குஜராத்தில் உள்ள நவசேவா துறைமுகத்திற்கு வெளிநாட்டிலிருந்து, "மேசரட்டி' என்ற வகை கார் ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு முறையாக வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்ததாக இறக்குமதியாளர் கரன்பெகல் மீது வருவாய் புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சர்ச்சைக்குரிய கார் சென்னையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்யுமாறு, ஆமதாபாத் வருவாய் புலனாய்வுத் துறையினர், சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினரின் உதவியை கோரினர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பீர் முகமது என்பவரிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் விவகாரத்தில், அரசியல் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் ராஜன் கூறியதாவது: ஆமதாபாத் வருவாய் புலனாய்வுத்துறையினர் காரை பறிமுதல் செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில், கடந்த 17ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. கார் மதிப்பான 76 லட்ச ரூபாய்க்கு வரி செலுத்தாமல், மதிப்பை குறைத்து வரி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள வரித்தொகையை இறக்குமதியாளர் கட்டினால், கார் விடுவிக்கப்படலாம். இந்த விவகாரத்தை ஆமதாபாத்தில் உள்ள வருவாய் புலனாய்வு பிரிவு தான் விசாரிக்கிறது. இவ்வாறு ராஜன் கூறினார். இந்த கார், தி.மு.க., முக்கிய பிரமுகரின் மருமகனுக்கு பரிசாக, கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தான் இந்த காரை பயன்படுத்தி வந்தார். எனினும், இந்த கார், பீர் முகமது பெயரிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment