Monday, August 6, 2012

விடைபெறும் நீதிபதி... ஜெயலலிதா நிம்மதி!




எது நினைத்தோமோ அதுவே நடக்கப்​போகிறது’ - என்று பெங்களூரு வழக்கை உன்னிப்​பாகக் கவனிப்பவர்கள் சொல்கிறார்கள்.

15 ஆண்டுகளாக நீண்ட நெடிய இழுத்தடிப்புப் பயணம் மேற்கொண்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை, விடாமல் விரட்டி இறுதிக் கட்டத்தை எட்ட வைத்தவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா. ஜெயலலிதா வழக்கின் ஜாதகத்தையே மாற்றிய இவர், வரும் 4-ம் தேதி ஓய்வு பெறுகிறார். மனு மேல் மனு, வாய்தாவுக்கு மேல் வாய்தா, அப்பீலுக்கு மேல் அப்பீல் என்று ஜவ்வாக நீளும் இந்த வழக்கு இனி என்னவாகும்?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீதான வழக்கை விசாரிக்கப்போகும் அடுத்த‌ நீதிபதி யார், அவர் எப்படிப்பட்டவராக இருப்பார், இந்த வழக்கைத் தாக்கல் செய்த தி.மு.க. என்ன செய்யப்போகிறது, வழக்கு நடக்கும் மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி-யின் அடுத்த நடவடிக்கை என்ன என்று ஏகப்பட்ட அனுமானங்களும் கேள்விகளும் இப்போது பெங்களூ​ருவில் மையம் கொண்​டுள்ளன!

 
 
ஹைகோர்ட் உலா!

'நீதிபதி மல்லிகார்ஜுனைய்​யாவின் நியமனம் தவறானது’ என்று ஜெயலலிதா தரப்பு கடந்த ஜூன் 25-ம் தேதி ஒரு மனுவைப் போட்டு க்ளைமாக்ஸ் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால், இந்த மனுவை ஜூலை 17-ம் தேதி தள்ளுபடி செய்தார் நீதிபதி. உடனே, வழக்கை எடுத்துக்கொண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றது ஜெயலலிதா தரப்பு. நீதிபதி மோகன்சந்த கவுடா முன்னிலையில் ஜூலை 30-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் உதய் ஹொல்லா என்ற பெங்களூருவைச் சேர்ந்த வக்கீல் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மோகன்சந்த கவுடா, 'எந்தத் தகுதி மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக இந்த வழக்கை நடத்தினார்’ என்று ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவுக்கும், கர்நாடக அரசுக்கும், உயர் நீதிமன்றப் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இது தங்களுக்குச் சாதகமான முதல் விஷயம் என்று ஜெ. தரப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறது.

சொன்னதையே சொல்லுமாம் ஸ்பெஷல் கோர்ட்!


முதல் நாள் ஹைகோர்ட்டில் தங்களுக்குச் சாதகமான பதில் வந்து விட்டதால் மறுநாள் ஜாலியாக ஸ்பெஷல் கோர்ட்டுக்கு வந்தது, ஜெ. தரப்பு வக்கீல் அணி. வழக்கம்போல ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி வேலைப் பளு, சசிகலாவுக்குக் கண் பிரச்னை, சுதாகரனுக்கு முதுகு வலி, இளவரசிக்கு சர்க்கரை நோய் என்று சொன்ன காரணத்தையே மீண்டும் சொல்லி, கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்பதை விளக்கினார்கள். நீதிபதி பேசுவதற்கு முன்பே எழுந்த‌ சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், ''ஹைகோர்ட், நீதிபதியின் நியமனச் சிக்கல் குறித்த எங்களது மனுவை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 16-ம் தேதி வருவதால், இந்த வழக்கை விசாரிக்காமல் ஆகஸ்ட் 24 ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்'' என்றார். ''நோ நோ... எங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களே தவிர, வழக்கு விசாரணையை நிறுத்தச் சொல்லவில்லை. நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இப்படி இழுத்தடிப்பதை ஆட்சேபிக்கிறேன். ஒருபோதும் இதை அனுமதிக்கக் கூடாது'' என கூறிவிட்டு அமர்ந்தார் அரசுத் தரப்பு ஜூனியர் வக்கீல் சந்தேஷ் சவுட்டா. அவரது முகத்தையும் சசிகலாவின் பதிலை தமிழாக்கம் செய்ய வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் முகத்தையும் பார்த்துவிட்டு, ''ஹை கோர்ட்டில் 16-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு எழுந்தார் நீதிபதி. வழக்கு இரண்டு வாரம் தள்ளிப்போன குஷியில் கோர்ட்டுக்கு உள்ளேயே கைகுலுக்கிக் கொண்டனர், சசிகலா தரப்பு வக்கீல்கள். இந்த வழக்கை நடத்த வேண்டிய தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிகாரிகளும் சசிகலா தரப்பு வக்கீல்களும் இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது!

விடைபெறுகிறார் மல்லிகார்ஜுனைய்யா!

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்​துப்பிடித்து, சிதறிக்கிடந்த வழக்கை ஒருங்​கிணைத்து ஒழுங்கான வடிவத்துக்குக் கொண்டு ​வந்தவர் நீதிபதி மல்லிகார்​ஜுனைய்யா. சாட்சிகளை ஆழமாக விசாரித்து, ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதாவை வரவழைத்தார். ஐந்து நாட்கள் உட்காரவைத்து 1,384 கேள்விகளைக் கேட்டுப் பதிவுசெய்தார். சசிகலாவிடமும் 75 சதவிகிதக் கேள்விகள் முடிந்து விட்டன. ஆனால், ஆகஸ்ட் 4-ம் தேதி அவருக்குப் பணிஓய்வு நாள். பொதுவாகவே, அரசுப் பணியாளர்கள் மாதத்தின் இடையில் ஓய்வு பெற மாட்டார்கள். அந்த மாதக் கடைசி வரைக்கும் இருக்கலாம். ஆனால், முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது. இப்போது இந்த வழக்கு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றும் தள்ளிவைக்கப்பட்டால், விவாதம் நடத்தாமலேயே மல்லிகார்ஜுனைய்யா விடைபெற்றுவிடுவார்!

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹடகள்ளி என்ற குக்கிராமத்தில் ஓர் ஏழை விவசாயின் மகனாகப்‌ பிறந்தவர் நீதிபதி மல்லி​​கார்ஜுனைய்யா. முதல் தலைமுறையாகப் படித்து, பெல்லாரியில் கல்லூரியை மிதித்த அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி இவர்.  பெல்காம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். நான்கு ஆண்டுகள் பெல்காம் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழ‌க்கறிஞராக இருந்தவர். 1981-ம் ஆண்டு நீதிபதிக்கான தேர்வு எழுதி, முதல் முயற்சியிலே வெற்றி பெற்று பெல்காம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். ஒரு கட்டத்தில் சுரங்க முறைகேட்டு ஊழலில் சிக்கிய எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா உள்ளிட்ட அதிகாரப் புள்ளிகளைக் கண்டு அசராமல் செயலாற்றிய நேரத்தில், மல்லிகார்ஜுனையாவின் நேர்மையும் விவேகம் கலந்த வேகமும் மாநிலம் முழுவதும் கவனிக்கப்பட்டது. இதனால், கர்நாடகத்தில் உயர்ந்த பதவியாகக் கருதப்படும் லோக்ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக 2006-ல் நியமிக்கப்பட்டார். பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த‌ நீதிபதி பச்சேபுர்ரே, நீதிபதி மனோலி ஆகியோருக்குப் பிறகு, மல்லிகார்ஜுனைய்யா 2009-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜெ. வழக்கை விசாரிக்க உத்தர‌விட்ட​வுடன், தன்னைச் சுற்றித் தானே நெருப்பு வளையத்தைப் போட்டுக்கொண்டார்.

14 ஆண்டுகளாக கோர்ட் படி ஏறாமல் இருந்த ஜெயலலிதாவை வரவழைத்த​போது இந்திய நீதித் துறை வட்டாரமே மல்லிகார்​ஜுனைய்யாவை உற்றுக் கவனித்தது. ஆனால், தீர்ப்பு அளிக்க முடியாமல் விடைபெறுகிறார். நீதிமன்றத்​தில் அவரோடு பணியாற்றியவர்கள் ஒன்றிணைந்து அவருக்கு நான்முகச் சிங்கம் பொறித்த அசோக வடிவத் தூணைப் பரிசளிக்க இருக்​கிறார்கள். ஸ்பெஷல் கோர்ட் வட்டாரத்தில் மல்லிகார்ஜுனைய்யாவுக்குப் பதிவாளர் பிச்சமுத்து தலைமையில் 'பிரியாவிடை’ கொடுக்க இருக்கின்றனர்.

நித்தம் நித்த‌ம் நிம்மதி இழந்து தவித்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினருக்கு நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு நிச்சயம் நிம்மதி கொடுத்திருக்கும்!

மீட்கப் போராடும் தி.மு.க.!

'ஜெ. வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இனி புதிய நீதிபதியை நியமித்து, அவர் வழக்கை முழுமையாகப் படித்து, அதன் தன்மையைப் புரிந்துகொள்வது வீண்கால விரயம். எனவே, வழக்கை மிகவும் நேர்மையாக நடத்திய நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் பதவிக் காலத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு போட இருப்பதாகச் சொல்லப்​படுகிறது. அதற்கு முன்னோட்டமாக தி.மு.க-வைச் சேர்ந்த சட்டப்புள்ளிகள் பெங்க​ளூருவிலும் டெல்லியிலும் மையம்கொண்டு இருக்கிறார்களாம். அதன் வெளிப்பாடாகவே கடந்த 30-ம் தேதி, தி.மு.க-வின் முன்னாள் மூத்த அரசுத் தரப்பு வக்கீல் குமரேசன், பெங்களூரு ஹை கோர்ட்டுக்கு விசிட் அடித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கின் அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவையும் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேறும் காட்சிகளைப் பார்க்கும்போது, ஜெ. வழக்கில் மேலும் பல திடீர் திருப்பங்கள் நிகழலாம்!

No comments:

Post a Comment