Thursday, March 29, 2012

ஒரே நாளில் 5.26 கோடி ஏழை இந்தியர்களை பணக்காரர்களாக மாற்றிய மன்மோகன்சிங் அரசு.

ழைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியாத அரசால் வறுமையை ஒழிக்க வேறு என்னதான் செய்ய முடியும்? எண்களை வைத்து விளையாட்டுக் காட்டி ஊரை மயக்க வேண்டியதுதான். ஒரே நாளில் 5.26 கோடி ஏழை இந்தியர்களை அப்படித்தான் 'பணக்காரர்கள்’ ஆக்கி இருக்கிறது மன்மோகன் சிங் அரசு.

மத்தியத் திட்டக் குழுவின் புதிய வரையறைப்​படி, ஒரு நாளைக்கு 28.35 (மாதம் 859.60) சம்பாதிக்கும் நகர்ப்புற இந்தியர்களும் 22.42 (மாதம் 672.80) சம்பாதிக்கும் கிராமவாசிகளும் இனி ஏழைகள் அல்ல. அவர்கள், வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டவர்கள். இந்தப் புதிய வரையறைப்படி, இந்தியாவில் பரம ஏழைகளின் எண்ணிக்கை 35.46 கோடி. 2004-05 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 40.72 கோடியாக இருந்தது. 2009-10ல் இது 35.46 கோடியாகக் குறைந்து விட்டதாம்.

எப்படி இருக்கிறது இந்த முன்னேற்றம்?

ஒரு வேளைக்கு வயிறு நிரம்பச் சாப்பிடவே 28 போதாது. கூவம் கரையோரக் குடிசையில் வாழ்ந்தால்கூட மாதம் 500 வாடகை கொடுக்க வேண்டுமே. மாதம்

860-க்குள் யாரால் வாழ முடியும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், இந்த 'வெற்றி’க்குக் காரணம் அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்தான் என்றும் அறிவித்திருக்கிறது அரசு!

இந்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, பலருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று உண்டு. மாறி வரும் பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உலக வங்கி சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கான அளவை 2008-ல் மாற்றி அமைத்தது. அதாவது, அதுவரை ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயுடன் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் என்று இருந்த அளவு கோலை 1.25 டாலர் என்று உயர்த்தியது (இந்திய மதிப்பில் இன்றைக்கு 63). ஓரளவுக்கு நியாயமான அளவுகோல் இது. இந்தக் கணக்குப்படி இந்தியாவில் வாழும் பரம ஏழைகளின் எண்ணிக்கை 45.58 கோடி. கிட்டத்தட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் பரம ஏழை என்ற அவமானகரமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் உடனே, 'வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் பிரதானக் கவனம் செலுத்துவோம்’ என்றார். அவருடைய வார்த் தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோ என்னவோ, அவருடைய அரசு இப்போது குறுக்கு வழியில் ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துச் சொல்கிறது.

அரசின் கணக்கு எப்போதுமே இப்படித்தானே, இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்று யாரேனும் கேட்கலாம். எப்போதும் அப்படித்தான்; ஆனால், இனி அப்படி இருக்காது. இதன் பின் னணியில், அரசுக்குப் பெரிய ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன. மக்களுக்கான மானியங்களைக் குறை ப்பது அவற்றில் முக்கியமானது. அரிசி, கோதுமை, பெட்ரோல், டீசல், காஸ், மண்​ணெண்​ணெய், உரம் போன்ற ஏராளமான பொருட்களுக்கான மானியங்​களைக் குறைக்கும் முடிவை அரசு எடுத்திருக்கிறது. இப்போது ஆண்டுக்கு 2.08 லட்சம் கோடி அளவுக்கு இந்த மானியங்களுக்காக செலவிட்டுவரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இந்தச் செலவை வெகுவாகக் குறைக்க அரசு திட்ட மிட்டு உள்ளது (இதே அரசுதான் பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4.87 லட்சம் கோடிகளை மானியமாகப் படி அளக்கிறது). இதன் ஒரு பகுதியாக, மானியத்தை நேரடியாக மக்களிடமே ரொக்கமாக அளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல்கட்டமாக 50 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 'ஆதார்’ அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, மானியத் தொகை மக்களிடம் அளிக்கப்படும் என்பதால், எப்போதும்போல் இனி எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள், ஒரே விலையில் காஸ் கிடைக்காது.

இத்தகைய சூழலில், ஏழைகளை நேர்மையான முறையில் வரையறுப்பது முக்கியமானது. அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது. ஆனால் அரசுக் கணக்கில் எழுதிக்காட்டுவதன் மூலம் வறுமையை ஒழிக்க நினைக்கிறது. உண்மையில் அரசின் திட்டம் வறுமையை ஒழிப்பதா, இல்லை... ஏழைகளையே ஒழிப்பதா?

No comments:

Post a Comment