Wednesday, March 21, 2012

சென்னை மெட்ரோ ரயில் மேம்பால வேலைகள் 95% நிறைவு பெற்றது.

95 சதவீதப் பணி நிறைவு: சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தூர ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில் 10 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 12 கி.மீ. மேம்பாலமாகவும் அமைக்கப்படும்.



மார்ச் 21: மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு - பரங்கிமலை இடையே மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
÷கத்திப்பாரா சந்திப்பில் ராணுவத்துக்குச் சொந்தமான இடங்களைக் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மேம்பாலப் பணிகள் தாமதமடைந்துள்ளன.
÷சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 45 கி.மீ. பாதை அமைக்கப்படுகிறது. இதில், 24 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 21 கி.மீ. மேம்பாலமாகவும் அமைக்கப்படும். சுரங்கப்பாதையில் 19 நிலையங்களும், மேம்பாலம் பகுதியில் 13 நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
÷இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டங்களில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்தான் அதிகபட்சமாக 24 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
÷இதில், கோயம்பேடு - பரங்கிமலை இடையே 95 சதவீத மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
÷கத்திப்பாரா சந்திப்பில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடங்களை கையகப்படுத்துவதற்கான பணிகள் தாமதமடைந்துள்ளன.
இதனால், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
÷இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ராணுவத்துக்குச் சொந்தமான இடங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும். அதன்பின், அந்த இடத்தில் 25 தூண்கள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பிரேஸில் நாட்டிலிருந்து 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வருகிறது. அதன்பின், சோதனை ஓட்டம் நடத்தப்படும். 2013-ம் ஆண்டு இறுதியில் கோயம்பேடு - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கும் என்றார்.
மெட்ரோ ரயிலின் சிறப்புகள்
மெட்ரோ ரயிலில் பெட்டிகள் அனைத்தும் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருக்கும். பெட்டியில் இரு ஓரங்களிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். நிறைய பேர் நின்று கொண்டும் பயணம் செய்யலாம்.
இத்திட்டத்தில் நான்கு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படும். ஒவ்வொரு ரயிலிலும் 1,200 பேர் வரை பயணம் செய்யலாம்.
மெட்ரோ ரயில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திலும் 30 விநாடிகள் நின்று செல்லும்.
அடுத்த ரயில் நிலையம் குறித்து முன்கூட்டியே பயணிகள் தெரிந்து கொள்ள, எலக்ட்ரானிக்ஸ் டிஸ்பிளே போர்டு மற்றும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு வசதி இருக்கும். ரயில்கள் 3 நிமிடத்தில் இருந்து 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திர வசதி மற்றும் ஸ்மார்ட் கார்டு வசதியும் அனைத்து நிலையங்களிலும் ஏற்படுத்தப்படும். ரயிலில் செல்போன், லேப்-டாப் சார்ஜ் செய்து கொள்ளலாம். வைபை முறையில் இன்டர்நெட் தொடர்பையும் பெறலாம்.

No comments:

Post a Comment