Tuesday, October 30, 2012

மதுரை ஆதீனத்துக்குள் அரசை நுழைய விடக்கூடாது' மிரட்டும் வழக்கு... மிரளும் மடாதிபதிகள்!



அருணகிரிநாதரை வெளியேற்றி, ஆதீன மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எடுப்பது தொடர்பாக அரசு தொடர்ந்த வழக்கு, 29-ம் தேதி மதுரை கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, அருணகிரிநாதர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். நித்தியை நீக்கினால் கண்டச்சனி விலகும் என நினைத்தவர், நித்தியும் தானும் சேர்ந்து உருவாக்கிய மதுரை ஆதீன அறக்​கட்டளையையும் கலைத்து விட்டதாக அவசரமாக அறிவித்திருக்கிறார். ஆதீன மடத்துக்குள் உள்ள நித்தியின் உடைமைகளை எடுத்துக்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார். இதை எல்லாம் நீதிமன்றத்தில் சொல்லி, தன்னை தற்காத்துக் கொள்ளலாம் என்பது ஆதீனத்தின் கனவு. ஆனால், இவரை வெளியேற்றியே தீரவேண்டும் என, மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர் ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன், ''இப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் அரசு நுழைந்தால், பிற்காலத்தில் தங்களது மடங்களிலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி அரசு தலையிடலாம் என்பது மடாதிபதிகள் சிலரது அச்சம். அதனால்​தான் பதறுகின்றனர். இளைய ஆதீனமாக அறிவிக்கப்​பட்ட ஒருவரை நீக்க வேண்டுமானால், 15 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அந்தப் பதிலில் திருப்தி இல்லை என்று சொல்லித்தான் அவரை நீக்க முடியும். அந்த நடை முறைகளை எல்லாம் பின்பற்றாமல் ஏதோ தினக் கூலியை வீட்டுக்கு போகச்சொன்னதுபோல், 'நித்தி யானந்தாவை அனுப்பி விட்டேன்’ என்கிறார் அருணகிரிநாதர். இதைப்பார்த்தால் நித்தியும் அருணகிரியும் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு அரசை ஏமாற்ற நாடகம் போடுகிறார்களோ என்று  சந்தேகமாக இருக்கிறது.
1974-ல் நடந்த மகாலிங்க தம்பிரான் வழக்கு, 1982-ல் நடந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் அம்பல​வான பண்டார சன்னிதி வழக்கு இந்த இரண்டிலுமே 'ஆதீனகர்த்தருக்கு இளைய ஆதீனத்தை நியமிக்க மட்டுமே உரிமை உள்ளது. ஒருவரை இளைய சன்னிதானமாக நியமித்த பிறகு குருவும் சிஷ்யரும் சகோதரர்களாகி விடுகி றார்கள். ஒருவரை சகோதரனாக அங்கீகரித்த பிறகு, உனக்கு என்னுடைய சொத்தில் பங்கு இல்லை என்று சொல்ல முடியாது. எனவே, இளைய மடாதிபதியை நீக்கியது செல்லாது’னு உச்ச நீதிமன்றம்  தீர்ப்புச் சொல்லி இருக்கிறது. இப்போது ஏதோ காரணத்துக்காக பதுங்கிப் போகும் நித்தி, நாளைக்கு இந்தத் தீர்ப்பை எடுத்துக்​கொண்டு உச்ச நீதிமன்றத்துக்குப் போனால், அவர் ஜெயிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்.  
தொடர்ந்து அவர் பேசுகையில், ''நாங்கள் இப்படி எல்லாம் சிந்திக்கிறோம். ஆனால், சில மடாதி​பதிகளும் இந்து அமைப்புகளும், 'இனிமேல் இந்த வழக்கில் வீரியம் காட்டாதீர்கள்’னு எங்களை நெருக் குகிறார்கள்; சிலர் மிரட்டுகின்றனர். 'ஆதீன மடத்தை அரசு எடுக்கக்கூடாது’ன்னு இப்ப அறிக்கை விடுகிற ராம.கோபாலன், இல.கணேசன் போன்றவர்கள், ஆபாசப் புகாரில் சிக்கியவர் ஆதீன மடத்துக்குள் நுழைந்தபோது எங்கே போயிருந்தனர்? இப்போது அருணகிரிநாதருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று அரசுக்கு உணர்த்தும் முயற்சியில் மடாதிபதிகள் சிலர் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் எங்களையும் அடக்கி வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் விடுவதாக இல்லை. நித்தி நீக்கத்துக்குப் பிறகு, அரசு இந்த விவகாரத்தில் வேகத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காகவே, மதுரை வழக்கில் எங்களையும் வாதியாக சேர்க்கச் சொல்லி மனு போட இருக்கிறோம். அருணகிரிநாதரை வெளியேற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்.
இதனிடையே, கடந்த 21-ம் தேதி இரவு மதுரை ஆதீனத்தைச் சந்தித்த திருப்பனந்தாள் காசிதிருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரானிடம், ''மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்துவதைத் தடுக்க மற்ற மடாதிபதிகள் முயற்சி செய்வதாகச் சொல்கிறார்களே?'' என்று கேட்டதற்கு, ''நித்தியானந்தா நீக்கம் முறைப்படி ரெக்கார்ட் ஆகாமல் இருக்கு. நீதிமன்றம் மூலமாகத்தான் இதைத் தீர்க்கணும். போய் ரொம்ப நாளேச்சேன்னுதான் மதுரை ஆதீன மடத்துக்குப் போனோம். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. மடத்தை கையகப்படுத்துவதாக அரசு முடிவெடுத்து, சட்டமும் அதை உறுதிப்படுத்தினால் யாராலும் அதை நிறுத்தி வைக்க முடியாது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இதற்குமேல் பேசுவதற்கில்லை'' என்று முடித்துக்கொண்டார்.
'நித்தியையும் அருணகிரிநாதரையும் சேர்த்தே வெளியேற்ற வேண்டும்’ என்று குரல் கொடுத்து வந்த மதுரை ஆதீன மீட்பு குழுவின் தலைவர் நெல்லை கண்ணன் இப்போது, 'ஆதீன மடத்தை அரசு ஏற்கக் கூடாது’ என்கிறார். இதுகுறித்து கேட்டதற்கு, ''மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தினால், சங்கர மடத்துக்கும் பங்கம் வரலாம்னுதான் ராமகோபாலன் போன்றவர்கள் பதறுகின்றனர். இந்தச் சர்ச்சைகளுக்கும் சட்டச் சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தகுதியான தம்பிரான் ஒருவரை இளைய பட்டமாக உடனடியாக நியமிக்க வேண்டும். அதன்பிறகு, அருணகிரிநாதரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். அவர் வெளியேறினால் அடுத்த நிமிடமே இளைய மடாதிபதி மதுரை ஆதீனப் பட்டத்துக்கு வந்துவிடுவார். இதுதான் சரியான வழி. விரைவில் ஆதீன மடத்துக்குள் நுழைந்து, இளைய மடாதிபதியை நியமிக்கக்கோரி அருணகிரிக்கு நெருக்கடி கொடுப்போம்'' என்றார்.
அருணகிரிநாதரோ, ''எங்களுடைய முடிவு இறுதியானது; உறுதியானது. இனிமேல் பக்தராகக்கூட நித்தியானந்தா இந்த மடத்துக்குள் வர மாட்டார். அவரது நீக்கத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்'' என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்துமுன்னணி அமைப்பாளர் ராமகோபாலனை நாம் தொடர்பு​கொண்ட​​போது, ''மதுரை ஆதீன மடம் உட்பட எந்த மடத்தையும் அரசு எடுத்துக்கக்கூடாது என்பது தான் எங்களது கருத்து. சங்கர மடத்துக்காக நான் இதைச்சொல்லவில்லை. சங்கர மடத்துக்காகவே நான் வாதாடி இருந்தாலும் என்ன தப்பு? அருணகிரிநாதர் ஊழல் செய்து விட்டதாகச் சொல்லி அவரை ஆதீன பொறுப்பில் இருந்து நீக்கச்சொல்லுகிறது அரசு. நான் கேட்கிறேன், அரசாங்கத்தில் எத்தனையோ ஊழல்கள் நடக்குது... அதற்காக தமிழக அரசை கர்நாடகா அரசு எடுத்துக்கலாமா? இந்திய அரசை சீனாவிடம் ஒப்படைப்பாங்களா? முடியாதுல்ல... அதுமாதிரித்தான் இதுவும். சைவ மடத்தில் ஒரு பிரச்னை என்றால், சைவ மடாதிபதிகள் கூடிப்பேசித்தான் அதற்கு ஒரு தீர்வை எடுக்கணும். அரசாங்கமோ மற்றவர்களோ யோசனை சொல்லலாமே தவிர, இதைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது'' என்றார்.
''இனி இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும்?'' என்று அடவகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''அருணகிரிநாதர் செய்திருக்கும் தவறுகள் குறித்து தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் வைத்திருக்கிறோம். இனி, தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிமன்றம்தான். நித்தியானந்தா நீக்கத்தால் தமிழக அரசின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை'' என்கிறார்.
நீதியின் கையில் ஊசலாடுகிறது அருணகிரிநாதரின் 'ஆதீன’ மகுடம்!

 துரத்தப்பட்டாரா வைஷ்ணவி? 
'நித்தியானந்தாவை நீக்கி விட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கில் மறுவிசாரணை வேண்டும். மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கேட்டு அருணகிரிநாதர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் செய்வதற்கான முயற்சிகள் நடக்கிறதாம். இந்த விவகாரத்தில், 'மேலும் மேலும் நித்தியானந்தாவை பகைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அருண கிரிநாதருக்கு திடீர் பிரேக் போட்டாராம் அவரது உதவியாளர் வைஷ்ணவி. இதில் கடுப்பான ஆதீனம், 'இன்னுமா நான் சீரழிய வேண்டும்’ என்று வைஷ்ணவியை கடுமையாகத் திட்டினாராம். அதனால், 'இனிமேல் மடத்துக்கு வர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக சொந்த ஊரான கச்சனத்துக்கு வைஷ்ணவி கிளம்பி விட்டதாக சொல்கிறார்கள்.
24-ம் தேதி காலையில் நாம் கச்சனத்துக்குச் சென்றபோது வீட்டில் இருந்தார் வைஷ்ணவி. விஷயத்தைச் சொன்னதும் திடுக்கிட்டது போல் காட்டிக்கொண்டவர், ''எனக்கும் சன்னிதானத்துக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. மழை பெய்து இருக்கிறது. வயல் வேலைகள் நடப்பதைப் பார்க்க வந்தேன். இதோ இன்னைக்கி மதியம் கிளம்பிடுவேன்'' என்று சொன்னவர், அப்போதே அருணகிரிநாதருக்கு போன் செய்தார். இவரது போனுக்காகவே காத்திருந்தவர் போல் உடனேயே லைனுக்கு வந்தார் அருணகிரிநாதர். அவரிடம் நாம் வந்திருக்கும் விஷயத்தை அப்படியே ஒப்பித்தார் வைஷ்ணவி. உடனே நம்மிடம் பேசிய அருணகிரிநாதர், ''எங்களுக்குள் சண்டை எல்லாம் எதுவும் கிடையாது. அப்படியே சண்டை வந்தாலும் உடனே சமாதானம் ஆகிடுவோம். இதுக்கு மேல அந்தப் பொண்ணுகிட்ட எதுவும் கேட்காதீங்க'' என்று கட்டளை போட்டார். அதன்பிறகு, வைஷ்ணவியும் அவரது தங்கை கஸ்தூரியும் கப்சிப் ஆகிவிட்டனர்.

''சின்மயி புகாருக்கும் ராஜன் கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதல்வர் பின்னணியா? திடுக்கிடும் தகவல்.


ட்டற்ற சுதந்திரத்துக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். இந்த விதி மீறப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பாடகி சின்மயி விவகாரம் ஓர் உதாரணம்! 
ட்விட்டர் வலைதளத்தில் அதிகமான எண்ணிக்​கையில் பின்தொடர்பவர்களைக் கொண்டவர் சின்மயி. ஏறத்தாழ ஒரு லட்சத்​துக்கும் மேலான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் தனது ட்விட்டரில் இடஒதுக்கீடு விவகாரம், தமிழக மீனவர்கள் படுகொலை போன்ற மிக சூடான, ஆழமான விவகாரங்கள் பற்றி சில பதிவுகளை வெளியிட, உடனேயே அதற்கு எதிர்வினைகள் எல்லா பக்கங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கின்றன. அந்த விவ காரம்தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி சின்மயியின் தாயாரைப் பற்றி அசிங்கமாக சில பதிவுகளை வெளியிடும் அளவுக்குப் போய் இருக்கிறது.  
இதை அடுத்துத்தான், கடந்த 18-ம் தேதி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தனது தாயாருடன் வந்த சின்மயி, 'வலை தளங்களில் தன்னைப்பற்றி மோசமான பதிவுகளை வெளியிடுபவர் ​களைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று புகார் கொடுத்தார். சின்மயி புகார் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு பேரை கைது செய்தது காவல்துறை. கைதானவர்களில் ஒருவர் தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரி உதவிப்பேராசிரியர் சரவணக்குமார். மற்றொருவர் அவிநாசியைச் சேர்ந்த ராஜமணாளன் என்ற ராஜன். இவர், ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ட்விட்டரில் தொடர்ந்து எழுதுபவர். தனியாக வலைதளமும் வைத்து அதிலும் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார்.
ட்விட்டரில் இவர்களுக்கும் பாடகி சின்மயிக்கும் இடையே என்னதான் நடந்தது? ராஜனின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ''கதை, கவிதை, சினிமா விமர்சனம் என தொடர்ந்து எழுதி வரும் ராஜன், ட்விட்டரிலும் தனது கருத்துக்களை வெளியிடுவதில் ஆர்வம் உள்ளவர். இந்தநிலையில், கடந்த மாதம், ஆங்கிலப் பத்திரிகை ஒன்று எழுதிய கட்டுரையில் ட்விட்டரில் அதிகப் பதிவுகளை வெளியிட்டவர்கள் என ஷ்ரேயா கோஷல், சேகர்கபூர், சின்மயி, ராஜன்... எனப் பெயர்களை வரிசைப்படுத்தி இருந்தது. 'எனக்கு அடுத்தபடியாக ராஜனின் பெயரை ஏன் வெளியிட்டீர்கள்? அவர் எங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு முக்கியமானவரா?’ என்று அந்தக் கட்டுரையை எழுதியவரிடம் அப்போதே சண்டை போட்டார் சின்மயி. இதையடுத்து, ராஜனை மறைமுகமாக ஆர் லீக்ஸ் என்று குறிப்பிட்டு, தனது பதிவுகளில் சின்மயி தொடர்ந்து தாக்கி எழுதிக் கொண்டு இருந்தார். ஆனால், ராஜன் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. அவர் நினைத்தால்கூட கூறவும் முடியாது. ஏனென்றால், அதற்கு முன்பே சின்மயி தன்னுடைய ட்விட்டர் நண்பர்கள் பட்டியலில் இருந்து ராஜனை நீக்கி விட்டார். ஃபேஸ்புக்கில்தான் சிலர், சின்மயி பற்றி அவதூறாக எழுதினர். அவர்களுக்கும் ராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ராஜன் மீது சின்மயி ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை'' என்றனர்.
விவரமறிந்த சிலரோ, ''சின்மயி புகாருக்கும் ராஜன் கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில நாட்களுக்கு முன், தமிழக முதலமைச்சர் ஜெய லலிதாவை மிகமோசமாகச் சித்திரித்து இலங்கைப் பத்திரிகை ஒன்று கார்ட்டூன் வெளியிட்டு இருந்தது. அதனுடன் மேலும் சில மோசமான வார்த் தைகளைச் சேர்த்து, தன் வலைதளத்தில் ராஜன் பரப்பினார். இதைச் சிலர் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வந்ததன் விளைவே ராஜனின் கைது. ஆனால், உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் விவகாரம் வேறு. இவர்தான் சின்மயியின் தாயாரைப்பற்றி கிண்டலாக ஆபாசம் தொனிக்கும் சில பதிவுகளை வெளியிட்டவர். அதற்கான எல்லா ஆதாரங்களையும் சின்மயி போலீஸிடம் கொடுத்துள்ளார். அதன்பேரிலேயே சரவணக்குமார் கைது செய்யப்பட்டார். இவர் செய்தது தவறு என்றால் சின்மயியும் தவறு செய்தவர்தான். இவருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு'' என்கிறார்கள். அரசியல், கொள்கை சார்ந்து விமர்சிக்கும்போது, தனிப்பட்ட முறையில் ஆபாசமாக எழுதுவதுதான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜிடம் பேசியபோது, ''யாராக இருந்தாலும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில், தனிஅறைக்குள் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் மூலம் யாரைப்பற்றியும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அப்படி செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் உள்ளது. பாதிக்கப்படுபவர்கள் இதை யாரிடம் சொல்வது, எப்படிப் புகார் கொடுப்பது என்று தடுமாறவும் தேவையில்லை. உடனடியாக சைபர் க்ரைமை அணுகலாம். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றுத்தர முடியும். அதேபோல், புகார் கொடுப்பவர்களும் தாங்கள் வெளியிட்ட பதிவுகளை மறைத்து விட்டு, தங்களுக்கு எதிரான பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் காட்டி புகார் அளிக்க முடியாது. இருவருக்கு இடையிலும் நடந்த அனைத்து உரையாடல்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் தொழில்நுட்பமும் எங்களிடம் உள்ளது'' என்றார்.
சமூக வலைதளத்தில் உலா வருபவர்களுக்கு இந்தச்சம்பவம் ஓர் எச்சரிக்கை!

உன் வீட்டில் எப்போதும் ஜெ... ஜெ... வெனக் கூட்டம்! எக்கோ அடித்த எம்.என்.விழா!


த்திரிகையில் முழுப்பக்க விளம்பரம், தடபுடல் விருந்து, கச்சேரி, கவியரங்கம், பரிசுப்பொருட்கள், வாண வேடிக்கை, விழா மலர் என அமர்க்களப்பட்டது எம்.நடராஜனின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!
சென்னை, பெரியார் திடலில் நாள் முழுவதும் நடந்தது விழா. 'பூலித்தேவனை நெஞ்சில் நிறுத்திய புலிப்படைத் தலைவா’, 'தமிழர்களின் இதயக்கனி’, 'மனிதர் குல மாணிக்கம்’, 'தமிழினத்தின் முகவரி’, என, திரும்பிய பக்கம் எல்லாம் டிஜிட்டல் பேனர்கள். 'நடராஜனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சொன்ன ஜெய லலிதாவின் பேச்சைக்கூட மதிக்காமல் வந்திருந்​தனர் அ.தி.மு.க. கரை வேட்டிகள்.
காலையில் கருத்தரங்கம் நடந்த நேரத்தில் நடராஜனுக்கு மதுரை ஆதீனம் செல்போனில் வாழ்த்துச் சொன்னார். இதை மேடையில் கவிஞர் சினேகன் அறிவிக்க... கீழே உட்கார்ந்திருந்த நடராஜன் 'வேண்டாம்’ என சைகை காட்டினார். அதனால் வார்த்தைகளை மென்று முழுங்கினார் சினேகன். மதியம் பிரியாணி விருந்துக்குப் பிறகு, லக்ஷ்மன் ஸ்ருதியின் கச்சேரி.
'இந்த இதயம் துடிப்பது...’ என்ற தலைப்பில் நடந்தது கவியரங்கம். 'நடராஜனைப் பற்றி பாட வேண்டாம். அதை அவர் விரும்பவில்லை’ என்று சொல்லியபோதும் கவிஞர்கள் இதயம் எம்.நடராஜனுக்காக துடித்தன. 'பெரியார் திடலில் ஆயுதபூஜை. உன் சேவைக்கு இங்கே நடக்கிறது ஆயுத பூஜை’ என்ற கவிஞர் நந்தலாலா, 'ஆனந்த நடராஜனின் பலம் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் செய்யும் ஆண்டவனுக்குத் தெரியும் நீ செய்யும் தொண்டு. ஆனால், ஆள்பவர்களுக்குத் (ஜெயலலிதா) தெரியவில்லையே’ என பஞ்ச் வைத்தார். அடுத்து மைக் பிடித்த கவிஞர் கிருதியா, 'உன் வீட்டில் எப்போதும் 'ஜெ... ஜெ’ எனக்கூட்டம் களைகட்டும். அப்படி வருகிறவர்களை காப்பாற்றும் புத்ததேவன் நீ. உன்னைச் சீண்டுவோருக்கு பூலித்தேவன்’ என்று சீறினார். 'ஏ.டி.எம். எந்திரம் நீ. உன்னை சொருகு கிறவர்களுக்குக்கூட பணத்தைத் தருகிறாய்’ என்றார் கவிஞர் இனியவன்.  
பிறகு, நிறைவுவிழா தொடங்கியது. எம்.நடராஜனுக்கு அதிபர் ஒபாமாவே(?) தன் கைப்பட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தது ஆச்சர்யம். அந்தக் கடிதத்தை பெரிய பேனராக வடிவமைத்து மேடையில் வைத்திருந்தனர். துபாயைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், 70 சவரன் தங்கச் சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்தார். பிரபாகரனின் பெரிய ஃபோட்டோவும் வழங்கப்பட்டது. 'தன் காரைக்கூட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் கட்டுவதற்காகக் கொடுத்துவிட்டு வாடகை வாகனத்தில்(!) நீங்கள் போவது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது’ என்று, சினேகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அளித்த கார் சாவியையும் தங்கச்சங்கிலியையும் அப்படியே பக்கத்தில் இருந்த பழ.நெடுமாறனிடம் தந்தார் எம்.நட ராஜன்.  
'தமிழனத்தைக் காவல் செய்கிறீர்கள். அதனால் உங்களை தமிழகம் கொண்டாடுகிறது’ என்றார் காசி.ஆனந்தன். 'நடராஜனைத் தேடி எத்தனை பதவிகள் வந்தாலும் அதை விரும்பாமல் தமிழர்களின் நலனுக்​காகப் பாடுபடுகிறார்’ என்று வாழ்த்தினார் நெடுமாறன்.
இறுதியாக மைக் பிடித்த நடராஜன், ஆரம்பத்தி​லேயே பொடி வைத்தார். ''சிலர் யாரையும் முழுவது​மாக நம்புவதில்லை... ஏன் அவர்கள், அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்'' என்றபோது கூட்டம் அர்த்தத்தோடு ஆர்ப்பரிக்கவும் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.
''இப்போது, 'கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தை சிலர் போடு​கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை கட்சிகளின் பெயரால் நடக்கிறது. என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. என்னை நம்பியவர்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்து இருக்கிறேன். என்னை நம்பி இருந்தவர்​களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் வருத்தப்​பட்டு இருக்கிறேன். இங்கே வந்தால் வம்பு வந்துவிடும் என்பதால் வீட்டில் வந்து பார்த்தவர்களின் பெயர்களை எல்லாம் இங்கே சொல்லக்கூடாது. ஃபோனில் வாழ்த்திய கவர்னர்களும் இருக்கிறார்கள்'' என்று ஏகத்துக்கும் டெம்போவைக் கூட்டிக்கொண்டே போனார் நடராஜன்.
அவர் பேசிய பல விஷயங்கள் மர்மமாகவே இருந்தன! 

சாதிப் பிரச்சனையில் சிக்கி சின்னாமாகும் ராஜராஜ சோழன்.


வீர வன்னிய ராஜராஜன்’, 'ராஜராஜ சோழ தேவேந்திரன்’, 'ராஜராஜ உடையார்’, 'கள்ளரின வேந்தர் ராஜராஜன்’, 'ராஜராஜ தேவேந்திர சோழர்’, 'ராஜராஜ பிள்ளை’, 'ராஜராஜ தேவர்’... என்ன தலையைச் சுற்றுகிறதா..? ராஜராஜ சோழனின் சதயவிழாவின்போது தஞ்சையில்  ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களில் இடம்பெற்ற வாசகங்கள்தான் இவை!

இந்த விழாவின்போது, தஞ்சைக்குப் படையெடுத்த பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் ராஜராஜ சோழன் தங்களுடைய சாதி என சொல்லிக்கொண்டு, மாமன்னன் சிலைக்கு, போட்டி போட்டுக்கொண்டு மாலை அணிவித்தனர். இவர்களுக்குள் மோதல் உருவாகாமல் தடுக்க, அக்டோபர் 24, 25 ஆகிய இருநாட்களும் தஞ்சையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. நெய்தலூர் குணசேகரனின் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற முன்னணி, ஆறு சரவணனின் முக்குலத்தோர் புலிகள் அமைப்பு, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அண்ணா சரவணனின் தமிழ்நாடு அனைத்து வெள்ளாளர் சமூக கூட்டமைப்பு, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சிற்றரசுவின் அகில இந்திய தேவர் பேரவை, புரட்சிக் கவிதாசனின் மக்கள் தமிழகம், குடந்தை அரசனின் விடுதலை தமிழ்ப்புலிகள், செங்குட்டுவன் வாண்டையாரின் முக்குலத்தோர் பாதுகாப்புப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதுசரி... உண்மையிலேயே ராஜராஜன் எந்த சாதி? இந்தக் கேள்வியே அபத்தமானது; ஆபத்தானது என கொந்தளிக்கின்றனர் தமிழின உணர்வாளர்கள்.
''ராஜராஜனின் இயற்பெயர் அருண்மொழி​வர்மன். அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் ராஜராஜன். இதற்கு, 'அரசனுக்கு எல்லாம் அரசன்’ என்று பொருள். அவர் காலத்தில் சாதி பாகுபாடு எல்லாம் கிடையாது. தொழில் அடையாளங்கள் மட்டுமே இருந்தன. பெரிய கோயிலின் தலைமைப் பொறியாளராக இருந்த குஞ்சர மல்லனுக்கு ராஜராஜ பெருந்தச்சன் எனவும், முடி திருத்துவோராக பணிபுரிந்தவருக்கு ராஜராஜ பெருநாவிதர் எனவும், அரசாணைகளை மக்களுக்கு அறிவித்தவருக்கு ராஜராஜ பெரும்பறையர் எனவும் பட்டம் சூட்டி அவர்களுக்குப் பெருமை சேர்த்தார் ராஜராஜ சோழன். தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை, பல்வேறு பிரிவி னருக்கும் அவர் வழங்கி இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாகத் திகழ்கிறார் ராஜராஜன். அவர் ஒரு தமிழ் மன்னன். அவரை ஒரு குறிப்பிட்ட சாதி வட்டத்துக்குள் அடைக்க முடியாது. சாதிய பார்வையோடு மாமன்னனை கூறு போடுவது தமிழினத்தையே பலவீனப்படுத்தும் செயல். இவர்கள் உண்மையாகவே ராஜராஜனுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தால், உடையாளூரில் உள்ள மாமன்னனின் சமாதியில் நினைவிடம் கட்டவும், குஜராத்தில் தனியார் அருங்காட்சியத்தில் சிறை வைக்கப்பட்டு இருக்கும் மாமன்னன் சிலையை இங்கு கொண்டு வரவும், பெரியகோயிலுக்கு வெளியே அனாதை போல நிறுத்தப்பட்டு இருக்கும் அவரது சிலையை கோயிலுக்குள் வைக்கவும் ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடந்த வேண்டும். மாமன்னனின் வாரிசு என சொல்லிக்கொள்பவர்கள், பெரிய கோயிலை அறநிலையத் துறையின் முழு கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர அக்கறையோடு போராட வேண்டும்'' என்கிறார்கள் கோபமாக.
உலகத்தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் நெடுஞ்செழியனிடம் பேசியபோது, ''அரசகுலம் என்பது இன்றைய சாதி பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. ராஜராஜன் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிற்கால சோழர்களின் ஆட்சியின் போது போர்ப்படை, அரசு நிர்வாகம், கோயில் பணி உள்ளிட்ட இன்னும் பலவற்றில் சிறப்​பாக பணி யாற்றிவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள், கல்வெட் டுக்களில் இடம்பெற்றுள்ளன. எனவே, அதை அடிப்படையாகக் கொண்டு எந்த சாதியினருமே ராஜராஜனையோ பிற்கால சோழப்பேரரசையோ சொந்தம் கொண்டாட முடியாது'' என்றார்.
சாதிய தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக ராஜராஜனுக்கு சாதிப்பெயர் சூட்டுவதை இனியாவது நிறுத்தட்டும். ராஜராஜன் எல்லா தரப்பினருக்கும்  சொந்தமானவராகவே இருக்கட்டும்!

'நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன்.மிமிக்கிரி ஆள் வைத்து மோசடி செய்கிறாரா டி.டி.நாயுடு?




த்தனையோ முறை புகார்கள் வந்து விட்டன. யார் யாரோ புகார் கொடுத்து​விட் டனர். ஆனால், அத்தனை புகார்களையும் சமாளித்து தனது காரியங்களைக் கச்சிதமாகச் செய்து வருகிறார் தீனதயாள் நாயுடு. அவரது மோசடிகளுக்கு முற்றுப்​புள்ளி வைக்கவே முடியாதா?'' என்ற கொந்தளிப்பு மாணவர்கள் மத்தியில் மீண்டும் கிளம்பி இருக்கிறது. 
திருவள்ளூர் மாவட்டம், குன்ன​வலத்தில் உள்ளது டி.டி. மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரி மீதும், கல்லூரியின் நிறுவனர் தீனதயாள் நாயுடு மீதும் கூறப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து, ஏற்கனவே 29.6.2011 தேதியிட்ட  ஜூ.வி. இதழில் விரிவாக எழுதிஇருந்தோம். இந்திய மருத்துவக் கழகம், அந்தக் கல்லூரியின் ஆவணங்களைக் கடந்த ஆண்டு பரிசீ லனை செய்தபோது, போலி​யான போட்டோ மற்றும் ஆவணங்கள் தயாரித்து பல டாக்டர்கள் பணியாற்று​வதுபோல செட்டப் செய்தது அம்பல​மானது. சில மருத்துவமனைகளின் வெப்சைட்டுக்குள் சென்று, டாக்டர்களின் போட்டோக்களையும் கையெழுத்தையும் காப்பி செய்து, தங்கள் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிவது போன்று போலி ஆவணங்கள் தயாரித்து, 150 மருத்துவ இடங்களை அந்தக் கல்லூரி பெற்றது. இந்த விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுக்க... கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்துசெய்ய, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் பரிந்துரைத்தது தமிழக அரசு. ஆனால், அதையும் மீறி மாணவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக இப்போது புகார் கிளம்பி இருக்கிறது.
இந்த ஆண்டுக்கும் அங்கீகாரம் இல்லாத நிலையில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளிடம் பணம் வாங்கி கோடிக்கணக்கில் சுருட்டுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். முதலில் விவரம் தெரியாமல் பணத்தைக் கட்டிவிட்டு, பிறகு பணத்தைத் திருப்பி வாங்க பல மாணவர்கள் துடிதுடிக்கிறார்கள்.
விக்னேஷ் என்ற மாணவனின் வழக்கறிஞர் பாலு நம்மிடம் பேசினார். ''கடந்த ஜூலை மாதம் எனது கட்சிக்காரர்கள் பீமாராவ் தனது மகன் விக்னேஷ§க்காக 27.5 லட்ச ரூபாயும், பார்த்திபன் என்பவர் தனது மகள் குமுதாவுக்காக 19 லட்ச ரூபாயும், திருமாவளவன் என்பவர் தனது மகள் செந்தமிழ்ப்பாவைக்காக 11 லட்ச ரூபாயும் மருத்துவப் படிப்புக்கான கட்டணமாக டி.டி கல்லூரியின் நிர்வாகி தீனதயாளிடம் கொடுத்துள்ளனர். கல்லூரிக்கான அங்கீகாரம் இல்லாதது தெரியவந்து இவர்கள் கட்டிய பணத்தைத் திருப்பிக் கேட்டனர். அதைத்தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் அவர். ஒரிஜினல் சான்றிதழையாவது கொடுங்கள் என்று கேட்கச் சென்ற பெற்றோரை ஆள் வைத்து மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து, கடந்த செப் டம்பர் மாதம் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், வழக்குப்பதிவு செய்ய வில்லை. இப்போது, நீதிமன்றம் சென்ற பிறகே அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 200 மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய்களைக் கறந்துள்ள தீன தயாள், போலியாக சில ஆவணங்களைத் தயாரித்து பெற்றோரை ஏமாற்றி உள்ளார்'' என்று பகீர் கிளப் பினார்.
விஷயம் தெரிந்து நிர்வாகியிடம் விவகாரம் செய்யும் பெற்றோர் பல வழிகளில் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு வி.ஐ.பி-க்கள் போல மிமிக்ரி வாய்ஸில் பேசுவதற்கென்றே தனியாக ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளாராம். அவர்களை வைத்து பெற்றோர்களிடம் பேசி மிரட்டுகிறாராம். சமீபத்தில், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வேதாச்சலம் தனது கட்சிக்காரர் ஒருவர் மகளுக்காக கட்டிய பணத்தைக் கேட்க டி.டி கல் லூரிக்குச் சென்றாராம். அவரைச் சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம் தீனதயாள் நாயுடு. அடுத்தநாள், வேதாச்சலத்துக்கு போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. 'நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன். அம்மா டி.டி காலேஜை வாங் கிட்டாங்க. அந்தக் காலேஜ் பக்கம் போய் பணம் கேக்குற வேலை வெச்சுக்காதீங்க' என்று மிரட்டல் வர... 'அப்படியா..? நீங்க திரும்பவும் இதைச் சொல் லுங்க, நான் ரெக்கார்டு பண்ணிக்கிறேன்’ என்று வேதாச்சலம் சொன்னதும் லைன் கட் ஆகி இருக்கிறது.
இதுகுறித்து எம்.எல்.ஏ வேதாச்சலத்திடம் கேட்ட​போது, ''அந்த ஆள் அம்மா பெயரைச் சொல்லி என் கிட்டேயே ஏமாத்துறார். இப்ப நான் கார்டனுக்குத்தான் போயிட்டு இருக்கேன். இதை அம்மா கவனத்துக்குக் கொண்டு போகப்போறேன்'' என்றார்.
இதேபோல, இந்தக் கல்லூரியின் வண்ட​வாளத்தைக் கேள்விப்பட்ட வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணப்பன், பாதிக்கப்பட்ட சில மாணவர்​களின் ஒரி ஜினல் சான்றி​தழ்களை வாங்கிக்கொடுக்கச் சொல்லி போலீஸாரை அனுப்பியுள்ளார். அடுத்த நாளே, 'ஐ.ஜி.கண்ணப்பன் போலீஸை அனுப்பி என் காலேஜ்ல இருந்து அஞ்சு கோடி ரூபாயை அள்ளிட்டுப் போயிட்டார்’ என்று தீனத​யாள் புரளி கிளப்பினாராம்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க அந்தக் கல்லூரிக்கு நாம் நேரில் சென்றோம். செக்யூரிட்டிகள் நம்மை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு, 'எந்த வண்டியில் வந்தீங்க? திரும்பி வீடு போய்ச் சேர மாட்டீங்க...’ என்று மிரட்டல் தொனியில் பேசினர். தீனதயாளை தொலைபேசி எண்ணில் பலமுறை தொடர்பு கொண்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர் சீமா, 'சார் எங்கே இருக்கார்னே எனக்குத் தெரியலை. அவர் வந்ததும் நீங்க பேசினதா சொல்றேன்’ என்பதையே திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையாக சொன்னார். டி.டி கல்லூரி நிர்வாகத்தின் விளக்கம் வந்தால் பிரசுரிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
இந்தக் கல்லூரி குறித்து வந்திருக்கும் புகார் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனாவிடம் பேசினோம். ''சமீபத்தில்தான் எனது கவனத்துக்குப் புகார் வந்தது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
மருத்துவத்தின் பெயரைச் சொல்லி இப்படி ஓர் மோசடி நடப்பதை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்​கழகம் எப்படித்தான் அனுமதிக்கிறதோ..?

கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.



அதிகாரமும் பணமும் இருந்தால் கடவுள்கூட காத்திருப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. அது பழநியில் நிஜமாகி இருக்கிறது!

ஸ்ரீமுருகனின் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயில், வழக்கமாக அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு ராக்கால பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும். கடந்த 20-ம் தேதி தமிழக ஆளுநர் ரோசய்யா பழநி முருகன் கோயிலுக்கு வந்திருக்கிறார். 8 மணிக்கு நடத்த வேண்டிய ராக்கால பூஜையை அவருக்காக இரவு 10.30 மணிக்கு நடத்தினார்கள் என்று பழநியில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

பழநி ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் நம்மிடம் பேசினார். ''முருகனுக்கு நடத்தப்படும் பூஜைக்கான நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றக் கூடாது என்பதுதான் ஆகம விதி. ராத்திரி 8 மணிக்கு ராக்கால பூஜை நடத்த வேண்டும் என்பதுதான் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. தைப்பூசம், பங்குனி உத்தரம் ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு இந்த நேரத்தை நீடிப்பு செய்வார்கள். கடந்த 20-ம் தேதி அப்படி எந்த ஓர் விசேஷமும் கிடையாது.



தமிழக ஆளுநர் ரோசய்யா வருகிறார் என்பதற்காக இறைவன் முருகனைக் காக்கவைத்து, 10.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தி இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு முன்பு எல்லோருமே சரிசமம்தானே? அப்படி இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து முருகனைக் காக்கவைத்தது மன்னிக்கவே முடியாத குற்றம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை'' என்று கொந்தளித்தார்.



சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் சந்திரமோகனும் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்தபோது, முதல்வராக இருந்தவர் ராஜாஜி. அவர் ஒரு முறை சிதம்பரம் போயிருந்தார். அப்போது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள், கோயில் பிரசாதத்தை அவருக்குக் கொண்டுபோய் கொடுத்தார்கள். அவரோ, 'கோயிலுக்கு வந்து பிரசாதத்தை வாங்கிக்கொள்வதுதான் முறை. யாருக்காகவும் கடவுள் இறங்கி வரக் கூடாது. இன்னொரு முறை இப்படி ஓர் தப்பைச் செய்யாதீர்கள்’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த பூமியில், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கடவுளைக் காக்கவைத்திருக்கிறார்கள். பழநி முருகன் கோயிலுக்கு எத்தனையோ வி.ஐ.பி-கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாருக்காகவும் கோயில் பூஜை நேரத்தை மாற்றியது கிடையாது. பழநியின் கோயில் வரலாற்றிலேயே முதல் முறையாக ரோசய்யாவுக்காக ராக்கால பூஜை நேரத்தை மாற்றி இருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமானவர்கள் அத்தனை பேருமே கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மேனேஜர் ரவியிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''கடந்த 20-ம் தேதி ராக்கால பூஜை 10.30 மணிக்கு நடந்ததற்குக் காரணம், அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதால்தான். பல விசேஷ நாட்களில் இதுபோன்று தாமதமாகி இருக்கிறது. அன்றும் அப்படித்தான் தாமதமானதே தவிர, நாங்கள் கவர்னர் வருகைக்காக பூஜையை தாமதமாக நடத்தவில்லை'' என்று சொன்னார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான ஆனந்தனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''ராக்கால பூஜையைத் தாமதமாக நடத்தினார்களா? இந்த விஷயம் இதுவரை என் கவனத்துக்கு வரவே இல்லை. நான் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துகிறேன். அவர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.

விஜயகாந்த்தை ஆதரிப்பதால், ஜேப்பியார் மீது வழக்கா? குமரியில் பாய்ந்தது குவாரி விவகாரம்!


ஜேப்பியார் மீது வழக்குகள் சுற்றிச்சுற்றி அடிக்கிறது! 


ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரத்தில் தன்னுடைய கல்லூரிக் கட்டடம் இடிந்து தொழிலாளர்கள் இறந்த வழக்குக்காக, தினமும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துப் போட்டு வருகிறார் ஜேப்பியார். அவருக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. 'பட்டா நிலத்தில் பாறையை உடைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, அரசுக்குச் சொந்தமான மலையை உடைத்தார்’ என்று அவர் மீது இப்போது இன்னொரு வழக்கு.

குமரி மாவட்டம் கோதநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட முட்டைக்காடு பகுதியில் ஜேப்பியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. ஐந்து வருடங் களுக்கு மேலாக அங்கு உடைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டா நிலத்தில் பாறையை உடைக்க அனுமதி பெற்றுவிட்டு, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை உடைத்து கற்கள் எடுத்ததாகவும், அனுமதிக் காலம் முடிந்த பின்னரும் மலையை உடைத்து கற்கள் எடுப்பதாகவும் ஜேப்பியார் மீது வழக்கு பாய்ந்துள்ளது. ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு கட்டங்களாக குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்தி உள்ளன.



''ஒரு வருடத்துக்கு முன்பு குமரி மாவட்ட ஆட்சியராக ராஜேந்திர ரத்னூ இருந்தபோதே, விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் ஜேப்பியார் மீதான புகாரை மாவட்டப் பாசன சங்கத் தலைவர் வின்ஸ் ஆன்றோ பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அப்போது எல்லாம் மௌனமாக இருந்த அரசு அதிகாரிகள், தற்போது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது'' என்று சொல்லும் தே.மு.தி.க. பிரமுகர்கள், ''எம்.ஜி.ஆர். உடன் இருந்த நெருக்கத்தால் அ.தி.மு.க. அபிமானியாக இருந்த ஜேப்பியார் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தே.மு.தி.க. அபிமானியாக மாறிவிட்டார். குறிப்பாக தே.மு.தி.க. சார்பில் நடைபெறும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் ஜேப்பியாரின் பங்களிப்பு அதிகம். அவருக்கு தே.மு.தி.க-வுடன் இருந்த நெருக்கம் காரணமாகத்தான் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுகின்றன'' என்கிறார்கள். ஏற்கெனவே குமரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கட்சி தாவி வரும் நிலையில்... கட்சிக்குப் பணம் செலவு செய்துவரும் ஜேப்பியார் மீதும் வழக்குகள் பாய்வது, அந்தக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜேப்பியார் மீது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்த மாவட்டப் பாசன சங்கத் தலைவர் வின்ஸ் ஆன்றோவிடம் பேசினோம். ''முட்டைக்காடு பகுதியில் பாறை உடைப்பதாகக் கூறி ஜேப்பியார் செய்த முறைகேடுகள் ரொம்பவும் அதிகம். பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் பக்கத்தில்தான் அவருடைய கல் குவாரி இருக்கிறது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கால்வாய்க் கரை அருகே உள்ள புறம்​போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 50 அடி உயர காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காம்பவுண்ட் சுவர் முறையாகக் கட்டப்படாததால், அதுவும் உடைந்து கால்வாய்க்குள் விழுந்துகிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் சீராகச் செல்ல முடியாத சூழல். குவாரியில் இருந்து கற்களை கொண்டுசெல்ல சாலை அமைத்தபோது, கால்வாயில் இருந்து விவசாயத்துக்குத் தண்ணீர் செல்லும் மடைகளை உடைத்துவிட்டார்கள். இதனால் தண்ணீர் போகாமல் அந்தப் பகுதியில் விவசாயமும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பே பாறை உடைக்கும் அனுமதி முடிந்துவிட்ட பிறகும் பாறை உடைக்கும் பணி தொடர்ந்தது. அதற்கும் மேலாக, பட்டா நிலத்தில் பாறையை உடைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளையும் உடைத்து கற்கள் எடுத்தனர். உண்மையில் ஒரு வருடத்துக்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கணும். இது காலதாமதமான நடவடிக்கைதான் என்றாலும், வரவேற்கத்தக்கது'' என்றார்.

அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் குறித்து கருத்து கேட்க ஜேப்பியாரை சந்திக்க முயற்சித்தோம். அவர் சார்பில் வழக்கறிஞர் மில்லர் பேசினார். ''இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டு உள்ளது. உண்மையில் அவர் எந்தத் தப்பும் செய்யவில்லை; தப்பு செய்யவும் அவருக்குத் தெரியாது. பட்டா நிலத்தில் மட்டும்தான் பாறை உடைக்கப்பட்டுள்ளது. அனுமதிக் காலம் முடிந்த பிறகு, வேறு ஓர் இடத்தில் இருந்து கல் கொண்டுவந்துதான் இங்கே பணி நடந்தது. தவறே செய்யாத அவர் மீது தொடரப்பட்டு இருக்கும் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

இதில் இருந்து ஜேப்பியார் எப்படி மீளப்போகிறாரோ?

Friday, October 26, 2012

அருணகிரிக்கு அடுத்த சிக்கல்! அரசு சொத்தாகும் ஆதினம்.



அருணகிரிநாதரை அலற வைத்த வழக்கு!

நித்தியானந்தா விவகாரத்தில் மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன் தொடர்ந்த பொதுநல வழக்கு, கடந்த 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்தது. முந்தைய நாளே அவசரமாய் கிளம்பி மதுரைக்கு வந்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை ஆணையர் தனபாலுக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்கு ஸ்பெஷல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

'அருணகிரிநாதர் இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக ஆதீனச் சொத்துக்களை விற்று இருக்கிறார். ஆதீனத்தின் நிதியையும் சுயவிளம்பரத்துக்காக செலவு செய்திருக்கிறார். அதனால், அவரை ஆதீனப்பொறுப்பில் இருந்து விடுவித்து மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்’ - என்று, சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார். விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது மதுரை கோர்ட்.

'மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்றே வழக்குத் தாக்கல் செய்துவிட்டது’ என்று 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சொன்னார் அட்வகேட் ஜெனரல். அப்போது, 'அருணகிரிநாதர் வெளியேற்றப்பட்டால் நித்தியானந்தா மதுரை ஆதீனமாக வந்து விடுவார்’ என்று வாதிட்டனர் ஜெகதலபிரதாபனின் வழக்கறிஞர்கள். அதற்கு, 'நித்தியானந்தா மதுரை ஆதீனமாக வருவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்; சட்டத்திலும் இடமில்லை’ என்று உறுதியாகச் சொன்னார் அட்வகேட் ஜெனரல். இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்துக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆதீனத்தை அரசு ஏற்பது தொடர்பான வழக்கின் விசாரணையும் நடந்து, அருணகிரிநாதர் தரப்பில் விளக்கம் அளிப்பதற்காக விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எத்தனையோ போராட்டங்களுக்கு எல்லாம் அஞ்சாத அருணகிரியை மடத்தை கையகப்படுத்தும் தமிழக அரசின் அவசர வழக்குதான் அலறிப்புடைக்க வைத்து இருக்கிறது.

ஆதீனம் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!


'மதுரை ஆதீனத்தின் இளவரசு பட்டத்தில் இருந்து நித்தியானந்தாவை இன்று முதல் நீக்கி விட்டோம். மடத்தில் இருக்கும் அவராலும் அவரது ஆட்களாலும் எங்களது உயிருக்கும் ஆதீனத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், நித்தியானந்தாவின் சீடர்களை இங்கிருந்து வெளியேற்றி எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று, 19-ம் தேதி இரவு 7 மணிக்கு மதுரை விளக்குத்தூண் போலீஸில் தனது வக்கீல் ராஜகோபால் மூலமாக ஆதீனம் ஒரு புகார் கொடுத்திருக்கிறார் என்ற செய்தி வெளியானதை யாரும் முதலில் நம்பவில்லை. நாம் ஆதீனத்தை தொடர்பு கொண்டபோதும், ''ஆமாம், உண்மைதான்'' என்று உறுதிப்படுத்தினார். சற்றுநேரத்தில், ஆதீன மடத்துக்கு போலீஸ் படைகள் வந்திறங்க, அதற்கு முன்பாகவே ஞானசொரூபானந்தா தலைமையில் மடத்தை விட்டு அமைதியாக வெளியேறினர் நித்தியின் சீடர்கள்.

''எங்களிடம், 'சட்ட நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் நித்தியானந்தரை நீக்கிவிட்டேன். நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்’ என்று ஆதீனம் சொன்னார். நித்தியானந்தரைத் தொடர்பு கொண்டு கேட்டோம். 'ஆதீனம் மனஉளைச்சலில் இருக்கிறார். அவரை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம். நீங்கள் அங்கிருந்து கிளம்புங்கள்’ என்று கூறினார். அதனால் கிளம்புகிறோம்'' என்றார் சொரூபானந்தா. அப்போது அங்கு திரண்டிருந்த இந்து அமைப்பினர், அவர்களை நோக்கி செருப்புகளை வீசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் ஆதீன மடத்தை மீடியா வெளிச்சம் ஆக்கிரமித்துக் கொண்டது. அதைவிட ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ஆதீனத்தின் முகத்தில்!

''நெருக்கடியான சூழலில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ரீநித்தியானந்தரை இளவரசு பட்டத்தில் இருந்து நீக்கி இருக்கிறோம். வழக்கு கோர்ட்டில் இருப்பதால் மற்ற விஷயங்களைப் பிறகு பேசுவோம்'' என்று சொல்லி அனைவருக்கும் டிரேட் மார்க் ஆசீர்வாதத்தை வஞ்சகமின்றி அள்ளி வீசினார் ஆதீனம். மறுநாள் காலை, இந்து இளைஞர் பேரவையினர் ஆதீனம் வாசலில் 100 சூரைத் தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். நித்தியால் ஆதீன மடத்தில் தொடங்கப்பட்ட நித்திய அன்னதானமும் நிறுத்தப்பட்டது.

அருணகிரிநாதரும் தப்ப முடியாது!

நித்தியை வெளியேற்றி விட்டதால் அருணகிரிநாதரின் ஆதீன பதவி தப்புமா? என்று கேட்டால், ''அதெல்லாம் சாத்தியமே இல்லை'' என்று சொல்லும் அறநிலையத் துறை அதிகாரிகள், ''ஆதீன சொத்துக்களை அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன் இஷ்டத்துக்கு விற்பனை செய்திருக்கிறார் அருணகிரிநாதர். அரசுக்கு அவர் கொடுத்திருக்கும் ஆடிட் ரிப்போர்ட்களே அதற்கு சாட்சி. மானாமதுரை தாலுக்காவில் எருக்கலவெள்ளூர் கிராமத்தில் ஆதீனத்துக்குச் சொந்தமான 7.36 ஏக்கர் புஞ்சை நிலத்தை வெறும் 44,160 ரூபாய்க்கு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கு 1995 அக்டோபரில் விற்று இருக்கிறார். இதேகிராமத்தில் மேலும் 5.50 ஏக்கர் புஞ்சை நிலத்தை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், குமார், ரமேஷ், மானாமதுரையைச் சேர்ந்த ஜெகன்நாதன் அவரது மனைவி கௌசல்யா உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு 1996-ல் வெறும் 20,200 ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இதேபோல் சில சொத்துக்களை குத்தகைக்கும் விட்டிருக்கிறார்.

இதில்லாமல் மடத்துக்கு வந்த காணிக்கைகளையும் பக்தர்கள் கொடுத்த நன்கொடைகளையும் தன் இஷ்டத்துக்கு வாரி இறைத்திருக்கிறார் ஆதீனம். 'சேலம் பரணீதரன் சுவாமிகள் (குட்டிச் சாமியார்) பெற்றோரை சமரசம் செய்ய 1.07.04-ல் சென்றபோது பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வழக்கறிஞர்களுக்காக செலவான தொகை 40 ஆயிரம், கி.வீரமணி பாராட்டு விழாவில் வழங்கியது 10 ஆயிரம், ஜி.கே. மூப்பனார் மறைவின் போது சென்னையில் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்தது 3,000, பெரியகுளம் எம்.பி. ஆரூண் பள்ளபட்டி ரோட்டரி சங்கத் தலைவராக பதவியேற்ற விழாவில் கொடுத்தது 5,000, எம்.நடராஜன் சகோதரி வீட்டு திருமண செலவுக்காக 4,000 ரூபாய் என்று கணக்கு கொடுத்திருக்கும் ஆதீனம், இந்தச் செலவுகளுக்காக எந்த அனுமதியும் பெறவில்லை. மீனாட்சியம்மன் கோயிலில் மாலையில் 'சாயரட்சை கட்டளை பூஜை’யை மதுரை ஆதீனம்தான் செய்யணும். ஆனால், கடந்த 10 வருடங்களாக இதைச்செய்யவே இல்லை. இந்தத் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டித்தான் மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கேட் டிருக்கிறோம்'' என்கிறார்கள்.

இதுதொடர்பாக, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில், ''தனக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்ற தோரணையில் அருணகிரிநாதர் அடுக்கடுக்கான பல தவறுகளைச் செய்திருக்கிறார். ஆதீனகர்த்தர் உயிரோடு இருக்கும் போது இன்னொருவர் அந்த இடத்துக்கு வர சட்டத்தில் இடமில்லை. அதேபோல், இளைய மடாதி பதி என்ற பட்டமும் கிடையாது. தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதற்காக நித்தியானந்தாவை வெளியில் அனுப்பி இருக்கிறார். அவர் என்னதான் நாடகம் நடத்தினாலும் இனி மதுரை ஆதீன பதவியில் நீடிக்க முடியாது'' என்று சொன்னார்.

''மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், எம்.நட ராஜனின் நண்பர். எனவே, அவர் மீது முதல்வருக்கு எப்போதுமே மரியாதை இருந்தது இல்லை. இந்த நிலையில், அருணகிரியை நீக்கி விட்டு மடத்தை அரசாங்கம் எடுப்பதற்கான சட்டரீதியான ஆலோசனை தொடங்கி விட்டது'' என்று கோட்டை வட்டாரமும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.

நித்தியை நீக்கி விட்டாலும் ஆதீனத்துக்கும் ஆபத்துதான்!

மதுரை ஆதீன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மதுரை ஆதீன மீட்பு குழுவின் தலைவர் நெல்லை கண்ணன் ஒரு கடிதம் எழுதியதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. நம்மிடம் பேசிய நெல்லை கண்ணன், ''இத்தனை போராட்டங்களுக்கும் வழக்குகளுக்கும் தண்ணி காட்டிய அருணகிரிநாதர், இப்போது அலறிப்புடைத்து நித்தியை வெளியே துரத்தி இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாதான். நித்தியானந்தா நியமனத்தை ரத்து செய்யக்கோரி இந்து அறநிலையத் துறை செயலாளர் ராஜாராமிடம் நாங்கள் மனு கொடுத்தபோது, 'வாரிசை நியமிப்பது ஆதீனத்தின் தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட முடியாது’ என்றுதான் சொன்னார்கள். ஆதீனங்களில் வாரிசு நியமனங்கள் தொடர்பாக வழக்குப் போட வேண்டுமானால் அதற்கு இந்து அறநிலையத் துறை அனுமதியைப் பெற வேண்டும். அந்த அனுமதிக்காக பல வகையில் அலைக்கழிக்கப்பட்டோம். இப்படி எல்லாம் இழுத்தடித்தவர்கள், இப்போது தாங்களாகவே ஆதீன மடத்தை கைப்பற்றும் அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் முதல்வர் அம்மாதான். அவருக்கு என்னுடைய நன்றி. அம்மாவுக்கு இப்போதுதான் இந்த விவகாரத்தின் முழு பின்னணியும் தெரிய வந்திருக்கிறது. நான் எழுதிய கடிதத்தை முதல்வர் பார்வையில் படாமல் தவிர்த்து விட்டனர். அந்த ஆத்திரத்தில், 'பூங்குன்றனும் ஓ.பி.எஸ்-ஸும் இருக்கும்வரை உண்மை தகவல்களை முதல்வ ருக்குப் போய்ச்சேர விடமாட்டார்கள்’ என்று என்னுடைய 'ப்ளாக்’கில் நான் பகிரங்கமாகவே எழுதினேன். யார் மூல மாகவோ இந்தத் தகவல் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. அதனால்தான் இப்போது நல்லது நடந்திருக்கிறது'' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்,

''நித்தி கும்பலுக்குப் பயந்து பல நேரங்களில் ஆதீனம் போனை எடுக்கிறதில்லை. நிலைமை மோசமாவது தெரிந்ததும் முந்தா நாளு, 'இனியும் அமைதியாக இருந்தால் முதலுக்கே மோசமாகி விடும். நீங்களும் சேர்ந்து வெளியேற வேண்டி இருக்கும்’னு அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அருணகிரிநாதர் விழித்துக் கொண்டார். மடத்தையோ... மடத்தின் பாரம்பரியப் பெருமைகளை காக்கவோ அவர் இந்த முடிவுக்கு வரவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே நித்தியை வெளியேற்றி இருக்கிறார். ஆனாலும், அவரையும் வெளியேற்ற வேண்டும். 'தருமபுரம் உள்ளிட்ட மற்ற சைவ ஆதீனங்களைக் கலந்து பேசி அவர்களிடம் சமயபயிற்சி எடுத்த சீடர் ஒருவரை நீங்களே மதுரை ஆதீன கர்த்தராக நியமிக்க வேண்டும்’ என்றுதான் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன்'' என்றார்.

நடந்தது நாடகமா?

''தன்னுடைய அஸ்திவாரத்துக்கே அரசு ஆப்பு வைக்கிறது என்றதும் நித்தியும் அருணகிரியும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படிதான் நித்தியின் ஒப்புத​லோடு அவரை நீக்கி இருக்கிறார் அருணகிரிநாதர். 'கொஞ்ச நாளைக்கு வெளியில் இருங்கள், எனக்கு உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி, நீங்கள்தான் இந்த மடத்தின் அடுத்த வாரிசு’ என்று உயில் எழுதி வைத்து​விட்டுப் போய்விடுகிறேன். அதன்பிறகு, நீங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்து விடலாம்’ - என்று இருவரும் ஒப்பந்தம் போட்டுச் செயல்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். ''அதன்படிதான், இப்போது நீக்கல் நாடகம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அதனால்தான் நீக்கப்பட்டதை எதிர்த்து எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அடக்கி வாசிக்கிறார் நித்தி'' என்கிறார்கள் ஆதீன எதிர்ப்பாளர்கள்.

நிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்! சித்த மருத்துவத் தீர்வு



தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலோடு வரும் நோயாளி களைக் குணப்​படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவ​மனைகள் கடுமையாகப் போராடி வருகின்றன. 'இவ்வளவு சிரமம் தேவைஇல்லை. சித்த வைத்தியத்தில் எளிதில் குணப்​படுத்தலாம்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு முதுநிலை சித்த மருத்துவர் சம்பங்கி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''சில ஆண்டுகளுக்கு முன், சிக்குன்குன்யா காய்ச்சல் தமிழகத்​தில் வேகமாகப் பரவியபோது, ஆங்கில மருத்து​வத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தநேரத்தில், சிக்குன் குன்யாவை உருவாக்கும் வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை அறிமுகம் செய்து, அதன் ஆற்றலை நிரூபித்துக் காட்டினோம். அந்த ஆய்வுக்குப் பிறகுதான் பலரும் சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்பினர். இப்போது பரவுகிற டெங்கு காய்ச்சலையும் சித்தமருத்துவம் மூலம் எளிதில் குணப் படுத்தலாம். நிலவேம்பு இருக்கும்போது கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை'' என்றார்.



மேலும் அவர் தொடர்ந்து, ''விட்டுவிட்டு வரும் காய்ச்சல், கண்களைச் சுற்றிலும் வலி, தலைவலி, மூட்டுவலி, குமட் டல், வாந்தி, உடம்பில் சிறு கொப்புளங்கள், அதில் ரத்தக் கசிவு, மலத்தில் ரத்தக்கசிவு ஆகியவைதான் டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சூரணத்தோடு சேர்த்து வசந்த குசுமாகரம் மாத்திரை, சுதர்சன சூரண மாத்திரை, இம்பூரல் மாத்திரையும் கொடுக்கிறோம். இவை ஒவ்வொன்றுக்கும் டெங் குவால் உடலில் ஏற்படும் பாதிப்புக்களைக் குணப் படுத்தும் தன்மை உண்டு.

நிலவேம்பு குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. இதில் நிலவேம்பு, விலாமிச்சு வேர், பேய்புடல், மிளகு, பற்​பாடகம் ஆகிய ஐந்து பொருட்களும் உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலைப் போக்கும் தன்மை கொண்டவை. தலைவலி, மூட்டுவலி ஆகியவற்றையும் இவை போக்கிவிடும். நாவறட்சியைத் தடுத்து உடலில் நீர்ச்சத்து குறை யாமல் வெட்டிவேர் காப்பாற்றும். தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைப் போக்கி புண் ஏதும் ஏற் படாமல் கோரைக்கிழங்கு தடுக்கும். உடலில் உள்ள அகட்டு வாயுவை அகற்றி வயிறு உப்புசம் ஏற் படாமல் சுக்கு தடுக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கி அதிக சிறுநீர் எளிதில் வெளியேற சந்தனத்தூள் வழிவகை செய்கிறது. இத்தனை செயல்களையும் ஒருங்கே கொண்டதுதான் இந்த நிலவேம்பு சூரணம். இது, டெங்குவுக்கு மட்டுமல்ல... பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற எல்லா விஷக் காய்ச் சலுக்கும் ஏற்ற அற்புதமான மருந்து.

டெங்குவின் முக்கியப் பாதிப்பு... உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதன் வழியாகவும், மலத்தின் வழியாகவும் ரத்தக்கசிவு ஏற்படுவது​தான். அப்படி அதீத ரத்தம் வெளி யேறு​வதால்தான் மரணம் ஏற்படுகிறது. அதைத் தடுக்கத்தான் இம்பூரல் மாத்திரை. ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரைகள் வீதம் சாப் பிட்டு வந்தால், எப்படிப்பட்ட ரத்தக்கசிவும் ரத்த வாந்தியும் மலத் தின் மூலம் வெளியேறும் ரத்தமும் நின்று விடும். உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போகாமலும் இது காக்கும். வசந்தகுசுமார சூரணமும், சுதர்சன சூரண மாத்திரையும் காய்ச்சலைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், டெங்குவின் சிறு பாதிப்புகூட இல்லாமல் மீண்டு விடலாம்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சித்த மருத்துவப் பிரிவுகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கின்றன. அதுதவிர, நாட்டு மருந்துக் கடைகள், ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கிறது. டெங்கு ஏற்பட்டவர்கள் மட்டுமின்றி வந்துவிடும் என்று அச்சப்படுபவர்களும் இதைச் சாப்பிடுவதன் மூலம் நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்'' என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை கட்டுப்படுத்தவும் சித்த மருத் துவத்தில் வழி இருக்கிறதாம். ''காஞ்சாங்கோரை அல்லது வேப்பிலையை வீட்டின் முன்புறம் மற்றும் கொல்லைப் புற வாசல்களில் தோரணம் போல் தொங்கவிட்டால், அதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது. அதேபோல, நொச்சி இலை அல்லது காஞ்சாங்கோரை இலையை நிழலில் காயவைத்து நெருப்பில் போட்டு புகை வரவழைத்தால், அந்தப் புகையும் கொசுவை உள்ளே வராமல் விரட்டிவிடும். ஆடாதொடை இலை மற்றும் வேப்பிலையை வெயிலில் காயவைத்து சமஅளவு எடுத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியோடு சிறிதளவு சாணத் தூள் சேர்த்து அதில் பச்சரிசிக் கஞ்சியை ஊற்றி ஊதுவத்தி போல் உருட்டி வெயிலில் காயவைத்து எடுத்து கொசுவத்தி போல் பயன்படுத்தினாலும் கொசு வராது'' என்கிறார் சம்பங்கி.

முயற்சித்துப் பார்க்கலாமே!

சர்ச்சை வளையத்தில் பிராமணாள் கபே! முதல்வர் தொகுதி குபீர்!



எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ஸ்ரீரங்கம், கடந்த 20-ம் தேதி போலீஸார் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. காரணம்... ஸ்ரீரங்கத்தில் புதிதாக திறக்கப்பட்டு இருக்கும் 'பிராமணாள் கபே’ என்ற ஹோட்டலை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய போராட்டம்தான்!

ஸ்ரீரங்கம் செல்லும் வழியெங்கும் பெரியார், பிரபாகரன் படங்கள் போட்ட போஸ்டர்கள். 'பிராமணாள் ஹோட்டல் பெயர் பலகை அழிப்​புப் போராட்டம்... வரலாறு திரும்புகின்றது’ போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்று இருந்தன.

சர்ச்சைக்கு ஆளான, பிராமணாள் கபே நடத்தும் ஸ்ரீகிருஷ்ணனிடம் பேசினோம். ''எங்​களுக்கு பரம்பரைத் தொழிலே ஹோட்டல் நடத்துவதுதான். எங்கள் தாத்தா காலம் முதற்கொண்டு இந்தத் தொழிலை செய்து வருகிறோம். லால்குடி, காந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் ஸ்ரீகிருஷ்ணய்யர் என்னும் பெயரில் பல காலமாக எங்களுக்குக் கடைகள் இருக்கின்றன. ஸ்ரீரங்கத்தில் 'பிராமணாள் கபே’ என்ற பெயரில் இந்தக் கடையை கடந்த மார்ச் 15-ம் தேதி ஆரம்பித்தோம். வெளிநாட்டில் பணிபுரியும் பிராமணர்களின் வயதான பெற்றோர் பலர் ஸ்ரீரங்கத்தில் வசிக்கின்றனர். அவர்கள் நன்நாளாகக் கருதும் நாட்களில் வெளியில் உணவு சாப்பிட மாட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக வெங்காயம், பூண்டு மற்றும் மசாலா பொருட்கள் பயன்படுத்தாமல் சமையல் செய்வோம். எங்களின் கஸ்டமர்கள் எங்களை விரும்புகிறார்கள். இதில் தலையிட இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

இதற்காக ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் தலை​மையில் சமாதானக் கூட்டம் நடந்தது. சட்டத்தில் இப்படி பெயர் வைத்துக்​கொள்ள அனுமதி இல்லை என கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன். போராட்டம் நடத்தி​யவர்களோ சம்​பந்தா சம்பந்தம் இல்​லாமல் ஏதேதோ சொல்கிறார்கள். ஆறு கோடி தமிழர்களை நான் புண்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். 120 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்த நாட்டில், வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் இவர்கள் பெரியார் சிலையை திறக்கலாம்... நான் பிராமணாள் கபே திறக்கக்கூடாதா? நாட்டில் எத்தனையோ நிறுவனங்களுக்கு சாதியை அடையாளப்​படுத்தி பெயர் வைத்து இருக்​கிறார்கள். அவர்களுக்கு எதிராகப் போ​ராட்டம் நடத்​தாமல், எங்களிடம் வம்புக்கு வருவதற்கு பின்னால் ஏதோ சுயநலம் இருக்கிறது.

நாங்கள் பெயரை மாற்றத் தயாராக இருக்கிறோம். அதற்கு முன் சில நிபந்தனைகளை விதிக்கிறேன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும். தமிழக அரசு இதழில் சாதிப்பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அதைச்செய்தால் நானும் கடையில் இருக்கும் சாதிப்பெயரை நீக்குகிறேன்'' என்றார் ஆவேசமாக.

போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்​டிணனோ, ''தேவர் ஹோட்டல், நாயர் மெஸ் என்று மற்ற சாதி பெயரில் இருக்கும் ஹோட்டல்​களுக்கு எதிராக எல்லாம் நாங்கள் போராடவில்லை என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். நாங்​களும் அய்யர் ஹோட்​டல் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே..? பிராமணாள் என்பதற்கு வர்ணாசிரமத்தின்படி உயர்ந்த சாதி என்பது பொருள். அந்த ஹோட்டலுக்கு பிராமணாள் கபே என்று பெயர் வைத்து இருக்​கிறார்களே... அப்படி என்றால், மற்ற ஹோட்டல் எல்லாம் தாழ்ந்த சாதியினர் ஹோட்டல் என்று அர்த்தமா..? தெருவில் ஒரு வீட்டில் மட்டும் 'இது பத்தினி வீடு’ என்று எழுதி வைத்திருத்தால், மற்றவர்கள் நடத்தைக் கெட்டவர்கள் என்று அர்த்தம் ஆகிவிடாதா..? பல வருடங்களுக்கு முன், தமிழகத்தில் பிராமணாள் கபேக்கள் இருந்தன. ரயில்வே கேன்டீன்களில் கூட 'பிராமணர்கள் மட்டும் அமரும் இடம்’ என்று தனிஇடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். பெரியார் போராடியதன் விளைவாக ஹோட்டல் பெயர்கள் மாற்றப்பட்டன. இப்போது ஒருவர் ஆரம்பித்து இருக்கும் விஷயத்தை மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கினால், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி போய் விடும். இதுபோன்ற செயல் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியில் ஆரம்பித்து இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது'' என்று கூறினார்.

சட்டம் என்ன சொல்கிறது? திருச்சி வழக்கறிஞர் சிவசங்கரனிடம் கேட்டோம். ''அரசியல் அமைப்புச் சட்டத்தில் இப்படி சாதிப்பெயரை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. உதாரணமாக, திருச்சியில் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், கோனார் நெய் ஸ்டோர், தைலா முதலியார் ஜவுளிக்கடை... இப்படி பல கடைகள் சாதிப்பெயரோடு இருக்கின்றன. ஒரு சாராரை மட்டும் தாக்கும் நோக்கோடும் அரசியல் லாபத்துக்காகவும் இதைப்போல போராட்டங்கள் நடத்துவது போல் இருக்கிறது'' என்றார்.

தன் தொகுதியில் கிளம்பி இருக்கும் விவகாரத்தை, முதல்வர் ஜெயலலிதாதான் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்!

இந்தியாவுக்குப் பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் ஜெயலலிதாவுக்கு இருக்கு. சரத்குமார்



கூடங்குளம், 'கோச்சடையான்’, ஜெயலலிதா, காமராஜர் மணி மண்டபம், விஜயகாந்த், சுப.உதயகுமாரன்... பரபரப் பாக இருக்கிறார் சரத்குமார். ஆனால், அத்தனை பரபரப்பும் ஜெயலலிதாவின் நலம் மட்டுமே விரும்புகிறதே... ஏன்? சரத்குமாரின் விளக்கத்தைக் கேட்போமா?

''ரஜினியுடன் 'கோச்சடையான்’ படத்துக்காக நடிக்கும் அனுபவம்?''

''ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கார் ரஜினி. பல வருஷங்களுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லியிருந்தார். அதை லண்டன்ல ரஜினிகிட்ட நினைவு படுத்தினேன். 'இவ்ளோ நாள் மறக்காமவெச்சிருக்கீங்களா? நல்ல கதைல்ல... பண்ணுவோம்... பண்ணுவோம். 'காஞ்சனா’வில் ரொம்ப போல்டான கேரக்டர் பண்ணியிருந்தீங்க. சூப்பர்... சூப்பர்’னு பாராட்டினார். 'கோச்சடையான்’ முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் பண்ற படம். ஒவ்வொரு நடிகரும் கேமராவை ஹெல்மெட் மாதிரி மாட்டிக்கிட்டு நடிக்கணும். 48 கேமரா 48 ஆங்கிள்ல ஷூட் பண்ணும். ரொம்பப் புது அனுபவமா இருக்கு கோச்சடையான்!''



''கூடங்குளம் அணு உலை இயக்கத்தை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீங்க?''

''கூடங்குளம் அணு உலை நிச்சயம் தேவை என்பதுதான் என் நிலைப்பாடு. 'கூடங்குளம் தேவை இல்லை’னு உதயகுமாரன்சொன்னப்போ, 'ஏன் தேவைஇல்லைனு சொல்றீங்க? காரணம் சொல்லுங்கண்ணே’னு கேட்டேன். அப்போது இருந்தே அவர் என்னை எதிரியாப் பார்க்க ஆரம்பிச்சுட்டார். மாற்றுக் கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டுப் பிரச்னை மிகக் குறைந்த அளவில் இருந்தது. அப்புறம் வந்த தி.மு.க. ஆட்சி பல ஒப்பந்தங்கள் போட் டுட்டே இருந்தாங்களே தவிர, ஆக்கப்பூர்வமா எதுவும் நடக்கலை. அதன் விளைவுதான் இப்போ அதீதமான மின்வெட்டு. 2020-ல் இந்தியாவுக்கு 9,50,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும். அதை எப்படி உற்பத்தி செய்யப்போறோம்? பிரட்ல முட்டையை உடைச்சு ஊத்திப் புரட்டிப் போட்டா, பிரட் ஆம்லேட் ரெடி ஆகிடும். அந்த மாதிரி மின்சாரத்தை உற்பத்திப் பண்ணிர முடியுமா என்ன? 2020 தேவைக்கு இப்போ இருந்தே திட்டம் போட்டுச் செயல்படணும். அதுக்காகத்தான் தமிழக அரசாங்கம் கடுமையான சில நடவடிக்கைகள் எடுக்குது. அந்த நடவடிக்கைகள் என்னைப் பொறுத்த வரை சரி.

பொக்ரான் அணு குண்டு சோதனைக்குப் பிறகுதான் அப்துல் கலாமுக்கு இந்தியா முழுக்க மரியாதையும் ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பும் கிடைச்சது. அவரே கூடங்குளம் அணுமின் நிலையத்தால் யாருக்கும் பிரச்னை இல்லைனு சொல்றாரு. அதை ஏன் நம்ப மாட்டேங்குறீங்க? அப்போ அவர் பொய் சொல்றார்னு சொல்றீங் களா? கைல வெண்ணெயை வெச்சுக்கிட்டு எதுக்கு நெய்க்கு அலையணும்? கூடங்குளம் அணு உலை திறந்த பிறகும் மின்வெட்டு இருந்தா, நானும் அவங்களோட களத்துல இறங்கிப் போராடுறேன். போதுமா?''

''ஒருவேளை, 'அணு உலை எங்கேயோ தென் தமிழகத்தில்தானே செயல்படப் போகுது. அதனால நமக்குப் பாதிப்பு இல்லை’னு நினைச்சுச் சொல்றீங்களோ..? சென்னையிலேயே அந்த அணு உலை அமைந்திருந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?''

''அப்பவும் ஆதரிக்கத்தான் செய்வேன். 'கூடங்குளம் அணு உலை வெடிச்சிடும்... வெடிச்சிடும்’னு விவரம் தெரியாமப் பேசிட்டு இருக்காங்க. அதைப் பத்தி எல்லாருமே புரிஞ்சுக்கணும்னுதான் 'ஏன் வேண்டும் கூடங்குளம்?’னு ஒரு புத்தகத்தை 2 லட்சம் பிரதிகள் அச்சடிச்சு இலவசமாத் தர்றேன். அணு உலைபத்திப் புரியாதவங்களுக்கும் அது அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுக் கும். இந்த அணு உலைக்காகப் பல வருஷமாத் திட்டம் போட்டு, கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கு அரசாங்கம். இவ்ளோ வருஷம் அங்கே இருக்கிறவங்க அதை ஏன் தடுக்கலை? எங்கேயோ அமெரிக்காவுல இருந்து உதயகுமாரன் லேட்டா வந்து இறங்கி இருக்காருபோல. கப்பல்ல, கரைல, ஓட்டு வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு பத்திரிகை, சேனல்களுக்குப் பேட்டி கொடுக்கிறது ஒரு ஃபேஷன் ஆகிப்போச்சு. ஏன், எனக்கும் கூடங்குளத்துல போய் நின்னு மக்களுக்கு ஆதரவாக் குரல் கொடுத்து அரசியல் மைலேஜ் ஏத்திக்கத் தெரியாதா? ஆனா, எதைப் பத்தியும் எதுக்காகப் பேசுறோம்னு தெரிஞ்சுக் கிட்டுப் பேசணும். 'சரத்குமாருக்கு நியூக்ளியர் ஆக்ட் பத்தி என்ன தெரியும்’னு உதயகுமாரன் கேட்டிருக்கார். எந்த ஒரு புராஜெக்ட்டில் இறங்குறதுக்கு முன்னாடியும் அதைப் பத்தி முழுக்கத் தெரிஞ்சுக்கிட்டுதான் இறங்கு வான் இந்த சரத்குமார்!''

''எல்லாமே தெரிஞ்சுக்கிட்டுதான் இறங்குவேன்னு சொல்றீங்க. ஆனா, கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கான அறிவிப்பு வந்த முதல் நாள்ல இருந்து பல வருஷமா அணு உலையை எதிர்த்துட்டுத்தானே இருக்காங்க கூடங்குளம் மக்கள்?''

''அதுக்குக் காரணம், அவங்களைச் சுத்தி இருக்கிறவங்க கொடுத்த தவறான வழிகாட்டல். இதோ இப்பக்கூட ஒருத்தர் வந்திருக்கார். 'நான் ஆட்சிக்கு வந்தா மூணே மாசத்துல பவர் கட் இல்லாமப் பண்ணிடு வேன்’னு சொன்னார் விஜயகாந்த். 'எப்படிங்க?’னு கேட்டதுக்கு, 'நான் ஆட்சிக்கு வந்த பிறகு சொல்றேன்’னு மழுப்புறார். இப்படிச் சுயநலமா இருக்கிற சிலரால்தான் உண்மை என்னன்னு வெளியே தெரியாமலே போகுது. உதயகுமாரனும் அப்படிச் சுயநலமாகச் செயல்படுகிறார். பொது நலம் இல்லாத போராட்டம் எப்பவும் இறுதி வெற்றி அடையாது!''

''காமராஜர் மணி மண்டபப் பணிகள் என்ன நிலைமையில் இருக்கு?''

''வேலைகள் நல்லபடியா நடந்துட்டு இருக்கு. கடனைக் கழிக்கணும்னு நினைச்சா, ஆறு மாசத்துல ஏனோதானோனு கட்டி முடிச்சிருப்பேன். ஆனா, காலாகாலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி வித்தியாசமாக் கட்டணும்னு ஆசைப்படுறேன். 11 ஏக்கர் நிலம் வாங்கிட்டேன். ஈசான மூலையில் இருக்கும் நிலத்தை வாங்க முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. மூணு மாசத்துல தோட்டக்கலை நிபுணர் வந்துடுவாரு. வேலைகள் நிதானமா நடந்தாலும் மணி மண்டபம் பிரமாண்டமா இருக்கும்!''
''விஜயகாந்த் பாதையில் நீங்களும் அரசியல் செய்றீங்கனு ஒரு விமர்சனம் இருக்கே?''''அவர் பொது மேடையில் போதையோட பேசுறதா சொல்றாங்க. நான் என்ன அப்படியாப் பேசிட்டு இருக்கேன். நான் என் தந்தை, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்... இவங்களைத் தான் ஃபாலோ பண்றேன்!''

''தெற்கு ஆசியாவின் பிரமாண்டமான அண்ணா நூலகத்தை மருத்துவமனை ஆக்கும் தமிழக அரசின் திட்டத்துக்குக்கூட ஆதரவு தெரிவிச்சீங்களே?'' 

''குழந்தைகள் காப்பகம், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டங்கள் கொண்டுவர்றதா ஜெயலலிதா சொன்னாங்க. ஏற்கெனவே இருக்குற நூலகங்களைப் புதுப்பிப்போம்னு அறிவிச்சாங்க. அந்தத் திட்டம் பிடிச்சிருந்தது. வரவேற்றேன்!''

''பின் விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் கண்மூடித்தனமான ஆதரவு தெரிவிக்கிறீங்கனு சொல்லலாமா?''

(சட்டென்று கோபப்படுகிறார். குரல் உயர்த்துகிறார்...) ''ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்குக் கூட்டணி தர்மம் காரணமாகவே நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். அது மட்டும் இல்லாம, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுறாங்க. தி.மு.க. ஆட்சி விட்டுட்டுப்போன பல பிரச்னைகளைச் சரிபண்ணிட்டு இருக்காங்க. தொலைநோக்குப் பார்வையே இல்லாம செயல்பட்ட முந்தைய தி.மு.க. ஆட்சிதான் இந்த மின்வெட்டுக்கு முழுக் காரணம். ஜெயலலிதா கொண்டுவர்ற '2023 விஷன்’ திட்டத்தை வெளிநாடுகளில் கொண்டாடுறாங்க. சென்னையில் இட நெருக்கடியைத் தவிர்க்க சேட்டிலைட் டவுன் கொண்டுவர்றாங்க. பால் விலை, பஸ் கட்டண உயர்வுனு சில கசப்புகள் இருக்கலாம். ஆனா, அதையும் வருங்காலத்துல சரி பண்ணிடுவாங்க. நம்பி ஓட்டுப் போட்டவங்க நம்பிக்கையா இருங்க. மன உறுதி, தொலைநோக்குப் பார்வை, தைரியம்னு பல பரிமாணங்கள்கொண்ட சாதனை படைக்கும் தலைவியாகத்தான் ஜெயலலிதாவை நான் பார்க்கிறேன். இந்தியாவுக்குப் பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் ஜெயலலிதாவுக்கு இருக்கு. ஒரு புள்ளியா இருந்த சிங்கப்பூரை உலகமே ஆச்சர்யப்படும் அளவுக்கு மாத்திக் காட்டினார் லீ க்வான் யூ. சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்காக 'ஸ்வீட் ஹார்ட் டிக்டேட்டரா’ இருந்தார். வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் இடம் பெயரணும்னு ஒரு வருஷம் நேரம் கொடுத்தார். இடம் பெயராத குடும்பங்களைச் சமரசம் பண்ணி வீடு கட்டிக் கொடுத்து இடம்பெயரச் செய்தார். நான் தமிழ்நாட்டின் லீ க்வான் யூவா இப்போ ஜெயலலிதாவைப் பார்க்கிறேன். உண்மையைச் சொல்லணும்னா, நான் ஜெயலலிதாவுக்கு ரசிகன் ஆகிட்டேன். இதைச் சொல்றதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை!''

"தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எங்கள் அடுத்த இலக்கு!" அதிரடிக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்



இந்தியாவிலேயே அதிகம் கவனிக்கப்படும் நபராகி இருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் வாயைத் திறந்தாலே, அது செய்தியாகிறது. அவருடைய வீட்டை எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன, 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு வாகனங்கள். நூற்றுக்கணக்கான கேமராக்கள் எந்த நேரமும் அவரை மொய்க்கின்றன. அரசு நிர்வாகத்தில் புரையோடிக்கிடக்கும் லஞ்ச ஊழலைப் பார்த்து வெறுத்து, இந்திய வருவாய்ப் பணியை உதறித் தள்ளியவர், தன்னுடைய தொடர் போராட்டங்களால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர், 'மகசேசே’ விருது பெற்றவர் என்கிற அடையாளங்கள் அவர் மீது நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. இந்திய அரசியல்அமைப்புச் சட்ட விரிவாக்கம் தொடங்கிய நவம்பர் 26-ம் தேதி அன்று தன்னுடைய கட்சியின் பெயரை அர்விந்த் அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அக்டோபர் மாதத்திலேயே அவருடைய அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தின் முதல் வாரம், அவர் அம்பலப்படுத்திய ராபர்ட் வதேராவின் நில மோசடி, காங்கிரஸின் அடி மடியில் கை வைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காக வெளிப்படையாகப் புலம்பினார் பிரதமர். இரண் டாவது வாரம், சல்மான் குர்ஷித் குடும்பம் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் எப்படி எல்லாம் நிதி முறைகேடு நடந்து இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்தார். மூத்த மத்திய அமைச்சரான சல்மான் குர்ஷித் வெளிப்படை யாக அர்விந்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு, அவரை நிலைகுலைய வைத்தது இந்த விவகாரம். மூன்றாவது வாரம், நிதின் கட்காரி யின் மோசடிகளை அம்பலப்படுத்தி, பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வைத் துவைத்துக் காயப் போட்டார். அடுத்து யார் என்று மிரட்சியுடன் பார்க்கும் அரசியல் வர்க்கம், அர்விந்த் மீது அவதூறுகளை வீசுகிறது. அவரோ, 'நான் சாமானியன்’ என்கிற வாசகத்தை மிக சக்தி வாய்ந்த கோஷமாக மாற்றி அசாத்திய துணிச்சலுடன் முன்னேறுகிறார். விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.



''நீங்கள் போராடிக் கொண்டுவந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உங்களுடைய நடவடிக்கைகளுக்குப் பயந்தே செல்லாக்காசு ஆக்கிவிடுவார்போல இருக்கிறதே மன்மோகன் சிங்?''

''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் செல்லாக்காசு ஆக்கிவிட வேண்டும் என்று மட்டும் இந்த அரசு நினைக்கவில்லை; அதைக் கொன்றுவிட வேண்டும் என்றும் நினைக்கிறது. ஆனால், அந்தச் சட்டம் இப்போது ஆட்சியாளர் கள் கைகளில் அல்ல; மக்களின் கையில் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான, வலுவானஆயுத மாக. அவ்வளவு சீக்கிரம் அந்தச் சட்டத்தை அரசால் ஒன்றும் செய்துவிட முடியாது.''

''காங்கிரஸை வீழ்த்த எளிய இலக்காகத்தான் ராபர்ட் வதேராவைத் தேர்ந்தெடுத்தீர்களா?''

''இல்லை. புரையோடிப்போன ஒட்டுமொத்த அமைப்பையும் எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தி.மு.க., அ.தி.மு.க. என எல்லோருமே எங்கள் இலக்குதான். மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் இவர்கள் எல்லோருமே கூட்டாளிகள். இவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. கட்சி பேதம் இல்லாத வியாபாரம் இது. இதில் சிக்குபவர்களைத் தனிநபர்களாகப் பார்க் காதீர்கள்.''

''ஒரு சாதாரண அரசு அதிகாரியான அர்விந்தை அரசியலை நோக்கி நகர்த்திய தருணம் எது?''

''இது சட்டென ஒரு நாளில் நடந்த மாற்றம் கிடையாது. நம்முடைய ஊழல் மிக்க அரசு இயந்திரத்தின் குரூர முகத்தை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து, மனம் வெதும்பி, வெறுத்துப்போய் நடந்த மாற்றம். பல ஆண்டுக் கோபத்தின் வெளிப்பாடு என்றுகூடச் சொல்லலாம்.''

''உங்கள் கட்சியின் இலக்கு என்ன?''

''அதிகாரத்தைப் பணமாகவும் பணத்தை அதிகாரமாகவும் மாற்றும் இன்றைய அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்களுடைய கைக்கு உண்மையான அதிகாரத்தைக் கொண்டுசெல்வது.''

''தேர்தல் கூட்டணி வைப்பீர்களா?''

''அமைப்போம்.''

''எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்கள்?''

''எங்கள் சித்தாந்தத்துடன் அனுசரித்துப்போகும், கறை படியாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.''

''அப்படிப்பட்ட கட்சிகள் இருக்கின்றனவா என்ன?''

''இருந்தால் கூட்டணி அமைப்போம். இல்லாவிட்டால் தனித்தே நிற்போம்.''

''லட்சக்கணக்கான கிராமங்களில் இருக்கிறது இந்தியா. ஆனால், நீங்கள் டெல்லியில் இருந்தே அரசியல் நடத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?''

''கிராமங்களை நோக்கிச் செல்லாமல், இந்தியாவில் எந்த மாற்றமும் நடக்காது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். டெல்லியில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஆனால், அதன் வீச்சு காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. இரண்டு கோடி உறுப்பினர்கள் எங்களுக்கு நாடு முழுவதும் இருக்கிறார்கள். இந்தியாவின் எந்தக் கிராமத்துக்கு வேண்டு மானாலும் நீங்கள் சென்று பாருங்கள். எங்கள் போராட்டங்களைக் கிராம மக்கள் சொல் வார்கள்.''

''வெறும் அறிக்கைகளும் போராட்டங்களும் மட்டுமே அரசியல் ஆகிவிடுமா?''

''இல்லை. ஆனால், அவை அரசிய லின் தவிர்க்க முடியாத அங்கம் அல்லவா? போராட்டங்கள்தானே வரலாற்றை உருவாக்கி இருக்கின்றன? அதேபோல, நாங்கள் வாய்ச் சவடா லுக்காக அறிக்கைகள் விடவில்லை. எங்கள் அறிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தகவல்களைக் கொண்டுசெல்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அரசு இயந்திரத்தின் முறைகேடுகளைக் கொண்டுசெல்கின்றன. எல்லாமே ஜனநாயகப்படுத்தும் நடவடிக்கைகள்தானே?''

''முதலாளித்துவமும் தனியார்மயமும் நாட்டையே சூறையாடுகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சாதியம் உறைந்திருக்கிறது. நீங்களோ ஊழலை மட்டுமே பெரும் பிரச்னையாக முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?''

''உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்னைகளுமே இருக்கின்றன. ஆனால், ஊழல்தான் இவற்றில் பிரதானமானது. ஏனென்றால், நான்கு பேர் இருக்கும் இடத்தில், இருவர் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஒருவர் முதலாளித்துவத்தாலும் இன்னொருவர் தனியார்மயத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நால்வருமே ஊழலால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இன்னும் பிறக்காத குழந்தைகூட இந்தியாவில் லஞ்சத் தாலும் ஊழலாலும் பாதிக்கப்படுகிறது. எனில், ஊழல்தானே முக்கியப் பிரச்னை?''

''நம்முடைய ஓட்டு அரசியல் முறையே ஊழலாக இருக்கும்போது, அதன் வழியே சென்று எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?''

''ஒழிப்போம். ஓட்டு அரசியல் முறையையே நாங்கள் சுத்தப்படுத்துவோம்.''

''மக்களே அற உணர்வுகளைப் பொருட்படுத்தாதபோது, அரசியல்வாதிகள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?''

''உலகிலேயே சிறந்த குடிமக்கள் நம்மவர்கள். ஆனால், எது அவர்களை அற உணர்வு அற்றவர்களாக மாற்றுகிறது? நீங்களோ, நானோ பிறக்கும்போதே லஞ்ச - ஊழல் மனோபாவத்துடனா பிறந்தோம்? நாம் சார்ந்து இருக்கும் அமைப்புதானே நம்மையும் ஊழலை நோக்கித் தள்ளுகிறது? ஒரு நல்ல பாதையை வகுத்துக் கொடுத்தால், நிச்சயம் இந்திய மக்கள் அதில் சரியாகப் போவார்கள். அரசியல்வாதிகள்தான் அதைக் கெடுக்கிறார்கள்.''

''இந்தியாவில் கார்ப்பரேட் துறையின் வருகைக்குப் பிறகுதான் ஊழலின் வீச்சு ஆயிரக்கணக்கான கோடி களில் எகிறியது. ஆனால், அவர்களிடம் நிதி வாங்கித்தான் நீங்கள் இயக்கம் நடத்துகிறீர்கள். இதில் என்ன தர்மம் இருக்கிறது?''

''இது அபாண்டம். கோடிக்கணக்கான சாமானியர்கள் தரும் கொடைதான் எங்கள் இயக்கத்துக்கான ஆதாரம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் இயக்கத்துக்கு நன்கொடை அளித்தன என்பது உண்மை. ஆனால், அவர்கள் தந்த நிதியில்தான் நாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்பது நியாயமற்றது. ஊழலில் அரசுத் துறை ஊழல், கார்ப்பரேட் துறை ஊழல் என்ற பாகுபாடு எல்லாம் எங்களுக்கு இல்லை.''

'
'அப்படியென்றால், உங்கள் அரசியலுக்குப் பின் கார்ப்பரேட் துறையின் நிழல் இல்லை என்று உங்களால் உறுதி கொடுக்க முடியுமா?''''எங்களை கார்ப்பரேட் துறையுடன் சேர்த்துப் பேசுவதே சங்கடத்தைத் தருகிறது. 'சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்காத, கடைசி மனிதனின் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருளாதாரமே இந்தியாவுக்குத் தேவை’ என்று நாங்கள் சொல்கிறோம். 'வளர்ச்சி என்பது சந்தைச் சக்திகளால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என்றும் சொல்கி றோம். பின் எப்படி கார்ப்பரேட் துறை எங்களுக்குப் பின் இருக்கும்?''

''பணக்கார, ஆதிக்கச் சாதியினரின், கார்ப்பரேட் குழந்தைகளின் கத்துக்குட்டி அரசியல் என்று உங்கள் அரசியலைக் குறிப்பிடுகிறார்கள் உங்கள் விமர்சகர்கள்...''

''குப்பங்களிலும் சேரிகளிலும் இருக்கும் எங்கள் இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைப் பற்றித் தெரியாதவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. பொறுத்திருந்து பாருங்கள். இது யாருடைய அரசியல் என்று புரியும்.''

''எனில், நீங்கள் யாருடைய பிரதிநிதி?''

''சாமானியர்களின் பிரதிநிதி.''

''ஆரம்பத்தில் நீங்கள்தான் அண்ணா ஹஜாரேவின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். இன்றைக்கு அவர் முற்றிலுமாக உங்களிடம் இருந்து விலகிவிட்டார். என்ன நடந்தது இடையில்?''

''சின்ன வேறுபாடுதான். 'அரசியல் ஒரு சாக்கடை; அதில் இறங்கினால், நாமும் நிச்சயம் அசிங்கப்பட வேண்டும்’ என்று அண்ணாஜி சொன்னார். ஆனால், அரசியலில் இறங்காமல் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் கொண்டுவர முடியாது என்று நாங்கள் நினைத்தோம். சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்துவோம் என்று சொன்னோம். அவ்வளவுதான். அண்ணாஜியின் மானசீக ஆசி எங்களுக்கு உண்டு.''

''உங்களுடைய அரசியல் ஆசையும் உங்கள் சகாக்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கேலிக்கூத்தாக மாறக் காரணம், இல்லையா?''

''இல்லை. உண்மையில் எங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்தன. அண்ணா இயக்கத் தைப் பார்த்துப் பயந்த அரசியல் வர்க்கம் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி, மக்களிடம் எங்கள் மதிப்பைக் குலைக்கப் பார்த்தது. இடையில் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்தோம். ஆனால், இப்போது மக்கள் எங்களை நோக்கி மீண்டும் திரும்புகிறார்கள்.''

''உங்கள் அமைப்பினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே?''

''எல்லாமே அவதூறுகள். ஆனாலும், விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.''

''அரசு வேலையை உதறினீர்கள். பிரதமரையே எதிர்க்கிறீர்கள். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பகை¬யயும் சம்பாதித்துக்கொண்டு நிற்கிறீர்கள். இதை எல்லாம் உங்கள் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள்?''

''என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் இந்தப் பயணத்தில் இறங்கினேன். நாம் எவ்வளவு மோசமான ஒரு சூழலில் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கப்போகிறோம் என்ற குற்ற உணர்வுதான் அரசியலை நோக்கி என்னைத் தெருவில் இறங்கவைத்தது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தைத் தங்களுடைய இயக்கமாகத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால், நான் தோற்றுப் போவேன். ஆனால், அது ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலின் தோல்வியாக இருக்காது. இந்த நாட்டின் ஒவ்வொரு சாமானியனின் தோல்வியாகவும் இருக்கும். நான் தோற்கக் கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்!''

கனவில் வந்து நித்தியை, ஆதினமாக சேர்க்க சொன்ன சிவன்தான் நீக்கவும் சொன்னாரா? மதுரை ஆதினத்தின் பதில்?


மதுரை ஆதீனம் - நித்தியானந்தா’ களேபர மேளாவில் இது அடுத்த அத்தியாயமோ என்று சந்தேகம் கிளப்புகிறது நித்தி நீக்கம்!

இளைய ஆதீனமாக நித்தி நியமனத்துக்கு மாநிலம் முழுக்கக் கிளம்பிய எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள், மடத்தை அரசே கையகப்படுத்தும் முயற்சிகள் எனக் கொதிக்கத் தொடங்கியதால், நித்தியை நீக்கி இருக்கிறார் ஆதீனம். ராஜினாமா செய்தால், மீண்டும் மேல்முறையீடு செய்து பதவியைப் பெறுவது கஷ்டம் என்பதால், 'ராஜினாமாவா... மாட்டவே மாட்டேன்!’ என்று மறுத்துவந்தார் நித்தி. நீதிமன்றத்தில் விவகாரம் சிக்கலாகிவிடக் கூடாதே என்று வேறு வழி இல்லாமல் நித்தி யைப் பதவி நீக்கம் செய்வதாக 'வருத்தத்தோடு’ சொன்னார் மதுரை ஆதீனம்.

ஆதீனத்தின் நடவடிக்கையால் துளி அதிர்ச்சி அடையாத நித்தியானந்தாவோ, ''சந்நிதானம் கையெழுத்துப் போட்டால் டிஸ்மிஸ். நான் கையெழுத்துப் போட்டால் ராஜினாமா. இது வெறும் சம்பிரதாய நடைமுறைதான்!'' என்று சிம்பிளாகச் சொல்லி முடித்துக்கொண்டார்.

இந்தக் களேபரங்களுக்கு நடுவில் ஆதீனத்தில் தனி ஆளாக அமர்ந்திருக்கிறார் அருணகிரி நாதர். 22 ஆண்டுகளாக ஆதீனத்துடன் இருக்கும் வயதான உதவியாளர் மட்டும் இப்போது அருகில் இருக்கிறார். நித்தியின் ஆட்கள் யாரும் இல்லை. முன் எப்போதும் பார்க்க முடியாத வகையில், ஆதீனத்தின் முகத்தில் முதன்முதலாகப் பய உணர்ச்சி தென்பட்டது. கேள்விகளை எதிர் கொள்ளத் தயங்குகிறார். முன்பெல்லாம் அவரி டம் எதைப் பற்றிக் கேட்டாலும் 'தெரியாது’, 'இருந்தாலும் இருக்கலாம்’ போன்ற நழுவல் பதில்களே இருக்காது. இப்போதோ எடுத்த எடுப்பிலேயே, ''நித்தியானந்தாவைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது!'' என்ற நிபந்தனையோடு தான் பேசத் துவங்குகிறார்.

''யாம் சொல்வதற்குப் புதிதாக எதுவும் இல்லை. இதுவரை நீங்கள் எழுதியதை எல்லாம் தொகுத்துப் போட்டு, அதனால் யாம் அவரைப் பதவி நீக்கம் செய்தோம் என்று போட்டுக்கொள்ளுங்களேன். யாம் சொன்னதாக எதுவும் வேண்டாம்'' என்று புராணப் படங்களில் சிவபெருமான் பேசுவதுபோலச் செந்தமிழில் மொழிகிறார் ஆதீனம். ''சும்மா ஜோக் அடிக் காதீங்க. இது ஜாலி பேட்டி இல்லை... கொஞ்சம் சீரியஸாப் பதில் சொல்லுங்க!'' என்று போராடி எடுத்த பேட்டியில் இருந்து...

''நித்தியை இப்போது உடனடியாக நீக்க என்ன காரணம்?''

''அது இறைவனின் சித்தம். எல்லாம் வல்ல இறைவன் செயல். ஆங்... நெக்ஸ்ட் கொஸ்டீன்?''

''சிவன் கனவில் வந்து சொல்லியதால்தான் நித்தியை இளைய ஆதீனமாக நியமிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது அவரை நீக்கச் சொன்னதும் சிவன்தானா?''

''இல்லை... இல்லை... சிவன் கனவில் வர வில்லை. இறைவனால் ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டு, அதனால் யாம் அவரைப் பதவி நீக்கம் செய்தோம்!''

''அப்படியானால், நித்தியை நீக்கியதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?''

(யோசிக்கிறார்) ''சூழ்நிலை காரணமாக அவரை நீக்கினோம். இது நான் விரும்பி எடுத்த முடிவு கிடையாது. ஆனால், யாருடைய தூண்டுதலோ, நிர்பந்தமோ இல்லாமல்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்!'

''இது செட்டப் பிரிவு... ரகசியமாக வேறு ஏதோ பின்னணி இருக்கிறது என்கிறார்களே?''

'இந்தக் கேள்வி வேண்டாம். நெக்ஸ்ட்!'

''உங்களையும் நீக்கிவிட்டு, ஆதீனத்தை அரசே கையகப்படுத்தப்போவதாகச் சொல்கிறார்களே?''

'முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அப்படிச் செய்ய மாட்டார். தவறான முன் உதாரணத்தை அவர் ஏற்படுத்த மாட்டார். இது தொடர்பாக அவரை நேரில் சந்திப்பேன்!'

''உங்கள் உயிருக்கு நித்தியால் ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே?''

''அப்படி எந்த ஆபத்தும் இல்லை. இதுவரை அவர் என்னை மிரட்டவும் இல்லை. நாகரிகமாகத்தான் நடந்துகொள்கிறார்!''

'' 'மதுரை ஆதீனத்துக்காகக் கொடுத்த பொருட்கள் எதையும் திரும்பக் கேட்கப்போவது இல்லை. மீனாட்சிக்குக் கொடுத்த காணிக்கை யாக நினைத்துக்கொள்கிறேன்’ என்று நித்தி சொல்லியிருக்கிறார். நீங்களாகவே அவர் கொடுத்த கார், சிம்மாசனம் போன்ற பரிசுப் பொருட்களைத் திருப்பிக்கொடுப் பீர்களா?''

''அப்படியா சொன்னார்? எனக்குத் தெரியவில்லை!''

''கைது நடவடிக்கைக்கு இருந்த ஒரே தடையும் தகர்ந்துவிட்டதால், ஆர்த்தி ராவ் வழக்கில் விரைவில் நித்தி கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தட தடக்கின்றனவே?''

(வேண்டாம் என்று கைஅசைக்கிறார்) ''அவர் தன்மை யாக நடந்துகொள்கிறார். நீங்கள் எதையாவது எழுதி கான்ட்ரவர்சி ஏற்படுத்திவிடாதீர்கள்!'

''மல்லிகை மணமும் மங்கையர் சிரிப்புமாக இருந்த மடம் இப்படி வெறிச்சோடிப் போய்விட்டதே சாமி?''

''இப்போதும் பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் வருகி றார்களே!''

''கடைசியாக ஒரு கேள்வி... அடுத்த ஆதீனம் யார்?''

''நேரம் வரும்போது நானே சொல்கிறே
 ன் !''

ஆம்னி பஸ்கள் அடிக்கும் அதிரடி கொள்ளைகள். ஓர் அதிர்ச்சி ரிப்போட்.




தீபாவளியை விடுங்கள்... 2013 பொங்கலுக்கே வெளியூர் செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லை. எல்லாம் புக் ஆகிவிட்டது. உங்களின் ஒரே சாய்ஸ் பேருந்துப் பயணம்தானா? அதிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்பவர் என்றால், இந்தக் கட்டுரை உங்க ளுக்கே உங்களுக்குத்தான்!

பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவனங்கள் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது என்கின்றன. சில நிறுவனங்களில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்புதான் முன்பதிவு ஆரம்பிக்கும் என்கிறார்கள். ஆன்-லைனிலும் அதே(£)கதிதான். ஆனால், விசேஷ நாட்கள் முன்பதிவு எல்லாம் கண்துடைப்புதான். தங்களது வழக்கமான வாடிக்கையாளர்கள் சிலருக்கு மட்டும் முன்பதிவை அனுமதிப்பார்கள். முன்பதிவில் டிக்கெட்டை எல்லாம் நியாயமான விலைக்கு விற்றுவிட்டால், தீபாவளிக்கு எப்படிக் கொள்ளை அடிப்பது? கடந்த தீபாவளியின்போது சென்னை டு மதுரைக்கு ஏ.சி. இல்லாத வால்வோ ஆம்னி பஸ்ஸில் வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தெரியுமா? 1,600. இது வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகக் கட்டணம். இந்த தீபாவளிக்கு இது 2000-மாகக்கூட உயரக்கூடும். தட்டிக்கேட்க முடியாது. கேட்டால், தாக்கப்பட்டலாம். நடுவழியில் இறக்கிவிடப்படலாம். அவர்கள் வைத்ததுதான் சட்டம். இதுவும் எத்தனைக் காலம் கடந்துபோகும்?

ஆம்னி பஸ்... அர்த்தம் என்ன?



மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பஸ் பயணிகளுக்கானது அல்ல. தனி நபரோ, குடும்பத்துடனோ டிக்கெட் எடுத்துப் பயணிக்க முடியாது. இதை சாட்டர்டு டிரிப் என்பார்கள். ஒரு பஸ்ஸின் 25 முதல் 35 வரையிலான மொத்த இருக்கைகளையும் பதிவுசெய்து சுற்றுலாவுக்காகவோ இதர காரியங்களுக்காகவோ தனியார் பேருந்தில் பயணிப்பதையே தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சொகுசுப் பேருந்துகள் என்கிற பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்படுகின்றன ஆம்னி பஸ்கள். அதனால்தான் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் தருவது இல்லை. போர்டிங் பாஸ் போன்ற சீட்டுகளையே தருகிறார்கள்.

சில காலம் முன்பு ஆம்னி பஸ்களில் ஒரு வெள்ளைத்தாளில் பயணிகளின் பெயர்களை எழுதி, பெயர்களுக்கு எதிரே கையெழுத்து வாங்குவார்கள் - குழுவாகச் செல்கிறோம் என்று அரசுக்குப் பொய் கணக்குக் காட்ட. ஆனால், இன்றைக்கு அதுவும்கூட நடைமுறையில் இல்லை. அரசு கண்டுகொள்ளாது என்று அவ்வளவு துணிச்சல்... அவ்வளவு நம்பிக்கை. அவ்வப்போது சில வழக்குகள்... அதிகார வர்க்கத்துக்கு ஆண்டுக்கு சிலபல கோடிகள்... பிரச்னை தீர்ந்தது. ஆனால், அங்குதான் பயணிகளுக்கான பிரச்னையே ஆரம்பிக்கிறது.

சரி... அது ஒருபக்கம்! பேருந்துப் பயணத்தின் போது பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்?

கூடுதல் கட்டணத்துக்காகக் கூடுதல் வசதிகள், அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை... இவை எல்லாம் ஆம்னியில் கிடைக்கிறதா? பஸ்ஸில் ஒரு பயணி மட்டும் இருந்தாலும்கூட கிளம்ப வேண்டிய நேரத்தில் பஸ்ஸை இயக்க வேண்டும். அல்லது அதே நேரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். பயணிக்குக் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தர வேண்டும். இயற்கை உபாதைகளுக்காக கேட்டால், இடையே நிறுத்த வேண்டும். சாய்வு இருக்கை சரி இல்லா விட்டால், உடனடியாகச் சரிசெய்து தர வேண்டும். ஏ.சி. பேருந்துகளில் குளிரைச் சமாளிக்க, போர்வை தர வேண்டும். கட்டாயம் முதலுதவிப் பெட்டி வேண்டும். தினமும் இருக்கை விரிப்புகளை மாற்றி, கொசு, கரப்பான் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் தரமான ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றுகின்றன.

நடைமுறை யதார்த்தம் என்ன?

நிறைய ஆம்னி பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் கிளம்புவது அபூர்வம். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அனுமதி இல்லாத ஆம்னி பஸ்கள் 1500-க்கு மேல் உள்ளன. வழக்கமான 56 இருக்கைகள் கொண்ட ஸ்பேர் பஸ்களையே பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து, இங்கு போலி ஆம்னிகளாக இயக்குகிறார்கள். உண்மையான ஆம்னி வாகனங் கள் காலாண்டுக்கு ஓர் இருக்கைக்கு 3,000 மாநில அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆம்னிகள் 'சுற்றுலா பஸ்’ என்று கணக்கு காட்டி இருக்கைக்கு 450 மட்டுமே வரி செலுத்துகின்றன.

தவிர, தமிழகத்தில் உட்கார்ந்து செல்லும் இருக்கை வசதிகொண்ட ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால், பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து சுமார் 200 ஆம்னி பஸ்கள் படுக்கை வசதிகளுடன் ஓடுகின்றன. சில பெரிய ஆம்னி பஸ் நிறுவனங்களிலும், போலி ஆம்னி பஸ்களிலும் விசேஷ காலங்களில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் புரோக்கர்கள் நியமிக்கப்பட்டு, சினிமா தியேட்டர் களில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதைப்போல ஆம்னி நிறுவனங் களே மொத்தமாக டிக்கெட்டை புரோக்கர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றன. புரோக்கர்கள் வைப்பது தான் விலை!

எங்கே சிக்கல்?

தமிழகத்தில் எட்டு கோட்டங்கள், 23 மண்டலங்கள், 206 டிப்போக்களில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் பஸ்களில் இரண்டு கோடிப் பேர் பயணிக்கின்றனர். ஒரு நாள் வருமானம் 22 கோடி. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு 1,000 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. அதன் மொத்தக் கடன் 6,150 கோடி. மொத்தம் உள்ள 206 டிப்போக்களையும் அடமானம் வைத்துக் கடன் வாங்கித்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிமிடம் ஜப்தியில் இருக்கும் பஸ்களை மீட்கவே சுமார்

100 கோடி வேண்டும். அரசு விரைவுப் பேருந்து கள் தரமான சேவையை அளித்தால், ஆம்னியை நோக்கி அலைபாய்வார்களா மக்கள்? ஓர் அரசு நினைத்தால் தனியார் பேருந்து நிறுவனங்களை விடத் தரமான சேவையை மக்களுக்கு வழங்க முடியும். ஆனால், அது நடக்காததற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊழல். அடுத்து, தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் லாபி.

ஒரு சாதாரண ஹார்டுவேர் கடையில் ஒரு போல்டின் விலை 50 காசு என்றால், அதை அரசுப் போக்குவரத்துக் கழகம் ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. கழகங்களின் நேரடிக் கொள்முதல் வெகு குறைவு. ஒப்பந்ததாரர் நிர்ணயிப்பதுதான் விலை. கடந்த 91-96-ம் ஆண்டுகளில் இப்படி நடந்த போக்குவரத்துக் கழக மெகா ஊழல்களால் சிறையில் அடைக்கப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், இன்றும் ஊழல் தொடர்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அரசு பஸ்களின் பெயர்ப் பலகைகளை டிஜிட்டல் ஆக்கினார்கள். அதற்கு செலவு அதிகபட்சமாக 2,000 மட்டுமே ஆகும். ஆனால், ஒரு பேருந்துக்கு 50 ஆயிரம் அள்ளிக்கொடுத்தார்கள்.

அடுத்து தனியார் லாபி. அரசு போக்குவரத்து துறை சுறுசுறுப்பாக இயங்காததன் பின்னணியும் இதுதான். அரசு பஸ்கள் ஓட்டையும் உடைசலுமாக இருந்தால்தான் இவர்கள் சம்பாதிக்க முடியும். அமைச்சரில் தொடங்கி அதிகாரிகள் வரை இவர்களின் கறை கரங்கள் நீள்கின்றன.

இந்த லாபிதான் முறையற்ற வணிகமான ஆம்னியையும் அனுமதிக்கிறது. அதற்குக் கட்டண நிர்ணயம், சேவை கண்காணிப்புகள், தரக் கட்டுப்பாடுகள் என எதையுமே செய்ய மறுக்கிறது. இந்த லாபிதான் கடந்த ஆண்டு வேலூர் அருகே காவிரிப்பாக்கத்தில் 22 பேர் உடல் கருகி இறந்தபோதும்... அரசு பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்காததற்குக் காரணமாக இருந்தது. இந்த லாபி தான் உயர் நீதிமன்றம், 'மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்னி பஸ்களுக்காக புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டபோதும் அரசை மௌனம் காக்கவைக்கிறது.

ஒரு வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயணிக்கிறார்கள் என்றால், அதில் அரசு பஸ்கள்தான் அதிகம் விட வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இங்கு அரசு பஸ்களைவிட தனியார் பஸ்களே அதிகம். பிரச்னையைத் தீர்க்க வேண்டும் எனில், அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க வேண்டும். குறிப்பாக, 'கரகாட்டக்காரன் கார்’ ரேஞ்சுக்கு இருக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களைப் புதுப் பிக்க வேண்டும். தமிழகத்திலும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் மொத்தம் உள்ள 4,372 வழித்தடங்களிலும் ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன. இந்த ஒவ்வொரு வழித்தடத்திலும் கூடுதலாக மூன்று அரசு பஸ்களை விட்டாலே, சுமார் 15 ஆயிரம் புதிய பஸ்கள் தேவைப்படும். இதைச் செய்தாலே, 75 சதவிகிதம் பிரச்னைகளைத் தீர்க்கலாம்.

''தரமான நிறுவனங்கள் தவறு செய்வது இல்லை!''

ஆம்னி பேருந்துகளின் கொள்ளைகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான கே.பி.நடராஜனிடம் கேட்டேன். ''போலி ஆம்னி பேருந்துகளின் அடாவடிகள்குறித்து பல முறை நாங்களும் அரசிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால், 56 இருக்கைகள் கொண்ட பேருந்துகளுக்கு ஆம்னி பேருந்துகளைப்போல பெயின்ட் அடித்து, பஸ் நிலையத்தின் வெளியிலேயே பயணிகளின் கையைப் பிடித்து இழுக்கிறார்கள். விசேஷ நாட்களில் ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். எங்கள் சங்கத்தில் இருக்கும் தரமான ஆம்னி நிறுவனங்கள் இதுபோன்று அடாவடியில் ஈடுபடுவது இல்லை. அப்படி இருந்தால், தாராளமாகப் புகார் கொடுக் கலாம்!'' என்றார்.

தீபாவளி நெருங்கிவிட்டது... சென்னைகோயம் பேடு ஆம்னி பேருந்துகள் முறைகேடு குறித்துப் புகார் செய்ய, 044-23452377, 23452320 ஆகிய எண் களில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்!

Monday, October 22, 2012

கல்லூரி மாணவிகளைக் குறிவைக்கும் புரோக்கர்கள்! கிறுகிறுக்கும் கிருஷ்ணகிரி



''சேலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் வாழப்பாடி, என்னுடைய சொந்த ஊர். கட்டட வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தேன். அப்புறம் திசைமாறிப்போய் ஒரு புரோக்கர் மூலமா உடம்பை வித்துத் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். எங்க வீட்டுல இருக்கிற யாருக்கும், நான் இந்தத் தொழில் பண்றது தெரியாது. இந்தத் தொழிலைவிட்டு வெளியே வரலாம்னு நினைச்சாலும் சுத்தி இருக்கிறவங்க விட மாட்டேங்கிறாங்க. இந்தத் தொழிலே வேண்டாம்னு விட்டுட்டு ஒரு தடவை தீர்மானமா பூக்கடை வெச்சேன். ஆனா போலீஸ்காரங்களே வந்து, 'இன்னைக்கு ராத்திரிக்கு வந்துடு’னு மிரட்டிட்டுப் போனாங்க. நான் போகலைன்னா என் மேல கேஸ் போடுவாங்க. எல்லாம் என் விதிங்க. ஆனா, நான் என்னோட கதையைச் சொல்றதுக்காக உங்களைக் கூப்பிடலை. கிருஷ்ணகிரியில் கிராமத்துப் பக்கம் இருந்து வர்ற காலேஜ் புள்ளைங்களைக் குறிவைச்சு, இங்கே ஒரு புரோக்கர் கூட்டமே இறங்கி இருக்குது.



கிராமத்துப் புள்ளைங்ககிட்ட ஆசையாப் பேசி, அதுங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து நாசமாக்கிட்டு இருக்கானுங்க. இதுக் குன்னு சில பசங்களை வச்சிருக்காங்க. அந்தப் பசங்க வாங்கித் தர்ற பொருளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு காலேஜ் புள்ளைங்களும் பாழுங் கிணறுன்னு தெரியாலேயே விழுந்துடுறாங்க. காலேஜ் பொண்ணுங்களை கஸ்டமர் கூட கார்ல அனுப்பி வச்சுடுவாங்க. அவங்க கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் போற வழியில் இருக்கிற காட்டுக்குள் கூட்டிட்டுப் போய், வேலையை முடிச்சுட்டு திரும்பிக் கொண்டுவந்து விட்டுருவாங்க. முதலில் முரண்டு செய்யும் கல்லூரிப் பெண்கள், பின்னர் நிலைமையை உணர்ந்து அனுசரித்துச் செல்கிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதை வெளியே சொல்லாமல் நரகத்தில் வாழ்கிறார்கள். நான் சொல்றது சத்தியமா உண்மைங்க'' என்றவர் ஒரு பெண்ணிடம் நம்மை அழைத்துச் சென்றார்.

அந்தப் பெண் நம்மிடம், ''நான் புரோக்கர் தொழிலை விட்டு பல வருஷங்கள் ஆகிப்போச்சு. இப்போகூட பொண்ணு வேணும்னு என்கிட்ட பல பேரு வந்து நிற்கிறாங்க. அதுல சில போலீஸ்காரங்களும் அடக்கம். எனக்குத் தெரிஞ்சு கிருஷ்ணகிரியில எப்படியும் 4,000 பொண்ணுங்க இந்தத் தொழில்ல இருப்பாங்க. நிறையக் காசு கிடைக்குதுன்னு இப்போ காலேஜ் புள்ளைங்களை இந்த பாவப்பட்ட தொழில்ல இறக்குறாங்க. அரசாங்கமும் போலீஸாரும் மனசுவெச்சா மட்டும்தான் புரோக்கர்களிடம் இருந்து அவர்களை மீட்க முடியும்'' என்றார்.

கிருஷ்ணகிரியில் பாலியல் தொழிலாளிகளை மீட்டு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்து வரும் வித்யா நிகேதன் அமைப்பின் செயலாளர் லலிதாவிடம் பேசினோம். 'தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரியில்தான் அதிக அளவுக்கு விபசாரம் நடக்கிறது. அதற்குக் காரணம், மிக அதிகமான போக்குவரத்தும், பிற மாநில மக்களின் வருகையும்தான். இப்போது கல்லூரி மாணவிகளை அதிக அளவில் விபசாரத்தில் தள்ளு கிறார்கள். மாணவிகளை ஏமாற்றுவதற்காகவே பல இளைஞர்களை வைத்திருக்கிறார்கள். பாய் ஃப்ரெண்ட்ஸ் வேடத்தில் திரியும் இவர்களிடம் ஏமாந்துவிடும் பெண்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து, வலையில் சிக்கவைக்கிறார்கள். இப்போது சமூக வலைதளங்கள் மூலமாகவும் கல்லூரி மாணவிகளுடன் பரிவர்த்தனை நடக்கிறது. அந்த மாணவிகள் நினைத்தாலும் உடனே இந்தத் தொழிலில் இருந்து வெளியே வந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். காதல் வலையில் பெண்களை வீழ்த்துவதற்காகத் திரியும் ரோமியோக்களைக் கட்டுப்படுத்தினால்தான், இந்தப் பிரச்னை தீரும். தங்கள் பிள்ளை கல்லூரியில் நல்லவிதமாகப் படித்துக்கொண்டு இருப்பதாக பெற்றோர்கள் நினைக்க... அந்தப் பெண்களோ பாழும் கிணற்றில் விழுந்து நாசமாகி வருகிறார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெண்கள் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தப் பெண்களைக் காப்பாற்ற முடியும்'' என்றார் நிதானமாக.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமாரிடம் பேசினோம். ''இதுவரை நீங்கள் சொல்வது போன்று எந்தப் புகாரும் வரவில்லை. பாலியல் தொழில் செய்பவர்கள் திருந்தி வாழ நினைத்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். பாலியல் தொழிலாளிகளுக்கு காவல் துறையில் இருப்பவர்கள் யாராவது தொல்லை கொடுத்தால் என்னிடம் புகார் செய்யலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன். கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது பற்றி உடனடியாக விசாரிக்கிறேன். அப்படித் திரியும் ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியாகச் சொன்னார்.

கொல்கத்தா, மும்பை வரிசையில் கிருஷ்ணகிரி சேர்ந்துவிடக் கூடாது!

Saturday, October 20, 2012

நித்தி டிஸ்மிஸ்? அடுத்தது அரெஸ்ட்?



மாதக் கணக்கில் நித்திய கண்டமாய் நகர்ந்துவரும் நித்தியானந்தா நியமன வழக்கு, முக்கியக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அருணகிரிநாதரை மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றுவது, ஆர்த்தி ராவ் வழக்கில் நித்தியை சிறைக்கு அனுப்புவது போன்றவற்றில் தமிழக அரசின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது! 
நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்துக் கிளம்பிய மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர், 'நித்தியானந்தாவையும் அவரைக் குறுக்கு வழியில் ஆதீனத்துக்குள் கொண்டுவந்த அருணகிரிநாதரையும் மடத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும்’ என்று ஆரம்பத்தில் கோரிக்கைவைத்தார்கள். அப்போது, 'நிர்வாகப் பொறுப்புகளை அருணகிரிநாதரே கவனித்துவருவதால் மடாதிபதி இருக்கை காலியாக இல்லை. எனவே மடத்தை அரசு ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என்று சொன்னது இந்து அறநிலையத் துறை. ஆனால், நித்தியானந்தா நியமனம் தொடர்பாகத் தொடரப்பட்ட பொது நல வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 28-ல் வந்தபோது, 'சட்ட விதிகளுக்கும் மடத்தின் மரபுகளுக்கும் முரணாக நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து இருக்கிறார் அருணகிரிநாதர். அதற்காக அருணகிரிநாதர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று அரசுத் தரப்பில் அஃபிடவிட் தாக்கல் செய்து ஆதீனத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தமிழக அரசு!
கடந்த 16-ம்தேதி இந்த வழக்கின் மறு விசாரணை வந்தபோது, இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார்கள். 'நித்தியானந்தா மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. குண நலன் கெட்டு, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்காத நித்தியானந்தா, இந்த மடத்துக்கு மட்டும் அல்ல, வேறு எந்த மடத்துக்கும் தலைவராகத் தகுதியற்றவர். அவரை மதுரை ஆதீனத்தின் வாரிசாக நியமித்தது சட்டத்துக்குப் புறம்பானது. இதன் பின்னணியில் ஆதீன சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது’ என்று வாதாடினார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.
அடுத்த நாள் அருணகிரிநாதருக்காக ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், 'இளைய ஆதீனத்தை நியமனம் செய்வதற்கு அருணகிரிநாதருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. நித்தியானந்தாவை முறைப்படிதான் இளைய ஆதீனமாக நியமித்து இருக்கிறார் அருணகிரிநாதர். நித்தியானந்தாவின் சாதியைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 1994-லேயே அவர் சன்னியாசி ஆகிவிட்டார். சன்னியாசிக்கு சாதி ஏது? நித்தியானந்தா நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை. கற்பனையான காரணங்களைச் சொல்லி பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்’ என்று தனது வாதத்தை எடுத்துவைத்தார். இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பும் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிப்பதற்காக விசா ரணையை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள் நீதிபதிகள்.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம். ''இந்து அறநிலையத் துறை சட்டப்படி மதுரை ஆதீன மடத்தைப் பொறுத்தவரை, ஒருவர் மட்டுமே மடாதிபதியாக இருக்க முடியும். அவருக்குப் பின்னால் மடாதிபதியாக வருபவரும் அந்த மடத்திலேயே தங்கி இருந்து, சிவ சித்தாந்த நெறிமுறைகளைக் கற்றுத் தேர்ந்த சீடர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால், '292-வது குருமகா சன்னிதானமான நான் 293வது சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமிக்கிறேன்’னு கர்நாடகாவில் வைத்து ஒப்பந்தம் எழுதி இருக்கிறார் அருணகிரிநாதர். இது, இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. மேலும், ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கும் நித்தியானந்தாவை மடத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மரபுகளை மீறி அடுத்த மடாதிபதியாக நியமித்திருக்கிறார் அருணகிரிநாதர். இந்த நியமனம் ஏற்புடையது அல்ல என்பதை கோர்ட்டில் தெளிவுபடுத்தி இருக்கிறோம். மரபுகளை மீறி சட்ட விரோதக் காரியத்தைச் செய்த அருணகிரிநாதரை மடத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி, மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன'' என்றார்.
தமிழக அரசின் அதிரடி மூவ் குறித்து தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மதுரை ஆதீனம் அருணகிரி நாதரிடம் பேசினோம். ''வழக்கு நீதிமன்றத்தில் இருக்கே...'' என வழக்கம்போல இழுத்தவர், ''நாங்கள் உட்பட ஆதீனகர்த்தர்கள் யாருமே கோர்ட்டுக்கோ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ இதுவரை போனது இல்லை; அப்படிப் போவது மரபும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக ஆதீன மடத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட்டிருக்கும் நாங்கள், மடத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் எதிலும் இறங்கியது இல்லை. ஆதீனத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்வதற்காகவே நித்தியானந்தரை இளைய பட்டமாக ஆக்கினோம். ஆதீனத்தின் சொத்துக்களை நித்தியானந்தாவுக்கு எழுதிக் கொடுத்துவிட்டதாகச் சொல்வது எல்லாம் அபாண்டம். அதுபோன்ற காரியத்தை ஒருக்காலும் நாம் செய்ய மாட்டோம். எங்களை இந்த மடத்தைவிட்டு வெளியேற்றும் சூழல் வராது; அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்காது. புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களை வெளியேற்றி, ஒரு தவறான முன்னுதாரணத்தை நிச்சயம் புரட்சித் தலைவி அவர்கள் செய்ய மாட்டார்கள். மற்ற விஷயங்களை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால் பேசுவோம்'' என்று தயக்கத்துடனேயே பேசினார் அருணகிரிநாதர்.
பொது நல வழக்குப் போட்டவர்களோ, ''மதுரை ஆதீன மடத்தை 'மதுரை ஆதீன அறக்கட்டளை’ என்று மாற்றி அதன் தலைவராக நித்தியானந்தாவை நியமித்து ஆதீன சொத்துக்களை பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார் அருணகிரிநாதர். இதற்கான ஒப்பந்தத்தை கர்நாடகாவில் பதிவும் செய்திருக்கிறார். அதற்கான 27 பக்க ஆவணங்கள் இப்போது எங்கள் கையில்'' என்று அடுத்த குண்டை தூக்கிப் போடுகிறார்கள். 'நித்தியின் ஆட்கள் என்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள்’ என்று ஏற்கெனவே ஆர்த்தி ராவ் கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர். போட்டுவைத்திருக்கும் சென்னை போலீஸ், இந்த வழக்கில் நித்தியைக் கைதுசெய்வது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார்களாம்.
இந்த அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாமல், 'மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பொறுப்பு வேண்டாம்’ என்று நித்தியானந்தா ராஜினாமா செய்துவிட்டதாக 18-ம் தேதி பரபரப்பு கிளம்பியது. உடனடியாக அருணகிரிநாதரைத் தொடர்புகொண்டோம். ''எங்களுக்கும் அப்படி ஒரு தகவல் வந்தது. ஆனால், நித்தியானந்தா எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. நித்தியானந்தா ராஜினாமா வதந்தி பற்றி இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் அப்புறம் கருத்துச் சொல்கிறோம்'' என்று முடித்துக்கொண்டார்.
ராஜினாமா விவகாரம் குறித்து திருவண்ணாமலையில் இருக்கும் நித்தி அலுவலகத்தில் விசாரித்தோம். ''ராஜினாமா செய்தி பொய். சுவாமிஜி எட்டு மணி நேர தியானத்தில் இருக்கிறார் அவரை இப்போது பார்க்க முடியாது'' என்று சொன்னார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்கோ வெளியில் சென்றிருந்த நித்தியானந்தா தனது காரில் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். போகும்போதே மீடியாக்களைப் பார்த்து கையசைத்துவிட்டுப் போனார். சற்று நேரத்தில் உள்ளே இருந்து வந்த நித்தியின் உதவியாளர் நித்திய பரமானந்தா, ''சுவாமிஜி ராஜினாமா செய்துவிட்டதாகச் சொல்லப்படும் செய்தி தவறானது. யாரோ வதந்தியைப் பரப்பி இருக்கிறார்கள். ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இல்லை; அவர் அப்படி செய்யவும் மாட்டார். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது அதை சட்டப்படி எதிர்கொள்வார்'' என்று நாலே வரியில் நச்சென பதில் சொன்னார். நித்தியானந்தாவை சந்திக்க வேண்டும் என்று நிருபர்கள் கேட்டதும், ''நவராத்திரி பூஜைகளில் சுவாமிஜி பிஸியாக இருக்கிறார். இரவு 7 மணிக்கு அவர் பூஜைக்கு வரும்போது அவரைத் தரிசிக்கலாம்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் பரமானந்தா.