Wednesday, April 27, 2011

காங்., கூட்டணி தேவை! தி.மு.க., உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

2ஜி குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டதை அடுத்து இன்று காலையில் நடந்த தி.மு.க., உயர் மட்ட செயல் திட்ட குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது என்றும், பிரச்னைக்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தி.மு.க., உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் காலை கூடியது. முதல்வர் கருணாநிதி தலைமையிலான உயர்மட்ட செயல் திட்டக் குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள முடியாது என தி.மு.க., முடிவு எடுத்துள்ளது. இந்த பிரச்னையில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வழி இருப்பதால், சட்டரீதியாக அணுக முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, கலைஞர், "டிவி'க்கு, 210 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அந்த, "டிவி' நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம், சி.பி.ஐ., விசாரித்தது.அதன்படி, கனிமொழியை, 2வது குற்றப்பத்திரிகையில் சேர்த்து, தி.மு.க., வட்டாரத்துக்கு, சி.பி.ஐ., நேற்று முன்தினம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மே 6ம் தேதி, கோர்ட்டில் ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அங்கு தொட்டு, இங்கு தொட்டு கடைசியில் முதல்வரின் குடும்பத்திலேயே, சி.பி.ஐ., கை வைத்துள்ளதால், இப்பிரச்னையை பெரும் நெருக்கடியாக, தி.மு.க., கருதுகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற கட்டாயத்தில், கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழு, இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகிறது.மத்திய அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்வது குறித்து, தி.மு.க., பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முடிவு எந்த விதத்திலும் கட்சிக்கும், வழக்கில் சிக்கியுள்ள கனிமொழிக்கும் பலன் தராது என்பதே கட்சித் தலைமையின் கணிப்பாக உள்ளது.

"கூட்டணி கட்சியினர் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை காப்பாற்றுவது தான் கூட்டணி தர்மம்' என்ற அடிப்படையில் தான், இதற்கு முந்தைய அரசுகள் முன்னுதாரணங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளன. மத்திய அரசு என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் அமைப்பாகவே, சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளும் செயல்பட்டு வந்துள்ளன. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் விஷயத்தில், இதற்கு நேர்மாறான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்றும், மறுபுறம், ரெய்டு, குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு என்றும் எதிரெதிர் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதன் மர்மம் என்ன என்பதை அனைவரும் விவாதிக்கத் துவங்கியுள்ளனர்."ஊழலுக்கு நாங்கள் எதிரானவர்கள், ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்ற தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதற்கு, தி.மு.க.,வை பலிகொடுக்க தயாராகி விட்டது' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

சூழ்நிலைகள் இப்படி இருந்தாலும், காங்கிரசை பகைத்துக் கொள்ளும் எந்த முடிவை எடுத்தாலும், அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகி விடும் என்ற நிலையையும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது."தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் எடுத்தால், அது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்' என, தி.மு.க.,வின் தலைமை கருதுகிறது.

"காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை எடுத்து, காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டது; துரோகம் இழைத்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், அது, அரசியல் ரீதியாக பயன்படுமே தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தப்பிக்க எந்த வகையிலும் உதவாது. காங்கிரஸ் உதவி இல்லாமல் இந்த வழக்கை சந்திப்பது சிரமம்' என்றும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்து, மத்திய அரசிலிருந்தும் வெளியேறி, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே நேரத்தில், அதிகாரத்தில் இல்லாமல் இருப்பது எந்த விதத்திலும் கட்சிக்கு உகந்தது அல்ல என்ற கருத்தும், தி.மு.க., மேலிடத்திற்கு நன்கு தெரிந்துள்ளது.எனவே, "வழக்கை சட்டப்படி சந்திப்போம். குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவோம். நீதி வெல்லும், தர்மம் வெல்லும்' என்பது போன்ற தீர்மானங்களுடன் உயர்நிலை செயல் திட்டக் குழு முடிவுகளை எடுக்கும் என, தி.மு.க., மேல்மட்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

குமுறல்...!முதல்வரின் மனைவி, மகளுக்கு நெருக்கடி வந்ததால் மட்டும் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் உடனே கூட்டப்படுகிறது. இதே வழக்கில், மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை கூட்டவில்லை. இதுவரை, ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை என, தி.மு.க.,வின் ஒரு சாரார் பயங்கர குமுறலில் உள்ளனர்.

No comments:

Post a Comment