Monday, February 13, 2012

2ஜி தீர்ப்பு: டெலிகாம் துறையின் எதிர்காலம்..?


சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புகளில் இரண்டு தீர்ப்புகள் முக்கியமாகப் பேசப்பட்டது. இந்த இரண்டுமே இந்திய டெலிகாம் துறை பற்றிய தீர்ப்புதான். முதலாவது, வோடஃபோன் நிறுவனத்துக்குச் சாதகமான தீர்ப்பு. இது தனிப்பட்ட நிறுவனத்திற்கான தீர்ப்பு என்றாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவின் பக்கம் திரும்பச் செய்தது.

ரண்டாவது, 2ஜி வழக்கில் தரப்பட்ட தீர்ப்பு. 2008-ம் ஆண்டு தரப்பட்ட 122 லைசென்ஸ்களை ரத்து செய்யச் சொல்லி தீர்ப்பு சொன்னது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பினால் டெலிகாம் நிறுவனங்களின் எதிர்காலம் பிரமாதமாக இருக்கும் என சிலரும், வெளிநாட்டு நிறுவனங் களுக்கு இத்தீர்ப்பு எதிரானது என சிலரும் பேசுவது ஒருபக்கம் இருக்க, 2ஜி பிரச்னை பற்றி ஒரு சிறு பிளாஷ்பேக். இந்திய அரசுக்குச் சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலை வரிசை தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது. 2001-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபடி இந்தியா முழுமைக்கும் சேவையைக் கொடுக்க 1,935 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஏழு வருடங்களுக்குப் பிறகுகூட அதே தொகையை நிர்ணயம் செய்தது தொலைதொடர்பு அமைச்சகம்.தவிர, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பது போன்ற சில தகிடுதத்தங்களைச் செய்த தால், அப்போது வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களை (9 நிறுவனங்களுக்கு) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு அம்சங்களும் இத்தீர்ப்பில் கலந்து இருப்பதாகச் சொல்கிறார்கள் பலர். அரசாங்கம் தவறு செய்யும் பட்சத்தில் நீதிமன்றங்கள் அதை திருத்தி, நீதியை நிலைநாட்ட முடியும் என்பது இந்த வழக்கில் இருக்கும் பாசிட்டிவ்-ஆன அம்சம். அரசாங்கம் இன்று எடுக்கும் எந்த முடிவு என்றாலும் நாளைக்கு நீதிமன்றத்தில் ரத்தாகிவிட வாய்ப்புண்டு என்கிற பயம் இந்த தீர்ப்பில் இருக்கும் நெகட்டிவ்-ஆன அம்சம். பாசிட்டிவ் அம்சத்தால் உற்சாகமடைகிற பலரும் இந்த நெகட்டிவ் விஷயத்தைப் பார்த்து பதறவே செய்கிறார்கள்.ஏற்கெனவே வழங்கப்பட்ட லைசென்ஸ்களை ரத்து செய்ததோடு, கூடிய விரைவில் ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதனால் நம் அரசாங்கத்திற்கு இன்னும் அதிகமான பணம் கிடைக்குமா என்பது நம் அடுத்த கேள்வி.


3ஜி மூலமாக கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு, 1.76 லட்சம் கோடி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று மத்திய தணிக்கை குழு சொல்லி இருக்கிறது. ஆனால், சி.பி.ஐ.யோ அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய தொகை சுமார் 30,000 கோடி ரூபாய் கிடைக்காமல் போய்விட்டதாகச் சொல்லி இருக்கிறது.இந்த சூழ்நிலையில் இந்தியா முழுமைக்கும் லைசென்ஸ் பெற 12,000 கோடி நிர்ணயம் செய்யப்படும் என்ற செய்திகள் வந்திருப்பதால், இந்திய அரசாங்கத்துக்கு நிறைய பணம் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால், நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சிலர் சொல்வது போல 70 ஆயிரம் கோடி ரூபாயெல்லாம் கிடைப் பதற்கு வாய்ப்புகள் குறைவே!

இனி டெலிகாம் துறை நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?


''முதலாவது ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் உரிமங்களையே பல நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதில், 40 சதவிகிதத்தை மட்டுமே சில நிறுவனங்கள் பயன்படுத்தி இருக்கின்றன. இந்த லைசென்ஸ்களை பயன் படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இருக்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவுதான். ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் சந்தையில், ஏழு நிறுவனங்கள் 91% சதவிகித வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றன. மீதமுள்ள வாடிக்கையாளர்களை வைத்துதான் மற்ற புதிய நிறுவனங்கள் இயங்குகின்றன. கிட்டத்தட்ட இந்திய டெலிகாம் மார்க்கெட் உச்சநிலையை அடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.ஏற்கெனவே மிகக் குறைந்த விலைக்கு வாங்கியவர்கள், இதில் பெரிய லாபமில்லை என்பதை தெரிந்து கொண்டபிறகும், அதிக தொகை கொடுத்து மீண்டும் லைசென்ஸ் வாங்குவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே வாங்கினாலும், அதற்கான பணத்தை அவர்கள் எப்படி திரட்டுவார்கள் என்பது கேள்வி. ஏற்கெனவே கிடைத்த லைசென்ஸை பிணையாக வைத்துதான் வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கின்றன பல நிறுவனங்கள். லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தருமா என்பது சந்தேகமே. தற்போதைய நிலையில் 211 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இந்தியாவில் இருக்கிறது. தற்போது ரத்து செய்யப்பட்ட 450 மெகா ஸ்பெக்ட்ரத்தையும் சேர்த்தால் நிறைய சப்ளை இருக்கிறது. அதனால் டிமாண்ட் குறையும். அப்போது நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட அதிகமாக விற்பது கடினமான விஷயமாக இருக்கும். தவிர, ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் இருக்கும் ஸ்பெக்ட்ரத்திலேயே சராசரியாக 15 சதவிகிதத்தை அவர்கள் இன்னும் பயன்படுத் தாமலேயே இருக்கிறார்கள்.மேலும், ஏற்கெனவே வைத்திருக்கும் லைசென்ஸை அடுத்த சில வருடங்களில் புதுப்பிக்க வேண்டியிருப்பதால், தற்போது நடக்கும் ஏலத்தில் அந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு விலையை ஏற்ற விரும்பாது.

3ஜி, 4ஜி என்று டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில், வெறும் 2ஜி லைசென்ஸை மட்டும் வைத்துக்கொண்டு வாடிக்கை யாளர்களை திருப்திப்படுத்த முடியாது. ஏற்கெனவே 3ஜி லைசென்ஸை வைத்திருக்கும் நிறுவனங்கள்கூட கடனை கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டி ருக்கின்றன. இந்நிலையில் புதிதாக வரும் நிறுவனங்கள் 2ஜி, 3ஜி, 4ஜி என லைசென்ஸ்களை வாங்கி எப்படி லாபம் பார்க்கும் என்பது கொஞ்சம் மலைப்பாகவே இருக்கிறது.இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, டெலிகாம் துறையில் கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பிருக்கிறது. அதாவது, தற்போது சந்தையில் இருக்கும் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், டாடா, ரிலையன்ஸ், ஐடியா போன்ற முக்கியமான நிறுவனங்கள்தான் சந்தையில் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது


விகடன்

No comments:

Post a Comment