என்று ஆளாளுக்குக் கழன்று கொண்டார்கள். ஆட்சி மாறியது. நில அபகரிப்புப் புகார்கள் பெறுகிறது போலீஸ் என்று கேள்விப்பட்ட சிவனாண்டி - பாப்பா தம்பதிகள் மதுரை காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். புகாரை விசாரித்த காவல்துறை, அழகிரியின் நெருங்கிய தோழர்களான மாவட்டச் செயலாளர்கள் தளபதி, பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி ஆகியோரை, கொத்தாகக் கைது செய்து பாளையங்கோட்டையில் கம்பி எண்ண வைத்திருக்கிறது.

இதே புகாரின் பேரில் மதுரையில் தி.மு.க. பிரமுகர் அட்டாக் பாண்டியும் கைதாகியிருக்கிறார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நாமக்கல்லில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியுள்ளனர். தவிர, தமிழகமெங்கும் சுமார் 2500 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 200 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. கீழ் மட்டங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் ரியல் எஸ்டேட் பிரமுகர்களோடு சேர்ந்து கொண்டு இந்த நில அபகரிப்புகளில் ஈடுபட்டனர்," என்கிறது காவல் துறை.

தேர்தல் பிரசாரத்துக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு இது தொடர்பாகக் கடிதங்கள் வந்தன. விசாரித்த போது தி.மு.க.வினர் மிக பரந்துபட்ட அளவில் அபகரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. எனவேதான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘கருணாநிதி குடும்பம், மற்றும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கூலிப்படையினர், மக்களிடம் அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படும்,’ என்று சொல்லப்பட்டிருந்தது.ஒரு நிலத்தையோ வீட்டையோ அடாவடியாக ஆக்கிரமித்துக் கொள்வது, அடியாட்களைக் கொண்டு காலி செய்து மடக்கிப் போடுவது, போலி ஆவணங்களைத் தயாரித்து உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல் உரிமையை மாற்றுவது, தங்களுக்கு வேண்டிய சொத்தை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்குவது என நான்குவிதமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது புகார் கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் மூத்த குடிமக்களும், விதவைகளுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்கிறார் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ்.தி.மு.க. பிரமுகர்கள், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டதுமே புகார் கொடுத்தவரோடு பேச்சுவார்த்தை நடத்தி கணக்கை செட்டில் செய்து வழக்கிலிருந்து தப்பிப்பதும் நடக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள தாம்பரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்காக 35 லட்சம் முன்தொகையாகக் கொடுத்தார் ஒரு பெண். ஆனால் பில்டர், குடியிருப்பையும் கொடுக்கவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அந்தப் பெண் பரங்கிமலை ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்ய, விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பில்டர், சில மணி நேரத்துக்குள்ளேயே பணத்தை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்து விட்டார்.இந்த நில அபகரிப்புப் புகார்கள் வண்டி, வண்டியாகக் கிளம்ப, தமிழகமெங்கும் கீழ்மட்ட தி.மு.க. பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

இதில் மற்றொரு மோசடியும் நடக்கிறது. எங்களிடம் அப்போதிருந்த மார்க்கெட் ரேட்டுக்கு நியாயமாக விற்ற ஒருவர், இப்போது அதன் மதிப்பு ஏறியிருக்கிறது என்று தெரிந்தும், ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புகார் கொடுக்கிறார்கள். இதைக் கீழ்நிலையில் உள்ள சில காவல் துறை அதிகாரிகளும் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கட்டைப் பஞ்சாயத்தில் இறங்குகிறார்கள்," என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி கவுன்ஸிலர் ஒருவர். கொடுக்கப்பட்ட புகார்கள் எல்லாம் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை. புகார்களை விசாரிக்கிறோம் என்று புறப்படும் அடிமட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் பங்குக்கு கொஞ்சம் ஆடுகிறார்கள்," என்கின்றனர் தி.மு.க.வினர்.இந்தச் சூழலில் புகார்களைப் பற்றி விசாரிக்க சிறப்பு காவல் பிரிவுகளும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்களும் அமைக்க இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை தண்டனையாம்.

உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியின் முதுகெலும்பாக உள்ள லோக்கல் பிரமுகர்களை ‘உள்ளே போடும் வகையில் அரசு செயல்படுகிறது,’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க. பிரமுகர்கள். அதனால்தான் உள்துறைச் செயலாளர், மற்றும் கவர்னரிடம் புகார். தொடர் போராட்டம் என்றெல்லாம் அறிவித்திருக்கிறது தி.மு.க. தான் அபகரித்த சிறுதாவூர் நிலத்தை ஜெ. திருப்பிக் கொடுக்கட்டும்," என்று சொல்கிறார் கருணாநிதி. அபகரிப்புப் புகார்களுக்கு அ.தி.மு.க. வினரும் தப்பவில்லை. அமைச்சர் அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ. கருப்பையா மீதும் ‘எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை வேண்டும்,’ என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிக் கொண்ட அழகிரியின் வலது கையான பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக, மதுரை அட்டாக் பாண்டி, எஸ்.ஆர்.கோபி, சேலம் வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் தவிர பல மாவட்டங்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர்களை உள்ளே குண்டாஸில் போட ஏற்பாடு நடக்கிறதாம். நிலம் விவகாரம் என்பது சிவில் மேட்டர் என்றும் அதை கிரிமினலாக மாற்றுவது நீதிமன்றம் முன் நிற்காது என்றும் சொல்கிறது தி.மு.க. தரப்பு. முன்பெல்லாம் மூன்று வழக்குகளுக்கு மேல் ஒருவர் மீது பதிவு செய்தால் குண்டாஸில் போடலாம். இப்போதெல்லாம் ஒரு வழக்கு போடப்பட்டால் கூட குண்டாஸில் போடலாமாம்.

- ப்ரியன்