Tuesday, February 28, 2012

அருள் மழை -- 43

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் கூறுகிறார்…..

ஸ்ரீ பெரியவா சரணம்
.
மணக்கால் நாராயண சாஸ்திரிகள் பாலசுப்ரமணியம் --- மஸ்கட்

எங்கள் தகப்பனார் ஸ்ரீ மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி யாக ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யம் செய்து கொண்டு தன்னை விஜய தசமி அன்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீ சரணம் அடைந்து கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். ்.

ஒரு சமயம் சுமார் 48 வருஷம் முன்பு வியாச பூஜா முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம் ஸ்ரீ பெரியவா இந்த முறை நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார். எங்கள் தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் ஸ்ரீ பெரியவா நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார். இதே போல மூன்று முறை சொல்லிவிட்டு ஸ்ரீ பெரியவா உள்ளே சென்று விட்டார்.

அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி) இடம் ஸ்ரீ பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார். எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா நீ ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.

அப்பா ஸ்ரீ பெரியவாளிடம் ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி 'அப்படியா' என்று கேட்டாராம். ஸ்ரீ பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீ பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.

ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்துகொள்ளும் பாக்கியம் ஸ்ரீ பெரியவா கொடுத்தார்.

இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா

இது போல அந்த மகான் நடத்திகொண்டிருக்கும் அற்புத லீலைகள் பல,

இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது

ரிலையன்ஸ் கே.ஜி.6 பின்னணி?

ரிலையன்ஸ் நிறுவனம்தான் சர்ச்சைகளை உருவாக்குகிறதா அல்லது சர்ச்சைகள்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறதா என்கிற கேள்விக்கு பதிலே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் சர்ச்சை இயற்கை எரிவாயு வடிவத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த சர்ச்சையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா - கோதாவரி 6-வது படுகையில் ஒரு நாளைக்கு 80 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டர் (எம்.எம்.எஸ்.சி.எம்.டி.) இயற்கை எரிவாயு எடுப்பதற்கான உரிமையை மத்திய அரசிடமிருந்து பெற்றது ரிலையன்ஸ் நிறுவனம்.இப்பகுதியில் மொத்தம் 31 கிணறுகள் தோண்டலாம். ஆனால், இதுவரை 22 கிணறுகளை மட்டுமே தோண்டி இருக்கிறது. அவற்றுள், 18 கிணறுகளில் இருந்துதான் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது.ஆரம்பத்தில் இந்த கிணறுகளிலிருந்து 70 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இயற்கை எரிவாயுவை எடுத்தது. ஆனால், இன்றைக்கு வெறும் 37 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இயற்கை எரிவாயுவை மட்டுமே எடுக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் இது 22 எம்.எம்.எஸ்.சி.எம்.டி.யாக குறையலாம் என்கிறது ரிலையன்ஸ்.எந்த நிறுவனமாக இருந்தாலும் காலம் செல்லச் செல்ல உற்பத்தியை அதிகரிப்பதே வழக்கம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டே போகிறதே, என்ன காரணம்? எரிவாயு கிடைக்கவில்லையா அல்லது அதை எடுக்க ரிலையன்ஸுக்கு மனசில்லையா? இந்த கேள்வியை பலரும் கேட்கத் தொடங்கியதே சர்ச்சையின் ஆரம்பம்.

''இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்தது மிகவும் சீரியஸான பிரச்னை. இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்'' என்று சமீபத்தில் எச்சரித்திருக்கிறார் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் புவியியல் காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியவில்லை என்கிறது ரிலையன்ஸ். எல்லா கிணறுகளையும் தோண்டாமல் உற்பத்தி குறைவதாகச் சொல்வது சரியில்லை என்கிறது மத்திய அரசு.இயற்கை எரிவாயுவிற்கு தற்போது தரப்படும் விலை (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (MMBTU) 4.2 டாலர். 'இந்த விலை எங்களுக்குப் போதாது’ என்று மத்திய அரசிடம் கேட்டது ரிலையன்ஸ். ஆனால், 2014-ம் ஆண்டு வரைக்கும் விலையை உயர்த்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி ரிலையன்ஸின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு உற்பத்தியை மேலும் குறைத்திருக்கிறது ரிலையன்ஸ்.

இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

'தற்போது உலகச் சந்தையில் மூன்று முதல் நான்கு டாலருக்கு மேல் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு விற்கப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸுக்கு கிடைக்கும் தொகையோ 4.2 டாலர். தற்போதைய நிலையிலே மார்க்கெட் விலையைவிட அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இருந்தும், இன்னும் அதிக விலை வேண்டும் என்று சொல்லி ரிலையன்ஸ் உற்பத்தியைக் குறைக்கக்கூட செய்யலாம்.இயற்கை எரிவாயுவை சரியாக பயன்படுத்தினால் மின்தட்டுப்பாடு உள்பட பல பிரச்னைகளுக்கு நம்மால் எளிதாக தீர்வுகாண முடியும். மத்திய அரசு இது தொடர்பாக கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவது நாட்டுக்கு நல்லது.

அருள் மழை -- 42


*நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும் என்றுநினைப்பது உத்தமமான எண்ணம்.
*அதே நேரம், ஆசையை வளர்த்துக் கொண்டே போனால் ஆத்மஅபிவிருத்தி என்பதே இல்லாமல் போய்விடும். சவுக்கியம் தேடிஅலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
*எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவுஎளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயம்.வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்குஎளியவீடு இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும்பெறவேண்டும். இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு மேல் தேவைஎன்று பறக்க வேண்டியதில்லை.
*நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்குச்செய்யும் மிகப் பெரிய பரோபகாரம். கிணற்றில் நீர் நிரம்பிய குடத்தைஇழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்திற்குமேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை நம்மால் உணரமுடிகிறது.
*எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை தண்ணீரில் போட்டுஇழுப்பது வழக்கம். அதேபோல, நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்கஞானம் என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும். அப்போதுதுன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத் தொடுவதேஇல்லை. நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரமலேசாகிவிடும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிசங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!


பவர்கட், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வாக மாறி இருக்கின்றன பசுமை வீடுகள். பசுமை வீடுகளா.. அப்படி என்றால்? அதனால் என்ன பயன்? சாதாரண வீடுகளுக்கும் பசுமை வீடுகளுக்கும் என்ன வித்தியாசம்?

இயற்கை வீடு!

''இயற்கைக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சூரிய வெளிச்சம், மழை நீர் மற்றும் காற்று போன்ற விஷயங்களை அதிகமாகப் பயன்படுத்திக் கட்டப்படும் வீடுகளே பசுமை வீடுகள். சாதாரண வீடுகளைக் காட்டிலும், பசுமை வீடு கட்ட கொஞ்சம் அதிகம் செலவாகும். ஆனால், ஓரிரு வருடங்களில் வீடு கட்ட ஆன அதிக செலவை நம்மால் திரும்ப எடுத்துவிட முடியும்'' .

நோ பவர் கட்!

'சூரிய வெளிச்சம், காற்று என இயற்கை நமக்கு அள்ளித் தருவதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஃபேன், ஏ.சி. லைட்னு தேவையில்லாமல் மின்சக்தியை வீணடிக்கிறோம். இப்படி இல்லாமல் சூரிய வெளிச்சம் வீடு முழுக்க கிடைக்கிற மாதிரி வீடுகளைக் கட்ட வேண்டும். வீடு கட்டும்போது எல்லா பக்கமும் சுவர்களால் அடைக்காமல் அதிகமான ஜன்னல்களுடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செங்கல்லுக்கும் நடுவில் இடைவெளி விட்டு கட்டுவதன் மூலம் வீடு குளுகுளுவென்று இருக்கும். வெளிச்சமும் வீடு முழுக்க பரவும். இதனால் பகல் நேரங்களில் விளக்கோ, ஃபேனோ மற்றும் ஏ.சி.யோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

தண்ணீர் பஞ்சமிருக்காது!

இன்றைக்கு தண்ணீருக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கிறோம். பசுமை வீடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய மழைநீரை மாடியில் ஒரு தொட்டி கட்டி சேமித்து வைத்து, அதை சுத்தப்படுத்தி குடிக்கவும், நம் வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

கரன்ட் பில் ரூ.௭௦

இந்தியா முழுக்க பல பசுமைக் கட்டடங்கள் இருந்தாலும், இரண்டே இரண்டு வீடுகளை மட்டும் பசுமை வீடுகளாக அறிவித்து, சான்றிதழ் அளித்திருக்கிறது ஹைதராபாத்தில் உள்ள 'இந்தியன் கிரீன் கவுன்சில்’. அந்த வீடுகளில் ஒன்று சென்னை, மடிப்பாக்கத்தில் இருக்கிறது.

தீபா
இ.என்.த்ரீ கன்சல்டன்ட்

விகடன்

வாட்டத்தில் மின் வாரியம்


இன்னமும் மூன்று மாதத்தில் நிலைமை சரியாகும்" என்று சென்ற மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இப்போது மின்சாரத் தட்டுப்பாடு ஜூன், ஜூலையில் நிலைமை ஓரளவு சீரடையும். 2013ல் தமிழ்நாடு முற்றிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்" என்று சொல்லிவிட்டார். ஆக, தொடருது ஷாக்... என்னதான் கோளாறு? எங்கேதான் கோளாறு? தமிழ்நாட்டின் மின் உற்பத்தியின் நிறுவுதிறன் 10,300 மெகாவாட். ஆனால் உற்பத்தி ஆவதோ சுமார் 8000 மெகாவாட்தான். நமது தமிழகத்தின் தேவை 10,500 மெகா வாட்டிலிருந்து, 11,500 மெகாவாட் வரை போகும். கோடையின்போது, தேவை இன்னமும் ஆயிரம் மெகாவாட் உயர்ந்து 12,500 வரை கூட போகும். எனவே, நமது தினசரி பற்றாக்குறை 3000 முதல் 4000 மெகாவாட் வரை. இதை எப்படி ஈடு செய்கிறார்கள். காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம், வெளி மாநில மின்வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரம், இதர மின் கட்டுப்பாட்டு முறைகளாலும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றால் நிதி நெருக்கடி காரணமாக, பல நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் பாக்கி வைத் திருப்பதால் வேண்டிய இடத்தில் மின்சாரம் வாங்க முடிய வில்லை. தவிர, தினசரி தேவை எகிறிக்கொண்டே போக... விளைவு பவர்கட்.
2008ல் தொடங்கப்பட்ட திட்டங்களான வல்லூர் மற்றும் வடசென்னை விஸ்தரிப்பு மின் நிலையங்கள் 2011ல் செயல்பட்டிருக்க வேண்டும். சரியான முனைப்பு காட்டாததால் உற்பத்தி தள்ளிப்போகிறது. வரும் ஜூனில் சுமார் 1000 மெகாவாட் இந்த இரு மின் நிலையங்களிலிருந்து எதிர் பார்க்கலாம். ஏப்ரல் 10 முதல் காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட் கிடைக்கக்கூடும். இதற்குள் கூடங்குளம் இயங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூடுதலாக 800 மெகாவாட் கிடைக்கும். தமிழகத்தின் தற்போதைய மோசமான மின் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக, கூடங்குளத்தை இயக்க, தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஏப்ரல், மே, ஜூனில் மேற்கண்ட வகையில் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், நீர் மின்சாரம் மிகக் குறைந்த அளவே கிடைக்கும் என்பது மற்றொரு கவலை. நான்கு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக முழு அளவில் உற்பத்தி ஆகவில்லை. புதிய மின் நிலையங்களில், திட்டமிட்டபடி உற்பத்தியை முழு அளவில் உறுதி செய்ய, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு அவசியம். முதல்வரே நேரிடையாக விஸிட் செய்து வேகப்படுத்தலாம். பவர்கட்டை சீரமைக்கும் விதமாக உயர் அழுத்த மின் சந்தாதாரர்களுக்கு ‘பவர் விடுமுறை’ விடுவதுகூட பிரச்னையைக் குறைக்காது. ஏனென்றால் இரண்டுகோடி சந்தாதாரர்களில் சுமார் 5000 பேர்தான் உயர் அழுத்த மின் பயன்பாட்டாளர்கள்.
‘கோமா’ நிலையில் இருக்கிறது மின்வாரியம். வரவு 23000 கோடி என்றால், செலவு 33000 கோடி. பற்றாக்குறை 10000 கோடி. செலவில் 20000 கோடி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே போகிறது. இது தவிர இலவச மின்சாரத்தால் வருடத்துக்கு 10000 கோடிக்கு மேல் இழப்பு.அரசாங்கம் சில கசப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக யாரும் எதிர்க்கக் கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலமும் இலவச மின்சாரம் கொடுப்பதில்லை. மின் உற்பத்தியை அதிகரித்து, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினால், கட்டணம் உயர்ந்தால்கூட எதிர்ப்பு இருக்காது. விவசாயத்துக்கு தனி டிரான்ஸ்பார்மர், லைன் என்று குஜராத் பாணியில் செய்யலாம். மின் இழப்பை (line loss) குறைத்தால் உற்பத்தி கணிசமாகக் கூடும். தவிர மின்வாரியம் பற்றிய முழு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அரசின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைக்க வசதியாக இருக்கும்.
‘கருத்துக் களம்’ ஆசிரியர் தங்க துரை.
தி.மு.க. வின் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச்செயலாளர் ரத்தின சபாபதி.

Saturday, February 25, 2012

எனது இந்தியா! (உப்பு வேலி ) - எஸ். ராமகிருஷ்ணன்....


பெர்லின் சுவரைவிட, சீனப் பெருஞ்சுவரைவிட மிகப் பெரிய முள் வேலி ஒன்று இந்தியாவின் குறுக்காக அமைக்கப்பட்ட கதை அறிவீர்களா? 4,000 கி.மீ நீளமும் 12 அடி உயரமும் கொண்டது அந்த வேலி. வரலாற்றின் இருட்டுக்குள் புதையுண்டு போயிருந்த இந்தியாவின் நீண்ட முள் வேலி ஒன்று சமீபத்தில் உலகின் கவனத்துக்குள் வந்திருக்கிறது. இது தெரியாது. The Great Hedge of India என்ற, ராய் மார்க்ஸ்ஹாமின் மகத்தான 'சுங்க வேலி' எனும் புத்தகம் இந்திய வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்று.இந்தியாவை ஆண்ட வெள்ளை அரசின் கொடுங்கோன்மைக்கு சாட்சியாக உள்ள இந்த மாபெரும் சுங்க வேலியைப் பற்றி, 2001-ம் ராய் மார்க்ஸ்ஹாம் ஆராய்ந்து எழுதும் வரை, இந்திய வரலாற்றியல் அறிஞர்களுக்கேகூட காந்தி ஏன் உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார் என்பதற்கு இன்று வரை எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த ஒரு புத்தகம் காந்தியின் செயல்பாட்டுக்குப் பின்னுள்ள வரலாற்றுக் காரணத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது.பிரிட்டிஷ்காரர்களால் இந்தியா எந்த அளவுக்குச் சுரண்டப்பட்டது என்பதற்கு, இந்த நூல் மறுக்க முடியாத சாட்சி. ஒரிசாவில் தொடங்கி இமயமலை வரை நீண்டு சென்ற இந்த முள் தடுப்பு வேலி எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு உப்பு கொண்டு செல்லப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பு வேலிதான் இது. இப்படி, வேலி அமைத்து உப்பு வணிகத்தை தடுக்கக் காரணம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சி... உப்புக்கு விதித்திருந்த வரி.

வங்காளத்தைத் தனது பிடியில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, உப்புக்கு வரி விதித்தால், கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டது. சந்திரகுப்தர் காலத்திலேயே உப்புக்கு வரி விதிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது. கௌடில் யரின் அர்த்தசாஸ்திரம், உப்புக்குத் தனி வரி விதிக்க வேண்டும் என்பதையும், உப்பு வணிகத்தைக் கண்காணிக்கத் தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் தொ.பரமசிவன், 'உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். நெல்லின் நேரே வெண் கல் உப்பு என, உப்பு விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள் என்கிறார்.

அதுபோலவே, சென்னை ராஜதானியின் உப்பு கமிஷன் ஆண்டு அறிக்கை வாசிக்கையில்,மொகலாயர்கள் காலத்தில் உப்புக்கு வரி விதிக்கும் முறை இருந்தது தெரிய வருகிறது. ஆனால், அந்த வரி மிகச் சொற்பமானது. ஒரு மூட்டை உப்புக்கு இந்து வணிகராக இருந்தால் 5 சதவீதம் வரியும், இஸ்லாமியராக இருந்தால் 2.5 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.756-ல் நவாப்பை தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்ட காலனிய அரசு, உப்பு மீதான தங்களது ஏகபோக உரிமையைக் கைப்பற்ற முயற்சித்தது. குறிப் பாக, பிளாசி யுத்தத்துக்குப் பிறகு, வங்காளத்தில் உள்ள மொத்த உப்பு வணிகத்தையும் கிழக்கிந்தியக் கம்பெனி தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தது. இந்தியாவின் மையப் பகுதியான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள், இமயமலை சார்ந்த நிலவெளி ஆகிய அனைத்துப் பகுதிகளும் தங்களது உப்புத் தேவைக்கு, தென்பகுதி கடலோரங்களையே நம்பி இருந்தன. இந்தியாவில் உப்பு அதிகம் விளைவது குஜராத்தில். இன்றும் அதுதான் உப்பு விளைச்சலில் முதல் இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான வட மாநிலங்களுக்கு குஜராத்தில் இருந்தே உப்பு சென்றது. உப்பு வணிகம் குஜராத்தில் பராம் பரியமாக நடைபெற்று வருகிறது. உப்பு காய்ச்சப்பட்ட பாரம்பரிய இடங்களில் ஒன்றுதான் காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்திய தண்டி. தண்டி என்பது கலங்கரை விளக்கத்தைக் குறிக்கும் சொல். இது ஒரு பாரம்பரிய உப்பளப் பகுதி. அது போல, குஜராத்தில் நிறைய உப்பளங்கள் இருக் கின்றன. குஜராத் போலவே ஒரிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் உப்பு விளைச்சல் அதிகம். வங்காளத்தில் கிடைக்கும் உப்பு, நெருப்பில் காய்ச்சி எடுக்கப்படுவது. அது தரமற்றது என்று அந்த உப்புக்கு மாற்றாக வங்காளிகள் சூரிய ஒளியில் விளைந்த ஒரிசா உப்பையே விலைக்கு வாங்கிப் பயன்படுத்தினார்கள்.வங்காளத்தை நிர்வகித்து வந்த வாரன் ஹேஸ்டிங், ஒரிசாவில் இருந்து வங்கத்துக்குக் கொண்டுவரப்படும் உப்புக்கு கூடுதல் வரி விதித்ததுடன், அரசிடம் மட்டுமே உப்பை விற்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையையும் விதித்தார். அதாவது, ஒரு மூட்டை உப்புக்கு இரண்டு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில், ஒன்றரை ரூபாயை வரியாக கிழக்கிந்தியக் கம்பெனி பிடுங்கிக்கொண்டது. இதனால், உப்பு காய்ச்சுபவர்களும் உப்பு வாங்குபவர்களும் பாதிக்கப் பட்டார்கள்.உப்பளங்களைக் கண்காணிக்கவும் அரசிடம் மட்டுமே உப்பு விற்பனை செய்ய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தவும், சால்ட் இன்ஸ்பெக் டர்கள் நியமிக்கப்பட்டனர். கூடுதலாக உப்பை அரசுக்கு வாங்கித் தரும் துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வழியே, கம்பெனி லட்சக் கணக்கில் பணத்தை வாரிக் குவிக்கத் தொடங்கியது. 1784-85ம் ஆண்டுக்கான உப்பு வரியில் கிடைத்த வருமானம் 62,57,470 ரூபாய்.இந்தக் கொள்ளையால் அதிக ஆதாயம் அடைந்த கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியா முழுவதும் உப்பு வணிகம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்காக, உப்பு கொண்டுசெல்லப்படும் வழிகள் அடையாளம் காணப்பட்டன. அதன் ஊடாகத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே சுங்கச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, உப்பு கொண்டுசெல்வது கண்காணிக்கப்பட்டது.

உப்பு, இன்றியமையாத பொருள் என்ப தால் உழைக்கும் மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாவது உப்பை வாங்குவார்கள் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராசை பலிக்கத் தொடங்கியது. ஒரு தொழிலாளி உப்புக்காக மாதந்தோறும் இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. அந்தப் பணம் அவனது ஒரு மாத சம்பளத்தைவிட அதிகம். 50 பைசா பெறுமான உப்பு, ஒரு ரூபாய் வரியோடு சேர்த்து விற்கப்பட்ட கொடுமையை வெள்ளை அரசு நடைமுறைப்படுத்தியது.உப்பு கொண்டுசெல்வதைத் தடுக்கும் நடவடிக் கைகளுக்கு எதிராக நாடோடி இன மக்களான உப்புக் குறவர்களும், தெலுங்கு பேசும் எருகுலரும், கொரச்சர்களும் உப்பைக் கடத்தி விற்க முற்பட்டார்கள். அதை, கடத்தல் என்று சொல்வதுகூட தவறுதான். தங்கள் பாரம்பரியமான தொழிலைத் தடையை மீறி செய்தார்கள் என்பதே சரி.உப்பு வணிகம் செய்வது தங்களது வேலை, அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று சவால்விட்ட நாடோடி இன மக்களை ஒடுக்கு வதற்காக, அந்த இனத்தையே குற்றப்பரம்பரை என்று அடையாளப்படுத்தி, கைது செய்து சிறையில் அடைக்க அரசு முயற்சி செய்தது.தலைச் சுமை அளவு உப்பு விற்ற உப்புக் குறவர்கள் ஒரு பக்கம் என்றால், உப்பளத்தில் இருந்து நேரடி யாக உப்பு வாங்கி, வண்டிகளிலும் கோவேறுக் கழுதைகளிலும் ஏற்றிச் சென்று, லம்பாடிகளும் பஞ்ஞாராக்களும் காலனியக் கட்டுப்பாடுகளை மீறி உப்பைப் பிற மாகாணங்களில் விற்றார்கள். பண்டமாற்று செய்துகொண்டார்கள். அவர்களைத் தடுக்க வன்முறையை ஏவிவிட்டதோடு, அவர்களை திருடர்கள் எனவும் குற்றம் சாட்டியது பிரிட்டிஷ் அரசு.உப்பு வணிகத்தைத் தங்கள் கைகளுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால், மாபெரும் முள் தடுப்பு வேலி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அப்போதுதான் தீட்டப்பட்டது. இந்த வேலி, ஒரிசாவில் தொடங்கி இமயமலையின் நேபாள எல்லை வரை நீண்டு செல்வதற்காக வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. 1823-ல் ஆக்ராவின் சுங்க வரித் துறை இயக்குநர் ஜார்ஜ் சாண்டர்ஸ், இதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஒரிசாவின் சோனப்பூரில் தொடங்கிய இந்தத் தடுப்பு வேலி, மெள்ள நீண்டு கங்கை, யமுனை நதிக் கரைகளைக் கடந்து சென்று அலகாபாத் வரை போடப்பட்டது. அந்த நாட்களில் இந்த வேலி மூங்கில் தடுப்பு ஒன்றால் அமைக்கப்பட்டு இருந்தது. அதைக் கடந்து செல்ல முடியாதபடி பெரும் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. 1834-ல் சுங்கவரித்துறை இயக்குநராக வந்த ஜி.எச்.ஸ்மித், இந்தத் தடுப்பு வேலியை அலகாபாத்தில் இருந்து நேபாளம் வரை நீட்டிக்கும் பணியைச் செய்தார்.

விகடன்

‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி? - ஓ பக்கங்கள்,ஞாநி

மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,


வணக்கம். அன்புள்ள என்று விளித்து எழுதத்தான் ஆசை. ஆனால், மெய்யாகவே உங்களுக்கு தமிழக மக்கள் மீது அன்பிருக்கிறதா என்பதை, இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் உங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது. முதல் கடிதம் பகிரங்கமாக இதே ‘ஓ பக்கங்களி’ல் செப்டம்பர் 24, 2011 அன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்காமல் உலையைத் தொடங்கக் கூடாது என்று உங்கள் அமைச்சரவை தீர்மானம் போட்டு பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைப் பாராட்டியிருந்தேன். அணு உலை எதிர்ப்பில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக் கொண்டேன்.அடுத்த இரு கடிதங்களும் பகிரங்க கடிதங்கள் அல்ல. முறையாக உங்கள் அலுவலகத்தில் அளிக்கப்பட்டவை. ஜூலை 11,2011 அன்று அனுப்பிய கடிதத்தில் இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியான சூளைமேடு நகராட்சிப் பள்ளியில் அந்தத் தொழில் பாடப் பிரிவு நிறுத்தப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதே, அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்ததும், உங்களுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்தது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன? 26.10.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது தான் காரணமாம்.


இதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ஆம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம்.இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும்? உங்கள் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை உங்கள் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால், என் கடிதத்தை உங்கள் அலுவலகம் மாநகராட்சிக்கு அனுப்பியதும் அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சரான நீங்கள் என் கடிதத்தைப் பார்க்கவே இல்லை என்று தோன்றுகிறது.எனவேதான் உங்களுக்கு நான் அனுப்பிய மூன்றாவது கடிதத்தை, கோட்டையில் உங்கள் அலுவலகத்துக்கே வந்து உரிய உயர் அதிகாரியிடம் நேரில் கொடுத்தேன். பிப்ரவரி 7ந் தேதி கொடுக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு, ஒரு வாரம் கழித்து நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பியும் இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை. இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது. நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம். கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை, தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரில் உங்களுக்குத் தகுந்த காரணங்களுடன் விளக்கித் தெரிவிக்க சுமார் 20 நிமிட பவர் பாய்ண்ட் விளக்கத்துடன் உங்களைச் சந்திக்க விரும்பினோம். ஏனோ நீங்கள் நேரம் ஒதுக்கவில்லை. தினசரி கட்சித் தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினரின் திருமண நாள், பிறந்த நாட்களுக்கெல்லாம் வாழ்த்து பெற உங்களைச் சந்திக்க முடிகிறது. எனவே தமிழகத்தின் வாழ்வா, சாவா பிரச்னை பற்றி எடுத்துரைக்க விரும்பும் எழுத்தாளர்களைச் சந்திக்க முடியாத அளவு உங்களுக்கு வேலைச் சுமை இருக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.


சந்திப்பதைவிடச் சிந்திப்பதுதான் முக்கியம். எங்கள் கடிதத்துடன், ஏன் அணு உலை கூடாது என்பதை விளக்கும் 48 பக்க கேள்வி பதில் தொகுப்பையும் கொடுத்திருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் சிந்தித்திருந்தாலே போதுமானது. அணு உலைகள் பாதுகாப்பானவை, அணுமின்சாரம் விலை மலிவானது, அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை, அணுமின்சாரம் தமிழக மின் பஞ்சத்தைத் தீர்த்துவிடும் என்ற நான்கு பொய்களை மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வருகின்றன. இவை நான்குமே பொய்கள்தான் என்பதை போதுமான புள்ளிவிவரங்களுடன் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் விளக்கியிருக்கிறேன். கூடங்குளம் அணு உலையைத் தொடங்கக் கூடாது என்று போராடும் மக்கள் பக்கம் நீங்கள் இறுதி வரை நிற்பீர்கள் என்று கடந்த நான்கு மாதங்களாக இருந்து வந்த நம்பிக்கை அண்மையில் எனக்குக் குறைந்துவிட்டது. காரணங்கள் உண்டு. மத்திய அரசின் நிபுணர் குழு மக்களைச் சந்திக்க மறுத்தது. போராடுவோர் சார்பில் அனுப்ப முன்வந்த விஞ்ஞானிகளையும் சந்திக்க மறுத்தது. இந்த நிலையில் நீங்கள் ஒரு மாநில அரசுக் குழுவை நியமித்தீர்கள். யாரை? கூடங்குளம் உலைப்பகுதியில் மக்களே வாழவில்லை என்று உலைக்கான இடம் தேடிய போதே ஒரு சார்பாக அடித்துப் பேசிய அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், அணுசக்தி துறையின் நிதி உதவியுடன் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவர். எப்படி விளங்கும்?! இந்தக் குழுவும் மக் களைச் சந்திக்க மறுத்தது. மக்கள் சார்பான விஞ்ஞானிகளைச் சந்திக்கவும் மறுத்தது. இந்தக் கடிதத்தை நீங்கள் (படித்தால்...) படிக்கிற வேளையில் அந்தக் குழு உலை பாதுகாப்பானது என்று அறிக்கையே உங்களிடம் கொடுத்துவிட்டிருக்கக்கூடும். அந்தக் குழுவின் தலைவர் இனியன் என்பவர் என்று உங்கள் அரசுதான் சொல்கிறதே ஒழிய மத்திய காங்கிரஸ் அமைச்சரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு செய்துவருபவருமான நாராயணசாமி, அந்தக் குழுவை சீனிவாசன் குழு, சீனிவாசன் தலைமையிலான குழு என்றேதான் டி.வி.பேட்டிகளில் சொல்லிவருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போக்குவேன் என்று பிரசாரம் செய்துதான் ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் மின்வெட்டு வீராசாமி காலத்தை விட அதிகமாக இருக்கிறது? காரணம் இந்த மின்வெட்டு செயற்கையானது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மத்திய அரசால் நிர்ப்பந்திக்கப்பட்ட மின்வெட்டு என்று முடிவுக்கு வரத் தோன்றுகிறது. பழையது வீராசாமி பவர் கட். இது நாராயணசாமி பவர் கட். கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏற்க வைப்பதற்காகச் செயற்கையாக மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நம்புவதற்கு நிறையவே இடம் இருக்கிறது. காரணம், மாநிலத் தொகுப்புக்குத் தர வேண்டிய அளவில் ஆயிரம் மெகாவாட்டைக் குறைத்தே மத்திய அரசு கொடுத்து வருகிறது. அரசுக்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்லும் நான்கு தனியார் நிறுவனங்களை நீங்கள் நினைத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் நாட்டுடமையாக்க முடியாதா? அல்லது அவர்களுக்குத் தரவேண்டிய பண பாக்கியை செலுத்த, மேற்கு வங்க மம்தா அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி கொடுத்தது போல இங்கேயும் கேட்டு வாங்க முடியாதா?


கூடங்குளம் இயங்கினால்கூட கிடைக்கப் போவது வெறும் 400 மெகாவாட்தானே. தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க அது உதவவே உதவாது. நமது மின்பற்றாக்குறையைத் தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ள வேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்குச் சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல். குழல்பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகுமே. மழை நீர் சேகரிப்பு போல ஒரே ஆணையில் இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிவிட முடியும். தொலை நோக்கில் பார்க்கும்போது மின் கடத்து வதில் விரயமாகும் 40 சதவிகிதத்தைப் பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்குத் தேவைப்படாது. உங்கள் நண்பர் நரேந்திர மோடி இந்த வாரம் கூட அவர் மாநிலத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆறே மாதங்களில் 100 மெகாவாட் அவர் இலக்கு.என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குக்கை நினைவுகூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச்சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம்.

ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர்.

மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள்.

அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.

அன்புள்ள
ஞாநி

அருள் மழை ---- 41


திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை.வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது.காோம். "ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?" என்றுபோய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!
இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப் பட்டது.அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து,"குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள்.சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச் சொன்னார்!" என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. "எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக்குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?"என்பது புதிராக இருந்தது.

உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே?அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார்.
இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்குசிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய் விட்டான்.ஆச்சார்யரோ, "முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?"என்று கேட்டார். "இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்." என்கிறான் குழந்தை.இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!
எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்? "இது என்ன தேறுமா...தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?"என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமியினĮ 1; அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார்.அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும்சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்.
"வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு.

இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலை யேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பெசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க ஆவல் கொண்ட ஜோசியர்,அங்கிருந்த சுவாமிநாதனிடம்,"போ,கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார். அலம்பிக் கொண்டு வந்தவனை, நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்....துடைத்தார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

"விடுங்கோ மாமா!" என்ற சிறுவனின் குரலோ, "என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு...விடு" என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழமக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்கள என்று நினைத்தார் போலும்.

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர்என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த வெங்கட் ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்து விட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!.
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி டைப் அடிக்கப்பட்டது]