Thursday, April 19, 2012

கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-5 ஏவுகணை; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது


புவனேஸ்வர்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி மூலம் இந்தியாவுக்கு பெருமை கிடைப்பதுடன், பல நாடுகளும் கண்டு மிரளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனையை விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். நேற்று இரவு 8.30 மணியளவில் அக்னி ஏவுகணை சோதித்துப்பார்க்கப்படுவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை இன்று காலை நடத்தப்பட்டது. .


இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்; இது போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள் மட்டுமே சோதனை செய்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியடைவது மூலம் இந்தியாவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெறுகிறது. 17 மீ., உயரமும், 50 டன் எடையும் உள்ள அக்னி 5 ஏவுகணை, ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உடையது. மேலும் இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதங்களை கொண்டு செல்லும் திறனுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர்- ஏ. கே., அந்தோணி வாழ்த்து: இன்று அக்னி- 5 வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில்; நாட்டின் பெருமைக்கு அரும்பாடுபட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பணியை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அமைச்சர் ஏ.கே., அந்தோணி போனில் விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். இவர் இது குறித்து கூறுகையில்; இந்த அரிய வெற்றி மூலம் இந்தியா உயர்ந்து நிற்கிறது. இது அரும்பெரும் வெற்றி ஆகும். இது நாட்டின் மற்றொரு மைல்கல் என்றார்.




அக்னி ஏவுகணையின் சிறப்பு அம்சங்கள்: இந்திய எல்லை அருகேயுள்ள திபெத் பகுதிகளில் சீனா ஏவுகணைகளை குவித்து வரும் நிலையில் அக்னி 5 ஏவுகணை இந்திய பாதுகாப்புத்துறையில் மிகவும் முக்கியமனது. அக்னி 5 ஏவுகணை ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவை பார்த்து அஞ்சும் நிலை ஏற்படும். இந்த ஏவுகணை அமெரிக்காவை தவிர மற்ற உலகின் மற்ற பகுதிகளில் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை இயக்கிய பின்னர் இதனை நிறுத்த முடியாது. துப்பாக்கி புல்லட்டை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது. சாலைப்பகுதிகளிலிருந்து கூட ஏவும் சக்தி கொண்டது.
ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின்னர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என்ற பெருமை அக்னி 5 ஏவுகணைக்கு கிடைக்கும். அக்னி 5 ஏவுகணை சிறிய செயற்கைகோள்களை தாக்கும் திறன் உடையது. அக்னி 5 ஏவுகணை பிரதமரின் நேரடி உத்தரவின் பேரில் தான் தாக்க செய்ய முடியும். இந்த ஏவுகணையை அமைதி திட்டங்களுக்கு பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment