Monday, October 22, 2012

கல்லூரி மாணவிகளைக் குறிவைக்கும் புரோக்கர்கள்! கிறுகிறுக்கும் கிருஷ்ணகிரி



''சேலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் வாழப்பாடி, என்னுடைய சொந்த ஊர். கட்டட வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தேன். அப்புறம் திசைமாறிப்போய் ஒரு புரோக்கர் மூலமா உடம்பை வித்துத் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். எங்க வீட்டுல இருக்கிற யாருக்கும், நான் இந்தத் தொழில் பண்றது தெரியாது. இந்தத் தொழிலைவிட்டு வெளியே வரலாம்னு நினைச்சாலும் சுத்தி இருக்கிறவங்க விட மாட்டேங்கிறாங்க. இந்தத் தொழிலே வேண்டாம்னு விட்டுட்டு ஒரு தடவை தீர்மானமா பூக்கடை வெச்சேன். ஆனா போலீஸ்காரங்களே வந்து, 'இன்னைக்கு ராத்திரிக்கு வந்துடு’னு மிரட்டிட்டுப் போனாங்க. நான் போகலைன்னா என் மேல கேஸ் போடுவாங்க. எல்லாம் என் விதிங்க. ஆனா, நான் என்னோட கதையைச் சொல்றதுக்காக உங்களைக் கூப்பிடலை. கிருஷ்ணகிரியில் கிராமத்துப் பக்கம் இருந்து வர்ற காலேஜ் புள்ளைங்களைக் குறிவைச்சு, இங்கே ஒரு புரோக்கர் கூட்டமே இறங்கி இருக்குது.



கிராமத்துப் புள்ளைங்ககிட்ட ஆசையாப் பேசி, அதுங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து நாசமாக்கிட்டு இருக்கானுங்க. இதுக் குன்னு சில பசங்களை வச்சிருக்காங்க. அந்தப் பசங்க வாங்கித் தர்ற பொருளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு காலேஜ் புள்ளைங்களும் பாழுங் கிணறுன்னு தெரியாலேயே விழுந்துடுறாங்க. காலேஜ் பொண்ணுங்களை கஸ்டமர் கூட கார்ல அனுப்பி வச்சுடுவாங்க. அவங்க கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் போற வழியில் இருக்கிற காட்டுக்குள் கூட்டிட்டுப் போய், வேலையை முடிச்சுட்டு திரும்பிக் கொண்டுவந்து விட்டுருவாங்க. முதலில் முரண்டு செய்யும் கல்லூரிப் பெண்கள், பின்னர் நிலைமையை உணர்ந்து அனுசரித்துச் செல்கிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதை வெளியே சொல்லாமல் நரகத்தில் வாழ்கிறார்கள். நான் சொல்றது சத்தியமா உண்மைங்க'' என்றவர் ஒரு பெண்ணிடம் நம்மை அழைத்துச் சென்றார்.

அந்தப் பெண் நம்மிடம், ''நான் புரோக்கர் தொழிலை விட்டு பல வருஷங்கள் ஆகிப்போச்சு. இப்போகூட பொண்ணு வேணும்னு என்கிட்ட பல பேரு வந்து நிற்கிறாங்க. அதுல சில போலீஸ்காரங்களும் அடக்கம். எனக்குத் தெரிஞ்சு கிருஷ்ணகிரியில எப்படியும் 4,000 பொண்ணுங்க இந்தத் தொழில்ல இருப்பாங்க. நிறையக் காசு கிடைக்குதுன்னு இப்போ காலேஜ் புள்ளைங்களை இந்த பாவப்பட்ட தொழில்ல இறக்குறாங்க. அரசாங்கமும் போலீஸாரும் மனசுவெச்சா மட்டும்தான் புரோக்கர்களிடம் இருந்து அவர்களை மீட்க முடியும்'' என்றார்.

கிருஷ்ணகிரியில் பாலியல் தொழிலாளிகளை மீட்டு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்து வரும் வித்யா நிகேதன் அமைப்பின் செயலாளர் லலிதாவிடம் பேசினோம். 'தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரியில்தான் அதிக அளவுக்கு விபசாரம் நடக்கிறது. அதற்குக் காரணம், மிக அதிகமான போக்குவரத்தும், பிற மாநில மக்களின் வருகையும்தான். இப்போது கல்லூரி மாணவிகளை அதிக அளவில் விபசாரத்தில் தள்ளு கிறார்கள். மாணவிகளை ஏமாற்றுவதற்காகவே பல இளைஞர்களை வைத்திருக்கிறார்கள். பாய் ஃப்ரெண்ட்ஸ் வேடத்தில் திரியும் இவர்களிடம் ஏமாந்துவிடும் பெண்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து, வலையில் சிக்கவைக்கிறார்கள். இப்போது சமூக வலைதளங்கள் மூலமாகவும் கல்லூரி மாணவிகளுடன் பரிவர்த்தனை நடக்கிறது. அந்த மாணவிகள் நினைத்தாலும் உடனே இந்தத் தொழிலில் இருந்து வெளியே வந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். காதல் வலையில் பெண்களை வீழ்த்துவதற்காகத் திரியும் ரோமியோக்களைக் கட்டுப்படுத்தினால்தான், இந்தப் பிரச்னை தீரும். தங்கள் பிள்ளை கல்லூரியில் நல்லவிதமாகப் படித்துக்கொண்டு இருப்பதாக பெற்றோர்கள் நினைக்க... அந்தப் பெண்களோ பாழும் கிணற்றில் விழுந்து நாசமாகி வருகிறார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெண்கள் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தப் பெண்களைக் காப்பாற்ற முடியும்'' என்றார் நிதானமாக.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமாரிடம் பேசினோம். ''இதுவரை நீங்கள் சொல்வது போன்று எந்தப் புகாரும் வரவில்லை. பாலியல் தொழில் செய்பவர்கள் திருந்தி வாழ நினைத்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். பாலியல் தொழிலாளிகளுக்கு காவல் துறையில் இருப்பவர்கள் யாராவது தொல்லை கொடுத்தால் என்னிடம் புகார் செய்யலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன். கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது பற்றி உடனடியாக விசாரிக்கிறேன். அப்படித் திரியும் ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியாகச் சொன்னார்.

கொல்கத்தா, மும்பை வரிசையில் கிருஷ்ணகிரி சேர்ந்துவிடக் கூடாது!

No comments:

Post a Comment