Wednesday, November 30, 2011

வெள்ளச் சேதத்தைத் தவிர்க்க சில யோசனைகள்..!


தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய வடகிழக்குப் பருவமழை, மிகப் பெரிய பாதிப்பை ஆங்காங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. குறிப்பாக... டெல்டா மாவட்டங்கள், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி மிகப் பெரிய மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது.கடந்த பல ஆண்டுகளாகவே... மழை, வெள்ள பாதிப்பு... அதையட்டிய நிவாரணங்கள் என்றே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது! அதன் தொடர்விளைவாக, 'வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு... தடுப்பு அணை கட்ட 100 கோடி ஒதுக்கீடு! தூர் வார 300 கோடி ஒதுக்கீடு' என்று படாடோப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கோடிகளும் கரைக்கப்படுகின்றன. ஆனால், 'நிரந்தரத் தீர்வு' என்பதுதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முன்பெல்லாம் இப்போது பெய்வதைவிட அதிகளவு மழை பெய்தது. அந்த சமயங்களில் விவசாய நிலங்களும் அதிகம். ஆனாலும், பாதிப்புகள் வந்ததில்லை. அதற்கான காரணம், மன்னராட்சி காலங்களில் கடைபிடிக்கப்பட்ட சிறந்த நீர் நிர்வாக முறைகள்தான். ஏரி, குளங்களில் குறிப்பிட்ட கொள்ளளவைத் தாண்டி நீர் மட்டம் உயரும்போது... வெளியேற வசதியாக மறுகால் அமைப்புகள் இருந்தன. மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீர், ஆறு, கடல் என கலந்துவிடும். தற்போது மறுகால் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதனால்தான் குளங்கள், ஏரிகளில் உடைப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் பெரிய மழை பெய்தாலும், நம்மால் சமாளிக்க முடிவதில்லை.பொதுப்பணித்துறை விதிகளின்படி, நீர் வரும் வாய்க்காலின் இரு கரைகளிலும் வாகனங்கள் போகும் அளவுக்கு இட வசதி (பாதை) இருக்க வேண்டும். வாய்க்காலில் உடைப்பு, விரிசல் ஏற்பட்டால் இந்த இடைவெளி மூலமாகத்தான் சீரமைக்க வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்வார்கள். விவசாயிகளும் இந்தப் பாதைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது வாய்க்காலின் கரைகள்கூட பட்டா நிலங்களாக மாறியிருக்கின்றன. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் மின் இணைப்புகள்கூட கொடுக்கப்பட்டிருப்பதுதான் வேதனை.முந்தையக் காலங்களில் நீர் வரத்து வாய்க்கால்கள், வடிகால்கள் போன்றவற்றை முறையாகப் பராமரித்தார்கள். அதில் நாம் தற்போது கோட்டை விட்டிருப்பதுதான் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம்.


வருவாய்த் துறை பதிவேட்டின்படி தமிழகத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நீர் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பத்தாயிரத்துக்கும் குறைவான நீர் ஆதாரங்கள்தான் பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன. சென்னையைச் சுற்றி மட்டும் 240 ஏரி மற்றும் குளங்கள் இருப்பதாக பதிவேட்டில் உள்ளது. ஆனால், 40 நீர்நிலைகளைத்தான் பார்க்க முடியும்.குளம், மடை, கால்வாய், ஆறு போன்றவற்றின் உறுதித்தன்மையைத் தொடர்ந்து கவனித்து வருவதற்காக, 'லஷ்கர்’ என்கிற பதவி பொதுப்பணித்துறையில் முன்பு இருந்தது. தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் கவனித்து, பிரச்னைகள் இருந்தால் உடனே உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வார் லஷ்கர். அதன் மூலம் பல விஷயங்கள் சரி செய்யப்பட்டு வந்தன. அந்தப் பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, புதிய ஆட்கள் நியமிக்கப்படவே இல்லை.இப்படி முன்னோர்கள் கடைபிடித்த பழைய முறைகள் பலவும் மறைந்துபோனதன் விளைவுதான்... பேரிடர்களுக்குக் காரணமாக இருக்கிறது. அவற்றையெல்லாம் மீண்டும் கையில் எடுத்தால் மட்டும்தான், இனி வரும்காலங்களில் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். அதை விடுத்து ஒவ்வொரு ஆண்டும் மழைக்குப் பிறகு வெறுமனே நிவாரணம் கொடுப்பதில் அர்த்தமேயில்ல.


விகடன்

அண்ணா நூலகம்: அம்பானி வீட்டுக்கு ஆனதைவிட அதிக செலவு


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம்மாறும் விவகாரத்தில் அடுத்த திருப்பமாக அந்த நூலகத்தைக் கட்டுவதில் 250 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நூலகத்தை இடம் மாற்றும் விவகாரம் உயர்நீதிமன்றத்தை எட்டியிருக்கும் நிலையில், நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த ஊழல் விவகாரம் என்கிறார்கள்.


அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததும் அதை எதிர்த்து போராட்டக் குரல்கள் எழும்பத் தொடங்கியதும் அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் கருப்பன் சித்தார்த்தனைச் சந்தித்தோம்.
“அண்ணா நூற்றாண்டு நூலகம் வேண்டுமா? வேண்டாமா? என்ற வாதம் ஒருபக்கம் இருந்தா லும் இந்த பிரமாண்ட கட்டடத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கு ஆணித்தரமான புள்ளி விவரங்கள் உள்ளன. சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நேரத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தன. அந்த நேரத்தில் நூலகப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு சத்தமில்லாமல் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டனர்.

எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந் திருக்கும் அண்ணா நூலகம் 3,48,448 சதுர அடியில் அமைந்துள்ளது. 40,000 சதுரஅடிப் பரப்பை மட்டும் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள இடத்தை காலியாக வைத்துள்ளனர். வெறும் 40,000 சதுரஅடி பரப்புக்காக இவ்வளவு கோடிகளைச் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? கருணாநிதிக்கு வேண்டப் பட்ட ஈ.டி.ஏ. குழுமமே இந்தக் கட்டடப் பணிகளை மேற்கொண்டதற்குக் காரணம் என்ன?

இந்தக் கட்டடத்தைப் பராமரிப்பது என்பது யானையைக் கட்டி தீனி போடுவது போல. இதன் ஆண்டுப் பராமரிப்புச் செலவு மட்டும் ஏழு கோடி ரூபாய். புத்தகம் திருடு போகாமல் காப்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுக்காக 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பசுமைக் கட்டடம் எனக் காட்ட மரம், செடி கொடிகளுக்காக ஆறு கோடி ரூபாய் ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது.

இதைத் தவிர நூலகத்திற்கு ஆலோசனை, ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் வழங்க தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கணக்குப் பார் த்தால் 46 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவிடப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டைக் கட்டுவதற்காகக்கூட இவ்வளவு ஆலோசனைக் கட்டணம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவ்வளவு செல வழித்திருக்கிறார்கள்!

மொத்தத்தில் இந்த நூலகம் கட்டியதில் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. இதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அவரது ஆட்சிக் காலத் திய அரசு அதிகாரிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று பொரிந்து தள்ளினார் கருப்பன் சித்தார்த்தன்.

அடுத்து, நம்மிடம் பேசிய நூலகத் துறை அதிகாரி ஒருவர், “32 மாவட்ட நூலகங்களின் வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டிய பெரும் பணத்தை அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் கட்ட முடக்கிவிட்டார்கள். ‘அந்தந்த மாவட்ட நூலக வரிப் பணம் அந்தந்த மாவட்டங்களுக்கே செலவழிக்கப்பட வேண்டும்’ என காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவுகள் காற்றில் பறந்துவிட்டன’’ என்றார்.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நூலகத்துறை அதிகாரி ஒருவர், “இந்த விஷயத்தில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந் நூலகம் கட்டுவதற்காக பல துறைச் செயலர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டன. அண்ணா நூலகத்தைப் பொறுத்தவரையில் எல்லாம் வெளிப்படையாகவே நடந்தது’’ என் றார்.

அடுத்தடுத்து ரிலீஸாகும் அழகிரி ஆதரவாளர்கள். அதிமுக அதிர்ச்சி


ழகிரியின் ஆதரவாளர்கள் எவ்வளவு வேகமாக உள்ளே சென்றார்களோ... அதே வேகத்தில் விடுதலையாகிக் கொண்டிருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சி கடிதங்களாக மாறி, கட்சித் தலைமைக்குப் பறந்து கொண்டிருப்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாது. ஓராண்டு சிறையில் இருக்க வேண்டியதிருக்கும்..



அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு, மிரட்டல், மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அழகிரிக்கு நெருக்கமான பொட்டு சுரேஷ், பகுதிக் கழகச் செயலாளர்கள் ஜெயராமன் மற்றும் ஒச்சுபாலு, முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தி.மு.க.வில் பரபரப்பாகச் செயல்படக்கூடிய இவர்கள், ஜெயிலுக்குச் சென்றதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சோர்ந்து போனது. தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

முதலில் பொட்டு சுரேஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் வெளியே வந்தார். இதுவே மதுரை அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை அளித்தது. அடுத்து ஜெயராமன் மீதான குண்டர் சட்டம் கடந்த வியாழனன்று ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அட்டாக் பாண்டி, ஒச்சுபாலு, வி.கே. குருசாமி ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை வெள்ளிக்கிழமை உத் தரவிட்டது.

இப்படி, தி.மு.க.வினர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் கிடைப்பதும் அ.தி.மு.க. வட்டார த்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும் போது, “தி.மு.க. ஆட்சியில் மதுரையில் அழகிரியுடன் இருந்து நாட்டாமை செய்தவர்களில் ஐந்து பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. என்ன காரணத்துக்காக அவர்கள் கைதாகவில்லை? அதுமட்டுமல்ல, கைதானவர்களும் மளமளவென இப்போது வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வெளியே வந்ததால் மதுரையில் அடக்கி வாசிக்கும் தி.மு.க.வினர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விடுவார்கள். போலீஸார் சரியான ஆதாரங்களை அளிக்காமல் மேம்போக்காக நடந்து கொண்டதுதான் இதற்குக் காரணமா என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்.

“குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் தொடர்ந்து விடுதலை ஆவது குறித்து மதுரை வழக்கறிஞர் காந்தியிடம் கேட்டோம்.

“குண்டர் சட்டம் என்பது ஒரு கடுமையான சட்டம். இதைத் தவிர்க்கமுடியாத பட்சத்தில் தான் பயன்படுத்த வேண்டும். ஜெயிலில் இருக்கும் நபர் வெளியே வந்தால் அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதற்கான போதுமான காரணங்கள் இருந்தால், அவர் மீது குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்தலாம்.

சிவில் வழக்குகள் தொடர்பாக ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் இப்போது வழக்கமாக இருக்கிறது. அப்படிச் செய்தால் சட்டத்திலுள்ள ஓட்டையைப் பய ன்படுத்தி அவர் தப்பிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவர் மீது குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பிக்கும் முன், சட்ட நிபுணர்களின் ஆலோசனையை போலீஸார் பெறுவது அவசியம்.

குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி. ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, குண்டர் சட்டம் தொடர்பாக அவ்வப்போது வரும் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.

கைதாகி ஜெயிலில் இருப்பவர் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டருக்கும் காவல்துறைக்கும் அரசுக்கும் மனு செய்வார். அந்த அதிகாரிகள் காலதாமதமின்றி அந்த மனு மீது ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, அவர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது ரத்து செய்யமுடியாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையில் அந்த மனு மீது அதிகாரிகள் நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்கள். அந்தச் சூழலில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கைதானவர் வழக்குத் தொடருவது வழக்கமானதுதான். அப்படி வழக்குத் தொடரும்போது, ‘அவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ஏற்பட்டது’ என நீதிமன்றம் எழுப்பும் கேள்விக்கு அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் இல்லாமல் போய்விடுகிறது.

இந்த ஒரு ‘டெக்னிக்கல்’ காரணத்தை வைத்தே பலர் வெளியே வந்துவிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகள்தான்’’ என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் வழக்கறிஞர் காந்தி.

தி.மு.க.வினர் மீதான குண்டர் சட்டம் தகர்வது குறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பொய்யான புகார்களின் பேரில் தி.மு.க.வினரை அ.தி.மு.க. .அரசு கைது செய்து வருகிறது. ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.வினர் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சி மீது வழக்குப் போடுங்கள் என ஆளும்கட் சியினர் நிர்ப்பந்திப்பதால் குண்டர் சட்ட நடைமுறையைப் பின்பற்றுவதில் அதிகாரிகள் கோட்டை விட்டுவிடுகின்றனர். இதனால்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட் டவர்கள் நீதிமன்றம் மூலம் வெளியே வந்து விடுகிறார்கள்’’ என்றார்.

லுமியா பேட்டரியை அப்டேட் செய்வதாக நோக்கியா தகவல்!

எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தான் ஒவ்வொரு எலக்ட்ரானிக் சாதனங்களும் செய்யப்படுகிறது. ஆனாலும் சில சமயம் ஏதாவது சில கோளாறுகள் நடந்து விடுகிறது.

அப்படி நோக்கியா லுமியா-800 மொபைலில் பேட்டரி குறைபாடு ற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த நோக்கியா லுமியா-800 மொபைலில் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதில்லை என்று டிக்கையாளர்கள் புகார் கூறியிருந்தனர்.இதையடுத்து, லுமியா பேட்டரி பிரச்சனைகளை ரிசெய்ய லுமியா பேட்டரியில் இரண்டு விதமான அப்டேட்டுகளை நோக்கியா செய்ய ள்ளது. அப்டேட் செய்யப்படுவதால் தற்போது இருக்கும் பிரச்னைகள் நோக்கியா லுமியா பேட்டரியில் இனி நிகழாது என்றுகருதப்படுகிறது.

இதில்முதல்அப்டேட் செய்யும் பணியை அடுத்த மாதமும், இரண்டாவது அப்டேட் செய்யும் பணியை வரும் ஜனவரி மாதமும் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் வசதியின் மூலம் லுமியா பேட்டரியின் செயல் திறன் மேம்படுத்தி டுக்கப்படும்.தவிர, இப்பொழுது 1,300 எம்ஏஎச் திறன் கொண்ட இந்தபேட்டரியின்செய்யும்திறனும்முழுமையாகஇருக்குமாறும்,1,450எம்ஏஎச்திறன்கொண்டபேட்டரியாகவும்மேம்படுத்திகொடுக்கஇருக்கிறதுநோக்கியாநிறுவனம்.எனவே,இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நோக்கியா லுமியா-800 மொபைலில் பேட்டரி பிரச்சனை இல்லமால் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீ.எம்.டபிள்யூ இந்தியா ,பயன்படுத்திய காரை விற்பனை செய்ய புதிய ஏற்பாடு

சொகுசு கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள பீ.எம்.டபிள்யூ நிறுவனம்,பீ.எம்.டபிள்யூ பிரிமியம் செலக்ஷன் என்ற பெயரில் பயன்படுத்திய கார்களை, மறுவிற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பீ.எம்.டபிள்யூ (இந்தியா) நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆண்ட்ரியாஸ் ஷாப் கூறியதாவது:உலகளவில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. இந்தியாவில், சொகுசு கார்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.




நடப்பு 2011ம் ஆண்டில், அக்டோபர் வரையிலுமாக, 8,042 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 70 சதவீதம் அதிகமாகும்.இந்தியாவில், சொகுசு கார் பிரிவில், நிறுவனம், 40 சதவீத பங்களிப்பை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்கும் வகையில், நிறுவனம் பல்வேறு முனைப்பு திட்டங்களை அமல்படுத்திவருகிறது.அதன்படி, நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெற்று, புதுப்பித்து அதை மறு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, 5 ஆண்டுகள் அல்லது 1.20 லட்சம் கி.மீ. வரை பயன்படுத்திய கார்களே, நிறுவனத்தின் "பிரிமியம் செலக்ஷன்' என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்படும்.இவ்வகையான கார்களுக்கு, 2 வருடங்கள் அல்லது 2 லட்சம் கி.மீ. வரை வாரண்டி வழங்கப்படும். இதற்கு, 13 சதவீத வட்டியில், நிறுவனத்தின் சார்பில் கடனுதவியும் வழங்கப்படும்.உதாரணமாக, நிறுவனத்தின் "320டி' என்ற மாடலின் புதிய கார் விலை, 28 லட்சம் ரூபாய். இது, 3 ஆண்டுகளுக்கு பிறகு, 16 முதல் 20 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக, நடுத்தர மக்களும் சொகுசு கார்களை வாங்க முடியும்.நிறுவனத்தின் சொகுசு கார்கள், சென்னை, மும்பை, பூனே, லூதியானா, குர்கான், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட, 7 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.நிறுவனத்தின் இணையதளத்தில், பயன்படுத்திய காரின் விற்பனை குறித்த, அனைத்து தகவல்களும் தெளிவாக இடம்பெற்றுள்ளன.பயன்படுத்தப்பட்ட கார் என்பதற்கான அடையாளம் தெரியாத வகையில், சிறந்த தொழில்நுட்ப சோதனைக்கு பிறகு, இக்கார்கள் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு ஆண்ட்ரியாஸ் ஷாப் கூறினார்.

அந்நிய முதலீட்டால் அண்ணாச்சி கடைகளுக்கு ஆபத்தா?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு’ என்ற ஆக்டோபஸ் கரங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் கொடுத்தது, அது இந்தியா முழுவதும் விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் அனலை மூட்டியிருக்கிறது


பன்னாட்டு கம்பெனிகளைப் பொறுத்தவரை ஒரே நிறுவனத்தின் பொருட்களை விற்பதற்கு நூறு சதவிகிதமும் பல நிறுவனத்தின் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் விற்பதற்கு 51 சதவிகித அனுமதியையும் வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் அரசு இதற்கு சொல்லும் காரணம்.

ஆனால், வால்மார்ட், டெஸ்கோ, மெட்ரோ எனப் பல பன்னாட்டு கம்பெனிகள் சில்லறை வர்த்தகத்தில் கால் வைத்தால் இந்தியா முழுவதும் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டி ருக்கும் முப்பது கோடிக்கும் மேலானவர்கள் பாதிப்படைவார்கள். அதன்தொடர்ச்சியாக பல லட்சம் பேர் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுவார்கள்’ என எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்களும், வணிகர் சங்கப் பிரதிநிதிகளும்.

இதுபற்றி விரிவாகவே பேசினார் ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்’ பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.

“அந்நிய முதலீடு என்றால் என்னவென்றே இன்னமும் பொதுமக்களுக்கும், வியாபாரிகள் பலருக்கும் புரியவில்லை. ஆரம்பத்தில் நம் ஊர் குளிர்பானங்களை விட குறைந்த விலைக்கு வந்த வெளிநாட்டு குளிர்பானங்களின் இன்றைய விலை என்ன என்று பார்த்தாலே தெரிந்துவிடும். அதுமட்டுமல்ல, இன்று உள்ளூர் கம்பெனிகளும் அடியோடு காணாமல் போய்விட்டன. நமது ஊர் தண்ணீரில் குளிர்பானம் தயாரித்து அவர்கள் நாட்டுக்கு கோடி கோடியாக பணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள். நம்மூர் கு ளிர்பானத்துக்கு வந்த கதைதான் இனி மற்ற பொருட்களுக்கும் வரப் போகிறது.

அந்நிய நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்’ நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு 18 லட்சம் கோடி ரூபாய்! இந்தத் தொகையை நமது வணிகர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இருபது லட்சம் வணிகர்களும், அவர்களைச் சார்ந்து ஒரு கோடித் தொழிலாளர்களும் உள்ளனர். இந் தியா முழுவதும் 21 கோடிப் பேர்சிறு, குறு தொழில்களை நம்பியுள்ளனர்.சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு கம்பெனிகளை அனுமதிப்பதால், இவர்கள் அத்தனை பேரும் வேலை இழப்பார்கள்.




வால்மார்ட் கம்பெனியால், ‘இருபது லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்’ என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்கிறார். 21 கோடி பேரை அழித்துவிட்டு இருபது லட்சம் பேருக்கு வேலை கொடுப்பது நியாயமா?

சீனாவில் வால்மார்ட் நூறு சதவிகிதம் வெற்றி என்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் அங்கே உள்ள பல வால்மார்ட் நிறுவனங்களுக்கு சீல் வைத்துவிட் டார்கள். ஃபிரான்ஸ் உள்பட 14 நாடுகள் வால்மார்ட் உள்ளிட்ட கம்பெனிகளால் கடுமையான பொருளாதார சீரழிவைச் சந்தித்து விட்டன.

மத்திய அரசின் இந்த உத்தரவு திரும்பப் பெறப் பட வேண்டும். வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாக தமிழக அரசு முடிவெடுத்திருப்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக் கிறது. மத்திய அரசின் முடிவைக் கண்டித்து டிசம்பர் ஒன்றாம் தேதி கடையடைப்புப் போராட்டமும், அதைத் தொடர்ந்து தீவிர போராட்டங்களையும் நடத்த உள்ளோம்’’ என்றார் கொந்தளிப்போடு.

மத்திய அரசின் முடிவால் விவசாயிகளும் பெரும் கோபத்தில் உள்ளனர். அரசின் முடிவால் “விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் முப்பது கோடிப் பேர் வேறு பிழைப்பைத் தேடி ஓட வேண்டியிருக்கும்’’ என எச்சரிக்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கந்தசாமி.

“தோட்டக் கலையிலும், வேளாண் துறையிலும் பன்னாட்டு கம்பெனிகளை அனுமதித்ததன் விளைவாக பல விவசாயிகள் நிலங்களை அவர்களிடம் விற்றுவிட்டு அவர்களிடமே வேலைக்குப் போய் விட்டார்கள். இந்தியா போன்ற விவசாய நாடுகளில் இதுபோன்ற முடிவுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போதே நமது ஊரில் அமெரிக்க ஆப்பிள் கிலோ 150 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதுவே உள்ளூர் ஆப்பிள் கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என அரசு சொல்கிறது. உள்ளூர் உற்பத்திப் பொருட்களை குறைந்த விலைக்கும், வெளிநாட்டுப் பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம் என்பதுதான் அரசாங்கத்தின் சட்டமே. இது எவ்வளவு பெரிய அநியாயம்? நேரடி கொள்முதலில் வால்மார்ட் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பது வெறும் வாய்வார்த்தை மட்டும்தான்.

இதுவரை வந்துள்ள பன்னாட்டு கம்பெனிகளால் உயிரை விட்ட விவசாயிகள்தான் ஏராளம். மத்திய அரசின் விவசாய கொள்கை மாற வேண்டும். விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு முயற்சியாக வால்மார்ட் உள்ளே நுழைகிறதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு வலுவாக உண்டு. அவ்வளவு எளிதில் பன்னாட்டு கம்பெனிகள் கால் வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று ஆவேசப்பட்டார் கந்தசாமி.

நோய் தீர்க்கும் மருந்தைக் கண்டுபிடிக்காமல் மக்கள் வாயில் விஷத்தை ஊற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமே ஆன் லைன் வர்த்தகம் என்ற ஊக வணிகச் சூதாட்டம்தான். முதலில் இதைத் தடை செய்தாலே விலைவாசியைப் பெருமளவு குறைக்க முடியும். அடுத்து தவறான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை. நம்மூரில் உள்ள எண்ணெய் வித்துக்களை ஊக்குவிக்காமல் இன்னமும் பாமாயில், சோயா எண்ணெய்யை மட்டுமே நம்பியிருக்கிறோம். வெளிநாடு களுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்கிறோம்.

நமக்கு தட்டுப்பாடு என்றதும் அங்கிருந்தே இறக்குமதி செய்கிறோம். பாகிஸ்தானுக்கு லடாக் வழியாக வெங்காயம் ஏற்றுமதி செய்கிறோம். நமக்கு தட்டுப்பாடு வந்ததும் அங்கிருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தை கிலோ 120 ரூபாய்க்கு விற்றோம். இதற்குக் காரணம் முறையாகத் திட்டமிடாததுதான். இதையெல்லாம் சரி செய்யாமல் வெளிநாட்டு கம்பெனிகளை உள்ளே நுழைய அனுமதிப்பது மீண்டும் நம்மை இன்னொரு கூட்டம் அடிமைப்படுத்த வழி ஏற்படுத்திக் கொடுப்பது போலத்தான்’’ என எச்சரிக்கை மணியடிக்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் தா.வெள்ளையன்.

இப்போதைக்கு தமிழகத்தை யும் சேர்த்து பதினொரு மாநிலங்கள் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. அந்த வகையில் அது வணிகர்கள், விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது.

இருந்தாலும் பலவான் வகுத்ததே சட்டம் என்ற கதையாக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்துவிட்டால் சாதாரண மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளுக்கு அது மரண ஆபத்தாகத்தான் இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே உள்ளூர் நிறுவனங்கள் பல செயின் ஸ்டோர்களை நிறுவி ஷாப்பிங் அனுபவத்தை வேறு விதமாக மாற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அடுத்து பன்னாட்டு நிறுவனங்களும் வந்துவிட்டால் நிலைமை இன்னும் சிக்கல்தான் என் கிறார்கள்.

BRAI... இன்னுமொரு கறுப்புச் சட்டம்!


'ஜி.எம். விதைகள்' எனப்படும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை, எப்பாடுபட்டாவது இந்தியாவில் விதைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கு கைகட்டி சேவகம் செய்து கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கமோ... நரித்தந்திர வேலைகளில்
இறங்கி, 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம்’ (BRAI -Bio Technology Regulatory Authority of India Bill) எனும் சட்டத்தை நீட்டுவதற்கு தயாராகி வருகின்றது!

இந்நிலையில், 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பே இல்லாமல் செய்வதற்காகவே, உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற பெயரில் மிரட்டல் வேலையை ஆரம்பித்துள்ளது மத்திய அரசு. இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை' என்கிறபடி நாடு முழுக்கவே ஆங்காங்கே போராட்டங்கள் சூடுபிடித்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, நவம்பர் 11-ம் தேதியன்று சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. விவசாயிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானப் போரில் முன்னிலையில் இருக்கும் சென்டர் ஃபார் சஸ்டைனபல் அக்ரிகல்ச்சர் (Centre for Sustainable Agriculture) அமைப்பின் ஆலோசகர் கவிதா குர்கந்தி பேசும்போது, ''மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்காக இங்கே செயல்படும் 'மரபணு மாற்று அங்கீகாரக் குழு'வின் (GEAC -Genetic Engineering Approval Committee)செயல்பாடுகள், சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளன. பி.டி கத்திரிக்காய் பிரச்னையின்போது, அறிவியல்பூர்வமான முறைகளை மேற்கொள்ளாமல், நம்பகத்தன்மையற்ற முறைகளில், சுதந்திரமான ஆய்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இக்குழு செயல்பட்டது.


'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.


இச்சட்டத்தின்படி, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உயிரினங்கள் மீது செய்த ஆய்வு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு எட்டாமல் ரகசியமாக வைத்திருக்க முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக்கூட தகவல் பெற முடியாது. தவிர, இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்க முடியாது.

சிவில் நீதிமன்றங்கள் தலையிடவும் முடியாது. அதனால், பாதிக்கப்பட்ட எவரும் நீதிமன்றத்துக்கே போக முடியாது. இப்படிப் பல பிரிவுகள் அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் துணை போகின்றனவே தவிர... பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ உதவக்கூடியவைகளாக இல்லை'' என்ற கவிதா,

''மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஆபத்தான ஒன்று. நவீன உயிரித் தொழில்நுட்பத்திடமிருந்து எல்லா உயிரினங்களின் ஆரோக்கியத்தையும்... இந்தியாவின் இயற்கை வளப் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் எதிர்பார்ப்பது... 'தேசிய உயிரினப் பாதுகாப்பு ஆணையம்’ (National Bio safety Protection Authority)என்கிற அமைப்பைத்தான்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

அரசு புரிந்து கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tuesday, November 29, 2011

ராணாவின் முதல் பாகம் கோச்சடையான்!

சூப்பர் ஸ்டாரின் ‘ராணா’ தொடங்கப்படுமா இல்லையா என்கிற கேள்விக்கு பதிலாக நிலவிய அதீத மௌனம் கலைந்தது. உடல்நலம் தேறி மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்ட ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே ‘கோச்சடையான்’ என்று தலைப்பிடப்பட்டு, அவரது அடுத்த படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு முன்பாக ‘ராணா தள்ளிப்போகிறது’ அல்லது ‘ராணா நிறுத்தப்பட்டது’ என்று வந்த அத்தனை செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இந்தப் படத்தின் வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ‘ராணா’வுக்காக அறிவிக்கப்பட்டிருந்த டீமில் இப்போது கே.எஸ்.ரவிகுமார் மட்டுமே ‘கோச்சடையானு’க்காக உறுதி செய்யப்பட்டிருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதப்போகும் ரவிகுமார், இந்தப்படத்தின் இயக்கத்தை மேற்பார்வை மட்டும் செய்யப்போகிறார். சரித்திரக் கதையாக உருவாகும் படத்தை இயக்கப்போவது ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் தான்.

ஏற்கனவே ‘சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் படத்தை ரஜினியை வைத்து உருவாக்கி இயக்கிய சவுந்தர்யா, அதே படத்தைத் தலைப்பு மாற்றி இன்னும் சில காட்சிகளை இணைத்து வெளியிடப்போகிறார் என்று ஒரு தகவலும் இருந்து வந்தது. அதுதான் இதுவா என்ற கேள்வியும் இப்போது எழ, ‘‘அந்தக் கதை வேறு, ‘கோச்சடையான்’ கதை வேறு... இது முற்றிலும் மாறுபட்ட புதிய படம்’’ என்று இப்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனிமேஷன் விஷயங்களில் கைதேர்ந்த சவுந்தர்யா, நவீன அனிமேஷன் தொழில்நுட்ப உத்தியான ‘பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் டெக்னாலஜி’யைப் பயன்படுத்தி படத்தை ‘3 டி’யில் உருவாக்க இருக்கிறாராம். இந்த உத்திதான் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘டின் டின்’ படங்களில் கையாளப்பட்டிருக்கிறது. ஆக, இந்தப்படத்தில் ரஜினி நடிக்க, அவரது ஆக்ஷன்களை உள்ளடக்கிய அனிமேஷன் ரஜினியையும் பார்க்கப்போகிறோம் என்பது சொல்லாமல் தெரிகிறது.

‘ராணா’ மெகா பட்ஜெட்டில் உருவாக விருக்கும் பிரமாண்டப்படம். அதில் நடிக்க தான் முழுமையாகத் தயாராகவில்லை என்று நம்பும் ரஜினி, அதுவரை காத்திருக்க வைக்க விரும்பாத தன் ரசிகர்களுக்கான ட்ரீட்டாகவும், ‘ராணா’ எப்படி வரும் என்பதற்கான வெள்ளோட்டமாகவும் ‘கோச்சடையானை’ பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறார் என்பது மட்டும் இப்போது புரிகிறது. அதை உறுதிப்படுத்தும் விஷயமாக ‘கோச்சடையான்’ ‘ராணா’வின் முதல் பகுதியாக சொல்லப்படுகிறது. 2012 ஆகஸ்டில் ‘கோச்சடையான்’ வெளியாக, இதன் சீக்குவலாக தயாராகும் ‘ராணா’வில் தன் வழக்கமான வேகத்துடன் தன் இயல்பான முகம் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்துவார் ரஜினி என்று நம்பலாம். அதுவரை கோச்சடையான் யார், அவரது கதை என்ன என்பது பற்றியெல்லாம் சுவாரஸ்யமான தேடல்களில் இறங்கலாம் மீடியாக்கள்.


முப்பதுக்குள் வரும் முடிவு

முதல்வர் ஜெயலிதா கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது ஆண்டுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிறது டாஸ்மாக். இந்த வருமானம், அரசாள்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், டாஸ்மாக் கடைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டால், கண்களில் ஓரம் நீர்த்துளிகளே வெளிப்படும். கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்தான் லட்சக் கணக்கானவர்களின் உடல்நலனைப் பாதித்து, அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை நடுவீதியில் நிறுத்தியிருக்கிறது. அதுவும் முப்பது வயதுக்குள்ளேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர் என்று மீள முடியா பெருந்துயரங்களுக்கு ஆளாகி, வைத்தியத்துக்கு செலவு செய்ய வழியற்ற நிலையில் இறந்து போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியும், சோகமும் கலந்த உண்மை. முப்பது வயதுக்குள் மேற்கண்ட பாதிப்புகள் மிகவும் அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்புகளின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் ஒருவர்.


கண்ணனுக்கு 27 வயது. சேலம்தான் சோந்த ஊர். இரண்டு ஆண்டுகளாக பொருத்தமான பெண்ணைத் தேடியலைந்து, அபிராமியை நிச்சயம் செய்துவைத்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்கள் ரொம்ப வற்புறுத்தியதால், ‘பார்ட்டி’ வைத்தார். மதுபான பார்ட்டி களை கட்டியபோது, திடீரென்று கண்ணனுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. விடிந்தால் கல்யாணம், என்ன செய்வது? ‘எப்படியோ சமாளி, தாலி கட்டியபிறகு டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்று நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்ய, திருமணம் முடிந்த கையோடு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த டாக்டர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை தரப்பட்டது. நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. கண்ணனைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கண்ணனுக்கு ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுரேந்திரன் நினைவுகளில் பெரும் சோகமாகத் தங்கியிருக்கிறது கண்ணனின் நினைவுகள். "அவருக்கு வந்த பிரச்சினை, அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் (acute pancreatitis). ரெகுலராக அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. முதன்முறையாக அன்றுதான் குடிக்கிறார். இந்த அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் முதன்முறையாகக் குடிப்பவர்கள் பலருக்கு வரும் பிரச்சினை. கண்ணனுடன் ஒரு வார்த்தை கூட பேசியிராத, முகத்தைச் சரியாகப் பார்க்கக்கூட அவகாசம் வாய்க்காத அந்தப் பெண், ‘எப்படியாவது காப்பாத்துங்க’ என்று பார்க்கும் டாக்டர்களை எல்லாம் கைகளைக் கூப்பி கெஞ்சியதுதான் இன்னும் என் நினைவுகளில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது" என்கிறார் டாக்டர் சுரேந்திரன் பெருமூச்சுடன்.


ஆண்டுதோறும் மதுகுடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடைக்குப் போய்ப்பார்த்தால் ஜேஜே என்று திரண்டிருக்கும் கூட்டத்தில் 20, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கூட்டம்தான் 60 சதவீதம் இருக்கும். "இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் உண்டு. இத்தகைய மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் நன்கு படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களும் உண்டு. பொதுவாக, பரம்பரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று லைஃப் ஸ்டைல் நோய்களாக மாறியுள்ள நிலையில், உடல் உழைப்பு இல்லாத டெட்லைன், டார்கெட் போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த நிலையில் இவர்கள் மதுப்பழக்கத்தையும் தொடரும்போது கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழத்தல், கிட்னி சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்ற அதிர்ச்சித்தகவலைத் தருகிறார், டி.டி.கே. மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்தால் இளைஞர்களின் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறும் டாக்டர் சுரேந்திரன், குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல், கணையம் பாதிப்பு என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும் அதுபற்றிக் கூறும்போது, "1969லிருந்து 77வரை இதே கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பை நாங்கள் முடித்த காலத்தில் acute pancreatitis Severe pancreatitis போன்ற பாதிப்புகள் பற்றி எல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பார்த்ததில்லை.


ரொம்ப அபூர்வமாக வட இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்களின் இறப்பு சதவீதம் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சர்வ சாதாரணமாக தினமும் நோயாளிகள் வருவதைப் பார்க்கலாம். தற்போது இறப்பு விகிதம் 70 சதவீதம். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் மிக அதிகம். ஐ.டி., மென்பொருள் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரல், கணையப் பாதிப்பு இன்று சர்வ சாதாரணம். மது குடிப்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரத்தோடு இணைந்தது என்பதால் அங்கு பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. இன்று வரையும் நவீன மருத்துவத்தில் ஜெர்மனி நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை முறையைத்தான் இங்கும் அளிக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல வேண்டும்... கடந்த மாதம் கொச்சியில் நடந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஜெர்மனி டாக்டர்கள் கலந்துகொண்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்போது வியக்கத்தகும் விதமாக மக்களிடம் மதுப்பழக்கம் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், நம் நிலையோ அதற்கு நேரேதிராக உள்ளது" என்று வேதனையுடன் கூறுகிறார் டாக்டர் சுரேந்திரன்.

"எப்போதாவது குடிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் குடிப்பேன். பார்ட்டியில மட்டும்தான் குடிப்பேன். அளவான மதுப்பழக்கம் உடலுக்கு நல்லது’ போன்ற எல்லா காரணங்களும் குற்ற உணர்ச்சியில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தானே தவிர, அதில் உண்மையில்லை. ஒரு சொட்டு விஷமாய் இருந்தால் என்ன? ஒரு குடமாய் இருந்தால் என்ன? விஷம் விஷம்தான். பீர் மட்டும்தான் குடிப்பேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். மதுவின் பெயர்கள்தான் வேறு வேறானவையே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரே ரகமானவையே. சமீபத்தில் தில்லியில் பல வெளிநாட்டு டாக்டர்களும் கலந்துகொண்ட கல்லீரல் நோய்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கில் குடிப்பழக்கம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடல் உறுப்புகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்று மருத்துவ அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.


அடையாறில் உள்ள டி.டி.கே. மருத்துவ மையத்தில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது. "10 ஆண்டுகளுக்குமுன் இந்த கவுன்சலிங்கில் நடுத்தர வயதுப் பெண்கள், கணவனை இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி மீட்பது என்பதைத் தெரிந்துகொள்ள தவறாமல் கலந்துகொள்வார்கள். தற்போது இந்த கவுன்சலிங்கில் ஏராளமான நாற்பது, ஐம்பது வயது பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள். மிகச் சிறிய வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரித்து விட்ட அவலம் இது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

"குடிப்பழக்கம் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, மனம் சார்ந்ததும்கூட. கல்லூரி மாணவன் ஒருவன், தற்போது எங்கள் மையத்தில் தொடர் சிகிச்சையில் இருக்கிறான். 20 வயதான அவன், நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன், கொஞ்ச நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாகி விட்டான். குடும்ப கவுரவம் போய்விடுமே என்று பயந்தவர்கள் முதலில் வீட்டில் வைத்து, ‘இது தப்பு’ என்று சொல்லி திருத்தப் பார்த்திருக்கிறார்கள். யாருமே இல்லாத சமயத்தில் அமைதியாக இருப்பவன், வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது, பயங்கரக் கலாட்டா செய்வது, மிரட்டுவது, குடிப்பதற்கு பணம் தராவிட்டால் விருந்தினர்களுக்கு தருவதற்கு எடுத்துச் செல்லும் தேநீரைப் பிடுங்கி, எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது கொட்டுவது என்று அவன் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்க... இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம்" என்கிறார் டாக்டர் அனிதா.

"குடிக்கு அடிமையாகி, சிகிச்சைக்குச் சேர்க்கப்படுபவர்களின் ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலைக் குறைக்கவே 3லிருந்து ஐந்து நாட்கள் ஆகும். அதன் பிறகே சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வருவதும் சகஜம். இவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலைக் குறைப்பதற்கு 20 நாட்கள் ஆகும். முற்றிலும் மதுவை நிறுத்தி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு உடல் நிலை தேறும். ஆனால், அதே நேரம் ஒருமுறை கணையத்தில் பிரச்சினை வந்தால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதன் பிறகு மதுவையே தொடாவிட்டாலும் சிகிச்சையும் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை. கணையம் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அரசுக்கு ஆகும் செலவு 50 முதல் 60 லட்சங்கள்" என்று கூறுகிறார், அரசு மருத்துவர் ஒருவர்.

இதயநோய் மருத்துவரான டாக்டர் சொக்கலிங்கம், "கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் குடிப்பழக்கம் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஆல்கஹாலில் உள்ள எத்தனால் உடலில் போய் வளர்சிதை மாற்றம் ஆகும்பொழுது (metabolism) அசிட்டேன், அசிட்டால்டிஹைடு இரண்டும் மூளை, கல்லீரல், இதயத் தசைகள் போன்றவற்றைப் படுமோசமாகப் பாதிக்கிறது. இதயத் தசைகள் நாளடைவில் விரிவடைந்து இதயம் பெரிதாகும். 42 ஆண்டுகள் என் மருத்துவ அனுபவத்தில் சமீப காலங்களில் இளைஞர்கள் குடியால் மோசமாகப் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறேன். மது அருந்துபவர்களுக்கு hdl (tri glycerise) எனப்படும் நல்ல கொழுப்பிற்குப் பதிலாக, hdl 3 எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இது, ரத்தக் குழாய்களை அடைத்து, இதயத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்" என்கிறார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மது பாதிப்பால் ஏற்படும் உடல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இதனை வேறு விதமாகப் பார்க்கிறார். குடல் இரைப்பைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திர மோகன். "குடியின் பாதிப்பு தற்போது அதிகமாக இருந்தாலும் ஒரே நாளில் திடீரென்று இந்த எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை. வயிற்று வலி என்றால், தெரிந்த டாக்டரிடம் காட்டுவார்கள். இப்போது அதற்கான சிறப்பு மருத்துவரிடம் போக வேண்டும் என்று தெரிந்து வருகிறார்கள். அதனால் குறிப்பிட்ட துறையில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்றாலும் எந்த அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டாலும் மதுவினால் பாதிப்பு என்பது அதிகரித்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது" என்கிறார்.

"தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இதே அவல நிலைதான். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, குடிக்கு அடிமையாகும் பெண்கள் வட சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வருவதும் சகஜமான ஒன்றுதான்" என்று கூறி, வேதனையை அதிகரிக்க வைக்கிறார்கள் அங்கிருக்கும் மருத்துவர்கள்.

மதுப்பழக்கமுள்ளோர் வயது விகிதம்

50+ வயதினர் = 18%
15 - 20 வயதினர் = 10%
30 - 50 வயதினர் = 37%
20 - 30 வயதினர் = 35%


எப்படிப் பாதிக்கிறது?

கணையம்: மதுவின் முதல் டார்கெட் கணையம். இதிலிருந்து சுரக்கும் ஜீரண நீர், உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது (TONAR போன்ற அழகு சாதனப் பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்துவது அதன் பரவும் தன்மைக்காகவே). இது, கணைய நீர் வெளிவரும் பாதையைச் சென்று அடைத்துவிடும். இதனால், சுரக்கும் ஜீரண நீர் கணையத்திலேயே தங்கிவிடும். ஜீரணத்திற்காக சுரக்கிற நீர் வெளியேறாமல் அதே இடத்தில் தங்கும்போது கணையம் வீங்கத் தொடங்கும். இது, கழிவு நீர் தேங்குவது போன்றதுதான். இதனால், கணையத்தில் கிருமிகள் சேர்ந்து அதனை அழுகச் செய்துவிடும். அழுகிய பகுதியை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உமிழ் நீர், இரைப்பையில் சுரக்கும் நீர், கணைய நீர் மூன்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதில் ஒன்று கெட்டு விட்டதால், உணவு செரிமானம் ஆவது பாதிக்கப்படும்.

இரைப்பை: மதுவில் உள்ள ஆல்கஹால், இரைப்பையின் உட்புறம் உள்ள மிக்கஸ் என்ற மெல்லிய சுவரை அரித்து, அல்சர் வரவழைக்கும்.

கல்லீரல்: உடலின் பெரிய உறுப்பான கல்லீரலில் உள்ள செல்கள், மதுவில் இருக்கும் நச்சு பாக்டீரியாக்களால் அழிக்கப்படுகின்றன. 80 சதவீதப் பகுதியை வெட்டி எடுத்துவிட்டாலும் வளரும் இயல்பு கொண்டது கல்லீரல். ஆனாலும் அழிந்து போன செல்கள், கல்லீரல் முழுக்க திட்டுத் திட்டாக தழும்புகளாக மாறிவிடும். இதனால், கல்லீரல் வீக்கம், ஹெபாடிடிஸ், சிரோசிஸ் என்று பல பிரச்சினைகள் வரும்.

சிறு மூளை: நம்முடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது சிறு மூளை. ஆல்கஹால் குடித்தவுடன் நேராக சிறு மூளையைத்தான் பாதிக்கும். குடிப்பவர்களின் கட்டுப்பாடு மொத்தமும் போய்விடும். நேராக நடக்க முடியாது. ஒழுங்காகப் பேச முடியாது. ஆல்கஹாலுக்குப் பரவும் தன்மை அதிகம் என்பதால், வேகமாக ரத்தத்தில் கலந்து உடல் முழுக்கப் பரவும். இதனால், எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா உறுப்புகளும் பாதிக்கும். குறிப்பாக, இனப்பெருக்க்க உறுப்புகள் பாதித்து மலட்டுத் தன்மை அதிகமாகும். கர்ப்பமாக இருக்கும்போது, பெண்கள் மது அருந்தினால் குழந்தைக்கு மனநிலை பாதிக்கும். சீக்கிரத்திலேயே மறதி நோய் (dementia) வரும்.

மது குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலில் 20 சதவீதம், இரைப்பையில் உடனடியாகப் பரவி தங்கிவிடும். மீதி 80 சதவீதம், பெருங்குடலில் தங்கிவிடும். மது குடித்த 20 நிமிடங்களில் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு உயரும். குடித்த மூன்று நாட்களுக்கு உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் என்று அனைத்துப் பாகங்களிலும் ஆல்கஹால் அப்படியே தங்கியிருக்கும்.

எல்லா மது பானங்களைத் தயாரிக்கும்போதும், பார்லி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இவற்றை ஈஸ்ட் சேர்த்து நொதிக்கச் செய்கிறார்கள். அத்துடன் சர்க்கரை சேரும்பொழுது எத்தில் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது. இத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்பர், சோடியம் குளோரைடு, சோடியம் தியோசல்பர், கால்சியம் கார்பனேட் போன்ற எல்லா வகையான உப்புகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த உப்புகள் ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொள்ளப்படுவதால், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில் இவை படிந்து, தமது விஷம வேலைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

போலி நம்பிக்கைகள்

இளைஞர்களிடையே ஒரு போலி நம்பிக்கை உள்ளது. மது குடிப்பதற்குமுன் சில மாத்திரைகளை போட்டுக் கொண்டால் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்காது என்று. ஆனால், யாருக்கும் அது என்ன மாத்திரை என்று தெரியாது. நண்பர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் தங்கள் பார்ட்டியில் சேர்த்துக்கொள்ள வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து ஏமாற்றுவார்கள். ஏமாற வேண்டாம். எந்த முன்னெச்சரிக்கைச் செயலும் மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்காது.

அதேபோல கள்ளு குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உண்மையில்லை. பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் இயற்கையானவை என்பதால் அவற்றால், உடல் நலத்திற்கு நல்லது. ஆனால், கள் அப்படியல்ல. புளிக்க வைப்பதால் இதில் பாக்டீரியாக்கள் அதிகம். இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர, கள் என்கிற பெயரில் மாத்திரைகளைப் போட்டும் ஏமாற்றுவார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதி.

வசூல்ராஜா

இந்த ஆண்டு எப்படியும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. தினமும் சுமார் 38 கோடி ரூபாய் வருவாய் தரும் துறையை உள்ளாட்சித்தேர்தலுக்காக ஐந்து நாட்கள் மூடிவிடப் போவதாக அரசு அறிவித்தவுடன் அதற்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் விற்பனை வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகரித்தது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் என்று எல்லா வகை மதுபானங்களும் கடை திறந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சொன்னார்.

அலைமோதும் கூட்டத்தைப் பார்த்து, எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு குவார்ட்டருக்கு 3 ரூபாய் அதிகம் கொடுத்தவர்கள், அன்று 10 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அரசுக்குச் சொந்தமான 6,500 மது விற்பனைக் கடைகளில் வேலை செய்யும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கும் அன்று நல்ல வருவாயாம். இப்படி கூடுதலாக வசூலான பணம் மட்டும் ஒரே நாளில் கிட்டதட்ட 3 கோடி ரூபாய்.

கொக்கு தலையில் வெண்ணெய்!


சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, பல இலச்சினைப் பொருள் விற்பனைக் கடைகள் என்றால் 51 விழுக்காடும், தனிஇலச்சினைக் கடைகள் என்றால் 100 விழுக்காடும் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன், கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸýம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடாகிய சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதையும், இந்தோனேஷியாவில் இத்தகைய அனுமதிக்குப் பிறகும் அங்கே 90 விழுக்காடு சில்லறைக் கடைகள் தொடர்ந்து நீடித்து இருப்பதையும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்த நினைக்கிறது.

இதனிடையே, அன்னிய முதலீட்டுக்கு ஆதரவான அமைப்புகள் ஒன்று சேர்ந்து தங்கள் நியாயத்தைப் பத்திரிகைகள் மூலம் பதிவு செய்யத் தொடங்கிவிட்டன. இங்குள்ள ஷாப்பிங் மால் போன்ற உள்ளூர் முதலாளிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ அதையேதான் அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்களும் செய்யப்போகின்றன. ஏன் இந்த பயம்? ஏன் இந்த இரண்டுவகை நியாயங்கள்? என்று புன்னகையுடன் கேள்வி எழுப்புகின்றன.

இத்தகைய பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் வந்தால், ஆங்காங்கே குளிரூட்டு வசதிகளுடன் காய்கறிகளைப் பாதுகாத்து, விலையேற்றத்தை ஒரே சீராக வைக்க முடியும். இதனால் விவசாயிகளுக்குத்தான் அதிக பயன் என்று மத்திய அரசின் இந்தத் திட்டத்தை வரவேற்கும் தொழில்நிறுவன கூட்டமைப்புகள் கூறுகின்றன.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், 60 லட்சம் பேருக்கு சரக்குகள் கையாளும் தொழில்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்லும் வாதங்கள் எந்த அளவுக்கு சரியான புள்ளிவிவரம் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

மத்திய அரசு சொல்வதைப்போல முக்கியமான 53 நகரங்களில் மட்டுமே இந்த பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் தங்கள் கடைகளைத் திறக்கப் போகின்றன என்றால், அதிகபட்சம் ஒரு நகரில் 50 கடைகள் என்றாலும் 2,650 கடைகள்தான் திறக்கப்படலாம். இதனால் ஒரு கோடிப் பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிவிட முடியும் என்பது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் கதையாகத்தான் இருக்கும்.

51 விழுக்காடு முதலீடு செய்யும்பட்சத்தில் 50 விழுக்காடு முதலீட்டை, தொழில் வர்த்தகப் பின்புலக் கட்டமைப்புக்காக ஊரகப் பகுதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. அதாவது, இவர்கள் தங்கள் அங்காடிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வது, உற்பத்தி செய்வது, பதனிடுதல் அல்லது பாக்கெட்டில் அடைத்தல் ஆகிய பணிவாய்ப்புகளைக் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடாது என்பது இந்த நிபந்தனைக்குப் பொருள். ஆனால், இதனை கண்காணிக்கப் போவது யார்? இதைக் கண்காணிக்க இயலுமா? அதை மாநில அரசு செய்யுமா அல்லது மத்திய அரசு செய்யுமா?

பன்னாட்டு நிறுவனங்களின் செய்கைகளை நமது அதிகார வர்க்கம் கண்காணித்து நெறிப்படுத்தும் என்பதை நாம் நம்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு 100 விழுக்காடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தனியாக ஒரு கம்பெனி தொடங்கி, நிலங்களைச் சொந்தமாக வாங்கியோ, குத்தகை எடுத்தோ விவசாயம் செய்யலாம். காய்கறி விளைவிக்கலாம். அதாவது காலப்போக்கில், சிறு விவசாயிகள் கபளீகரம் செய்யப்பட்டு அவர்கள் விவசாயக் கூலிகளாகவும், நகரங்களில் ரிக்ஷா தொழிலாளர்களாகவும் கைவண்டி இழுப்பவர்களாகவும் கூலியாள்களாகவும் காவலாளிகளாகவும் ஏவலாளிகளாகவும் பிழைப்பை நடத்துவார்கள் என்று பொருள்.

மருந்து தயாரிப்புத் துறையில் 100 விழுக்காடு முதலீட்டுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் 100 விழுக்காடு முதலீட்டில் புதிய கம்பெனிகள் தொடங்காமல், இங்குள்ள புகழ்பெற்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடும், ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீடும் அனுமதிக்கப்பட்டுவிட்டது. விமானப் போக்குவரத்துத் துறையில் அன்னிய முதலீடு 26 விழுக்காடு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுவிட்டது.

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

கனிமொழிக்கு ஜாமீன்! -டெல்லி திருப்பம்!

"டிசம்பர் 1! சோனியா ஆட்சிக்கு கலைஞர் தரும் ஷாக்'’ என்ற தலைப்பில், கலைஞர் தனக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டதையும், சி.பி.ஐ.மூலம் கேம் ஆடும் காங்கிரஸுக்கு அவர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தயாராகிவிட்டதையும் கடந்த இதழில் ரிப்போர்ட் ஆக்கியிருந்தோம். காங்கிரஸுக்குக் கூட்டணி மூலம் கைகொடுத்துவரும் மம்தாவும் சரத்பவாரும் எதிர்ப்பான மனநிலையில் இருக்கும்
இந்த நேரத்தில் தி.மு.க.விடம் இருக்கும் 18 எம்.பி.க்களின் பலத்தை காங்கிரஸால் இழக்க முடியாது என்பதையும் அதில் சுட்டிக்காட்டியிருந்தோம்.


இதைத்தொடர்ந்து எங்கோ இடி இடிக்க, 23-ந் தேதி எவரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்பெக்ட்ரம் வழக்கிலேயே முதல்முதலாய் ஸ்வான் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அதிகாரிகளான ஹரிநாயர், கௌதம் தோஷி, சுரேந்திரா, யுனிடெக் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகிய 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி சட்டத்துறை வட்டாரத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


சுப்ரீம்கோர்ட் நேரடியாக இந்த வழக்கைக் கண்காணிப்பதால், வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றமும் டெல்லி உயர்நீதிமன்றமும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து ஜாமீனை நிராகரித்து வந்த நிலையில், இப்போது சுப்ரீம்கோர்ட்டே இப்படியொரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தலைக்கு 5 லட்ச ரூபாய் ஸ்யூரிட்டி கொடுத்து டில்லியிலேயே தங்கியிருக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு, ஜாமீனில் அவர்கள் 5 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டுவிட்டனர்.


முன்னதாக, இந்த வழக்கில் மேற்கண்ட 5 பேரின் சார்பாகவும் வாதாடிய ராம்ஜெத்மலானி, தீர்ப்பு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்ததைப் பார்த்து ‘""பெயில் உண்டா, இல்லையா என்பதை மட்டுமாவது அறி வித்துவிடுங்கள். மற்றபடி தீர்ப்பு முழுதையும் பிறகு நீங்கள் அறிவிக்கலாம்''’ என ஆர்வத்தோடு கேட் டார். அப்போது நீதி பதிகளோ, சஸ் பென்ஸ் புன்னகை யை மட்டும் வீசிவிட்டு எழுந்தார்கள். அவர்களின் சஸ்பென்ஸ் புன்னகை நல்ல தீர்ப்பாக இப்போது மலர்ந்துவிட்டது.


இந்தத் தீர்ப்பைக்கேட்டு திகார் சிறையில் இருக்கும் மற்றவர்கள் மகிழ்ச்சியடைந்த போதும், தீர்ப்பின் சாராம்சம் தங்களுக்கு சாதகமாக இருக்குமா? என்று பரிதவித்தபடியே இருந்தனர்.


அன்று மாலையில் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகுதான், அதில் சொல்லப்பட்ட சாராம்சத்தின் முழுவிபரமும் அவர்களுக்குத் தெரிந்தது. நம்பிக்கையூட்டும் வகையில் இருந்த தீர்ப்பின் வரிகள், அவர்களுக்கு உற்சாகச் சிறகுகளை முளைக்க வைத்துவிட்டது. அப்படி என்னதான் அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது?


"ஒருவருக்கு ஏன் ஜாமீன் வழங்கப் படுகிறது என்றால், அவர் விசாரணைக்கு ஒழுங்காக ஆஜராவார் என்ற நம்பிக்கையில் தான்.
குற்றவாளி விசா ரணைக்கு சரியாக ஆஜராகமாட்டார் என்று தெரிந்தால் அவரது ஜாமீன் உரிமையை ரத்து செய்யலாம். அதே சமயம் தண்டனை என்பது ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு வழங்கப்படுவது. குற்றம் நிரூபிக்கப்படும்வரை ஒவ் வொரு குற்றவாளியும் நிர பராதிதான்.


குற்றம் சாட்டப்பட்ட நபர், தண்டனையின் கசப்பான சுவையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத் திற்காக மட்டுமே அவரை சிறைவைப்பது என்பது மோசமான தண்டிக்கும் மன நிலையையே காட்டும். தண்டனை என்பது குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு வழங்கப்படுவது என்கிற நீதியின் தத்துவத்துக்கு நாம் மரியாதை கொடுத்தாகவேண்டும்.


இங்கு ஜாமீன் கோருபவர்களை வெளி யில் விட்டால் சாட்சிகளைக் கலைப்பார்கள் என்பதை போதுமான ஆதாரங்களோடு சி.பி.ஐ.. நிரூபிக்கவில்லை.


இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணை யை முடித்துவிட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் விசாரணை நடத்துவதற்காக இவர்களை சிறையில் அடைக்கவேண்டும் என்பதை ஏற்க முடியாது'’ என அழுத்தமாக சொல்லப்பட்டிருக் கிறது.


தண்டனையின் கசப்பை உணர்த்துவதற்காக ஒருவரை உள்ளே வைக்கக்கூடாது என்ற அழுத்தமான வரிகளை அதிகமாக நம்புகிறது திகார் தரப்பு.


ஸ்பெக்ட்ரத்தில் கைதான 17 பேரில் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால், மீதமுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்ட 12 பேரும் 2012 புத்தாண்டு சுதந்திர மனிதர்களாகலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கள்.


எனினும் எந்த நேரத்தில் எது நடக்குமோ என்கிற குழப்பமும் முழுதாக அவர்களை விட்டுவிலக வில்லை. காரணம், இதற்கு முன் அக்டோபர் 10-ந் தேதி ஆ.ராசா தவிர்த்த 13 பேரின் ஜாமீன் மனு பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. தரப்பு, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் மற்றும் ராஜீவ் அகர்வால், ஆசிப் பால்வா, கரீம் மொரானி ஆகியோரின் மனுக்களை எதிர்க்கவில்லை.


இதனால் அப்போதே கனிமொழி போன்றவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை சகல தரப்பிலும் உண்டானது. அப்போது உச்சநீதி மன்றம் கனிமொழி உள்ளிட்ட வர்களின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. ஏன் எதிர்க்கவில்லை என மறைமுகமாக கிடுக்கிப்பிடி போட.... இதைக்கண்ட பாட்டியாலா நீதிமன்றம் கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு அதிரடியாக ஜாமீனை மறுத்துவிட்டது. எனவேதான் டெல்லி உயர்நீதி மன்றத்தின் கதவைத் தட்டியது கனிமொழி, சரத்குமார் தரப்பு.
இதைத் தொடர்ந்து கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிசம்பர் 1-ந் தேதி விசாரிக்க இருந்த நிலை யில், 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கிய தீர்ப்பு வந்த தால் தீர்ப்பு வந்ததுமே டெல்லியில் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னையில் இருக்கும் கலைஞரைத் தொடர்பு கொண்டு, டிசம்பர் 1-வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. சுப்ரீம்கோர்ட்டே ஜாமீனுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதால் உடனடியாக கனிமொழி ஜாமீனை விசாரிக்கக் கோருவோம் என்று தெரி வித்ததோடு, அதற்கான ஆயத்தங்களிலும் இறங்கினார்.


ஷ்யூரிட்டிகளும் ரெடிசெய்யப் பட்டன. இதைத் தொடர்ந்து நவம்பர் 24-ந் தேதி இந்த வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், 25-ந் தேதி விசாரணை என ஒருநாள் ஒத்திவைக்க, தமிழகத்தில் இருந்து சென்றிருந்த தி.மு.க புள்ளிகளாலும் கனிமொழி குடும் பத்தினராலும் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


இருந்த போதும் ‘"நாளைக்கு ஜாமீன் கிடைத்துவிடும்' என கனிமொழிக்கு அனைவரும் ஆறுதல் சொல்லமுயன்றனர். லேசான காய்ச்சலால் சோர்வாக இருந்த கனிமொழியோ, ‘""இன்றோடு திஹாருக்குப் போய் 188 நாள் போய்விட்டது. தீர்ப்பு வரட்டும் பார்ப்போம். எப்போதும் எதுவும் நிச்சயமில்லை. இதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இந்த 6 மாத சிறை வாழ்க்கையில் எனக்கு எவ்வளவோ படிப்பினைகள். நிறைய சிந்தனைகளையும் திட்டங்களையும் வைத்திருக் கிறேன். தீர்ப்பு வரட்டும் பார்ப்போம்''’என்று சொல்ல, அனைவரின் விழிகளும் ஈரத்தில் பள பளத்தன.


ஆனால் கனிமொழியின் வழக்கறிஞர்களோ, ""இனி ஜாமீன் தராமல் இருக்க முடியாது. சி.பி.ஐ. ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்த்த வர்களுக்கே சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொ டுத்திருக்கும்போது, சி.பி.ஐ. அப்ஜெக்ஷன் தெரிவிக்காத நமது மனுவை எப்படி அது நிராகரிக்கும்'' என்றனர் உறுதியோடு.


முன்னாள் அமைச்சரான ஆ.ராசாவுக்கும் இனி பெயில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை யோடு, அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் வழக்கறிஞர்களும் கோர்ட்டுக்கு வந்த அவரை உற்சாகமாக முற்றுகையிட்டனர்.


ராசாவோ ""அவசரப்பட வேண்டாம். முதலில் வெற்றிகரமாக கனிமொழி வெளியே செல்லட்டும். அதன்பின் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் போட்டுக்கொள்ளலாம்''’என தனது வழக்கறி ஞர்களிடம் சொல்லிவிட்டார்.


டெல்லியில் முகாமிட்டிருக்கும் தி.மு.க. பிரமுகர்களோ, ""கனிமொழியோடுதான் சென்னை திரும்புவோம். இல்லையென்றால் டெல்லியின் உறவுக்கே குட் பை சொல்லிவிட்டுக் கிளம்புவோம்'' என்கிறார்கள் அழுத்தமாகவே.


ஸ்பெக்ட்ரம் போகும் போக்கைப் பொறுத்தே டெல்லியின் ஸ்திரத் தன்மை இருக்கும் என்பதால் இந்தியாவே கனி மொழியின் ஜாமீன் தீர்ப்பை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது.


-டெல்லியிலிருந்து
உமர் முக்தார்


திகாருக்குத் தடை!


பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, 21-ந் தேதி ‘இனி இந்த வழக்கின் விசாரணை திகார் சிறைக் குள்ளேயே இருக்கும் நீதிமன்றத்தில் நடக்கும் ‘என அதிரடியாக அறிவிக்க, ஸ்பெக்ட்ரம் சிக்கலில் சிக்கியிருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறை யிட்டனர். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் ஒருசேர உட்கார்ந்து விசாரித்தனர். இது நிர்வாக சம்பந்தப்பட்ட ஆணையா? என விசாரித்த நீதிபதிகள், கடைசியில் திகார் சிறையில் விசாரணை நடத்த தடை விதித்தனர்.