Thursday, August 25, 2011

பிரதமருக்கு சம்மன் : மாஜி அமைச்சர் ராஜா வலியுறுத்தல்

""2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், ஒரு சாட்சியாக கோர்ட்டில் ஆஜராகும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்ப வேண்டும்,'' என சி.பி.ஐ., கோர்ட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக கைதானவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வது தொடர்பான விவாதம் தற்போது நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், கனிமொழி தரப்பில் அவரது வழக்கறிஞர் வாதாடினார். அப்போது, "ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவெடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு' என, தெரிவித்தார். இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வழக்கறிஞர் சுஷில்குமார், நீதிபதி சைனி முன் ஆஜராகி வாதிடுகையில், ""2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மற்றும் தற்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக உள்ள கபில் சிபல் ஆகியோரை, இவ்வழக்கில் சாட்சியாக ஆஜராகும்படி அழைக்க வேண்டும். இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

சி.பி.ஐ.,யிடம் டிராய் விளக்கம்: இதற்கிடையில்,"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலத்தில் விட வேண்டும் என, தொலைத் தொடர்பு துறைக்கு நாங்கள் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை' என, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), சி.பி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, கடந்த 20ம் தேதி சி.பி.ஐ.,க்கு, டிராய் அமைப்பின் செயலர் ஆர்.கே அர்னால்டு, கடிதம் ஒன்றை எழுனார். அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டில், "2ஜி' ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறையில் இணைந்த புதிய நிறுவனங்களுக்கு, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ, எந்த பரிந்துரையையும் தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால், அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியாத காரியம்.
தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் வழியாக, நாங்கள் கருதியதில்லை. இதனால் தான், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுமாறோ, கட்டணத்தை உயர்த்தும்படியோ, எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை. இதனால், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூற முடியாது. கடந்த 2007ம் ஆண்டில், 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட, "2ஜி' ஸ்பெக்ட்ரத்திற்கு எவ்வித விலையும் நிர்ணயம் செய்து பரிந்துரைக்கவில்லை. 10 மெகா ஹெர்ட்ஸ்சுக்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்படி கூறினோமே தவிர, வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

செப்டம்பர் 15ல் மூன்றாவது குற்றப்பத்திரிகை : "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை, செப்டம்பர் 15ம் தேதி தாக்கல் செய்யப்படும் என, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ., தெரிவித்தது. இந்த வழக்கில், இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றப்பத்திரிகையை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவதாக ஏற்கனவே சி.பி.ஐ., தெரிவித்திருந்தது. இந்நிலையில், மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு, மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி சி.பி.ஐ. தரப்பில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை சி.பி.ஐ., வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தாக்கல் செய்தார். மேலும், "வழக்கு குறித்த தங்களின் நிலை அறிக்கையை சி.பி.ஐ., வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை, செப்டம்பர் 1ம் தேதி தாக்கல் செய்யும்' என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment