Wednesday, June 22, 2011

கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, டில்லி திகார் சிறையில் உள்ள தன் மகள் கனிமொழியை நேற்று சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, "அப்செட்' ஆனார்.


டில்லியில் இருந்த போதும், நேற்று மாலை நடந்த, ஐ.மு., கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். கனிமொழி, கடைசி முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனுவும், நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பிறகே, மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், அவர், மேலும், 45 நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தலைவரான கருணாநிதி, தன் மகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை, சென்னையிலிருந்து, விமானம் மூலம் டில்லி வந்தார். நேற்று மாலை, 4.50 மணிக்கு திகார் சிறைக்கு வந்தார். முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது.


இச்சந்திப்பின் போது, கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றினார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர், "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டியையும் சந்தித்தார். அவர்களுக்கும், ஆறுதல் வார்த்தைகளை கூறினார். இச்சந்திப்புக்கு பின், திகார் சிறையில் இருந்து, ஓட்டலுக்கு சென்ற கருணாநிதி, மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார்.


திகார் சிறைக்கு செல்லும் முன், மாலை வரை ஓட்டலில் ஓய்வு எடுத்த கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. கனிமொழியை சந்தித்து விட்டு வந்த பிறகும், யாரும் அவரை சந்திக்க வரவில்லை. லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுக்கும் அன்னா ஹசாரே தரப்புக்கும் நடைபெற்ற கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று தோல்வியடைந்தது. தொடர்ந்து, ஐ.மு., கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, டில்லியில் இருந்த சூழ்நிலையில் அவர் இக்கூட்டத்திற்கு போவாரா என்ற கேள்வி நேற்று மாலை முழுவதும் பரபரத்தது. ஆனால், கருணாநிதி அந்த கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்துவிட்டார். வழக்கம் போல், தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., அனுப்பி வைக்கப்பட்டார். கனிமொழியை காப்பாற்ற, காங்கிரஸ் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்காததால், கருணாநிதி மிகவும், "அப்செட்' ஆனார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த கோபத்தில் தான் ஐ.மு., கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

No comments:

Post a Comment