Saturday, October 8, 2011

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''

''ரு பல்கலைக்கழகத்தில் படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு''-மகிழ்வும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் மது ஷாலினி. 'அவன் இவன்’ படத்தில் தேன்மொழி என்கிற தேனாக நடித்த 'ச்சோ ஸ்வீட்’ மான்.

''படம் பார்த்துட்டு 'தேன்மொழி கேரக்டர்ல பின்னியிருக்கே’னு பலரும் பாராட்டுறப்ப, நிஜமா மிதக்குற மாதிரியே இருக்கு. ஷூட்டிங் நேரத்தில் நான் தவறாமல் யோகா பண்ணுவேன். ஆனால், 'அவன் இவன்’ நடிக்கும்போது நான் யோகா பண்ணவே இல்லை. காரணம், பாலா சார் படத்தில் நடிக்கிறது ஆயிரம் யோகாவுக்குச் சமம். ஆர்யா என்னை ஈவ் டீசிங் பண்ற ஸீனில் என்னைக் குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னாங்க. 'சத்தியமா சான்ஸே இல்லை’னு சொன்னேன். அந்தப் குட்டிப் பாலத்தில் குட்டிக்கரணம் அடிக்கிறது ரொம்ப ரிஸ்க். அதுக்கு முன்னால குட்டிக்கரணம் அடிச்சு எனக்குப் பழக்கமும் கிடையாது. ஆனால், அந்த ஸீனுக்காகக் கட்டாயம் குட்டிக்கரணம் அடிச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. ஆர்யா அழகா குட்டிக்கரணம் அடிச்சுக் காட்டினார். நாலஞ்சு தடவை ட்ரை பண்ணிப் பார்த்த உடனேயே 'ஷாட்’ சொல்லிட்டாங்க. பாலா சாருக்குப் பயந்து உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு குட்டிக்கரணம் அடிச்சேன். கையில் சிராய்ப்பு, முதுகில் எரிச்சல்னு வலி தாங்கலை. ஆனால், படத்தில் அந்தக் காட்சிக்கு செம க்ளாப்ஸ். கை தட்டலைவிட காயத்துக்குப் பெரிய மருந்து வேறு என்ன இருக்க முடியும்? இப்போ குட்டிக்கரணம் அடிப்பதில் நான் எக்ஸ்பர்ட்! பெட் விரிச்சு குட்டிக்கரணம் அடிப்பதைத் தினமும் பயிற்சியாவே பண்ண ஆரம்பிச்சிட்டேன். மொத்த உடம்பையும் பந்து மாதிரி வளைச்சு பல்டி அடிக்கும்போது முதுகு வலி பிரச்னை வரவே வராது!'' - செருகிவைத்த சிறுமல்லிகள் உதிர்வதுபோல் சிரிக்கிறார் மது ஷாலினி!

''உடம்பை ரொம்பக் கச்சிதமா வெச்சிருக்கீங்களே... என்னென்ன பயிற்சிகள் பண்றீங்க?''

''நான் ஜிம்முக்குப் போறதே கிடையாது. வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போவேன். கை, கால்களுக்கு நல்லா மசாஜ் பண்ணிக்குவேன். மிதமான வெயிலில் நல்ல காற்று படும் பகுதியில் அமைதியா கண்களை மூடி உட்கார்ற மாதிரி உடம்புக்கு ஆரோக்கியமான பயிற்சி வேறு எதுவுமே இல்லை. பயிற்சி உடம்புக்கு மட்டுமானது இல்லை. முக்கால்வாசி பயிற்சி மனசுக்கும், கால்வாசி பயிற்சி உடலுக்கும் வேண்டும். இந்தியக் கலைகள் அனைத்துமே மனசுக்கும் உடலுக்கும் ஒரு சேரப் பயிற்சி அளிக்கிற மாதிரி உருவாக்கப் பட்டதுதான். பரதம் ஆடினா கண் தொடங்கி கணுக்கால் வரைக்கும் பயிற்சி கிடைக்கும். தொடர்ந்து இரண்டு மணி நேரம் கிளாஸிக்கல் டான்ஸ் ஆடுகிற அளவுக்கு நான் நடனத்தின் ரசிகை. உடற்பயிற்சிகளை மட்டுமே செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. யோகாவைத் தாண்டுற அளவுக்கு நடனத்தில் மன நிம்மதி கிடைக்கிறது. பெரிய அளவிலான பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் இந்த உடம்பு சிக்கென இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நடனம்தான்!''

'' 'அவன் இவன்’ ஷூட்டிங்கில் 'அசைவ உணவுகளைத் தொடமாட்டேன்’னு அடம் பிடிச்சீங்களாமே?''

''அசைவம் என்பது உணவே இல்லை. விலங்குகளின் பல் அமைப்பைப் பார்த்தாலே சைவம், அசைவத்துக்கு ஏற்றபடி சீராகவும், கூராகவும் இருக்கும். நம் மனிதப் பற்கள் சைவ உணவுகளுக்குத் தக்கபடி சீராக இருக்கும். அசைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால், நம்ம உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் சைவ உணவிலேயே இருக்குது. கறியில் கிடைப்பதைவிட காய்கறியில்தான் சத்துக்கள் அதிகம். அப்படியிருக்க உயிர் வதையைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிடலாமே? வீட்டில் இருக்குறப்ப மட்டுமே நான் உணவு சாப்பிடுவேன். வெளியே கிளம்பிட்டா முழுக்க முழுக்கக் காய்கறிகள்தான். பச்சைக் காய்கறிகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். காரம், கொழுப்பு உள்ள உணவுகளைத் தொடுவதே இல்லை. புரதச் சத்துக்காக சோயாவை அதிகம் சேர்த்துக்குவேன். தினமும் ஒரு கீரை முக்கியம். இயற்கை முறையில் பழுத்த பழங்களைத்தான் தேடிப் பிடிச்சு சாப்பிடுவேன். மிக மிகக் குறைவாதான் சாப்பிடுவேன். ஆனால், அதில் அத்தனை விதமான சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்!''

''முகத்தைப் பளிச்சென்று எப்படி வைத்துக்கொள்வது?''

''சிரிச்சுக்கிட்டே இருந்தால் எப்பவும் முகம் பளிச்சென்று இருக்கும். என்னோட முகம் அதிகமான வெயிலைத் தாங்காது. சுள்ளுனு வெயில் பட்டால் முகத்தில் அலர்ஜியாகிடும். அதனைத் தடுக்க எப்பவுமே சன்லாக் க்ரீம் பயன்படுத்துவேன். விதவிதமான க்ரீம்களைப் பயன்படுத்தி முகத்தின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கக் கூடாது. நம்ம ஸ்கின்னுக்கு ஏற்ற க்ரீம்களைத் தேர்ந்தெடுத்து வாங்கணும். காய்கறிகளும் ஜூஸும் முகத்தின் பளபளப்புக்கு அவசியம். இளநீர் சாப்பிடுவது தோலை மிருதுவாக்கும்!''

''மனசை சந்தோஷமா வெச்சுக்கிறது எப்படி?''

'' 'உங்க படத்தில் வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்!’னு சொல்லி பாலா முன்னாடி கண் மூடி நின்னேன். கண்ணைத் திறந்தா, ஆளையே காணோம். இன்னொரு நாள், 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விஷயங்களைக் கத்துக் கொடுக்குறீங்க சார்’னு சொன்னேன். என் வார்த்தைகளைச் சட்டையே பண்ணாமல் போய்க்கிட்டே இருந்தார். நன்றியோ, பாராட்டோ, திட்டோ எதுவா இருந்தாலும், பாலா மாதிரி அதைக் காதில் வாங்கிக்காமல் போய்க்கிட்டே இருக்கணும். இந்தப் பக்குவத்தைப் பழகிட்டால், நம் மனசை யாரும் சங்கடப்படுத்த முடியாது. என்னதான் சத்தான சாப்பாடு, சரியான பயிற்சின்னு இருந்தாலும் மனசு சரி இல்லைன்னா உடம்பும் சுணங்கிடும். எதையுமே சட்டை பண்ணாத குணம் வந்துட்டால், அப்புறம் எல்லாமே சந்தோஷம்தான்!''


No comments:

Post a Comment