Tuesday, October 16, 2012

நம்பி நாராயணனிடம் மன்னிப்பு! கேரளாவில் ஒரு சரித்திர நிகழ்வு


து ஒரு வித்தியாசமான காட்சி!
 திருவனந்தபுரம் பிரஸ் கிளப் பில் கடந்த 7-ம் தேதியன்று, மலை யாளத்தின் பிரபல எழுத்தாளர்களும் பத்திரிகை யாளர்களும் தொலைக்காட்சிப் பிரதிநிதிகளும் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நடுநிலையாக உட்கார்ந்து இருந்தார் 'நாஸா’ விஞ்ஞானி நம்பி நாராயணன். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகள் பல புரிந்து... இன்னும் சாதிக்க முனைந்திருந்த வேளையில், 'ராக்கெட் ரகசியத்தை வெளிநாட்டுக்குக் கடத்தினார்’ என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது ஆனவர் அவர். ''உங்களுக்கு நாங்கள் துரோகம் இழைத்து விட்டோம். உங்களைப் பற்றிய தவறான செய்திகளை எழுதி உங்களைக் காயப்படுத்தி விட்டோம். எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்'' என்று அனைவரும் தழுதழுக்க மன்னிப்புக் கோரிய சரித்திர நிகழ்வுதான் அது.
'நாஸா’வில் 10 ஆண்டுகள் பணியாற்றி இந்தியா திரும்பி சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருபவரான டாக்டர் மதுவின் 'சமூகப் பாதுகாப்பு சமிதி’ சார்பில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஞ்சாநெஞ்சம் கொண்ட எழுத்தாளர் என்று புகழப்படும் பால் சக்கரியா, ஜெயகாந்தனுக்கு இணையானவர் என்று கேரளாவில் போற்றப்படும்
பி.ஆர்.பி.பாஸ்கர், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் முன்னாள் கேரள முதலமைச்சர் கருணாகரனின் மகன் முரளீதரன் போன்றோர், திரளாக வந்திருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினர்.
எழுத்தாளர் பி.ஆர்.பி.பாஸ்கர், ''ராக்கெட் உளவு வழக்கு பரபரப்பாக கேரளாவில் நடந்தபோதே, அது பொய்யான வழக்கு என்ற என் சந்தேகத்தைத் தெரிவித்து இருக்கிறேன். இன்று என் சந்தேகம் உறுதியாகி விட்டது. சாமான்யனான எனக்கே அது புரிந்தபோது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அது புரியாமல்போனது எப்படி என்றுதான் தெரியவில்லை. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருந்தார்களா என்று அவர்கள் மீது சந்தேகப்பட வேண்டியுள்ளது.  விஞ்ஞானியிடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் நாம் இருக்கிறோம். நான் பகிரங்க மன்னிப்புக் கோருகிறேன்!'' என்று பேசினார்.
நம்பி நாராயணனும் அவருடைய குடும்பமும் பட்ட கஷ்டங் களை எழுத்தாளர் பால்சக்கரியா மிகவும் உருக்கமாகப் கூறினார். ''அரசாங்கத்தையும், போலீஸையும், பத்திரிகைகளையும் கண் மூடித்தனமாக நம்பித்தான், ஒரு தவறான வழக்கை உண்மை என்று நம்பி தவறு செய்துவிட்டோம். மக்கள் சார்பாக நம்பி அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். இந்தத் தவறுக்கு பத்திரிகைகள்,  போலீஸ் உயர் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், அரசாங்கம் அத்தனை பேரும் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தில், இந்திய சரித்திரத்தில் நம் கேரள மாநிலம் ஒரு முன்னோடியாக, செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி வருந்துவதோடு அவருக்கான நஷ்டஈட்டுத் தொகை யும் வழங்கினால்தான் அது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பது என் கருத்து'' என்றார்.
முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகனும் எம்.எல்-ஏ.வுமான முரளீதரன், ''ராக்கெட் ரகசியம் கடத்தப்பட்டதாக புனையப்பட்ட ஒரு பொய் வழக்கில் என் தந்தை முன்னாள் முதல்வர் கருணாகரன் பலியாடு ஆக்கப்பட்டார். ஒரு குற்றமும் செய்யாத என் தந்தைக்குப் பதவி பறிபோனதற்கு இந்த வழக்குதான் காரணம். சுதந்திரத்துக்காகப் போராடி, இந்திராகாந்திக்குத் துணை நின்று வாழ்ந்த என் அப்பா வேறு குறைகளுக்காகப் பதவி இழந்து இருந்தால், அவ்வளவு வருத்தம் நேரிட்டு இருக்காது. ராஜதுரோகக் குற்றம் சாட்டி நீக்கியது எங்கள் குடும்பத்தை வாட்டி வருகிறது. அதில் இருந்து நாங்கள் மீளவே முடியவில்லை. அர சியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாக எங்கள் கட்சியிலேயே உள்குத்து வேலை செய்து என் அப்பாவைப் பழிவாங்கி விட்டனர்.
இந்த வழக்கில் பொய்யை ஜோடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சிபி மேத்யூ, ஜோஸ்வா, இன்ஸ்பெக்டர் விஜயன் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்குக் கடிதம் கொடுக்க இருக்கிறேன்; காங்கிரஸ் தலைமைக்கும் கடிதம் எழுத இருக்கிறேன். நாட்டுக்கு உழைத்த ஒரு நல்லவரை நாம் ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டோம். அவருக்கு உடல், மனம், பொருள் ரீதியான துன்பங்கள் கொடுத்து, மன்னிக்க முடியாத குற்றம் செய்து விட்டோம்'' என்றார் உருக்கமாக.
இறுதியாகப் பேசிய விஞ்ஞானி நம்பி நாராயணன், ''உங்களது இந்த நடவடிக்கை என்னை மனநிறைவு அடைய வைத்துள்ளது. கார்த்திகேயன், அசோக்குமார், அருண் பகத், ஷர்மா உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு விதமாக, தனித்தனியாகப் புலனாய்வு செய்து, இது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்று பதிவு செய்தனர். இந்தப் பொய்வழக்கு என் ஆராய்ச்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதனால், 10 ஆண்டுகள் நாடு பின்னுக்குப் போய்விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது'' என்றார் வருத்தத்துடன்.
இதுபோன்ற தவறுகள் இனியாவது நிகழாமல் இருக்கட்டும்!

No comments:

Post a Comment