Thursday, August 23, 2012

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எழுதுவது யார்? 10 பேரில் ஒருவர்.



ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை ஒரு வரம்புக்குள் கொண்டு வந்தவர்கள் நீதிபதி மல்லிகார்ஜுனய்யாவும், அரசு வக்கீல் ஆச்சார்யாவும்தான். ஆனால் இருவருமே இனி ஆட்டத்தில் இருக்க மாட்டார்கள் என்பதே இன்றைய நிலைமை!

கடந்த 14-ம் தேதி ஆச்சார்யா கொடுத்த ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தை அரசு இன்னமும் ஏற்கவில்லை. ஆச்சார்யாவே மீண்டும் தொடர வேண்டும்  என கர்நாடக அரசும், கர்நாடக ஹை கோர்ட் தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென்னும் நினைப்பதால்தான், ராஜினாமா ஏற்கப்படவில்லை என் கின்றனர் விதான்சவுதா வட்டாரத்​தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஆச்சார்யா இந்தப் பதவியில் தொடர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறாராம், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. அவருக்கும் அவருடைய முந்தைய அரசுக்கும் நிறைய வழக்குகளை ஜெயித்துக் கொடுத்தவர் என்பதால், ஆச்சார்யா மீது எடி யூரப்பாவுக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால்தான் அடுத்துவந்த சதானந்த கவுடா ஆட்சியில் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஆச்சார்யாவுக்கு ஏற்பட்டது என்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஆச்சார்​யாவின் வீட்டுக்கே சென்று தனது ஆதரவைத் தெரி வித்தார் எடியூரப்பா.

இது, சதானந்த கவுடாவுக்கும், எடியூரப்​பாவுக்குமான ஈகோ பாலிடிக்ஸ். இப்போது, முதல்வராக இருக்கும் ஜெகதீஷ் ஷெட்டர், எடியூரப்பாவின் சிஷ்யர். ஜெகதீஷ் ஷெட்டர் சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய கையோடு ஆச்சார்யாவைச் சந்தித்து, அரசு வக்கீலாகத் தொடருமாறு கேட்டுக் கொண்டாராம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஆச்சார்யா கண் டிப்பாக முடிவை மறுபரிசீலனை செய்வார் என்கிறார்கள்.

ஆச்சார்யாவின் மனம் நோகும் அளவுக்கு அவருக்கு 'டார்ச்சர்' கொடுத்தவர்கள் யார் என்று கர்நாடக நீதித் துறையில் பரபரப்பாக விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அறக்கட்டளை விவகாரத்தில் அவரை புண்படுத்திய விஷயத்தில் 'இன்ஸ்பெக்டர் இமானுவேல்' என்ற பெயர் பேசப்படுகிறது. அதேபோல், 'ஆச்சார்யாவுக்கு குடைச்சல் கொடுத்து அவரை இந்த வழக்கிலிருந்து விலக வைக்க வேண்டும்' என்ற திட்டத்தை கடந்த சில வாரங்களாகத்தான் தமிழக வக்கீல் ஒருவர் முழுவீச்சில் கையில் எடுத்தார். 'இது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கலாம்' என்று கட்சிக்காரர்கள் சிலர் விடுத்த எச்சரிக்கையைக்கூட அவர் ஏற்கவில்லையாம். இந்த விவகாரங்கள் பற்றி இப்போது விசாரித்து வரும் போயஸ் கார்டன், இந்த வக்கீல் மீது செமகடுப்பில் இருக்கிறதாம்.

பரிசீலனையில் 10  நீதிபதிகள்!

தீர்ப்பை எழுதப்போகும் நீதிபதியை நியமிக்க‌ கர்நாடக ஹை கோர்ட்டின் நீதிமன்ற நிர்வாகக் குழு, மாநிலம் முழுக்க இருக்கும் 212  நீதிபதிகளின் பட்டியலை அலசி 10 பேரைக் கண்டுபிடித்து இருக் கிறது. 

1. நீதிபதி விஸ்வநாத் பட்: (58 வயது), விஷ்வ பாரதி விவசாய சொசைட்டியில் நடந்த ஊழல் முறைகேடு வழக்கை விசாரித்த போது கர்நாடக அரசின் மீது தைரியமாகக் குற்றம் சுமத்தியவர்.

2. நீதிபதி கிருஷ்ணா பட்: (59 வயது),  உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கர்நாடக ஹை கோர்ட்டின் தார்வார்ட் கிளையில் பணியாற்றி வருகிறார்.

3. நீதிபதி லக்ஷ்மி காந்த் பாட்டீல்: (58 வயது),  இவர், தார்வார்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது, கதக் மாவட்டம் உனுகுண்டா நீதிமன்றத்தில் பணி யாற்றுகிறார்.

4. நீதிபதி சந்திரசேகர்: (59 வயது),  இவர் கிருஷ்ணா நதி நீர்த்திட்ட ஊழல் வழக்கை விசாரித்தவர்.

5. நீதிபதி சுபிந்தர் ராவ்: (59 வயது) , விஷ்வ பாரதி விவசாய சொசைட்டி வழக்கிலும், கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும் பணியாற்றிவர்.

6. நீதிபதி ஜெயேந்திர நாயக்: (58 வயது),  இவரும் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் பணியாற்றிவர். இப்போது, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

7. நீதிபதி மனோலி : (59 வயது), ஏற்கெனவே ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்தவர். இப்போது பணி நீட்டிப்பில் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். இவரை மீண்டும் நீதிபதியாக நியமிக்க அதிகம் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

8. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா: ஜெ. வழக்கை கிட்டத்தட்ட முடித்து விட்டதால், இவரையே மீண்டும்  நியமிக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

9. நீதிபதி ரமேஷ் ராவ்: (59 வயது), பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டிலும், ஹூப்ளி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் பணியாற்றியவர். பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றுகிறார்.

10. நீதிபதி குமாரசாமி: (58 வயது), லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் உப நீதிபதியாகப் பணியாற்றியவர். பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார்.

இவர்கள் எல்லோருக்குமே பதவிக்காலம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சம் ஒன்றரை வருடங்கள் வரை மட்டுமே. ''நீதிபதியை நியமிப்பதில் தி.மு.க. தரப்பு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக  வீரப்ப மொய்லியிடம் பேசி வருகிறார்கள். மொய்லியும் ஆச்சார்யாவும் உடுப்பி கோர்ட்டில் ஒன்றாக பிராக்டிஸ் செய்தவர்கள் என்பதால், ஆச்சார்யாவிடம் கேட்டுத்தான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்'' என்றும் சொல்கிறார்கள்.

ஜெ. வழக்கின் தீர்ப்பை எழுதப் போகும் நீதிபதி யார் என்று செப்டம்பர் 3-ம் தேதி தெரிந்து விடும்!

No comments:

Post a Comment