Thursday, June 23, 2011

கூட்டுக் கொள்ளையடித்த தி.மு.க.வினர்..!


தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தங்கள் அதிகாரம் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு, தி.மு.க.வினர் அதிகார பலத்துடன் இருந்தனர். ஆனால், ஜெயலலிதா தமிழக முதல்வரானவுடன் தி.மு.க.வினரால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு அதை உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்கான அதிரடி அறிவிப்பும் தமிழக கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பிறகு தி.மு.க.வினர் ‘கிடுகிடு’வென நடுங்க துவங்கியுள்ளனர். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் புகார் கொடுக்க முன் வந்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சியில்தான் அதிகளவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களாகிப் போன தி.மு.க மாவட்ட தளபதிகளின் ‘ஆட்டம்’ வேறு மாதியானது. கண்களுக்கு தெரிந்து அவர்களின் கட்டுப்பாட்டு ஏரியாவிற்குள் தென்னந்தோப்போ, மாந்தோப்போ இருக்கக் கூடாது. நல்ல வசதியோடு கூடிய விஸ்தாரமான நிலமும் இருக்கக் கூடாது. அது எப்படி என்று போய் உட்கார்ந்துவிடுவார்கள். அந்த நிலத்தை வைத்திருப்பவர்களின் செல்வாக்கை பொறுத்து நடவடிக்கை அமையும். ஒன்றுமே இருக்காது. திடீரென்று பார்த்தால் எல்லா ஆவணங்களும் ‘மாவட்டங்களுக்கு’ வேண்டியவர்கள் பெயரில் மாறியிருக்கும். போலீஸ் அவர்களுக்கு உடந்தை. மேள தாளத்தோடு போய் வேலி அமைப்பார்கள். அவ்வளவுதான் நிலத்திற்கு சொந்தக்காரன் அதிர்ச்சியில் வீழ்ந்து போவான். போலீஸ் புகார், கோர்ட் என்று படியேறி... ‘மாவட்டத்திற்கு’ மனம் இருந்தால் கொஞ்சம் பணம் கொடுத்துவிடுவார்கள்.

சேலம் பகுதியில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி குடும்பத்திற்கு நடந்த கதை நாட்டிற்கே தெரியும். கண்ணுக்கு அழகாக தென்னந்தோப்பு வைத்திருந்தார்கள். அதுதான் தவறாகிவிட்டது. அப்போதய அமைச்சரின் வாரிசு ஆசைப்பட்டது. அதற்காக படுகொலையும் நடந்தேறியது. தவிர மாம்பழ நகரின் முக்கிய பகுதி எல்லாம் அடாவடியாக ஆக்கரமிக்கப்பட்டதாகவே இருக்கிறதாம். இதில் அரசு நிலமும் அடக்கம் என்று பட்டியல் வாசிக்கிறது ‘விபரம் அறிந்த’ அதிகாரிகள் தரப்பு. இது எல்லாம் சின்ன சின்ன விவகாரங்கள்தான்.

அசைக்கவே முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் போன்று இருந்த மதுரை இளவரசரின் நில ஆக்கிரமிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. பட்டியல் தயாராகிக் கொண்டு இருக்கிறது. தான் கல்லூரி கட்டி வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை குடும்பங்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. இது நீதிக்கான காலம். நீதி கிடைக்க வேண்டிய ஆட்சி. இதுவரை தி.மு.கவின் வசம் உள்ள அரசு நிலங்களையும் மீட்டால் பல ஆயிரம் கோடிகள் அரசிடம் சொத்துக்களாகவே இருக்கும்.

கோயில் நிலம் என்று தனியே இருக்கிறது. சென்னையில் பிரபலமான இடங்கள் எல்லாம் இருக்கிறது. அந்த இடத்திற்கும் அப்படித்தான். சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் எல்லாம் ‘உடன் பிறப்புகளுக்கு’ ஒத்துழைக்க, எல்லாவிதமான ஆவணங்களும் தயார் ஆனது. அதற்கென்று திருவண்ணாமலையில் உள்ள பழைய கால சொத்து விபர ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து, என்ன ஏது என்று பிரித்து மேய்வார்கள். அதற்கேற்ப யாரோ ஒருவர் விற்றதாய் ஆவணத்தைத் தயாரிப்பார்கள். அதை வைத்து வங்கியிலும் ‘கடன்!’ பெறுவார்கள். வங்கி கடன் இருக்கும்போதே அந்த நிலத்திற்கு வேறு ஒரு போலி நபரை அவர்களே செட்டப் செய்வார்கள். அந்த ‘செட்டப்’ ஆள் கையிலும் முறைப்படி ஆவணங்களை இருக்கும். திடீரென்று ஒருவர் வந்து என் அனுபவத்தில் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார் என்று முறைப்படி போலீஸ் கம்ப்ளைண்டும் செட்டப் ஆள் கொடுப்பார். வழக்கு நீதிமன்றத்திற்கும் போகும். கடைசியில் செட்டப் நபர் தோற்றுப் போவார். இது எல்லாமும் திட்டமிட்ட மோசடி நாடகம்தான் ஆட்சி அதிகாரம் என்ற திமிரில் இப்படி செய்து இடத்தை தனதாக்கிக் கொள்வார்கள். ‘அந்த நிலம் முறைப்படி வங்கி கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அவர் பெயரில் பட்டா இருக்கிறது. எனவே, அவர்தான் நிலத்திற்கு சொந்தக்காரர் என்று விஷயம் முடியும். அந்தவிதமாக அடையார், வில்லிவாக்கம், மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் நிலம் கொள்ளை போய் இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறது விபரம் அறிந்த வட்டாரம்.

திருச்சியை சேர்ந்த முதியவர் பழனிச்சாமியை சந்தித்து பேசினோம்.

‘‘எங்களுக்கு பூர்வீகமான சொத்து ஐந்து ஏக்கர் நிலம்தான். அந்த நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் இதை என் தந்தையின் காலத்திலிருந்து அனுபவித்து வருகிறோம். 1923&ல் இருந்து எந்த வில்லங்கமும் இல்லாமல் வைத்திருக்கிறோம். ஆனால், கடந்த 4 வருடத்திற்கு முன்பு நான்கு பேர் இந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இப்போது ஆர்.டி.ஓ. விசாரணையில் இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக நடக்கும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு நான் தவறாமல் ஆஜர் ஆவேன். ஆனால், வழக்கு தொடர்ந்தவர் தரப்பிலிருந்து யாருமே வருவதில்லை. இதுவரை எந்த கோர்ட்டிலும் அவர்கள் தரப்பில் ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்த இடத்தை வளைத்து எங்களையும் விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் சத்தியமூர்த்தி, திருச்சி தி.மு.க. துணை செயலாளரும், துணை மேயருமான அன்பழகன் உதவியுடன் எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்வதற்கு பல முயற்சிகள் நடந்தன.

அவர்களின் மிரட்டலுக்கு நான் பணியவில்லை. இதனால் என்னையும் என் மகன்கள் மூன்று பேரையும் கும்பல் அரிவாளால் வெட்டியது, ‘ஒழுங்கா நிலத்தை கொடுத்து விட்டு ஓடி போய்விடு, இல்லையென்றால் உன் உயிர் உனக்கு சொந்தமில்லை’ என்று மிரட்டினார்கள். அதற்கு பிறகும்கூட அவர்கள் மிரட்டல்களுக்கு நாங்கள் கட்டுப்படவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்த முடிவு செய்தனர். உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் மூத்த மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்து இழுத்து கொண்டு போனார். போலீஸ் ஸ்டேஷனில் என் மகனிடம் பேசிய இன்ஸ்பெக்டர், ‘இரண்டரை கோடி ரூபாய் பணம் வாங்கி தருகிறேன் ஒழுங்கா கொடுக்கற பணத்தை வாங்கிக்கொண்டு ஓடி போ. இல்லையென்றால் உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என மிரட்டினார்.

இது எங்கள் சொத்து இல்லையென்றால் எங்களுக்கு எதற்காக பணம் தர வேண்டும்? 30 கோடி ரூபாய் சொத்துக்கு இவர்கள் தருகிற தொகையை வாங்குவது விட ஜெயிலுக்கு போகலாம் என என் மகன் முடிவு செய்தான். பிறகு பல பிரிவுகளில் போய் வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் ஏழு நாள் ஜெயிலில் இருந்தபோது பெரிய தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர். இப்போது இன்ஸ்பெக்டர், சப்&இன்ஸ்பெக்டர் மேல் மனித உரிமைகள் கமிஷனரிடம் புகார் செய்து இருக்கிறேன். நகரத்துக்கு நடுவில் இப்படி பெரிய சொத்து இருந்தால் அதிர்ஷ்டசாலி என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் வேதனையில் துடித்துக் கொண்டியிருக்கிறேன். என் உயிர் பிரிவதற்குள் இந்த பிரச்னையில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என காத்து இருக்கிறேன்’’ என்கிறார்

இதே திருச்சியில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியின் முக்கிய அமைச்சர் குடும்பத்தினர் ஒரு ஓட்டலை அபகரிக்கத் திட்டமிட்டனர் இதை அறிந்த அந்த ஓட்டல் அதிபர் அமைச்சர் குடும்பத்தின் திட்டத்தை விவரித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி, திருச்சி போலீஸ் கமிஷனர், தமிழக போலீஸ் டி.ஜி.பி மற்றும் முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மேலும் அனைத்து முன்னிலை பத்திரிகைகளில் அவர் விளம்பரம் செய்தார்.

அந்த விளம்பரத்தில், ‘இந்த ஓட்டலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். பொது வாழ்வில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த ஓட்டலை அபகரிக்க சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதன் பிறகும் திருச்சி துணை மேயராக இருந்த அன்பழகன் ஆயுதம் தாங்கிய ரவுடி கும்பலுடன் அங்கு வந்தார். அவர் வந்த காரில் தி.மு.க. கொடி பறந்தது. ஓட்டல் அதிபருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸார் அந்த தி.மு.க. கும்பலுக்கு பாதுகாப்பு அளித்தனர். தி.மு.க. கொடியை பறக்க விட்டபடி, ரவுடிகள் படைகளுடன் வந்து குற்றத்தில் ஈடுபட்ட அந்த சம்பவத்தை நினைத்து ஒவ்வொரு தி.மு.க.வினரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

குற்றத்தை செய்தது மட்டுமின்றி அந்த ஓட்டலை நடத்தி வந்த தொழிலதிபர் மீது போலியான எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை விவரித்து முதல்வர் அலுவலகத்தில் அந்த தொழிலதிபர் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுக்கப்பட்டதே தவிர, எந்த நடவடிக்கையும் குற்றவாளிகள் மீது எடுக்கப்படவில்லை என்பதே மிகப் பெரிய வேதனையான விஷயம்.

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட தொழிலதிபரிடம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தை சந்தித்து சமாதானமாகப் போய்விடுங்கள் என்று கூறுகின்ற தொலைபேசி உரையாடல் பதிவு உள்பட பல முக்கிய ஆதாரங்களுடன் விரைவில் முதல்வர், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் புகாராக கொடுக்கும்படி அரசு தரப்பில் மேற்கண்ட தொழிலதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘இது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு..’ என்பது போல் மற்றொரு சம்பவத்தையும் இங்கே நாம் பார்க்கலாம். ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில், ‘சூர்ய சக்ரா ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஸ்பின்னிங் மில்லை கடந்த 1998&ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். 10 ஏக்கரில் இந்த மில் அமைந்துள்ளது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேருவின் தம்பி மணிவண்ணன், கோவை சஞ்சய் கிருஷ்ணன், அவினாசி ரவி ஆகியோர் மூலம் வாய்மொழியாக பேசியதன் அடிப்படையில், அந்த மில்லை அவர்கள் தற்காலிகமாக நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் லோகநாதன் கையெழுத்தை போலியாக தயாரித்து, அதன் அடிப்படையில் போலியான சில ஆவணப் பத்திரங்களில் அந்த கையெழுத்தைப் போட்டு அவரது சொத்துக்களை மோசடியாக அபகரிக்கத் திட்டமிட்டனர். அந்த மில்லை கொடுக்கும்படி பல வழிகளில் லோகநாதனை மிரட்டினர். மேலும், பெருந்துறை போலீசில் அவர் மீது பொய்யான புகாரைக் கொடுத்து, போலீசாரை வைத்தும் மிரட்டினர். வேறு வழியில்லாமல் அவரும் நீதியை பெறுவதற்கு, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார்.

இது தவிர இன்னொரு மோசடி ரகம் இருக்கிறது. ராஜாக்கள் நிலம். அப்போதைய குறுநில மன்னர்கள் வசம் இருந்ததை நல்லெண்ண அடிப்படையில் அரசுக்கு ஒப்படைத்திருந்தார்கள் அல்லது அரசே எடுத்துகொண்டது. அப்படியான இடம் இன்றும் ஆங்காங்கே காலியாக இருக்கிறது. உடன்பிறப்புகளின் ‘பவர்’ அங்கேயும் கண் பதித்தது. திடீரென்று அதற்கு வாரிசு முளைப்பார். இப்போது நான் நிலமற்ற எழையாக இருக்கின்றேன் என்று அரசுக்கு மனு போடுவார். ஆயிரமாயிரம் விண்ணப்பங்களை போட்டுவிட்டு மக்கள் காத்திருக்க, அப்படியான ‘வாரிசுகளின்’ மனுக்கள் மட்டும் றெக்கை கட்டி பறக்கும். எல்லாமும் முடிந்து நிலம் அவர் கைக்களுக்கு போகும். இப்படி பறிபோன நிலத்தின் மதிப்பு சென்னைக்குள் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.

எல்லாவற்றையும் விட இந்த ரகம் இன்னும் சூப்பர். பிரபலமான இடத்தில் வீடோ நிலமோ இருக்கிறது. அது அந்த ஏரியா உடன்பிறப்புக்கு பிடித்துப் போகிறது என்றால் அவ்வளவுதான். யார் தடுத்தாலும் முடியாது.

ஒரு சின்ன உதாரணம். சென்னை பனகல் பார்க் அருகில் பெரிய இடம். 50 கோடிக்கு மேல் போகும். பெரியவர் ஒருவர் வைத்திருந்தார். அவருக்கு வாரிசுகள் இல்லை. கட்டிய மனைவியும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ‘பழம்’ தின்று கொட்டை போட்ட உடன்பிறப்பு டீம் அங்கே சென்றது. முதலில் பேச்சு வார்த்தை. பிறகு மிரட்டல், உருட்டல்... கடைசியாக என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்த இடம் நினைத்தபடியே கை மாறியது. பணம் கொடுத்தார்களா.. அல்லது அடித்து விரட்டினார்களா.. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் யாரும் குறுக்கு விசாரணை செய்து விடாதீர்கள்.

அதே பகுதியில் வாரிசே இல்லாத இடமும் அப்படித்தான். அதன் மதிப்பும் 50 கோடிகளை தாண்டும். அங்கே காவலாளி ஒருவர் நிரந்தரமாக இருந்தார். எல்லா வீட்டையும் அவரே ஆண்டு அனுபவித்து வந்தார். அந்த ‘பழம்’ மனிதரின் டீம் சுற்று போட்டு கவனித்தது. என்ன ஏது என்று விசாரித்து. சொத்து யார் பெயரில் இருக்கிறது என பார்த்தது. அந்த காவலாளி மிரட்டப்பட்டார். கடைசியில் அவர் மீது ஒரு போலி பத்திரம் ரெடியானது. வாரிசே இல்லா இடத்திற்கு சொந்தக்காரர் அந்த காவலாளிதான்! பிறகு, அவரே இவர்களுக்கு முறைப்படி!!! நிலத்தை விற்பனை செய்கிறார். எல்லாமும் பேப்பர் ஒர்க்தான். முறையாக இருக்கும்படி செய்வார்கள். அந்த காவலாளிக்கு ஏதாவது கிடைத்ததா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. இப்போது அந்த இடத்தில் பெரிய கட்டிடம் கமர்ஷியல் காம்ப்ளக்ஸாக உயர்ந்துவிட்டது. இப்போது மதிப்பு நூறு கோடிகளில்..

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காலி மனைகளுக்கும் அதேவித பட்டை நாமம்தான். ஒரு வாரிசு உருவாகியிருப்பார். மீண்டும் நிலத்தை கேட்பார். அது அவரது கைக்கே மாறியிருக்கும். இப்போது அங்கே பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருக்கிறது. இதை மட்டும் கணக்கில் எடுத்து விசாரித்தாலே போதும். அரசக்கு பல ஆயிரம் கோடிகள் வருவாய் இருக்கும்.

மண் ஆசை. எண்ணிக்கையில் பலம் பொருந்திய துரியோதனன் அணியை வீழ்த்தியது. மண் ஆசை மாமன்னனையும் வீழ்த்தும் என்பதை மகாபாரதம் காட்டுகிறது. தி.மு.க-வின் நிலையும் அப்படித்தான். அது வீழ்ந்து போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அந்த கட்சியின் முக்கிய நபர்கள் தலைமை ஆதரவுடன் காட்டிய மண் ஆசைதான்!

தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை

கடந்த ஆட்சியில் தி.மு.க.வினரின் அதிகார துஷ்பிரயோகத்தினால் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று நீங்கள் அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன நிம்மதியையும் மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் சொத்தை அபகரித்தவர்கள், தாங்கள் தவறு செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் சட்டத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சொத்தை அபகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் அந்த சொத்தின் உரிமையாளர் பிற நபர்களிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது போன்று முதலில் ஒரு போலி ஒப்பந்தம் தயாரிக்கிறார்கள். அந்த போலி ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சொத்தின் உரிமையாளர் தங்களின் சுவாதீனத்திற்கு எவ்வகை இடையூறும் தரக்கூடாது என்று எக்ஸ் பார்ட்டி இடைக்காலத் தடை உத்தரவு வாங்குகின்றனர். அந்தத் தடை உத்தரவை வைத்துக்கொண்டு ரவுடிகளின் துணையோடு சொத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இடத்தின் உரிமையாளர் இந்த அநீதிகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்தால் போலீஸ் மூலமாக பொய் வழக்கினை தொடுத்து நிலத்தின் உரிமையாளர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர்.

ஆகையால், வரவிருக்கின்ற புதிய சட்டமானது கடந்த கால தி.மு.க.வினர் போலித் தகவல்களை கொடுத்து நீதிமன்றத்தினரையும் காவல் துறையினரையும் தங்களுக்கு சாதகமாகவும் பாதுகாப்பானதாகவும் பயன்படுத்திக் கொண்டதற்குத் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும். மேலும் அவ்வாறு நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் தவறான தகவல்களை கொடுத்தவர்கள் மீது அதற்காக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்ய வேண்டும்.

அவர்கள் சொத்துக்களை அபகரிக்கக் கையாண்ட மற்றொரு வழி, வங்கியில் அடமானத்தில் இருக்கின்ற சொத்துக்களை வங்கி ஏலத்திற்கு கொண்டுவரும்போது யாரையும் ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் ஏலம் நடத்துகின்ற வங்கி அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி மார்க்கெட் மதிப்பில் பாதி விலைக்கு அந்த சொத்துக்களை ஏலத்தில் எடுத்ததாக சான்றிதழையும் பெற்று பிறகு ரவுடிகளின் துணையுடனும், போலீஸ் துணையுடனும் சொத்துக்களை ஆக்கிரமித்தார்கள்.

வங்கியின் மூலமாக பெற்ற சொத்துக்களை வங்கி சட்டத்தின் மூலமாக விற்கப்படுவதால் அதையும் தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். வங்கி சட்டம் பாராளுமன்றத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதால் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கின்ற துணிச்சல் அவர்களுக்கு.

ஆனால், அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் சொத்துக்களை பாதி விலைக்கு பெற்று சட்டத்தை மீறி ரவுடிகளின் துணையுடனும் போலீஸின் துணையுடனும் அபகரித்தவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை தொடர்வதற்கும், அந்த சொத்துக்களை மீட்பதற்கு புதிய சட்டம் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்!

நன்றி :
சூரியக்கதிர்-ஜூன்-01-15, 2011


No comments:

Post a Comment