Monday, June 27, 2011

தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்! – உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்


கொழும்பு: முதல்வர் ஜெயலலிதா தவிர வேறு யாரையும் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்ப தகுதி உடையவர்களாக நாங்கள் கருதவில்லை. இன்றைய சூழலில் தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும், என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கூறியுள்ளது.

42 நாடுகளில் அலுவலகங்களுடன் 1974ம் ஆண்டு முதல் இயங்கும் தமிழ் அமைப்பு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம். ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரம் பெற்றது.

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை மற்றும் இலங்கை மீதான பொருளாதாரத் தடை ஆகியவற்றை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானங்களுக்கு இந்த இயக்கத்தின் தலைவர் கலைமணி, பொதுச் செயலர் துரை கணேசலிங்கம் ஆகியோர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெயலலிதா முயற்சி எடுத்தால் தனிஈழம் விரைவில் மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

காரிருளில் மூழ்கி வழியறியாது தவித்துக் கொண்டிருந்த உலகத் தமிழினத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விடிவெள்ளியாய், எம் தமிழினத்தின் மீட்பராய் இன்று நாங்கள் காணும் அன்னையே! தங்களுக்கு உலகத் தமிழினத்தின் சார்பாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்து 42 நாடுகளில் கிளைகளைக் கொண்டு பணியாற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வணக்கங்கள்.

பேரழிவை சந்தித்து இன்று எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களுக்குக் கூடச் செல்ல முடியாத அளவில் ஏதிலிகளாய், வானமே கூரையாய், புற்தரையே பஞ்சணையாய், உண்ண உணவின்றி, அருந்த நீருமின்றி, பெருமளவு அப்பாவி மக்கள் உடல் உறுப்புகள் இழந்து, உற்றார் உறவுகள் சிதறி அவர்கள் நிலையறியாது நம்பிக்கையற்ற நடைப் பிணங்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

நம்பிக்கை நட்சத்திரம்…

அவர்களின் உரிமைக்கு குரலெழுப்ப நம்பிக்கையான ஒரு தலைமையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கையில் தங்களின் மாபெரும் வெற்றியும், அதைத்தொடர்ந்த தங்களின் உரிமைக் குரலையும் கேட்டு எம்மக்கள் தங்களை காக்கும் தெய்வம் வந்துவிட்டதாகவே கருதத் தொடங்கி உள்ளனர்.

எங்களின் பாரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அவசர வேண்டுகோளை சமர்ப்பிக்கிறோம்.

இந்திய உதவி தமிழருக்கு சரியாக சேர்கிறதா…

இந்திய அரசு தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆயிரம் கோடிக்கும் மேலாக தந்துள்ள நிதி உதவி இன்னும் எம்மக்களுக்குப் போய்ச் சேரவேயில்லை. சேர்ந்துள்ள நிதியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையாக பயன்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் அங்கு யாருமில்லை. அதற்கு இந்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைத் தரவும் இதுவரை எங்களுக்கென்று ஒரு ஆதரவு இருந்ததில்லை.

இன்று தாங்கள் ஈழ மக்களுக்காக காட்டும் அக்கறையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவர்களின் நம்பிக்கை நிலை பெற்று ஈழ மக்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய தாங்கள் தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

உறுதியான முதல்வர்

தங்களின் அரசியல் வாழ்வில் இதுவரைத் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியானவர் என்பதாலேயே எம்மக்களின் வேதனைகளுக்கு தங்கள் ஆட்சித் திறன் மாமருந்தாகும் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் தங்களை நாடுகிறோம்.

சென்ற சில தினங்களுக்கு முன்னர் கூட யாழ்ப்பணத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கலந்துரையாடல் அமர்வுக்கு அனுமதிக்காது இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், வாழ்வுரிமைகளும் எந்த விதத்திலும் கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இருவேறுபட்ட மொழிகளைப் பேசும் இரு தேசிய இனங்களில் பெரும்பான்மை தேசிய இனம் சிறுபான்மை இனமக்களை வதை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள நாட்டிற்கு, அவ்வினத்தைச் சேர்ந்த உலகத் தமிழர்கள் எதிர்ப்பைக் காட்டி அங்கு மக்களாட்சியைக் கொண்டு வரவேண்டுவது அந்நாட்டின் இறையாண்மையில் குறுக்கிடுவதாகாது. இந்திய ஒன்றியத்தின் உறுப்பான தமிழகத்திற்கு அதில் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அதனை நன்றாக அறிந்து வைத்துள்ள தங்களால்தான் எங்கள் மக்களுக்கு விடிவைத் தரமுடியும்.

வேறு வழியில்லாமல் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம்

ஒரு பாரிய இன அழிப்பினை தொடர்ந்து பலவாறாகவும் செய்து கொண்டிருந்த இலங்கை அரசை எதிர்த்து வேறு வழியில்லாமல் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அதன் நோக்கத்தை எட்டாவிடினும் ஈழமக்கள் தங்களின் பாதுகாப்பிற்கு இனி தனி நாட்டினைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அண்மையில் உள்ள தேசங்கள் தங்களின் துயரங்களை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணத்தால் அவ்வாறு எண்ணியிருக்கலாம். தங்களைப் போன்ற பாதுகாவலர் ஒருவர்தான் அவர்களின் வாழ்வுக்கு உறுதி கூறமுடியும்.

சூடான் தேசம் அம் மக்களின் விருப்புங்கிணங்க இரு தேசங்களாக பிரிய உலக நாடுகள் அங்கீகாரம் கொடுக்கும்போது ஈழ மக்களின் விருப்புக்கிணங்க ஒரு மக்களாட்சி முறையினை அவர்களுக்குப் பெற்றுத் தருவதற்கு தங்களை விட்டால் வேறு தகுதியுடைய தமிழ்த் தலைவர்கள் யாரும் இங்கு இல்லை. ஒரு மாநில அரசின் முதல்வர் தன்மாநில உறவு இன மக்களின் நலன்களில் ஈடுபாடு கொள்வது சட்டத்திற்கு புறம்பானதில்லை.

ஆப்பிரிக்க தேசங்களில் எழும் சண்டைகளில் அவற்றைச் சூழ்ந்துள்ள நாடுகள் தலையிடுகின்றன. தாங்கள் 7 கோடி தமிழகத் தமிழர்களுக்கு மட்டும் தலைவியில்லை. தமிழக முதல்வராய் உலகளாவிய 14 கோடி மக்களின் பிரதிநிதியாக அவர் நலன் காக்கும் பொறுப்புடைய தலைவியாவீர்கள். அப்படித்தான் இன்றைய உலகத் தமிழர்கள் கருதுகிறார்கள்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழியில்…

மறைந்த மாமனிதர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதனாலேயே ஈழத் தமிழர்களின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். 1977 ல் எங்கள் முதல் மாநாடு சென்னையில் நடந்த போது மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து உரையாற்றினார். அன்றைய அண்ணா செய்தித்தாளில் அவரின் உரை வெளிவந்தது.

விடுதலைப் பெற்ற நாளிலிருந்து நடத்தப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள் பலன் தந்திருந்தால் விடுதலைப் புலிகளோ மற்றவர்களோ ஆயுதம் ஏந்தி இருக்கமாட்டார்கள். இவையெல்லாம் கடந்த செய்தியாகிவிட்டாலும் அப்போராட்டங்களின் காரணிகள் இன்னும் அப்படியே உள்ளன.

அண்டைப் பிரதேசம் என்ற நிலையிலும் அங்கு நடக்கும் மனிதப் பேரவலங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழ்நாடும் இந்தியாவும் மெளனமாக இருக்கமுடியாது. தங்களின் வெற்றியைப் பாராட்டும் இந்தியத் தலைவர்கள் இந்தியாவின் அரசியலில் பெருமளவுத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். அதுதான் உண்மையும் கூட.

உலகத் தமிழரின் எதிர்ப்பார்ப்பு

அகில இந்தியத் தலைவியாகப் போகும் நீங்கள், தங்களின் தலைமையிலான அரசு கொடுக்கும் அழுத்தம், இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும். அதனையே உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களிடமிருந்து முற்றாக எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை அளப்பரியது. தங்களைத் தவிரவும் வேறு யாரும் தமிழர்களுக்காக குரல் எழுப்ப தகுதி உடையவர்களாக நாங்கள் கருதவில்லை.

காலத்தே வந்துள்ள காவல் தெய்வமாய் தங்களை உலகளாவிய தமிழர்கள் நம்புகின்றார்கள். தாங்கள் பதவி ஏற்ற உடன் ஈழ ஏதிலிகளுக்கு தந்துள்ள வசதிகளும், சட்டப்பேரவையில் இலங்கையை கண்டிக்கும் தீர்மானங்களும் அதை நிரூபிக்கின்றன. வரலாற்றில் தாங்கள் என்றென்றும் நிலைத்திருப்பீர்கள்.

தனியான ஒரு குடும்பம், சுயநலம் இன்றி அனைத்துத் தமிழர்களின் ‘அம்மா’ வாகவே வாழும் தங்களுக்கு அதைவிட வேறு என்ன வேண்டும். ஆட்சி தொடங்கிய நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கூட ஆதரவு அளிக்கும் வண்ணம் செயல்படும் தங்களாட்சி சிறப்பாக நீடு நிலைத்திருக்க உலகத் தமிழர்களின் சார்பாகவும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பாகவும் எங்கள் வாழ்த்தினையும் வேண்டுகோளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment