Saturday, October 20, 2012

உண்டியல் கட்சி என்பது பெருமையே! மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்


'கம்பெனிகளிடம் காசு பறிக்கும் கட்சிகள்’ என்ற தலைப்பில், கடந்த 7.10.12 ஜு.வி. இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அது தொடர்பாக, மார்க் சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நமக்கு ஓர் கடிதம் எழுதி இருக்கிறார். 
'காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற கட்சிகள் கம்பெனி களிடம் பெற்றுள்ள நிதி குறித்து விமர்சிக்கும் அந்தக் கட்டுரையில், 'திருவாளர் பரிசுத்தம் போல அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.417 கோடி பெற்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாளர் பரிசுத்தம் போல அல்ல. பரிசுத்தமாக இருக்கிற காரணத்தினால்தான் தவறு இழைக்கும் கட்சிகளை விமர்சிக்க முடிகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, கட்சியின் வரவு - செலவு குறித்து ஏற்கெனவே விளக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவது இல்லை. ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து வந்த செக்கைத் திருப்பி அனுப்பியது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் என்பது கடந்த கால நிகழ்வு. இப்போதும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறோம். ஜூ.வி. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, 'மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.417 கோடி வருவாய்’ என்பது 2005 முதல் 2011 வரைக்குமான ஏழு ஆண்டுகளுக்கான கணக்கு. ஆண்டு ஒன்றுக்கு சராசரி வருவாய் 60 கோடி. இது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய வருவாய்.
கட்சியின் அமைப்புச் சட்டப்படி கட்சி உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தலா இரண்டு ரூபாய் சந்தா செலுத்துவதோடு தங்களது வருவாயில் ஒரு பகுதியையும் கட்சிக்கு லெவியாகச் செலுத்த வேண்டும். இந்த வகையில், ஏழு ஆண்டுகளில் கட்சிக்குக் கிடைத்த வருவாய் என்பது மொத்த வருவாயில் 40.61 சதவிகிதம். கட்சியின் மொத்த வருவாயில் கம்பெனிகள் மற்றும் சொசைட்டிகளிடம் இருந்து வந்த வருவாய் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சத்து 31 ஆயிரத்து 314 மட்டுமே. இது, மொத்த வருவாயில் 0.35 சதவிகிதம் மட்டுமே.
ஆண்டுதோறும் கட்சியின் நகர, வட்டக் குழுக்கள் தங்களுடைய, வரவு - செலவுக் கணக்குகளை மாநிலக் குழுக் களுக்கு அனுப்பி, மாநிலக் குழுக்கள் வரவு -  செலவுக் கணக்குகளை சட்டப்படியான தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்து மத்தியக் குழுவுக்கு அனுப்புகின்றன. மத்தியக் குழு அகில இந்திய அளவிலான கணக்குகளைத் தணிக்கை செய்து சான்றிதழ் பெற்று ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்துக்கும் வருமானவரித் துறைக்கும் அளித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்துக்கும் வருமானவரித் துறைக்கும் தாக்கல் செய்யும் கணக்கில் மேற்கண்ட அனைத்து விவரங்களும் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதையும் மறைக்கவில்லை. கட்சிக்கு நன்கொடை தருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தினரே. நாடு முழுவதும் கட்சியின் அணிகள் கிராமங்களிலும், நகரங்களிலும் உழைப்பாளி மக்களிடம் இருந்து நிதிவசூல் செய்கின்றன. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்த கம்பெனிகள் மற்றும் சொசைட்டிகளின் பெயர்கள், தேர்தல் ஆணையத்துக்கும் வருமானவரித் துறைக்கும் அளித்த வரவு - செலவுக் கணக்கில் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதையும் மறைக்கவில்லை. கட்சியின் செயல்பாடுகள் மட்டுமின்றி வரவு - செலவும் திறந்த புத்தகமாகவே உள்ளது.
மக்கள் நலனையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, 'உண்டியல் கட்சி’ என்று அழைப்பதைப் பெருமிதமாகவே கருதுகிறோம்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment