Wednesday, October 12, 2011

நம்பிக் கெட்டவன் நான்! - கருணாநிதியின் சுயவிமர்சனம்!

கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்காமல் ஆச்சர்யத்தோடு நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க-வின் முப்பெரும் விழா! ஒவ்வொரு வருடமும் பெரியார், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உதயமான நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக தி.மு.க. கொண்டாடும். இந்த ஆண்டு அந்த விழாவுக்கு செப்டம்பர் 17-ம் தேதி வேலூரில் நடத்த தேதி குறித்தனர். ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தேதி குறிக்க... விழாவை 30-ம் தேதிக்கு மாற்றியதோடு, இடத்தை சென்னைக்கும் மாற்றிவிட்டது தி.மு.க.!
விழாவில் அறிவாலயம் கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தும், உயிர்ப்பில்லை. நில அபகரிப்பு புகாரில் வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை என்று சிறைச்சாலைகளுக்குள் வி.ஐ.பி-க்கள் வாசம் செய்வதால்தான் இந்த கலகலப்பு மிஸ்ஸிங். விதிவிலக்கு - வீரபாண்டி ஆறுமுகம் உட்பட ஒரு சில தலைகள் மட்டுமே. முதலில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி அளவில் முதல் பரிசு பெற்ற எல்.கே.ஜி. மாணவன் ஆல்வின் ஆண்டோ கைதட்டல்களை அள்ளினான். ''தமிழே... நீ வளர்த்த செம்மொழியில் நானும் பேசுகிறேன்...'' என்று சொல்லி பாரதிதாசனின் பாடலைப் பாடியவன் தொடர்ந்து, ''பூட்டப்பட்ட இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!’ என்று பாட... நடப்பு அரசியலோடு ஒத்துப்போக, கலகலத்தது அரங்கம்.
சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது’ம், ஆர்.எஸ்.பாரதிக்கு 'அண்ணா விருது’ம், உமாமகேஸ்​வரிக்கு 'பாவேந்தர் விருது’ம், முகமது சகிக்கு 'கலைஞர் விருது’ம் வழங்கப்பட்டன. சுப.வீரபாண்டியனின் தந்தை இராம.சுப்பையாவும் பல ஆண்டுகளுக்கு முன்பு இதே பெரியார் விருதை கருணாநிதி கையால் பெற்றார். இப்போது அவரது மகனும் அதே விருதை வாங்கி இருக்கிறார். 'அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தைக் கபளீகரம் செய்த ஜெயலலிதா மீது நில அபகரிப்பு வழக்குத் தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டவர்’ என்று ஆர்.எஸ்.பாரதிக்கு கொடுக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் எழுதி இருந்தனர். இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டியதற்காகவும், கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானதற்காகவும் முகமது சகிக்கும் விருது வழங்கப்பட்டன.
முதலில், சற்குண பாண்டியன் பேச்சை ஆரம்பித்தாலும், பொளந்து கட்டியது அடுத்து வந்த பரிதி இளம்வழுதிதான். ''சட்டசபைத் தேர்தலில் நாம் தோற்றோம் என்பதைவிட, வெற்றியைத் திருட்டுக் கொடுத்தோம். வெற்றி நகை திருடு போவதற்கு சிலர் உதவியாக இருந்தார்கள். அந்த வெற்றி எங்கேயும் போய்விடவில்லை. அடகுக்​கடையில்தான் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதை மீட்டெடுத்துவிடுவோம். 20-ம் தேதி வரப் போகிறது. பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர் ஆவார். இந்த வழக்கு அதிகபட்சம் ஜனவரியில் முடிவுக்கு வரும். தை பிறந்தால் வழி பிறக்கும். எப்படி முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினோரோ... அதுபோல இப்போது யாராவது ஒருவர் வருவார். அதற்கு இப்போதே கட்சிக்குள் போட்டி நடக்கிறது. அடுத்த சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றப் போவது கலைஞர்தான்!'' என்று ஒரே போடு போட்டார்.
துரைமுருகன் மைக்கை கர்சிப்பால் துடைத்து​விட்டுப் பேச ஆரம்பித்தார். ''மைனாரிட்டி ஆட்சியைத்தான் நடத்தினோம். ஆனால், மெஜாரிட்டியான திட்டங்களைக் கொண்டுவந்தோம். எங்களைத் தேடி வந்த கூட்டணிக் கட்சிகளை கடைசி வரையில் அரவணைத்துச் சென்றோம். நம்பி வந்த கூட்டணிக் கட்சிகளை மூன்றே மாதத்தில் கழற்றிவிட்டது மெஜாரிட்டி அரசு. கூட்டணிக் கட்சியினர் பேச நினைத்தை எல்லாம் நாங்கள் பேச நினைத்தோம். எங்களைப் பேசவே விடவில்லை. இப்போது அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக மெஜாரிட்டி சர்க்காருக்கு நன்றி!'' என்று நையாண்டி செய்தார்.
இறுதியாகப் பேசிய கருணாநிதி, ''தி.மு.க-தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று லட்சக்கணக்கான மக்கள் சொன்னதை நம்பிக் கெட்டவன் நான். 'தி.மு.க. தோற்றுவிட்டதா?’ என்று மக்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு சரித்திரப் பிரசித்தி பெற்ற தோல்வியை சந்தித்திருக்கிறோம். அதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏதோ தவறு செய்துவிட்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள். ஜனநாயகத்தின் விளையாட்டை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்தத் தோல்வி தமிழக மக்களைத் தாண்டி ஈழத் தமிழர்கள் வரையில் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு விடிவு காலம் வரும். என் உயிர் தமிழ்த் தாயின் மடியில்தான் போகும். தி.மு.க. பட்ட மரமாகாது. பழுத்த மரமாகவே இருக்கும். அதை யாரும் அழிக்க முடியாது. என் உயிரைப் பணயமாகவைத்து நடக்கும் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்!'' என்றது அவரது கரகர குரல்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால்தான் முப்பெரும் விழாவின் தேதியை மாற்றினார் கருணாநிதி. ஆனால், அவர் நினைத்தபடி ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் சி.பி.ஐ. பிடி இறுகியிருக்கிறது. உடல்நலக் குறைவால் ஸ்டாலின் வரவில்லை. அவர் வராததால் துர்க்காவும் வரவில்லை. மத்திய அமைச்சர் அழகிரியும் வரவில்லை. தயாநிதியையும் காணோம். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், செல்வி என முன் வரிசையை எப்போதும் பிடிக்கும் குடும்பத்தினர் யாரும் வராமல் வித்தியாசமான விழாவாக முடிந்தது முப்பெரும் விழா!

No comments:

Post a Comment