Friday, June 10, 2011

தி. மு . க மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு



""ஊழல் வழக்குக்கு பயந்து கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார்,'' என எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.


சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பான தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: கடந்த 10 ஆண்டில், 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.


முத்துக்குமரன் - இந்திய கம்யூ.,: கச்சத்தீவை மீட்பதற்காக, மீனவர்கள் பறி கொடுத்த உரிமைகளை பெறுவதற்காக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.


சவுந்தர்ராஜன்- மார்க்சிஸ்ட்: தமிழக மீனவர்கள் வழக்கமாக கடலில் சென்று மீன் பிடிக்கும் பகுதிகளுக்கு அனுமதிக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்படுவதன் மூலம், மீனவர்கள் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியும். முதல்வர் தொடுத்துள்ள வழக்கில் வருவாய்த் துறை இணைத்துக் கொள்வதை வரவேற்கிறோம்.


ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி: மீனவர் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. வரலாற்றின் அடிப்படையில் கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது. கச்சத்தீவை மீட்பதற்காக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.


எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்: முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன். மதுரையில் பிறந்தவன், வளர்ந்தவன் என்ற முறையில், ஒரு காலத்தில் கச்சத்தீவு பகுதியில் பண்டமாற்று முறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நான் அங்கு சென்றிருக்கிறேன். இன்று அந்த தீவிற்கு தமிழர்கள் யாரும் போக முடியாத, வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய குறைகளை அறிந்து, அதை தீர்க்கின்ற வகையில் நடப்பது தான் ஜனநாயகம். கடந்த தி.மு.க., அரசு, மீனவர்களின் குறைகள் எதையும் கேட்கவில்லை. 1973 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் ஊழல் தடுப்பு இயக்கம் நடத்தியபோது, தி.மு.க., அதற்கு ஆதரவு அளித்தது என கருணாநிதி பேசியிருக்கிறார். 1972ம் ஆண்டில் தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேறி அ.தி.மு.க., துவக்கி, அன்றைய முதல்வர் கருணாநிதி மீது ஊழல் புகார்களை அளித்தார். வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்துகளை சேர்த்திருக்கிறார் என அதில் குறிப்பிட்டிருந்தார். எங்கே தன் மீது மத்திய அரசு வழக்கு தொடுத்து விடுமோ என்று பயந்து தான் கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்தார். மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த பி.சி.ராய் அதற்கு மறுப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அப்போது கோர்ட், பார்லிமென்ட் இரு சபைகளின் தீர்மானம் மூலமாகவே நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டிற்கு வழங்க முடியும் என்று கூறினர். எனவே, கச்சத்தீவை அவ்வாறு தரவில்லை. இந்த விஷயத்தில் கருணாநிதி வெறும் கண் துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்தியுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment