Thursday, March 29, 2012

ஒரே நாளில் 5.26 கோடி ஏழை இந்தியர்களை பணக்காரர்களாக மாற்றிய மன்மோகன்சிங் அரசு.

ழைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியாத அரசால் வறுமையை ஒழிக்க வேறு என்னதான் செய்ய முடியும்? எண்களை வைத்து விளையாட்டுக் காட்டி ஊரை மயக்க வேண்டியதுதான். ஒரே நாளில் 5.26 கோடி ஏழை இந்தியர்களை அப்படித்தான் 'பணக்காரர்கள்’ ஆக்கி இருக்கிறது மன்மோகன் சிங் அரசு.

மத்தியத் திட்டக் குழுவின் புதிய வரையறைப்​படி, ஒரு நாளைக்கு 28.35 (மாதம் 859.60) சம்பாதிக்கும் நகர்ப்புற இந்தியர்களும் 22.42 (மாதம் 672.80) சம்பாதிக்கும் கிராமவாசிகளும் இனி ஏழைகள் அல்ல. அவர்கள், வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டவர்கள். இந்தப் புதிய வரையறைப்படி, இந்தியாவில் பரம ஏழைகளின் எண்ணிக்கை 35.46 கோடி. 2004-05 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 40.72 கோடியாக இருந்தது. 2009-10ல் இது 35.46 கோடியாகக் குறைந்து விட்டதாம்.

எப்படி இருக்கிறது இந்த முன்னேற்றம்?

ஒரு வேளைக்கு வயிறு நிரம்பச் சாப்பிடவே 28 போதாது. கூவம் கரையோரக் குடிசையில் வாழ்ந்தால்கூட மாதம் 500 வாடகை கொடுக்க வேண்டுமே. மாதம்

860-க்குள் யாரால் வாழ முடியும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், இந்த 'வெற்றி’க்குக் காரணம் அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்தான் என்றும் அறிவித்திருக்கிறது அரசு!

இந்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, பலருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று உண்டு. மாறி வரும் பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உலக வங்கி சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கான அளவை 2008-ல் மாற்றி அமைத்தது. அதாவது, அதுவரை ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயுடன் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் என்று இருந்த அளவு கோலை 1.25 டாலர் என்று உயர்த்தியது (இந்திய மதிப்பில் இன்றைக்கு 63). ஓரளவுக்கு நியாயமான அளவுகோல் இது. இந்தக் கணக்குப்படி இந்தியாவில் வாழும் பரம ஏழைகளின் எண்ணிக்கை 45.58 கோடி. கிட்டத்தட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் பரம ஏழை என்ற அவமானகரமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் உடனே, 'வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் பிரதானக் கவனம் செலுத்துவோம்’ என்றார். அவருடைய வார்த் தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோ என்னவோ, அவருடைய அரசு இப்போது குறுக்கு வழியில் ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துச் சொல்கிறது.

அரசின் கணக்கு எப்போதுமே இப்படித்தானே, இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்று யாரேனும் கேட்கலாம். எப்போதும் அப்படித்தான்; ஆனால், இனி அப்படி இருக்காது. இதன் பின் னணியில், அரசுக்குப் பெரிய ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன. மக்களுக்கான மானியங்களைக் குறை ப்பது அவற்றில் முக்கியமானது. அரிசி, கோதுமை, பெட்ரோல், டீசல், காஸ், மண்​ணெண்​ணெய், உரம் போன்ற ஏராளமான பொருட்களுக்கான மானியங்​களைக் குறைக்கும் முடிவை அரசு எடுத்திருக்கிறது. இப்போது ஆண்டுக்கு 2.08 லட்சம் கோடி அளவுக்கு இந்த மானியங்களுக்காக செலவிட்டுவரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இந்தச் செலவை வெகுவாகக் குறைக்க அரசு திட்ட மிட்டு உள்ளது (இதே அரசுதான் பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4.87 லட்சம் கோடிகளை மானியமாகப் படி அளக்கிறது). இதன் ஒரு பகுதியாக, மானியத்தை நேரடியாக மக்களிடமே ரொக்கமாக அளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல்கட்டமாக 50 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 'ஆதார்’ அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, மானியத் தொகை மக்களிடம் அளிக்கப்படும் என்பதால், எப்போதும்போல் இனி எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள், ஒரே விலையில் காஸ் கிடைக்காது.

இத்தகைய சூழலில், ஏழைகளை நேர்மையான முறையில் வரையறுப்பது முக்கியமானது. அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது. ஆனால் அரசுக் கணக்கில் எழுதிக்காட்டுவதன் மூலம் வறுமையை ஒழிக்க நினைக்கிறது. உண்மையில் அரசின் திட்டம் வறுமையை ஒழிப்பதா, இல்லை... ஏழைகளையே ஒழிப்பதா?

ஆகஸ்ட் வரை ஜாமீன் இல்லை. கொந்தளிப்பில் சசிகலா குடும்பம்.


No bail till August to Sasikala group


சிறைக் கம்பிகளுக்குள் சிக்கிக்​கிடக்கும் சசிகலா கோஷ்டியின் முக்கியப் புள்ளிகள், மகா கொந்த​ளிப்பில் இருக்கிறார்கள். 'எப்போது ஜாமீன் கிடைக்கும்?' என்பதுதான் அவர்களின் ஒரே கேள்வி.

கோவை சிறையில் ராவணன், புழல் சிறையில் மிடாஸ் மோகன், திருச்சி சிறையில் எம்.நடராஜன், திவாகரன். இவர்களை அடுத்து இப்போது, தஞ்சாவூர் மகாதேவன் போலீஸாரால் தீவிரமாகத் தேடப்​பட்டு வருகிறார்.

பெங்களூரு செக்!

இந்த நிலையில், பெங்களூரு கோர்ட்டில் சசிகலாவிடம் நடந்துவரும் விசாரணைப் படலம், கிட்டத்தட்ட முக்கால்வாசியைத் தொட்டு​விட்டது. அடுத்து சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைப் போக்கைப் பார்த்தால், மூவரிடமும் விசாரணை முடிவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம். மூவரின் விசாரணையும் முடியும்வரை எந்தக் கார ணம் கொண்டும் சசிகலா கோஷ்டியினர் வெளியே வந்து விடக் கூடாது என்பதில் மேலிடம் உறுதியாக இருக்கிறதாம். அதனால், ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்கும் சூழல் ஏற்பட்டாலே, அதற்குள் அடுத்த வழக்கைப் போட்டு முடக்கி வருகிறார்கள்.

இதுபற்றி, பெங்களூரூவில் உள்ள போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ''ஒரே கோணத்தில் வழக்கு விசாரணை செல்லவேண்டும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் சசிகலா குடும்பத்தினர், இந்த வழக்கு முடிவதற்குள்ளாகவே அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆள்ஆளுக்கு எதையாவது சொல்லி சசிகலாவைக் குழப்பிவிடக்கூடாது என்பதற்​காகத்தான் சிறையில் வைத்திருக்கிறோம். ஜெய லலிதா வழக்கு நல்லபடியாக(?) முடிந்ததும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரலாம். அதுவரை ஜெயில்வாசம்தான்'' என்கிறார்.

விளார் டீம்!

நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோரை எந்தக் காரணம்கொண்டும் வெளியேவிடக் கூடாது என்பதில் போலீஸ் உறுதியாக இருப்பதுபோலவே, இவர்கள் மூவரையும் விரைவில் வெளியே எடுக்க வேண்டும் என்றும் ஒரு குரூப் தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக உழைக்கும் மூவர்களின் விசுவாசிகளும், 'விளார் டீம்' என்ற பெயரில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். கட்சியிலும் அரசாங்கத்திலும் பொறுப்பில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் யாரையும் இந்த விளார் டீம் நேரில் சந்திப்பது இல்லை. ஏனென்றால், சி.ஐ.டி. போலீஸார், கண்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அதனால், மிகவும் சாதாரணமான மனிதர்களை முன்னிறுத்தி, இவர்கள் பின்னே இருந்து இயக்குகிறார்கள். சட்ட ஆலோசனை, நிதி உதவி, கைதுக்கு முன்னே துப்புக் கொடுத்து பதுங்கச் செய்வது, சிறையில் தேவையான வசதிகளைச் செய்து தருவது போன்றவற்றைத் திறம்படச் செய்து கொடுக்கிறார்கள். இந்த விளார் டீமில் இருக்கும் முக்கியமான மும்மூர்த்திகள் பற்றிய விவரம் இப்போது மேலிடத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாம். மேலிடத்தில் சம்மதம் கிடைத்தால், உடனே அவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் இன்றைய நிலைமை.

யார் அந்த மும்மூர்த்திகள்?

தஞ்சாவூரில் உள்ள பிரபல எதிர்க்கட்சிப் பிர​முகரின் பணக்கார உறவினர், திருச்சியைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர், புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் மூவரும்தான் சசிகலா கோஷ்டியின் முக்கியப் புள்ளிகளை வெளியே கொண்டுவருவோம் என்று சபதம் போட்டுச்செயல்பட்டு வருகிறார்களாம். இவர் களுக்கு, வெளிநாடு ஒன்றில் பெரிய பதவியில் இருக்கும் பிரபலத்தின் உறவினர் ஒருவர் மறை முகமாக ஆலோசனை வழங்குகிறாராம். இதை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்த மக்கள் தொடர்புத் துறையில் நல்ல அனுபவம் உள்ள சிலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். இந்த ஒட்டுமொத்த டீமும் திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள பிரபல ஒட்டலில் அடிக்கடி சந்தித்துப் பேசு கிறது.

பொய் வழக்கு இல்லையா?

நடராஜன், ராவணன், திவாகரன் ஆகியோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் ஏன் போடப்படுகின்றன என்று திருச்சியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

''நாங்க ஏன் அவங்க மேல் நிலஅபகரிப்பு மாதிரியான கேஸ் போடப்போகிறோம். நிஜமாகவே, அவர்கள் போட்ட ஆட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை பயந்து கிடந்தவர்கள், பவர் போய்விட்டது தெரிந்ததும் வண்டி வண்டியாக எங்களைத் தேடிவந்து புகார் களைத் தருகிறார்கள். எம்.நடராஜன் மீது 10 வருடங்களுக்கு முன், டாலர் தொடர்புடைய சர்ச்சையில் பெயர் அடிப்பட்டதாம். இப்போது அதுபற்றி போலீஸில் தகவல் சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதுமாதிரி பண மோசடி, பதவி வாங்கித் தருவதாக ஏமாற்றியது, பணம் வாங்கிக்கொண்டு சிபாரிசு செய்தது என்று ரகம் ரகமாய் புகார்கள் குவிகின்றன. அதனால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று சொன்னார்.

இவரைப் போலவே, தென் சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மிடாஸ் மோகனை 50 லட்ச ரூபாய் மோசடிப் புகாரில் கைது செய்தோம். இதைக் கேள்விப்பட்டு அடையார் ஏரியாவில் இருந்து ஏகப்பட்ட போன்கள் வருகின்றன. உதாரணத்துக்கு, பரமேஸ்வரி நகர்வாசிகள் பலரும் சோகத்துடன் சொன்ன ஒரு விஷயத்தைக் கேளுங்கள். மோகன் வீட்டுக்கு அருகே இன்னொருவருக்குச் சொந்தமான நிலம் இருந்ததாம். 'அங்கே பில்டிங் ஏறினால், உனக்கு இறங்கு முகம் ஆரம்பித்துவிடும்' என்று யாரோ ஒரு ஜோதிடர் சொல்லி விட்டாராம். அதனால், அந்த இடத்துக்காரரிடம் விற்கச் சொல்லி கேட்டு இருக்கிறார் மோகன். அவர் தரவில்லை. ஆனால் அந்த இடத்தை மோகனுக்குத் தராமல் சாய்பாபா பக்தர் ஒருவரிடம் விற்று விட்டாராம். இடத்தை வாங்கிய பக்தரும் அப்பாவித்தனமாக, அந்த காலி இடத்தில் வீடு கட்டத் தொடங்கினாராம். இதைப் பார்த்து டென்ஷனான மோகன், தொடர்ந்து ஏகப்பட்ட டார்ச்சர்களைக் கொடுக்கவே, 'விட்டால் போதும்’ என்ற நிலையில் இடத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாராம். இப்போது, அந்த காலி நிலத்தை, தனது கார் பார்க்கிங் ஏரியாவாக வைத்திருக்கிறார் மோகன். அந்த சாய்பாபா பக்தர் யாரென்று இதுவரை எங் களுக்குத் தெரியவில்லை. இப்படிப் பாதிக்கப்பட்ட நபர்கள் தேடிவந்து தகவல்கள் தரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா?'' என்று கேட்கிறார்கள்.

அதுசரி, ஜெயிலில் எப்படி இருக்கிறார்கள்?

திருச்சி ஜெயிலில் கொடுக்கப்​படும் உணவை சந்தோஷமாகச் சாப்பிடுகிறார் நடராஜன். நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு கைதி தானாக முன்வந்து நடராஜனிடம் அன்பாகப் பழகி வருகிறாராம். ஆனால், இதே ஜெயிலில் இன்னொரு பிளாக்கில் இருக்கும் திவாகரன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று, உணவில் நிறையவே கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். இருவரையுமே மருத்துவர் அடிக்கடி சோதனை செய்கிறார். ராவணன் தனது ஒரே மகனை நினைத்து நினைத்து, அடிக்கடி சோகத்தில் உட்கார்ந்து விடுகிறாராம். நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு ஆகாத உணவுகளை அறவே எடுத்துக்கொள்வது இல்லை. பத்திரிகைச் செய்திகளை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். கோவை சிறையில் அளிக்கப்படும் யோகா வகுப்புகளைக் கூர்ந்து கவனிக்கிறாராம்.

யார் இந்த மிடாஸ் மோகன்?

மிடாஸ் என்கிற வார்த்தையை அடித்து விட்டு சீக்ரெட் என்று எழுதலாம். அந்த அளவுக்கு மர்மம் நிறைந்தவர் மோகன். அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளும் சாலிக்கிராமம், வடபழனி ஏரியாக்களில் மோகன் பெயரைப் பயன்படுத்தி நிறைய ரியல் எஸ்டேட் பிசினஸ்கள், கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தியது பற்றி போலீஸுக்குப் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.

''எந்த விழாவுக்குப் போனாலும் சரி, எந்த ஒரு பொது இடமாக இருந்தாலும் கேமராவுக்கு முன் தன் முகத்தைக் காட்டாமல் நழுவி விடுவார் மோகன். அவர் இப்போது கைதானபோதுகூட, போலீஸில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி யாரும் புகைப்படம் எடுக்காதபடி பார்த்துக்கொண்டார். அந்த அளவுக்கு இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாது என்பதில் உஷார் பார்ட்டி'' என்கிறார்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள். சென்னையை அடுத்த மாதவரம் பூர்வீகம் என்றாலும், அடையார் மோகன் என்றுதான் முதலில் தன்னை பிறரிடம் அறிமுகப்படுத்திக்கொள்வார். சசிகலா தொடர்பில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையின் முக்கியப் பொறுப்பில் ஒரு சமயம் இருந்ததால், தனது பெயருடன் 'மிடாஸ்' என்பதைச் சேர்த்துக்கொண்டார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, பதவியில் இருந்து ஒதுங்கி, திரைமறைவில் தனது ஜம்பத்தைத் தொடர்ந்தார். மதுபானங்களைத் தயாரிக்கும் கம்பெனியின் உரிமை​யாளர்களுக்கு மோகனை நன்றாகவே தெரியும். இவர் ஓ.கே. சொன்னால்தான் காரியங்கள் நடக்கும். திரு​மழிசை, அம்பத்தூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை சப்ளை செய்யும் வாகனங்கள் இப்போதுவரை மோகனின் கண்அசைவில்தான் நடக்​கிறதாம். அதேபோல, மின்வாரியத்தின் முக்கிய டெண்டர் விஷயங்​களையும் இவர்தான் கவனித்துக்​கொண்டார்.

பவர் சென்டர் ஆனது எப்படி?

1990-வாக்கில் போக்குவரத்துத் துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் ஆக இருந்தவர் மோகன். இவருடன் அதே துறையில் வேலைபார்த்த தேசபந்து என்பவர் அ.தி.மு.க. மந்திரிகள் சிலரிடம் பி.ஏ.-வாக இருந்தவர். தேசபந்து மூலம் மன்னார்குடி திவாகரன், டி.டி.வி. தினகரன் ஆகியோரிடம் மோகன் அறிமுகமாகி, சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்யத் தொடங்கினார். உள்ளாட்சி மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இவர் சொல்பவருக்கே ஸீட் கிடைத்தது. தாம்பரத்தில் ஒரு குவாரியை தனது பினாமி ஒருவருக்கு வாங்கிக்கொடுத்த விவகாரத்தில், ஆட்சி மேலிடத்துக்குத் தகவல் தெரிந்து முதல் குட்டு விழுந்தது. மன்னார்குடியில் திவாகரனுடன் கூட்டாகச் சேர்ந்து புதிய நகர் ஒன்றை உருவாக்கிய விவகாரமும் இப்போது போலீஸ் விசாரணைக்குள் வந்து விட்டது.

இன்னும் என்ன என்ன மர்மங்கள் வெளிவரப்​போகின்றனவோ?

Wednesday, March 28, 2012

திருப்புமுனையை தடுத்த விஜயகாந்த்!


tamilaru_manian_360’காதலிலும் போரிலும் எந்த தர்ம நியாயத்திற்கும் இடமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வரிசையில் தேர்தலையும் சேர்த்துக் கொள்ளவேண்டிய நிலையில்தான் நமது நாடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் விழிப்புணர்வோடு செயலாற்றினால் எந்த தவறுகளுக்கும் இடமிருக்காது என்பது பொதுவான நம்பிக்கை. சென்னை சட்டமன்ற பொதுத்தேர்தலில், ‘திருமங்கலம் ஃபார்முலா’ மூலம் தமிழகத்தில் மீண்டும் தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கருணாநிதி திடமாக இருந்தார்.

ஆனால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் கடுமையான கண்காணிப்பால் பெருமளவில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதன் விளைவே கலைஞர் ஆட்சியை இழந்ததும் ஜெயலலிதா ஆட்சி நாற்காலியில் வந்து அமர்ந்ததும் ஆகும். அதனால் தேர்தல் ஆணையம் மீது தமிழக மக்களுக்கு மரியாதை பன்மடங்கு கூடியது.

அதேபோல் தமிழகத்தில் நீண்டகாலம் ஒரு மரபு நிலைத்திருக்கிறது. இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் சென்று தேர்தல் பணியில் ஈடுபடுவதில்லை என்பதுதான் அந்த நல்ல மரபு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது முதலமைச்சர் சென்று வாக்கு சேகரித்ததில்லை. அந்த மரபு திராவிடக் கட்சிகளின் ஆட்சி வந்தபிறகு மாறிவிட்டது.

praveen_12_42001-ல் இருந்து 2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் களமிறங்கி தேர்தல் வேலைகளில் இறங்கி செயல்பட்டனர். அப்போது ஜனநாயக நெறிமுறைகளை ஜெயலலிதா குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக கருணாநிதி கண்டனக் குரல் கொடுத்தார். ஆனால் அதே கருணாநிதி, 2006 முதல் 2011 வரையில் நடைபெற்ற தனது ஆட்சியில் 11 இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்த 11 இடைத்தேர்தல்களிலும் கலைஞர் தனது ஆட்சி அதிகாரத்தையும் தனது கட்சிக்காரர்கள் குவிந்திருக்கும் பணத்தையும் அமைச்சர் பெருமக்களின் வீதி உலாவையும் மையப்படுத்தியே வெற்றிகளைக் குவித்தார்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஓரளவாவது இருந்த ஜனநாயக மரபுகள் கருணாநிதியின் ஆட்சியில் முழுவதுமாக கல்லறைக்கு அனுப்பப்பட்டன. ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, கட்சிபேதமில்லாமல் வீடுவீடாகச் சென்று, ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளியிறைத்து, நிர்வாக எந்திரங்களை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, கருணாநிதியின் திருமகன் திருமங்கலம் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிதான் ஒரு புதிய பாணியையே தமிழக அரசியலில் தொடங்கி வைத்தது.

karu-high-dramaஇலவசங்களும் தேர்தல் நேரத்தில் பட்டுவாடா செய்யப்படும் கறுப்புப் பணமும் பிரியாணி பொட்டலங்களும் மதுபான புட்டிகளும் தமிழக வாக்காளர்களை எளிதில் விலைக்கு வாங்குவதற்குப் போதுமானவை என்கிற அரசியல் சூத்திரத்தை அரங்கேற்றிய குற்றவாளியான கருணாநிதிக்கு, ஜெயலலிதாவைக் குறைகூற எந்த தார்மீகத் தகுதியும் கிடையாது. கருணாநிதி ஆட்சியில் இடைத்தேர்தல்களில், ‘கோடிக்கணக்கான பணம் கொட்டப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் முற்றுகையிட்டனர். நிர்வாக எந்திரம் தவறாகப் பயன்பட்டது. தேர்தல் விதிமுறைகள் திட்டமிட்டு மீறப்பட்டன’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது ஜெயலலிதா தெரிவித்தார். இதனால்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ‘டெபாசிட்’ இழக்கும் அதிர்ச்சிமிக்க அனுபவத்தைக்கூட அடைந்தது.

கருணாநிதி ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்ற பழமொழிக்கு உட்பட்டவர். முள்ளை முள்ளால் எடுப்பதும் வைரத்தை வைரத்தால் அறுப்பதும் ஊழலை ஊழலால் ஒழிப்பதும் பொதுவாழ்வில் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் என்பதை சாதாரண மனிதனும் அறிவான். அவரது பணப்பெட்டிகளான எ.வ.வேலுவும் நேருவும் பொன்முடியும் துரைமுருகனின் மேற்பார்வையில் களமிறங்கி, அஞ்சாநெஞ்சரின் ஆசீர்வாதத்துடன், தளபதியின் வியூகங்களோடு அ.தி.மு.க.வை களத்தில் சந்தித்தனர்.

ஒருபக்கம் வெள்ளம், மறுபக்கம் நெருப்பு, இடையினில் மக்கள் என்பதுபோல்... ஒருபுறம்jayalalitha_01அதிகாரத்திலிருக்கும் அ.தி.மு.க., மறுபுறம் கோடிக்கணக்கில் பணம் குவித்து வைத்திருக்கும் தி.மு.க., என்ற இரண்டு சக்திகளுக்கு இடையே வைகோ தன் நேர்மையையும் தமிழினம் சார்ந்த போர்க்குணத்தையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய அருந்தொண்டர்களையும் மாற்று அரசியலுக்கு சங்கரன்கோவில் மக்கள் அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பார்கள் என்று ஆழ்ந்த நம்பிக்கையையும் துணையாகக் கொண்டு களத்தில் இறங்கினார்.

வைகோவின் வாக்குகளைப் பிரிக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் களமிறக்கப்பட்டவர் விஜயகாந்த். அவரும் அவரது மனைவியும் ஒரு வாரம் தொகுதி முழுவதும் சுற்றிச் சுழன்றார்கள். அதன் விளைவு தே.மு.தி.க. ‘டெபாசிட்’ இழந்தது மட்டுமின்றி, ம.தி.மு.க. ‘டெபாசிட்’ இழப்பதற்கும் விஜயகாந்த் அடித்தளமிட்டார். விஜயகாந்த் வீணாக களத்தில் நின்றிருக்காவிட்டால், ம.தி.மு.க. முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கக் கூடும். தி.மு.க. ‘டெபாசிட்’ இழந்தும், ம.தி.மு.க. ‘டெபாசிட்’ இழக்காமலும் ஒரு புதிய திருப்பம் உருவாகி இருக்கும். தி.மு.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். வைகோ முன்னிறுத்தப்பட, களம் கனிந்திருக்கும். இந்த நல்ல ஆரோக்கிய அரசியல் சூழல் கெட்டுப்போக காரணமாக நின்றவர் விஜயகாந்த்.

vijayakanth1சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நமக்கு வழங்கியிருக்கும் செய்தி ஒன்றுதான். இலவசங்கள் என்று தற்காலிக சந்தோஷங்களுக்கு நிரந்தர சுகங்களை விற்றுவிடும் மனோபாவம் நம் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் விடைபெறவில்லை. தமிழரைப் பற்றியிருக்கும் இந்த மலினமான நோய் விலகாதவரை, மாற்று அரசியலுக்கான களம் அமைவது கடினம்.

நன்றி : தமிழருவி மணியன் (குமுதம் ரிப்போர்ட்டர்)

Tuesday, March 27, 2012

யு டூ கியூபா?


CHE035சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.

தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காகப் போராடி வருவோரையும் சே குவேரா உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது ஒட்டுமொத்தமாகக் கைவிட்டிருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா?

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச் செய்துவிட்டது என்று பெரும்பாலானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். புரட்சியாளர்களை நெஞ்சுக்குள் ஒட்டி வைத்திருப்பவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.

உண்மையில் இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து, பத்தோடு பதினொன்றாக தூக்கிப் fidal-castroபோட்டது யார் தெரியுமா? புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கியூபா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள்தான்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடுமையான எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. இலங்கை அரசே அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்மானம் பேசியது.

பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களைப் போன்று தாக்குதல் நடத்துவதற்கு முன் அனுமதி பெறும் அவசரமும் இந்தத் தீர்மானத்துக்குக் கிடையாது. இவ்வளவு பலவீனமான ஒரு தீர்மானத்தை "இறையாண்மை', "அன்னியத் தலையீடு கூடாது' எனத் திருத்தத்தைப் போட்டு மேலும் பலவீனமாக்கியது இந்தியா.

உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது, புவியியல் ஒருமைப்பாடு என சாதாரண மக்களுக்குப் புரியாத பல்வேறு ராஜதந்திர அம்சங்களைக்கூறி நியாயப்படுத்தினாலும், இந்தியா அந்தத் தீர்மானத்தைப் பலவீனமாக்கியது என்பதுதான் உண்மை.

lenin010605nv9இந்தியாவின் திருத்தத்தால், இலங்கையை நிர்பந்திக்காமல் செயல்பட விட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் நோக்கம் திரிந்துபோனது. அதேநேரத்தில் மதில்மேல் பூனை போன்ற மனநிலையில் இருந்த நாடுகள் இந்தத் திருத்தம் காரணமாக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிந்தது; எதிர்த்து வாக்களிக்க இருந்த சில நாடுகள் மெüனமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.

இப்படியொரு வலுவற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்வதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்கச் செய்வதிலும் முழு வெற்றிபெற்று விட்டதாகக் கருத முடியாது. அதற்கெல்லாம் இது முதற்படியாக வேண்டுமானால் இருக்க முடியும்.

இந்தத் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நேரடியான ஒரேயொரு நன்மைதான் கிடைத்திருக்கிறது.

நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போதுதான் உன் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள்.

அதைப்போல, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு தங்களது உலக அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் புலப்படாத எத்தனையோ ராஜதந்திரங்கள் இருக்கும். அதில் ஒரு பகுதிதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம். ஆனாலும், லிபியா, சிரியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக பல அவைகளில் கொண்டு வந்த தீர்மானங்களைப் போன்றது கிடையாது. அப்படிப்பட்ட கடுமையான தீர்மானங்களின்போதுகூட ஐ.நா.வின் வெவ்வேறு தளங்களில் ரஷியாவும் சீனாவும் பல நேரங்களில் மெüனமாக இருந்திருக்கின்றன.

அதே நாடுகள்தான் இப்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. கியூபா ஒருபடி மேலேபோய், "இலங்கை எங்களது நண்பன்' என்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், அதற்கான நல்லிணக்க முயற்சிகள் pirabakaran1ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, முதலில் குவாண்டனாமோ சிறையை மூடுவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்று ஒபாமாவைக் குற்றம்சாட்டியது கியூபாதான்.

"லிபியாவில் பன்னாட்டுப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து விட்டு இலங்கையை விசாரிக்கலாம்'' என்று விவகாரத்தின் திசையை மாற்றியது. இந்தியாவின் திருத்தத்துக்குப் பிறகுகூட, கியூபா தனது நிலையை திருத்திக் கொள்ளவில்லை.

இத்தனைக்கும் பிரபாகரன் எத்தகைய போரை நடத்தினாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான போராட்டத்தால் புதிய அதிகாரத்தைப் பெற்ற நாடு அது. அதை நடத்திய தலைவர்கள்தான் இன்றைக்கும் ஆட்சி செய்து வருகிறார்கள். அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக இந்தத் தீர்மானத்தை கியூபா எதிர்த்தது என்றால், உண்மை நிலையை உணர்த்தி அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியாதது தமிழ் அதிகாரக் குழுக்களின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் திருத்தம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது என்றால், சீனா, ரஷியா, கியூபா ஆகியவற்றின் எதிர்ப்புதான் அந்தத் தீர்மானத்துக்கு "வழக்கமான அமெரிக்க தீர்மானம்' என்கிற தோற்றத்தை அளித்தது. இராக்கில் புகுந்தீர்கள், ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கினீர்கள், கடாஃபியை கொன்றீர்கள் இப்போது இலங்கைக்குள் நுழையப் பார்க்கிறீர்களா என்பது போன்ற கேள்வியை முன்னிறுத்தியது.

அந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், ஐ.நா.வின் பிற தளங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுமானால், நிச்சயம் சீனாவும் ரஷியாவும் தமிழர்களுக்கு முக்கியம். கியூபாவை நம் பக்கம் இழுக்க வேண்டியது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றால், சீனாவையும் ரஷியாவையும் இழுக்க வேண்டியதுதான் உண்மையான ராஜதந்திரப் பிரச்னை.

நன்றி : புளியங்குடி பூலியன் (தினமணி)

சில நிகழ்வுகள்!! சில உண்மைகள்!!


Netaji_Subash_Sandhra_Bose_Rare_Photos_17அன்னை பாரத தேவியை, ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையோடும், நம் நாட்டு மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்திலே இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வியிலே, பல ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான மானமிகு இந்தியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

மகாத்மா காந்தி தலைமையிலே அறவழியிலே, அஹிம்சா நெறியிலே நடைபெற்ற போராட்டத்தில் நம் மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலே கலந்து கொண்டு ஆங்கிலேயர்களை, அன்னை பூமியிலிருந்து அகற்ற பாடுபட்டனர்.

தீரர் நேதாஜி தலைமையிலே இயங்கிய இந்திய தேசீய ராணுவத்திலே சேர்ந்து ஆதிக்க வெறிபிடித்த ஆங்கிலேயர்களை அன்னை பூமியிலிருந்து விரட்ட அறவழியைவிட, ராணுவம் மூலம் போராடுவதே சிறந்தது என்று எண்ணி பரங்கியர் படைக்கு எதிராக போர் முனையிலே வீரமாக போராடினார்கள் பலர் .

பாலகங்காதர திலகர், பிபின் சந்தரபால், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்களின் எண்ணங்களை வழிகாட்டுதலாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாக, தீரமாக, புரட்சிகரமாக போராடுவதே சிறந்தது, அப்போதுதான் அந்த அடக்கு முறையாளர்களை நாட்டிலிருந்து அடித்து விரட்டமுடியும் என்ற எண்ணங் கொண்ட அரவிந்தகோஷ், பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு, வாஞ்சிநாதன், சந்திரசேகர ஆசாத், உத்தம்சிங், வீரசவர்க்கர் , குதிராம் போஸ், அஸப் குல்லகான், ராம் பிரசாத், பிஸ்மில் சூரியசென் , மதன்லால் டிங்ரே, ரோஷன் சிங் போன்ற எண் ணற்ற புரட்சியாளர்கள் தங்கள் உயிரினை துச்சமாக எண்ணி ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடி வீரமரணம் அடைந்ததெல்லாம் நாம் அறிந்ததே.

சுதந்திரப் போராட்டம், பல வழிகளிலே, பல முனைகளிலே தீவிரமடைந்து நடைபெற்றுக் கொண் டிருந்த காலம். அப்போது நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.

பூமிப் பரப்பிலே, கும் இருட்டு எங்கும் பரவிக் கிடந்தது. மினுக் மினுக்கென்று குறைந்த599வெளிச்சத்துடன் விளக்கு எரிந்துகொண்டிருந்த ஓர் குடிசையின் உள்ளே, கடுமையான காய்ச்சல் காரணமாக பிதற்றிக் கொண்டு, உருண்டு, பிறண்டு அவதிப்படுகின்ற தன் மகனை மருந்து கொடுத்து கலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றாள் ஒரு விதவைத் தாய்.

அந்த வேளையிலே திடீரென சிலபேர் விறு விறுவென விரைவாக ஓடி வந்து குடிசைக்குள் நுழைந்து, குடிசையின் கதவை அவசரமாக தாழிட்டனர்.

திடுக்கிட்ட அந்த தாய் “யாரப்பா? நீங்களெல்லாம்” எனக் கேட் டதும், “நாங்களெல்லாம் நம் நாட்டின் விடுதலைக்காக போராடுகின்ற போராட்ட வீரர்கள், தலைமறைவாக இருந்து தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்” எனச் சொன்னார்கள் .

உடனே அந் த உன்னதத் தாய் தன்னுடைய சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களை அன்பாக உபசரித்து, உட்கார வைத்து, பசியோடு இருந்த அவர்களுக்கு கோதுமை ரொட்டி, சட் னி போன்ற உணவுப் பண்டங்களையெல்லாம் கொடுத்து சாப்பிட வைத்தார் அந்த அன்புத்தாய். அவர்கள் சாப்பிட்ட பின்பு, அந் த வீரர்களை அங்கேயே படுத்து உறங்க வைத்துவிட் டு, அந்த அம்மா தன்னுடைய மகனை மறுபடியும் கவனிக்க ஆரம்பித்தார்கள் .

பொழுது புலர்வதற்கு முன்பே அந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் அங்கிருந் து புறப்படத் தயார் ஆனார்கள். அப்போது அந்த வீரர்களின் தலைவன் அந்த அம்மாவின் முன்பு வந்து, “அம்மா நாங்களெல்லாம் நம் நாட்டின் விடுதலைக்கு போராடுகின்றோம், பசியால் வாடிய எங்களுக்கு அன்பு காட்டி, உணவு கொடுத்து உபசரித் து இரவில் தங்கவும் இடம் கொடுத் தீர்கள், மிக்க நன்றியம்மா, என் பேர் மகன்லால் பகாடி! இந்தாங்கம்மா... இதுலே 500 ரூபாய் இருக்கு. இதை நீங்க வாங்கிக் கொள்ளுங்கள். நோயால் சிரமப்படும் சகோதரனுக்கு நல்ல மருந்துகளை வாங்கிக் கொடுங்க. மீதிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ! இப்படிப்பட்ட நேரத்தில் இந்தப் பணம் உங்களுக்கு மிகவும் உதவும் ” என்று கூறினார்.

வீரன் மகன்லால் பகாடியின் பெயரும் , அவருடைய புரட்சி நடவடிக்கைகளைப் பற்றியும் முன்பே அந்த தாய் கேள்விப்பட்டிருந்தார்கள் .

images_copyதன் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கும் நபர் தான், அந்த வீரன் மகன்லால் என்பதை உணர்ந்த அந்த தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, “மகனே! இந்த நாட்டினுடைய விடுதலைக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக, நீங்களெல்லாம் உங்களுடைய உயிரை துச்சமாக எண்ணி வெறியோடு போராடுகின்றீர்கள். வெள்ளைக்காரர்களை நாட்டை விட்டு விரட்ட ஏழை, நான் என்ன உதவி செய்ய முடியும்? இந்தப் பணம் , நம் நாட்டின் விடுதலைக்கான சேமிப்பு, இதில் ஒரு பைசாவைக் கூட நான் தொடக்கூடாது, என்னுடைய மகன் நோயிலிருந் து சரியானதும், அவனையும் உங்களோடு சேர்த்து விடுகிறேன் ” எனக் கூறினாள் .

அதைக் கேட்ட மகன்லால் , “அம்மா! நாங்க ராம் டேக் கருவூலத்தில் இருந்து ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை அடித்திருக்கின்றோம் . இந்த பணத்தை, இங்கே இருக்கின்ற என் சகோதரர்களிடம் கொடுத்து சரியான நபர்களிடம் சேர்த்து விடுகின்றேன்! என்னை உயிரோடு பிடித்தோ அல்லது பிணமாகவோ கொடுக்கின்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி தருவதாக ஆங்கிலேயர்கள் அறிவித்து உள்ளனர். எனவே, என்னைப் பிடித்து கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் !” என உண்மையான உள்ளத்தோடு கூறினார் .

இதைக்கேட்ட அந்தத்தாய் சினங்கொண்டு, வீரத்தோடு பார்க்கின்ற சிங்கம் மாதிரி மகன் லாலை நிமிர்ந்து பார்த்து, “மகனே! மகன்லால் என்ன வார்த்தை சொல்லுகின்றாய் , இந்த அபத்தமான யோசனை உனக்கு எப்படி உதித்தது, எந்தத் தாயாவது தன் பிள்ளையை, அற்ப பணத்துக்காக வெள்ளைக்காரர்களிடம் காட்டிக் கொடுப்பாளா? கேவலம் காசுக்காக! தன் பிள்ளையை வெள்ளைக்காரர்கள் சிறையிலே போட்டு சித்தரவதை செய்ய, விற்க எந்த தாய்க்காவது மனம் வருமா? சொல்! மகன்லால் ! சொல்” என்று கேட்டார்.

அந்த வீரர்கள் பலதடவைச் சொல்லி வற்புறுத்தியும் கூட அந்தத்தாய் தன்னுடைய எண்ணத்திலே உறுதியாக இருந்தார்கள் , அவர்களைப் பார்த்து, “இனிமேல் , எப்பவாவது இந்தப்பக்கம் வந்தால் , உங்கள் தாய் ஒருத்தி இருக்கிறாள் என நினைத்து, இந்த ஏழைத்தாயின் குடிசைக்கு வந்து இருக்கிறதை சாப்பிட்டுவிட்டு போங்க!” எனக் கூறியதைக் கேட்ட, உறுதியான நெஞ்சுரம் கொண்ட வீர இளைஞனான மகன்லால் மனம் நெகிழ்ந்து, பீறிட்டு வருகின்ற அழுகையினை அடக்கிக் கொண்டு, கன்னத்திலே கண்ணீர் வழிந்தோட அந்த உத்தமத் தாயின் காலைத் தொட்டு வணங்கி, “அம்மா! உன் னைப் போன்ற உன்னதத் தாய்மார்களுடைய ஆசியோடு விரைவிலே இந்த நாடு விடுதலை அடையும் , நாட்டு மக்கள் நலம் பெறுவார்கள், இது சத்தியம் !சத் தியம்! சத்தியம் !”- என உணர்வு பொங்க கூறினார் . அந்த “உண்மை வார்த்தைகள்” பலித்தது. ஆம் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவிற்கு வந் து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நம் பாரதத்திருநாடு விடுதலை பெற்றது.

அந்த ஏழைத்தாயின் நாட்டுப் பற்றும் , எதற்கும் ஆசைப் படாமல் காட்டிக் கொடுப்பதை கனவிலும் எண்ணாத உள்ளப்பாங் கும் , படிக்கின் ற நமக்கு மெய் சிலிர்க்கிறது, அந்தத் தாயை போற்றி வணங்கத் தோன்றுகிறது. அதேபோல் மகன்லாலின் தன் உயிரைக்கூட பெரிதாக கருதாக தன்னலமற்ற வீரமும் , நம் நாட் டு மக் களின் மேல் கொண் ட அன்பும் நாட்டுப்பற்றும் , இந்திய இனப்பற்றும் , அவனுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நமக்கு உண்மையான பாடமாக அமைந்துள்ளன.

ஆனால் 2009ம் ஆண் டு ஏப்ரல், மே- மாதங்களில் நடந்த இறுதிக்கட்ட போர்க் காலத்தில் நடந்த இன ஒழிப்பு, இன வேரறுப்பு வெறியாட்டத்திற்கு தமிழ் இன தாய்மார்கள், பெண்கள் , பச்சிளங் குழந்தைகள் , ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் என எல்லோரும் ஆயிரக்கணக்கிலே பலியாவதை வேடிக்கை பார்த்தவர்கள் தான் நாம் , ஆம் !, புறநானூறு காட் டும் வீரவாழ்க்கை வாழ்ந்த பழந்தமிழர்களின் வழித்தோன்றல்களாகிய நாம்தான் , பக்கத்தில் நடைபெற்ற பஞ்சமாபாதக செயல்களை கண்டுகொள்ளாமல், வாளா இருந்து

அந்த கொடுஞ் செயல்களை உரியவகையிலே கண்டித்து, தடுத்து நிறுத்தி, நம் இனமக்களை காப்பாற்ற தவறியவர்களாக இருந்தோம் என்பது நம்மேல் ஏற்பட்ட ஒரு தீராப் பழியாக உள்ளது என்பது சத்தியமான உண்மை.

ஒரு இனமே இன்னலில், துயரத்தில் அல்லல்பட்டு அழிந்து கொண்டிருந்தபோது உரிய இடத்தில் இருந்துகொண்டு உரிய நேரத்தில் உதவி செய்ய முன் வராமல் , வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மகாபாவம் வந்து சேரும் என்பது மகாஉண்மையாகும். மருத்துவக் கல்லூரி ஒன்றில் 2009 மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் ஒரு இளம் மருத்துவ மாணவன் உணர்வு பொங்க,

“மந்தை மந்தையாக - உன் இனம் மாண்டு கொண்டிருக்கின்றது பக்கத்திலே மானம் கெட்ட தமிழா உனக்கு மானாட மயிலாட ஒரு கேடா?” என கோபத்துடன் , கவிதை வாசித்து பதிவு செய்த வரிகளில் உள்ள உண்மையினை இன்னும் நினைத் தாலும் நெஞ்சம் பதைபதைத்து,

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற முண்டாசு கவிஞன் பாரதியின் கவிதை வரிகளைத்தான் எண்ணத் தோன்றுகிறது.

அப்போது இனமக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு, நம்பிக்கை வைத்திருந்த ஆண்டவனும் உதவவில்லையே என்பதும் , தேசீயம் , தேசீயம் என்பதெல்லாம் பஞ்சமா பாதக செயல்களை, ஒரு இனப் படுகொலையை பார்த்துக்கொண்டிருப்பதானா? என்கின்ற என்ற ஆத்திரமும், ஆதங்கமும்

எல்லோர் மனதிலும், குறிப்பாக தமிழ் இளைஞர்களின், தமிழ் பாற்றாளர்கள் நெஞ்சங்களிலே புயலாக மையம் கொண்டிருக்கின்றது என்பது நிதர்சணமான உண்மையாகும் .

இந்த உண்மையான கோபமும் , ஆத்திரமும் 2011ம் ஆண்டிலேயாவது வெளிப்பட்டதே என தமிழ் உணர்வாளர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

மதன்மோகன் மாளவியா இவர் பாரதத்தாய் ஈன்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவர் . ஆரம்பகால கட்டத்தில் வக்கீல் தொழிலை மேற்கொண்டிருந்தாலும் பெருஞ்செல்வந்தராக இல்லாதவர்.

இளமைகாலத்தில் பலநேரம் வறுமையிலே வாடியவர். தன்னுடைய வக்கீல் தொழிலில் சிறிது வருமானம் வந்தபோதும் கூட, அந்தப் பணத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் , மற்றவர்களுடைய நலனுக்காக, பொதுநலப்பணிகளுக்காக கொடுத்துவிடக் கூடிய மனப்பான்மை கொண்டவர் மாளவியா!

“என்னங்க! இப்படி எல்லாத்தையும் கொடுத்துவிடுகிறீர்களே, உங்களுக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ள மாட்டீர்களா?” என பலபேர் கேட்டபோது, “வேறு எங்கே கொடுக்கின்றேன் ? என் குடும்பத்திற்கு தானே நான் செலவு செய்கின்றேன், ஆம். இந்த நாடுதானே என் குடும்பம் . இந்த நாட்டிலே இருக்கின்ற ஒவ்வொருவரும் என் சகோதர சகோதரிகள் தானே!” என பதில் சொன்னவர் நம் மாளவியா.

ஆனால் இப்போது இருக்கின்ற கலியுகத்தில் நடைபெறுகின்ற செயல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. நாட்டின் நலனைவிட தன் குடும்ப நலனே முதன்மையானது என கருதுபவர்கள் காலம் இது.

தன்னுடைய குடும்பமே, நாடு என எண்ணுபவர்கள் இருக்கும் நேரம் இது. “மக்கள் நலம் , images2மக்கள் நலம் என்றே சொல்லுவார் தன் மக்கள் நலம் ஒன் றேதான் மனதில் கொள்ளுவார்”- என்று மறைந்த எம் .ஜி.ஆர் . அவர்கள் பாடிய திரைப்பபாடல் வரிகளில் உள்ள உண்மை நிலைதான் நினைவிற்கு வருகின்றது.

“யாருடைய மனதில் பிறர்நலன் எப்போதும் இருக்கிறதோ, பிறருக்கு நல்லது செய்வது என்பது செயலிலும் , சிந்தனையிலும் சொல்லிலும் இருக்கிறதோ, அவருக்கு மட்டுமே தர்மம் என்றால் என்ன என்று தெரியும் .” -பகவத் கீதை, மகாபாரதம் .

நடுத்தர, மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் நம்பிக்கையோடு முதலீடு செய்திருந்த பங்கு வர்த்தகத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்து அந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டவர்கள், முத்திரைத்தாள் மோசடி என விஞ்ஞானபூர்வமான மோசடிகளில் முத்திரைப் பதித்தவர்கள், நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தில் புகுந்து விளையாடியவர்கள் என பல நல்ல பண்பாளர்கள் இருக்கின்ற காலம் இது.

ஆங்கிலேயர்கள் போன்ற அந்நியர்கள் நம்நாட்டின் வளத்தைக் கொள்ளை அடித்து, மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து தங்கள் நாட்டிற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால் இப்போதோ பண்புள்ளம் கொண்ட நம் இந்தியப் பெருங்குடிமகன்கள் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இருக்கக் கூடிய வங்கிகளில் இட்டு வைத்திருக்கக் கூடிய தொகை ஏறத்தாழ 25000000000000 ரூபாய்கள் (ரூபாய் 25 லட்சம் கோடிகள்) என மதிப்பிட்டுக் கூறுகின்றனர் என்பது மனத்தை என்னவோ செய்கின்றது. இந்த பணம் மட்டும் நம் நாட்டில் இருந்தால் நம் இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சியையும், நல்ல பொருளாதார மாற்றங்களையும் கொண்டு வரமுடியும் என்பது பொருளாதார நிபுணர் கள் கூறுகின்ற உண்மையாகும் .

நம் நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உரிய திட்டங்களுக்கு உதவக்கூடிய லட்சக்கணக்கான கோடிகள், கிடைத்திருக்கக் கூடிய இரண்டாம் தலைமுறை ஒதுக்கீட்டின் மூலமாக வரவேண்டிய வருமானத்தை தங்கள் சுயநலனுக்கு திருப்பிவிட்டு இளைய தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, இனத்திற்கு இழுக்கு வர மொழிக்கு பழிவரக் காரணமானவர்கள் வாழும் கலியுகம் இது என்பது உண்மையாகும் .

“படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்!” - மகாகவி பாரதியார். இனிமேலாவது தமிழ் இனம் வாழ, தமிழ்நாட்டு தலைவர்கள் பாடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

அது நேரு இந்தியா; இது வேறு இந்தியா?


Nehru-101-aab”தென்னாப்பிரிக்காவில் ஆளும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் நிறவெறியை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அங்கே பாதிக்கப்படும் மக்களுக்காக இந்தியா குரல் கொடுப்பது மட்டுமல்ல... அவர்களைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்வோம்... ஆப்பிரிக்க கண்டமானவள் ஆசிய கண்டத்தின் தங்கை போன்றவள். தங்கை அழும்போது அக்கா தாங்கமாட்டாள். தக்க நடவடிக்கையை எடுப்பாள்’’ என்று 1950-களில் இந்தியாவின் பிரதமர் நேரு சொன்ன வரலாற்றுப் புகழ் மிக்க வார்த்தைகள் இவை.

வெறும் வார்த்தைகளோடு நின்று விடவில்லை. தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிரான தீர்மானத்தை தன்னை அடிமைப்படுத்திய இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகக் கொண்டுவந்து தென்னாப்பிரிக்காவை விடுதலைப் பாதையை நோக்கி கொண்டு சென்றார் இந்திய பிரதமர் நேரு. அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு சில ஆண்டுகளே ஆகியிருந்ததால் அப்போது இந்தியாவுக்கு ‘அடிமை’களின் வலி புரிந்தது, வேதனை புரிந்தது.

ஆனால்... இன்று?

அன்று தென்னாப்பிரிக்க மக்கள் அனுபவித்ததை விட ஆயிரமாயிரம் மடங்கு அடக்குமுறையையும், சித்ரவதைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களைப் பற்றிய ஓர் தீர்மானம் ஐ.நா. வில் தாக்கலான பிறகும் இந்தியா மௌனம் காத்தது. ‘உன் நிலைப்பாடு என்ன?’ என்று கூக்குரல் எழுப்பியும் தொடர் மௌனம் காத்தது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் வரை தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்காமல் இருந்தது. வாக்கெடுப்பு அன்று அந்த நிமிடத்தில் சட்டென இனவெறி ஏகாதிபத்திய இலங்கைக்கு ஆதரவாக மிகச் சாதகம் கொண்ட ஓர் திருத்தத்தைக் கொண்டுவந்து தனது ‘ஆசிய பவர்’ மீது ரத்தத்தை அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறது.

அன்று தென்னாப்பிரிக்காவுக்காக துடித்த நேருவின் பரம்பரைதான் இன்றும் ஆட்சி Sonia_Gandhi-11-aசெய்கிறது. ஆனால், நேரு துடித்தார். சோனியாவோ துடிக்க வைக்கிறார், துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

மார்ச் 22-ம் தேதியன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரிலுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தனது சர்வதேச காய் நகர்த்தல்களுக்காக கொண்டுவந்தது ஒரு தீர்மானம்.

அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு சாதகமும் இல்லை. ஆனால்... மூன்று வருடங்களாக கதறிக் கொண்டிருந்த தமிழினத்தின் ஓலத்தை உலக நாடுகள் எல்லாம் திரும்பிப் பார்க்கிற சந்தர்ப்பமாக இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது.

ராஜபக்சே சகோதரர்களின் இனவெறி இதயத்தை உலகத்திடம் எடுத்துவைக்க தமிழர்களுக்கு இது ஒரு மேடையானது. முதன் முதலில் சர்வதேசத்தின் மேடையில் தமிழனின் பாடு பேசப்படுவதற்கு வாய்ப்பானது. மார்ச் 22-ம் தேதி இந்திய நேரப்படி 2.30க்கு மனித உரிமை அமர்வில் இலங்கை குறித்த விவாத அரங்கு ஆரம்பித்தது.

முதலில் கருத்து தெரிவிக்க அழைக்கப்பட்ட நாடு கியூபா. சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய விடுதலைப் போராட்டத்தால் சுதந்தரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் கியூபா... தன் வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு இலங்கையை ஆதரிக்கத் தொடங்கியது.

Rajapaksa_bros-11aசிங்கள அரசு ஈழத்தில் போட்ட குண்டை விட கியூபாவின் கருத்து குண்டுகள் தமிழர்களை காயப்படுத்தின. ‘‘இப்போது இந்தத் தீர்மானத்துக்கு என்ன அவசரம்? வரும் செப்டம்பர் மாத அமர்வுக்கு இதை எடுத்துக் கொள்ளலாமே...’’ என்று வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கப் பார்த்தது கியூபா. ஆனால், அமெரிக்கா இதை கடுமையாக எதிர்க்க, விவாதம் தொடர்ந்தது.

கியூபாவை அடுத்து கருத்துக்களை வெளியிட்டது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெல்ஜியம். ‘‘இந்தத் தீர்மானத்துக்காக லாபி செய்த ஜெனிவாவில் இருக்கும் தமிழர்களே மிரட்டப்படுகிறார்கள் என்றால், அங்குள்ள தமிழர்களின் கதியை எண்ணிப் பாருங்கள்! இந்தத் தீர்மானத்துக்கு முழுக்க முழுக்க ஆதரவளிக்கிறோம். சர்வதேசத்துக்கு பதில் சொல்லவேண்டிய கடமை இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது’’ என்றது பெல்ஜியம்.

அந்த நாட்டுப் பிரதிநிதி பேசியது ஆங்கிலம் என்றாலும் அதில் ‘தமிழ்’ ஒட்டியிருந்தது. தன்னைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக இலங்கை அரசுக்கு இன்னும் உதவுவது புலிகள்தான். ஆமாம். ‘‘இந்தத் தீர்மானம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் எழச் செய்யும். எனவே இலங்கையை மறு நிர்மாணம் செய்ய எங்களுக்கு மேலும் கால அவகாசம் அளித்து இந்தத் தீர்மானத்தைத் தோற்கடியுங்கள்’’ என்று தனது பசப்பு வாதத்தை அரங்கேற்றியது இலங்கை.

இதன்பிறகு 47 நாடுகளும் தலா மூன்று நிமிடங்களில் கருத்துக்களை தெரிவித்தன. Rajapaksa-Sarath_Fonsekaஇறுதியில் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரிக்க, 15 நாடுகள் எதிர்க்க, எட்டு நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணிக்க... தீர்மானம் நிறைவேறியது.

இதில் இலங்கைக்கு எதிராக என்ற பெயரில் வாக்களித்த இந்தியாதான் முழுக்க முழுக்க இலங்கைக்கு ஆதரவான மிக உறுதியான திருத்தத்தைச் செய்துள்ளது என்கிறார்கள் ஜெனிவாவில் இருக்கும் பத்திரிகையாளர்கள். அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானத்தில்... ‘ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஹை கமிஷனர் அளிக்கும் ஆலோசனைகளை, உதவிகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று ஒரு உறுதி தொனி இருந்தது.

ஆனால், அதில் இந்தியா கொண்டுவந்த திருத்தமோ.. ஐ.நா. மனித உரிமைப் பேரவை அளிக்கும் எந்த ஆலோசனையும் உதவியும் இலங்கை அரசின் ஆலோசனைப்படிதான் இருக்க வேண்டும்’ என்று திருத்தப்பட்டது. இலங்கை உள்ளுக்குள் ஆயிரமாயிரம் நன்றிகளை இந்தியாவுக்கு கூறியிருக்கும். அன்று போருக்கு ஆயுதம் கொடுத்த உதவியைவிட மிகக் கொடிய உதவி இந்தத் திருத்தம் கொடுத்து உதவியது.

இன்னொரு கேள்வியும் இந்த வாக்கெடுப்பு மூலம் எழுப்பப்படுகிறது. ‘‘இந்தியா மூலம் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உதவியாகப் பெறும் பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்த்து வாக்களித்துள்ளன. ஆக ஆசியாவில் இந்தியாவை அவர்கள் மதிக்காமல் சீனா பின்னால் செல்லத் தயாராகின்றனர் என்பதை இது காட்டுகிறது.

அதேநேரம் இந்தியா இந்த ஆசிய நாடுகளிடம், ‘உள்நாட்டு நிர்ப்பந்தங்களால் நாங்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறோம். நீங்கள் இதை உறுதியாக எதிர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இலங்கைக்கு, தான் ஆதரவாகக் களமிறங்க முடியாவிட்டாலும் தனது நட்பு நாடுகளை உசுப்பிவிட்டிருக்கிறது என்றும் கருத இடமிருக்கிறது.

இது ஒருபக்கம் என்றால் ஆசியாவில் சீனா பெரிதா, இந்தியா பெரிதா என்ற வல்லாதிக்கப் போட்டியை இந்த வாக்கெடுப்பு மூலம் இன்னும் பெரிதாக வளர்த்துவிட்டு தன் வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறது அமெரிக்கா’’ என்கிறார்கள் உலக நிலவரம் புரிந்தவர்கள்!

எப்படியோ இலங்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நேரடிக் கண்காணிப்பிலிருந்து சற்றே தள்ளி வைத்திருக்கிறது இந்தியா. இந்த ‘உதவியை’ இலங்கையும் மறக்காது! தமிழர்களும் மறக்கமாட்டார்கள். ஏனென்றால் தமிழர்களுக்குத் தெரியும் அது நேரு இந்தியா... இது வேறு இந்தியா என்று!

நன்றி: ஆரா (தமிழக அரசியல்)

வங்கிக் கடன்: வழிமுறை!

தமிழகத்தில் சமீப காலமாக வங்கிகளின் வாராக் கடன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்விக் கடனும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களும் வாராக் கடனாக மாறி வருகிறது. இந்நிலையில், இனி யார் கடன் கேட்டு வந்தாலும் அவர்களின் பின்னணியை முழுமையாக விசாரித்தபிறகே, கடன் தருவது என்கிற முடிவுக்கு வங்கிகள் வந்துள்ளன.
ந்த இக்கட்டான நிலையில் நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கடன் மனுவை வங்கிகள் தள்ளுபடி செய்யாமல் இருக்க, உங்களுக்கு கட்டாயம் கடன் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

1. இதற்கு முன் வங்கி கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதாவது கடனுக்கான மாதத் தவணையை சரியான தேதியில் கட்டாமல் அபராதத்துடன் கட்டியிருந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு நியாயமான காரணத்தை எடுத்துச் சொன்னால், உங்களுக்கு நிச்சயம் கடன் கிடைக்கும்.
2. உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை, சரிவர பராமரிக்கப்படவில்லை என்று தெரியவந்தால், காசோலை கொடுத்து பணம் இல்லாமல் திரும்பி இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இங்கேயும் நியாயமான காரணம் இருந்தால் எடுத்துச் சொல்லி, கடன் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3. எந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும், எந்த கிரெடிட் கார்டு கடன் இருந்தாலும் அவற்றை நீங்கள் சரியாகத் திரும்ப கட்டாத பட்சத்தில் உங்கள் பெயர் சிபிலில் இடம் பெற்றுவிடும். சிபிலில் உங்கள் பெயர் வந்து விட்டால், உங்கள் கடன் மனு நூறு சதவிகிதம் தள்ளுபடி ஆகும். முதலில் அந்த கடனை கட்டி, சிபிலில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே மீண்டும் உங்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
4. கடந்த மூன்றாண்டு களில் நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில், உங்கள் கடன் மனு நிராகரிக் கப்படும். எனவே, வரித் தாக்கல் செய்துவிட்டு, வங்கி வாசலை மிதிப்பதே சரி.
5. ஒருவருடைய சம்பாத்தியத்தில் 40 சதவிகிதம் மாதத் தவணை கட்டும் அளவுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். நீங்கள் ஏற்கெனவே வேறு சில கடன் வாங்கியிருந்து, அதற்கு மாதத் தவணையாகப் பெரும் பணம் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு கடன் கிடைக்காது. எனவே, மற்ற கடன்களை முதலில் அடைத்துவிட்டு, புதிய கடனை கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
6. அதிக தொகை கடனாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, மனைவி அல்லது மகன்/மகளை இணை விண்ணப்பத்தாரராக (சிஷீணீஜீஜீவீறீநீணீஸீt) காட்டுகிறார்கள் பலர். இவர்களில் யாரேனும் ஒருவர், வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை என்கிற விவரம் சிபில் அறிக்கை மூலம் தெரிய வந்தால், உங்கள் கடன் மனு தள்ளுபடியாகும். எனவே, உங்கள் இணை விண்ணப்பத்தாரர் ஏற்கெனவே வாங்கிய கடனை சரியாகத் திரும்ப கட்டியிருக்கிறாரா என்று பாருங்கள்.
7. இணை விண்ணப் பத்தாரர் சகோதரர், சகோதரி, நண்பராக இருந்தாலும் உங்கள் கடன் மனு தள்ளுபடியாக வாய்ப்பிருக் கிறது. மனைவி, கணவர், பெற்றோரை மட்டுமே இணை விண்ணப்பத்தாரராக வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்.
8. ஒருவர் ஒரு வேலைக்குச் சேர்ந்து மிகச் சில ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கடன் மனு தள்ளுபடி ஆவதற்கு வாய்ப்புள்ளது. பணி நிரந்தரமாகி மூன்றாண்டுகள் கடந்திருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.
9. நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யாராவது வாங்கிய கடனுக்கு நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டு, அவர் அந்த கடனை சரியாக கட்டவில்லை எனில், உங்களுக்கு கடன் கிடைக்காது. நீங்கள் கேரண்டர் கையெழுத்து போட்டவர் கடனைத் திரும்பக் கட்டினால் மட்டுமே உங்களுக்கு கடன் கிடைக்கும்.
10. ஏற்கெனவே கடன் வாங்கி சரியாக திரும்பக் கட்டாமல் போன ஒருவரின் வீட்டு முகவரியும், உங்கள் வீட்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஒரு குழப்பம் நடந்திருப்பது உங்களுக்குத் தெரிந்தால், அதை ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு கடன் கிடைக்கும்.