Wednesday, June 8, 2011

அடுத்தது தயாநிதி? - ஓ பக்கங்கள்

ஸ்பெக்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பதுதான் இனி அடுத்தக் கட்ட விசாரணை. எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பவ்லாவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா இதழ்.

தெஹல்காவின் பல முக்கிய புலானாய்வு கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ் கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ரம் ஊழலில் தயாநிதி மாறன் தொடர்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம்.

தயாநிதி மாறன் மே 2004 முதல் 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும் ஏர்செல் கம்பெனி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் தயாநிதி அமைச்சகம் கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்துகொண்டே இருந்தது. ஆனால் லைசன்சு வழங்கப்படவே இல்லை.

இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென்று மாறியது. சிவசங்கரன் தன் கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு, சுமார் 7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்துக்கு நெருக்கமான சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின் குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர்.

அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன், சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது. டிசம்பர் 30ம் தேதி ஏர்செல்லை மேக்சிஸூக்கு விற்பதாக ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அடுத்த மூன்றே நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுகொண்டது. அடுத்த பதினேழே நாட்களில் ஏர்செல் தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தது.

பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசென்சுகளை வழங்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14 வட்டாரங்களுக்கான லைசன்ஸ் கிடைத்ததுவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.

ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பனியில் 20 சதவிகிதப் பங்குக்காக 150 மில்லியன் டாலர் (சுமார் 600 கோடி ரூபாய்கள்) கொடுத்தது. அடுத்தப்படியாக 2008-2009ல் மேக்சிஸ் குழுமம் சன் முழுமத்தின் எஃப்.எம். வானொலி கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவையின் குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக ஆட்சேபித்தது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த ஆதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அடுத்து வந்த ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.)

சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன் தொழில் ரீதியான கூட்டு வைத்திருந்தார். டாடாகளுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன் குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான். எனவே சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத் தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக சிவசங்கரன் 2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.

முன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ரம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவிலிருந்து விலக வேண்டிவந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபில், 1998 முதல் 2009 வரை ஸ்பெக்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடைமுறைகள், நடவடிகைகள் பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை நியமித்தார்.

அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்துவிட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதி மாறனின் அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ் விதிமுறைகளுக்கு புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; பணம் தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக்கூடாது. என்ற மத்திய அரசின் நடத்தை விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

ராசா அமைச்சராக இருந்தபோது பாவ்லாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ரம் லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பாவ்லா, தன்னுடைய வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி கடன் கொடுத்தார். அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான் ராசா, கனிமொழி, சரத் ரெட்டி, பாவ்லா எல்லாருமே கைது செய்யப்படிருக்கிறார்கள்.

தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ரம் லைசென்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷணனின் கம்பெனி தயாநிதி மாறன் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 70 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப் பணம் இல்லை, தற்செயலாக நடந்தது என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில் எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே வாதப்படி ராசாவுக்கும் கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.

தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள் எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக் கட்சிகளும் தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளன. ஸ்பெக்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டக் குழுவின் விசாரணை வரம்புக்கு இதுவரும்; மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள் எல்லாம் நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல் செய்யவிருக்கிறார். எனவே ஸ்பெக்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா? மாட்டாரா? எனபது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொருத்துத்தான் இருக்கிறது.

-ஞாநி
04.06.2011 கல்கி இதழ்

No comments:

Post a Comment