Wednesday, October 17, 2012

துடிக்க வைக்கும் டெங்கு!சுகாதாரத் துறை அமைச்சர் மாவட்டத்தில் இரண்டு பேர் பலி




 
'உடம்பு முழுக்க சிவப்புக் கொப்புளமா வந்தது’
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சாலமன்ராஜா என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்தார். இவர் எம்.காம். பட்டதாரி. இவரின் தந்தை டேவிட் காவல் துறையில் உதவி ஆய்வாளராக இருந்தவர். சாலமன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு விபத்தில் அவரது தந்தை டேவிட் இறந்தார். அடுத்தடுத்து, நடந்த இரு மரணங்களால் நொறுங்கிப் போய் உள்ளது அந்தக் குடும்பம். சாலமன் ராஜாவின் தாயார் வசந்தா,
''என் மகனுக்கு 20 நாளா உடம்பு சரியில்லே. ஆரம்பத்துல சாதாரணக் காய்ச்சல்னு நினைச்சோம். பக்கத்துல இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிட்டல்ல காண்பிச்சு மருந்து மாத்திரை சாப்பிட்டான். போன வாரம் உடம்பு முழுசும் சிவப்புக்கலர்ல சின்னச் சின்னக் கொப்பளம் வந்தது. கை, கால்ல பயங்கர நடுக்கம். எந்திரிக்கக்கூட முடியலை. உடனே, ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். அடுத்த ரெண்டு நாள்ல ஓரளவு குணமாகிட்டான். திடீர்னு முகத்துல ஒரு பக்கம் வீக்கமாகி, பேசவும் முடியாம, மூச்சு விடவும் முடியாம என்மகன் ரொம்ப கஷ்டபட்டான். அவன் பட்ட கஷ்டத்தைப் பார்த்துத் துடிச்சுப் போய்ட்டேன். அடுத்தநாளே எங்களால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு டாக்டருங்க கைவிரிச்சுட்டாங்க. சனிக்கிழமை அதிகாலைல என் மகன் துடிதுடிச்சு செத்துப்போனான். ஹாஸ்பிட்டல் போனதும் முதல்ல டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைதான் செஞ்சோம். பரிசோதனை முடிவு சொல்ல அஞ்சுநாள் ஆகும்னு சொன்னாங்க. முடிவு தெரியிறதுக்குள்ள அவன் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு'' என்று கதறி அழுதார்.
'திடீர்னு வயிறு வீங்கிடுச்சு!’
''அறிவாப் பேசுற புள்ள பூமியில நிலைக்காதுன்னு சொல்வாங்க. அது உண்மையாப் போச்சே'' என்று மகள் நித்யஸ்ரீயை பறிகொடுத்துவிட்டு, அரற்று கிறார்கள் பெற்றோர் உலகநாயகியும் பாக்யராஜும். இவர்களின் நான்கு வயதுக் குழந்தை நித்யஸ்ரீ டெங்குவால் பலியானது. நித்யஸ்ரீ இறக்கும் வரை டெங்குவின் தீவிரம் பற்றி மாவட்ட நிர்வாகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகே, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஞானோதயம் வந்தது. நித்யஸ்ரீயின் தந்தை பாக்யராஜிடம் பேசினோம். ''குழந்தைக்கு ஜுரம்னு தெரிஞ்சதும் உடனே பெரியாஸ் பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். அப்படியும் காய்ச்சல் நிக்கலை. இதேபோல, ஜுரம் இருந்த பல குழந்தைகளையும் ஒரு வேன்ல ஏத்திக்கிட்டு ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அங்க போய் ரெண்டு நாள் ஆகியும் எந்த வைத்தியமும் பண்ணலை. கேட்டதுக்கு பிளட் டெஸ்ட் எடுத்துருக்கோம். ரிசல்ட் வந்தாத்தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்போம்னு சொன்னாங்க. அதுவரைக்கும் ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்த எம் புள்ள திடீர்னு விளையாட்டை நிறுத்திட்டா. சாப்பாட்டையும் நிறுத்திட்டா. திடீர்னு வயிறு வீங்கிடுச்சு. யூரின் போகலே. ஆனா அடுத்த ரெண்டே நாள்ல அவளை எமன் அழைச்சுக்கிட்டான்'' என்று வேதனையுடன் கண்ணீர் வடித்தார்.
''கண் பார்வை அப்படியே நிலை குத்தி நின்னுடுச்சு!''
நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வினிதா என்ற ஒன்பது வயது சிறுமி டெங்குவால் பலியானாள். ''பெத்த வயிறு பத்தி எரியுதுய்யா. செல்லமா வளர்த்து இப்படியா காய்ச்சலுக்குத் தூக்கிக் கொடுக்கணும்?'' என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார் வினிதாவின் தாய் சகுந்தலா. ''ஆஸ்பத்திரியில கடைசி நேரத்துல மடியில தலையை வச்சுப் படுத்துக்கிட்டு நீ என்னைய விட்டுட்டு வெளியில போகாதம்மானு எம்பொண்ணு கெஞ்சுனா. நான் உன்னைவிட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல கண்ணு அப்படியே நிலைகுத்தி நின்னுடுச்சு. உடனே, டாக்டரைக் கூப்பிட்டுக் கதறினேன். அவங்க நெஞ்சுல கைய வைச்சு அழுத்திப் பார்த்துட்டு, குழந்தை இறந்துட்டதா சொல்லிட்டாங்க. என்னை விட்டுட்டுப் போகாதம்மானு சொல்லிட்டு அவ போயிட்டாய்யா'' என்று பெருங்குரலெடுத்து அழுதார்.
''முடி விறைச்சுப் போய் நின்னது.''
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது டெங்கு. எடப்பாடி அருகே உள்ள சித்தூர் புதூர் பகுதியில் ரித்திகா என்ற நான்கு வயதுக் குழந்தை கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் இறந்தது. இந்தக் குழந்தையின் பாட்டி ஆயம்மாள், ''என் மருமகள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்க அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடுச்சு. நான்தான் என் பேத்தி ரித்திகாவை பார்த்துக்கிட்டேன். எங்க வீட்டுல எப்பவும் சுடு தண்ணீர்தான் குடிப்போம். என் பேத்தியை வெளியில கூட விடாமப் பத்திரமாதான் பார்த்தேன். திடீர்னு நாலாம் தேதி புதன்கிழமை சாய்ந்திரம் காய்ச்சல் வந்தது. உடனே ஜலகண்டபுரம் எடுத்துட்டுப் போய் ஊசி போட்டுட்டு வந்தோம். காய்ச்சல் நிற்கவே இல்லே. நெருப்பாட்டம் கொதிச்சது. விட்டு விட்டுக் காய்ச்சல் வந்துட்டே இருந்தது. முதுகு வலிக்குதுன்னு சொன்னது. கை, கால் குடையுதுன்னு சொன்னது. நான் கை, காலைப் பிடிச்சு விட்டேன். தலைமுடி விறைச்சுக்கிச்சு. எண்ணெய் தேய்ச்சாலும் முடி அடங்கல. கண்ணுல வளையம் மாதிரி இருந்தது. குழந்தை ரொம்ப சோர்வா இருந்தது. சேலம் பிரணவ் ஆஸ் பிட்டல் தூக்கிட்டு ஓடினோம். ரத்தம் டெஸ்ட் பண்ணியதில் டெங்கு காய்ச்சல் இருக்கு. அதனால், கோயம்புத்தூர் கொண்டுபோகச் சொல்லிட்டாங்க. ஆறாம் தேதி சனிக்கிழமை குழந்தையை வண்டியில போட்டுட்டுப் போனோம். பாதி வழியிலேயே இறந்துபோச்சு.'' என்று தேம்பி தேம்பி அழுகிறார்.
'மக்கள் பயப்படத் தேவை இல்லை. டெங்குவால் அதிகமாக தமிழகம் பாதிக்கப்படவில்லை!’ என்று தொடர்ந்து முழங்கி வரும் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய்யின் மாவட்டத்தில் கடந்த வாரம் மட்டும் இரண்டு பேர் டெங்குவால் பலி ஆனார்கள். இதுவரை வேலூரில்  பலியான உயிர்களின் எண்ணிக்கை 8.
மக்களையும் கவனியுங்கள் மாண்பு மிகுக்களே!

No comments:

Post a Comment