Saturday, October 15, 2011

கயிறே, என் கதை கேள்!


பொட்டு அம்மான் பேசினாரா?

மேஜர் சபர்வால் என்பவர் இந்திய ராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடி மருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும்கூட. இவர் தனது அறிக்கையில், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும், 'ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்!
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது!’ என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக்கிறார்.
தவறான சாட்சியங்களை வழங்கிய மருத்துவர் கிளாட் பெர்னாண்டஸ், தடயவியல் பேராசிரியர் திருநாவுக்கரசு, மேஜர் சபர்வால் ஆகிய மூன்று நபர்களுமே சாதாரண அந்தஸ்தில் உள்ளவர்கள் அல்ல. யாருக்கும் பயப்படக்கூடியவர்களும் அல்ல. இவர்களுக்கு எம்மீது தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும், எமக்கு எதிராக இவர்கள் ஏன் அப்பட்டமான பொய் சாட்சியம் சொல்ல வேண்டும்? சட்டத்தின் மாண்பு அறிந்த இத்தகைய உயரிய புள்ளிகளையே எமக்கு எதிராகப் பொய் சாட்சியம் சொல்லவைக்க அதிகாரிகளால் முடிகிறது என்றால், ஏழைகளையும், அறியாமையில் உள்ளவர்களையும், பயந்த சுபாவம்கொண்டவர்களையும், பணம், பதவிகளுக்கு ஆசைப்​படுபவர்​களையும் ஏன் எமக்கு எதிராக சாட்சியம் சொல்ல​வைக்க இயலாது? எமக்கு எதிரான சித்திரிப்புகள் எவ்வளவு குரூரமாக நடத்தப்பட்டன என்பதற்​கான சாட்சியமாகவே இந்த உதாரணங்களை உங்​களிடம் சொல்கிறேன். எந்த சாட்சியத்​தையும் குற்றம் சொல்வது என் நோக்கம் அல்ல; எத்தகைய புள்ளிகளையும் எமக்கு எதிராக நிற்கவைக்கிற சக்தி அதிகாரிகளுக்கு இருந்​தது என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சாட்சியங்களில் மட்டும் அல்ல... நாங்கள் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்கு​மூலங்களிலும் நிறையக் குளறுபடிகள்! எதிரிகளிடம் இருந்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களில் உள்ள முக்கியமான விடயங்கள் அனைத்தும் மற்ற சான்றுகளுடன் ஒத்துப்போக வேண்டும். முரண்பாடுகள்கொண்டதாக இருந்தால், அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கிய சட்ட விதி. என்னுடைய வாக்குமூலத்திலும் நளினியின் வாக்குமூலத்திலும் சுமார் 35 முக்கிய முரண்பாடுகள் உள்ளன.
23.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டில் (என் மாமியார் பத்மா அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருந்த வீடு) நான் தங்கி இருந்ததாகவும், மறுநாள் நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டுக்கு (நளினி வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீடு) சென்று தங்கியதாகவும், 25.05.91 அன்று திருப்பதி போனதாகவும் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அரசு சாட்சிகளில் ஒருவரான ராணி என்பவர், 23.05.91 அன்று நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகச் சொல்லி இருக்கிறார். 96-வது அரசு சாட்சி சுஜா என்பவர், '24.05.91 அன்று நளினி வழக்கம் போல் அலுவலகம் வந்து வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பினார்’ என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்.
18.5.91 அன்று சென்னை திரும்பி நளினியின் அலுவலகத் தொலைபேசி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு நான் பேசியதாகவும், அன்று இரவு அவரது வில்லிவாக்கம் வீட்டில் தங்கியதாகவும், மறுநாள் 19.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டுக்கு, சிவராசன், சுபா, தணு ஆகியோர் வருவதாக இருந்ததால், நான் அங்கு போன​தாகவும் எழுதப்பட்டு உள்ளது.
18.5.91 அன்று மாதத்தின் 3-வது சனிக்கிழமை ஆகும். அன்றும் முதலாவது சனிக்கிழமையும் அலுவலக விடுமுறை என்பது அந்த அலுவலக நடைமுறை விதி. அப்படி இருக்க, நான் எப்படி அவருடன் அலுவலகத் தொலைபேசியில் பேசியிருக்க முடியும்? எப்படி அவருடைய வீட்டுக்கு நான் போயிருக்க முடியும்?
18.2.91 அன்று நளினி, வில்லி​வாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அங்கு சிவராசன், சுபா, தணு ஆகியோர் வந்ததாகவும், அன்று மாலை சுபா, தணுவுடன் சினிமா பார்க்கப் போனதாகவும், இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் (19.5.91) மூவரும் மகாபலிபுரம் போனதாகவும், மாலை வில்லிவாக்கம் வீட்டுக்கே திரும்பியதாகவும் அரசுத் தரப்பு ஆவணங்களில் எழுதப்பட்டு உள்ளது.
மேற்படி உள்ளவற்றில் நான் (மட்டும்) 18.5.91 அன்று இரவு முதல் நளினியுடன் தங்கி இருந்தேன் என்பது உண்மையா? அல்லது நளினியுடன் அன்று நான் இல்லாது சுபா, தணு மட்டும் தங்கிஇருந்தார்கள் என்பது உண்மையா? அடுத்து 18.5.91 அன்று நளினி அலுவலகத்தில் இருந்தார் என்பது உண்மையா? அல்லது அன்று அவர் சுபா, தணுவுடன் தனது வீட்டில் இருந்து சினிமாவுக்குப் போய் வந்தார் என்பது உண்மையா? 19.5.91 அன்று சுபா, தணு ஆகியோர் வில்லிவாக்கம் வீட்டில் இருந்தார்கள் என்பது உண்மையா? அல்லது அன்று வேறு இடத்தில் இருந்து ராயப்பேட்டை வீட்டுக்கு சுபா, தணு, சிவராசன் ஆகியோர் வந்தார்கள் என்பது உண்மையா?
அரசுத் தரப்பு சித்திரிப்புகள் சிலவற்றைப் படிக்கும்போதே எத்தனை விதமான குழப்பங்கள் வருகின்றன பார்த்தீர்களா? ஒரே தேதியில் ஒன்பது விதமான நிகழ்வுகளை அதிகாரிகள் சித்திரித்தார்கள். அத்தனையும் லாஜிக்கே இல்லாத சித்திரிப்புகள் .
என் விவகாரத்தில் மட்டும் அல்ல... தம்பி பேரறிவாளனும் இத்தகைய சித்திரிப்புகளுக்குத் தப்பவில்லை. அரசுத் தரப்பு ஆவணங்களில், '21.5.91 அன்று சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய அறிவு, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பார்த்தார்’ என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால், அதே வீட்டில் தங்கி இருந்த அரசாங்க சாட்சியான பாரதி என்பவர், '21.5.91 அன்று இரவு வீடு திரும்பிய அறிவும் பாக்கியநாதனும் மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டார்கள்’ என எழுதப்பட்டு உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விஷயத்தில் அதிக முரண்பாடு ஏதும் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், மேற்படியான சூழ்நிலையைவைத்தே, எனக்கு எதிரான சில விளையாடல்களை அரசுத் தரப்பு செய்தது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்களே... அதேபோல் சிறுசிறு சித்திரிப்புகளும் ஒருவனைச் சிதைக்க உதவும் என நம்பியது அரசுத் தரப்பு.
வேலூர் கோட்டைச் சிறையின் கட்டமைப்பு மற்றும் இட அமைவு ஆகியவற்றின் வரைபடங்களை வயர்லெஸ் தகவல் ஊடாக பொட்டு அம்மானுக்கு நான் அனுப்பியதாக அரசுத் தரப்பு எழுதி உள்ளது. ஆனால், இன்னோர் இடத்தில் வேலூரில் எனக்கு எவ்வித வேலையும் தரப்படவில்லை என்றும், அங்கு நான் எந்த வேலையும் செய்யக் கூடாது என பொட்டு அம்மான் எனக்கு கட்டளை இட்டதாகவும் எழுதப்பட்டு உள்ளது. இதில் எது உண்மை? பொட்டு அம்மான் அப்படி ஓர் உத்தரவை எனக்குப் பிறப்பித்து இருந்தால், வேலூர் கோட்டை சிறையின் கட்டமைப்பு குறித்து நான் ஏன் அவருக்குத் தகவல் அனுப்ப வேண்டும்? இதில், பெரிய வேடிக்கை என்னவென்றால், வயர்லெஸ் மூலமாக சிறையின் படங்களை நான் அனுப்பியதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. வயர்லெஸ் என்கிற கருவி மூலமாக தகவல்களை மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர, எந்த விதமான படங்களையும் அனுப்ப முடியாது. இந்த விஷயத்தைக்கூட போராடித்தான் என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்தது.
அரசுத் தரப்பு வழக்கின்படி சிவராசன் எனக்கு மிகவும் மூத்த உறுப்பினர் என்றும் இங்கு அவர் எனக்கு கமாண்டராகவும் பாஸ் ஆகவும் இருந்தார் எனக் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசுத் தரப்பு ஆவணம் 81-ல் சிவராசனைப் பற்றி குறிப்பு வருகிற இடங்களில் எல்லாம் 'அவன்’, 'அவன்’ எனப் பல இடங்களில் நான் சொன்னதாக எழுதப்பட்டு உள்ளது. உண்மையில், சிவராசன் எனக்கு பாஸாகவோ அல்லது கமாண்டராகவோ இருந்திருந்தால், அவரை நான் எப்படி அவன் எனக் குறிப்பிட்டு இருப்பேன்?

No comments:

Post a Comment