Thursday, August 25, 2011

புதுடில்லி: "லோக்பால் மசோதா, நான்கு நாட்களில் வேண்டும் என, ஹசாரே விதித்த நிபந்தனையால், மத்திய அரசு, நேற்று அதிக வேகம் காட்டியது. காலை முதல், மாலை வரை, பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஹசாரே தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த ஒன்பது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினத்திலிருந்து, இந்த விவகாரத்தில்அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவினர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பை தொடர்ந்து, அரசு தரப்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நேற்று காலை, ஹசாரே குழுவினருடன், இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடந்தது. சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இல்லத்தில் நடந்த சந்திப்பில், ஹசாரே தரப்பில் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், கிரண் பேடி பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது, ஹசாரே குழு வைத்த கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக தெரிகிறது. இருப்பினும், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது, லோக்பால் மூலம், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது உட்பட, மூன்று முக்கிய விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், ""லோக்பால் மசோதா தாக்கலாவதற்கு, இன்னும், 20 நாட்களுக்கு மேலாகும். இருப்பினும், இப்போதைக்கு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவது முக்கியமானது' என்றார்.

இதைத் தொடர்ந்து, மாலையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. இதில் பேசிய பிரதமர், ""அரசு தரப்பு மசோதாவையும், ஜன்லோக்பால் மசோதாவையும், பார்லி நிலைக்குழு விரைந்து பரிசீலிக்க கேட்டுக்கொள்வேன். லோக்பால் வரம்பிற்குள் என்னையும் (பிரதமர்) சேர்ப்பதற்கு சம்மதித்தேன். ஆனால், சக அமைச்சர்கள் தான் அதை ஏற்கவில்லை. ஹசாரே குழு தெரிவித்த கோரிக்கைகளை ஏற்றுள்ளோம். இருப்பினும், முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்ற அர்த்தமாகாது'' என்றார்.

கைவிட கோரிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், "அன்னா ஹசாரே உடனடியாக தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்; எங்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை ஏற்பார் என நம்புகிறோம்' என, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள், அரசு மசோதாவை வாபஸ் பெற்று ஒருங்கிணைந்த வலுவான மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என கோரின.

மற்றொரு திருப்பமாக, ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்பில், "ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
ஹசாரே கண்டிப்பு: அரசு தரப்பில் இறங்கிவந்த போதிலும், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதில் ஹசாரே கண்டிப்பாக இருக்கிறார். உண்ணாவிரத மேடையில் இருந்தபடி ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே, "என் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தை வலுப்படுத்த, இன்னும், ஒன்பது நாட்கள் என்னால் போராட்டத்தை தொடர முடியும். எனக்கு ஒன்றும் ஆகாது. மாரடைப்பால் சாவதை விட, நாட்டுக்காக உயிரை விடுவது சிறந்தது'' என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""ஜன்லோக்பால் மசோதா, நாளையே(இன்று) பார்லிமென்டில் தாக்கலனால், ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுவார்'' என்றார்.

இறங்குகிறது அரசு: ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட செய்யும் முயற்சியாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று இரவு, ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, ஹசாரே நிபந்தனைகளுடன் உடனடியாக லோக்பால் மசோதா உருவாக்க கால அவகாசம் தேவை என்ற கருத்து அரசிடம் உள்ளது. அதே சமயம், ஹசாரே உண்ணாவிரதம் முடிவுற்று சுமுக நிலை ஏற்பட்டால் தான், அரசு மீதான மக்கள் கோபம் குறையும் என்ற கருத்து மத்திய அரசிடம் ஏற்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment