Monday, December 26, 2011

கொள்கையுடன் கொள்ளையடிக்கும் கொள்ளையன்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பூபதி என்பவர் அதிர்ஷ்டம் என்ற பெயரில் நகைக்கடையை நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் கடந்த 11.11.2011 அன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் திட்டக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.



அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி வனிதா மேற்பார்வையில், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், திருவண்ணாமலை போலீசாரின் உதவியுடன் கரூரான் என்கிற பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் கோபால் ஆகியோரை கைது செய்துள்ளனர்.


போலீசார் விசாரணையில் கரூரான் என்கிற பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குமூலத்தில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டுதான் எந்த காரியமானாலும் தொடங்குவேன். எனது ஊர் பவானி பக்கம் உள்ளது. கொள்ளையடிப்பது எனது தொழில். அதில் நான் ஒரு கொள்கை வைத்துள்ளேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் நகைக்கடையில் கொள்ளையடிக்க மாட்டேன். மார்வாடிகள் வைத்திருக்கும் கடைகளில் கொள்ளையடிப்பேன். அதேபோல் அடகு கடையில் கொள்ளையடிக்க மாட்டேன். ஏனென்றால் அடகு கடையில் ஏழை எளிய மக்கள் நகைகளை அடமானம் வைத்திருப்பார்கள். அடகுகடையில் நான் இச்செயலில் ஈடுபட்டால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
நான் ஆம்னி வேனில் சென்றுகொண்டிருந்தபோது, பெயர் பலகையில் திட்டக்குடி என்ற ஊர் கண்ணில் பட்டது. திட்டக்குடி பெரிய ஊராக இருக்கும் என்று நினைத்து கொள்ளையடிக்கப் போனேன். ஆனால் அது பெரிய ஊராக இல்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் என்ற நகைக்கடையில் கொள்ளையடித்தேன் என்று கூறியுள்ளான்.

அதிர்ஷ்டம் நகைக்கடை வைத்திருக்கும் பூபதி, தமிழகத்தைச் சேர்ந்தவர் அவர் மார்வாடி இல்லை. அப்படியிருக்கும்போது, அந்தக் கடையில் கொள்ளையடித்தது ஏன் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு, நான் பகலில் பார்க்கும்போது அதிர்ஷ்டம் கடையின் மேல் ஒரு மார்வாடி பெண் துணியை காயவைத்துக்கொண்டிருந்தார். அதனால் அந்த கடை மார்வாடிக்கு சொந்தமானது என்று நினைத்தேன் என்று கரூரான் என்கிற பன்னீர்செல்வம் கூறியுள்ளான். (பூபதிக்கு சொந்தமான கடைக்கு மேல் மார்வாடியைச் சேர்ந்த குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்).
மேலும் கரூரான் என்கிற பன்னீர்செல்வம் கூறுகையில், சேலம், சென்னை, வேலூர் என பல்வேறு ஜெயில்களில் இருந்துள்ளதாகவும், அப்போது சேலம் ஜெயிலில் கோபால் தனக்கு நண்பனானான் என்றும், பலமுறை தான் திருந்த முயன்றும் வேண்டுமென்றே போலீசார் தன் மீது திருடியதாக பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும், இதனால் தன்னால் கொள்ளையடிக்கும் தொழிலை விடமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தனது பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்துள்ளதாகவும், தனது குடும்பத்தினருக்கு தான் கொள்ளை தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரியாது என்றும், மதுரையில் ஒரு பெரிய மார்வாடிகாரருக்கு சொந்தமான கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதன்பின்னர் கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட நினைத்ததாகவும் கூறியுள்ளான்.

இதுகுறித்து திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் கூறுகையில், இவர்கள் இரண்டு பேரிடம் இருந்து ஒரு ஆம்னி வேன், கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment