Thursday, December 8, 2011

திமுகவில் கனிமொழி தலைமையில் தனி அணி.

ரசியல் பரபரப்பு எப்போதுமே முதலில் மதுரையில் இருந்து தொடங்குவது தானே வழக்கம். கனிமொழி விஷயத்தில் மட்டும் மாறிவிடுமா என்ன?கனிமொழி ரிலீஸாவதை வரவேற்று, ‘வெளிச்சம் வந்தாச்சு’ எனத் தலைப்பிட்டு சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி செல்லப்பன் என்பவர் பெயரில் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், ‘தலைவி வந்தாச்சு’ என்ற தலைப்பில் ஈரோடு தி.மு.க. .மாவட்ட பிரதிநிதி பொன். பூபதி பெயரிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.




இரண்டு போஸ்டர்களிலுமே பெரியார், கருணாநிதி படங்கள் சிறிதாக இடம் பெற்றிருக்க, கனிமொழி படம் பிரமாண்டமாக இருந்தது. அண்ணா, அழகிரி, ஸ்டாலின் என யாருடைய படமும் இல்லை. மதுரை முழுவதும் இந்த இரு போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.

இதுகுறித்து தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்..

“கட்சியில் இருக்கிற குழப்பம் போதாது என புதிய குழப்பம் இது. மதுரை மாவட்டத்துக்குள் ஸ்டாலின், அழகிரி படங்கள் இல்லாமல் போஸ்டர் ஒட்டப்படுவதில்லை. அதுவும் தி.மு.க.வினர் அச்சடிக்கும் போஸ்டர்களில் அண்ணா படம் கட்டாயம் இடம் பெறவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

.மேலும், போஸ்டரில் இடம் பெற்றுள்ள ‘தலைவி வந்தாச்சு’, ‘வெளிச்சம் வந்தாச்சு’ என்ற டைட்டில்கள் தி.மு.க.வினரை நோகடிக்கும் விதத்தில் உள்ளது.

இந்த அம்மா வெளியே வந்தவுடன் கட்சிக்கு வெளிச்சம் வந்திருப்பதுபோல குறிப் பிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் இவ்வளவு நாட்கள் கட்சியில் வெளிச்சம் இல்லையா?

தி.மு.க.வில் தலைவர் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தமே கலைஞர் என்பதுதான். அதற்கு கட்டுப்பட்டே லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். தலைவி என்ற அடை மொழிக்கெல்லாம் இங்கு இடமில்லை. இதை கட்சித் தொண்டன் மட்டுமல்ல. அழகிரியும், ஸ்டாலினும் கூட ஏற்கமாட்டார்கள்.

கனிமொழி ஆறு மாதம் ஜெயிலிலிருந்து வெளியே வந்த காரணத்துக்காக கட்சி அவருக்கு பதவி கொடுக்கிறதோ இல்லையோ, கனிமொழி தலைமையில் கட்சியில் ஒரு தனி அணி உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அச்சாரம்தான் இந்த போஸ்டர்கள்.

மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் தலைமையில் தனி அணி இருந்தாலும், அவர்கள் அழகிரி, ஸ்டாலின் என ஏதோ ஓர் அணிக்குள் அடங்குவார்கள். விரல்வி ட்டு எண்ணும் சிலர் தயாநிதி ஆதரவாளர்களாக இருப்பார்கள். இவர் களில் யாராலும் அரவணைக்கப்படாதவர்கள் இனி புதிதாக கனிமொழி தலைமையில் ஓர் அணியாகச் சேரக்கூடும்.

மதுரையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப் பதைப் பார்க்கும்போது அழகிரிக்கு எரிச்சல் வரவேண்டும் என்பதற்காக ஒட்டப்பட்டதோ? என்ற சந்தேகம் எழுகிறது.

கனிமொழி போஸ்டர் அழகிரி தரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. கனிமொழியின் அரசியல், தென்மாவட்டங்களை மையமாகக் கொண்டு இயங்கவேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் இருவர் நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி நினைப்பது கனிமொழிக்காகவா? அல்லது அழகிரியைப் புறந்தள் ளவா? எனத் தெரியவில்லை’’ என்று கட்சியின் குழப்பத்தைச் சொல்லி கவலையுடன் முடித்தார்.

No comments:

Post a Comment