Friday, October 7, 2011

2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு அறிவிப்பு

2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த மூன்று பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் அதிபர் எலென் ஜோன்சன் சிர்லீஃப் (Elen Johnson Sirleaf), லிபேரியன் சமூக ஆர்வலர் லேய்மாஹ் க்போவீ (Leymah Gbowee) மற்றும் யேமனின் மனித உரிமை செயற்பாட்டாளர் டவக்குல் கர்மான் (Tawakkul Karman) ஆகியோருக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை கையில் எடுக்காது, பெண்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பாடுபாட்டு, அமைதியை கட்டியெழுப்ப தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர்கள் என நோபல் கமிட்டிக்குழு அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

இவர்களில் ஜோன்சன் சிர்லெஃப் (72) ஓர் வணிகவியலாளர் ஆவார். ஆபிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் தலைவர் (2005) ஆவார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான யேமனியரான கர்மான் (32) மனித உரிமை செயற்பாட்டு குழுக்களிலும், எல்லைகளற்ற பெண்கள் ஊடகவியலாளர் அமைப்புக்களிலும் பங்கெடுத்துகொண்டதுடன், யேமனிய அதிபர் அல் அப்துல்லா சாலேஹ் வுக்கு எதிராக கடந்த ஜனவரியில் போராட்டத்தை தொடக்கியவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.

யேமனிய இளைய சமுதாயத்தின் புரட்சிக்காகவும், யேமனிய மக்களுக்காகவும் இந்த பரிசை அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக பேஸ்புக் மூலம் மக்கள் புரட்சி ஒன்றை ஏற்படுத்திய இளைஞரான கோனிம் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் புரட்சிகளுக்கு வித்திட்ட பல சமூக ஆர்வலர்கள் இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

எனினும் மத்திய கிழக்கு, மற்றும் அரபு நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்படுவதற்கு நெடுநாட்கள் முன்னர் இருந்தே கர்மான் போராடிவந்ததாக நோபல் கமிட்டிக்குழு தெரிவித்துள்ளது.

பரிசுபெற்றவர்களில் மற்றொருவரான, க்போவீ, லிபேரியா நாட்டு போர்வீரர்களுக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பெண்களை ஒன்றிணைத்து, போராட்டம் நடத்தியவர். இன மத புளவு எல்லைகளை கடந்து பெண்களை ஒன்று திரட்டி போராட செய்ததன் மூலம், லிபேரியாவின் நீண்ட நாள் போரை முடிவுக்கு கொண்டுவர பாடுபட்டவர் என்பதுடன், தேர்தலில் பெண்களின் பங்கேற்பையும் உறுதி செய்தார்.

மருத்துவியல், பௌதீகவியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளில் 2011ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த நான்கு நாட்களாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment