Wednesday, February 1, 2012

பின்லேடனை கொன்ற அதே டீமின் அடுத்த அதிரடி ஆக்ஷன் ஆபரேஷன்!

ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி பின்லேடனை கொன்ற அதே அதிரடிப்படை, சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்றுவிட்டு, இரு பணயக் கைதிகளை மீட்டு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நேரடி உத்தரவின்படி இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது நேவி சீல்ஸ் அதிரடிப்படை!


விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் அமெரிக்கரான ஜெசிகா புச்சனன், டென்மார்க்காரர் பால் ஹாகென்
இதில் சாகசமும் இருக்கிறது. அதிரடியும் இருக்கிறது… அட, அரசியலும் இருக்கிறது!
பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒரு பெண் அமெரிக்கர்., ஆண், டென்மார்க் நாட்டவர். கடந்த அக்டோபர் மாதம் இவர்கள் சோமாலியாவில் துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
“பின்லேடனை வேட்டையாடிய நேவி சீல் டீம்-6, இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளட்டும்” என்று ஜனாதிபதி ஒபாமா, தாக்குதல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதிலிருந்து அதிரடி டீமுக்கு, ஆபிரிக்க ஆபரேஷனுக்கான சில சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால், தாக்குதலுக்கான இறுதி ஆபரேஷன் கொடுக்கப்படவில்லை.
டீம், அமெரிக்காவிலேயே தயார் நிலையில் இருந்தது.
செவ்வாய் இரவு, எப்போது, எந்த நேரத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற இறுதி உத்தரவு கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் பின் லேடன் வேட்டைக்கு சென்றது போன்ற அதே ஆக்ஷன் பிளான்தான். ஹெலிகாப்டரில் சென்று, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக இறங்கி, பணயக் கைதிகளை உயிருடன் மீட்க வேண்டும். கடத்தல்காரர்களையும் உயிருடன் பிடிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டால் கொன்று விடலாம்.
பின்லேடன் வேட்டை ஆபரேஷனுக்கும் இதற்கும் இடையே உள்ளன இரண்டு வித்தியாசங்கள்.
முதலாவது, பின்லேடன் ஆபரேஷனில், அங்கிருந்த யாரையும் தேவை ஏற்பட்டால் கொல்ல முடியும். சோமாலியா ஆபரேஷனில், இரு பணயக் கைதிகள் கண்டிப்பாக உயிருடன் மீட்கப்பட வேண்டும். இரண்டாவது, பின்லேடன் ஆபரேஷனில் அவர் இருந்த கம்பவுன்டிலேயே நேரில் சென்று இறங்கியது ஹெலிகாப்டர். இதில், கடத்தல்காரர்கள் அறியாத இடம் ஒன்றில் இறங்கி, கால்நடையாகச் சென்று சுற்றி வளைத்து தாக்க வேண்டும்.
ஹெலிகாப்டர் இறங்கும் ஓசையில் பணயக் கைதிகளை கடத்தல்காரர்கள் கொன்று விடலாம் என்பதற்காக திட்டத்தில் இந்த மாறுதல்.
புதன் கிழமை இருளை தமக்கு மறைவாகக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சோமாலியாவுக்குள்

அமெரிக்க நேவி சீல் டீம் தமக்குள்ளேயே செட்டப் கடத்தல்காரர்களை வைத்து செய்த பயிற்சி!
புகுந்தது நேவி சீல் டீம். பணயக் கைதிகள் வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக முழுமையான உளவுத் தகவல்களும் சி.ஐ.ஏ.-யால் திரட்டப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தது. அடடோ என்ற சிறிய நகருக்கு அருகே இருந்தது அந்த இடம்.
கடத்தல்காரர்கள் பணயக் கைதிகளை வைத்திருந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில், ஹெலிகாப்டரில் இருந்து பாரசூட் உதவி கொண்டு குதித்தனர் அதிரடிப்படை டீம். அந்த இடத்தில் ரீ-குரூப் ஆகி, இருளோடு இருளாக பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த வீட்டை நோக்கி நகர்ந்தனர்.
இரவு நேரங்களில் அந்த வீட்டில் காவல் எப்படி இருக்கும், எத்தனை கடத்தல்காரர்கள் காவலுக்கு இருப்பார்கள் என்ற விபரங்கள் எல்லாம் சி.ஐ.ஏ.-யால் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், அந்த கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சி.ஐ.ஏ. உளவுத் தகவல்களை திரட்டியிருந்தது. அவர்களின் நடவடிக்கைகளில் சுவாரசியமான ஒன்று, சூரியன் மறைந்தபின் கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இலையை மென்று தின்கிறார்கள்.
இந்த இலை (புகையிலை போல இருக்கும்) ஒருவித போதையை கொடுக்கக்கூடியது.
நேவி சீல் டீம் தமது இலக்கை சுற்றி வளைத்து பொசிஷன் எடுத்தபின், அதிரடியாக வீட்டினுள் புகுந்தது. இரு பணயக் கைதிகளுக்கும் காவலாக 12 கடத்தல்காரர்கள் இருந்தார்கள். இலை மென்றதால் லேசான போதையில் இருந்த போதிலும், அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். நேவி சீல் டீம் திருப்பிச் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டார்கள். 3 பேர் காயமடைந்து வீழ்ந்தார்கள்.
பணயக் கைதிகள் மீட்க்கப்பட்டனர். அந்த தகவல் ஹெலிகாப்டர் விமானிக்கு கொடுக்கப்பட்டது. ஹெலிகாப்டரும் வந்து சேர, இரு பணயக் கைதிகளையும், காயமடைந்த கடத்தல்காரர்களையும் ஏற்றிக்கொண்டு, அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டது நேவி சீல் டீம் இலக்கம் 6.
காப்பாற்றப்பட்ட பணயக் கைதிகளையும், உயிருடன் கைப்பற்றப்பட்ட கடத்தல்காரர்களையும்

அமெரிக்க நேவி சீல் டீம் இலக்கம்-6
ஏற்றிச் சென்ற சீல் டீம் ஹெலிகாப்டர், டஜிபோட்டி அருகேயுள்ள அமெரிக்க ராணுவத்தளம் கேம்ப் லெமோனியரில் சென்று தரையிறங்கியதாக, ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் உள்ளன. ஆபிரிக்காவில் உள்ள இந்த அமெரிக்க ராணுவத் தளத்துக்கு கடந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேடா விஜயம் செய்திருந்தார்.
இந்த ஆபரேஷன் பிளான் முன்கூட்டியே அமெரிக்காவின் ஸ்லீவ்ஸ்ஜில் இருந்ததையே அவரது கடந்த மாத விஜயம் காட்டுகிறது என்று இப்போது சொல்கிறார்கள். (பணயக்கைதிகள் கடத்தப்பட்டது கடந்த வருடம் அக்டோபரில்)
சோமாலியாவில் அப்பகுதி பாதுகாப்பு படையினருக்கோ, காவல்துறைக்கோ இப்படி ஒரு அதிரடித் தாக்குதல் திட்டம் இருக்கும் விஷயமே சொல்லப்படவில்லை. குறுகிய நேரத்தில் ஆபரேஷன் முடிந்து அதிரடி டீம் வெளியேறிய பின்னரே அவர்களுக்கு விஷயம் தெரிந்து, வந்து பார்த்தார்கள்.
மீட்கப்பட்ட பணயக் கைதிகளில் பெண், அமெரிக்கரான ஜெசிகா புச்சனன். மற்றையவர், டென்மார்க்காரர் பால் ஹாகென். இவர்கள் இருவரும் டி.ஆர்.சி. அமைப்புக்காக (The Danish Refugee Council – DRC) சோமாலியாவில் பணிபுரிந்தவர்கள்.
வெளிப்படையாகப் பார்த்தால், கடத்தல்காரர்களால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜை ஒருவரை (அத்துடன் மற்றொரு நாட்டு மனிதநேய பணியாளரையும்) மீட்டு வந்த சம்பவம் போல இந்த ஆபரேஷன் தோன்றுகிறது அல்லவா. ஒரு விதத்தில் அதுவும் உண்மைதான். ஆனால், அத்துடன் இதில் அரசியலும் உள்ளது என்றால் நம்புவீர்களா?
கீழேயுள்ள குறிப்புகளை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.
1) உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்கப் பிரஜைகள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்படுகின்றனர். தற்போதும் சிலர் பணயக் கைதிகளாக உள்ளனர். பணயக் கைதிகள் பிடிக்கப்படும் ஒவ்வொரு தடவையும் அமெரிக்கா மீட்பு நடவடிக்கையில் இறங்குவதில்லை.
2) பணயக் கைதியாகப் பிடிக்கப்படடிருந்த அமெரிக்கப் பெண் ஜெசிகாவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், உடனடியான மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், அவரது உடல்நிலை மேலும் மோசமாகிவிடும் என்றும் வெள்ளை மாளிகைக்கு தகவல் கிடைத்தது என்று அமெரிக்க மீடியாவில் கூறப்படுகிறது.
3) மேலேயுள்ள முதலாவது குறிப்பில், பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட மற்றைய அமெரிக்கர்களை விடுவிக்க முயற்சி எடுக்காமல், ஜெசிகா விஷயத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது ஏன் என்று யாராவது கேட்டால், அதற்கு வெள்ளை மாளிகை சொல்லும் பதிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். எதற்கும், அடுத்த குறிப்பையும் படியுங்கள்.
4) பணயக் கைதிகள் இருவரும் பணிபுரியும் டி.ஆர்.சி. அமைப்பு (The Danish Refugee Council – DRC), “ஜெசிகாவின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. அவருக்கு சில மருந்துகள் கொடுத்தால் போதுமானது” என்று கூறியிருக்கிறது. சரி. இல்லாத மருத்துவ காரணத்தை சொல்லி எதற்காக இந்த ஆபரேஷனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது? அடுத்த குறிப்பை பாருங்கள்
5) அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது. ஒபாமாவின் பிரச்சாரத்துக்கு, அவரது ஆட்சியில் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம், பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. “பின்லேடனை கொன்ற அதே டீம்தான் இந்த ஆபரேஷனையும் செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டு, நிறைவேற்றப் பட்டுள்ளது.
6) இப்போது இந்த அதிரடி ஆபரேஷன் அமெரிக்க மீடியாக்களில் பரபரப்பாக அடிபடுகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு மீடியாவும் ஏதாவது சொல்லும்போது, “பின்லேடனை கொன்ற அதே டீம்” என்ற டைட்டிலையும் சேர்த்தே சொல்லப் போகின்றது. அந்த வகையில், பின்லேடன் ஆபரேஷன் மக்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தப்படும்.
7) இந்த அதிரடி ஆபரேஷனுக்கான உத்தரவு திங்கட்கிழமை கொடுக்கப்பட்டது. எப்போது ஆபரேஷன் தொடங்க வேண்டும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை (நேற்று) இரவு ஆபரேஷனுக்காக நேரம் குறிக்கப்பட்டது. குறித்த நேரத்தில் பணயக் கைதிகள் மீட்கப்பட்டனர். இந்த புதன் கிழமை இரவு என்பதில் ஏதாவது விசேஷம் உள்ளதா? அடுத்த குறிப்பை பார்க்கவும்.

ஒபாமா தனது மனைவி சகிதம் ஜெசிகா புச்சனனின் தந்தை ஜான் புச்சனனுடன் போனில் பேசும் போட்டோ

சோமாலியாவில் புதன் இரவு, வாஷிங்டனில் புதன் கிழமை காலை. நேற்று காலை ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க காங்கிரஸில் தனது ஸ்டேட் யூனியன் உரையை ஆற்றினார். அது அமெரிக்கா முழுவதும் ஒளிபரப்பாகியது. அந்த நேரத்தில் சீல் டீம் பணயக் கைதிகளை மீட்டுக்கொண்டிருந்தது.
9) ஒபாமா தனது உரையை முடித்த உடனே, தொலைபேசியை எடுத்தார். பணயக் கைதியாக இருந்த ஜெசிகா புச்சனனின் தந்தை ஜான் புச்சனனை அழைத்தார். “உங்கள் மகளை பத்திரமாக மீட்டு விட்டோம்” என்ற சேதியை தெரிவித்தார். ஜெசிகாவின் தந்தையுடன் ஒபாமா பேசும்போது தனது மனைவி மிஷால் ஒபாமாவையும் அருகே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
10) மனைவி அருகேயிருக்க ஒபாமா போனில் பேசும் போட்டோ வெள்ளை மாளிகையால் மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டது. அமெரிக்கர்கள் இதை importance of family values என்று சொல்வார்கள். அமெரிக்காவில் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மனைவியையும் அழைத்துச் செல்வதும் இதற்காகதான்!
11) நம்மூர் அரசியல்வாதிகள் என்றால் எந்தனையாவது மனைவியை அழைத்துச் செல்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டு, குடும்பத்தில் குழப்பம் ஆகிவிடும்.

No comments:

Post a Comment