Saturday, July 16, 2011

ஞாநி


ranjitha-38240-680x1024


அன்புள்ள ரஞ்சிதாவுக்கு, முதலிலேயே உங்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வீடியோவில் காட்டியபடி நித்யானந்தனுடன் நீங்கள் கொண்டிருந்த உறவை நான் ஆபாசமானதாகக் கருதவில்லை. அதில் எந்தக் குற்றமும் நீங்கள் செய்யவில்லை. அந்த வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை நடத்துபவர்களாகட்டும், வெளியிட்ட பத்திரிகையாளர்களாகட்டும், பார்த்த எண்ணற்ற பொதுமக்களேயாகட்டும் அவர்கள் யார் வீட்டுப் படுக்கையறைக்குள் கேமராவைக் கொண்டு போய் வைத்தாலும், அது பதிவு செய்யக் கூடிய காட்சி இதே போலவோ இதைவிட ‘கிளுகிளுப்பாகவோ’ தான் இருக்க முடியும். ஆண் & பெண் பாலுறவு என்பது அப்படித்தான் இருக்கும்.

தனியறைக்குள் நடந்ததை படம் எடுத்துக் கொண்டு வந்து ஓயாமல் 36 மணி நேரம் காட்டியதும், அதை அச்சிட்டு விற்று வியாபாரம் செய்ததும்தான் ஆபாசம் என்று நான் கருதுகிறேன்.

உங்களுடைய தனி நபர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்றன. நீங்கள்விரும்பும் ஆணுடன் உறவு கொள்வது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. தங்களை அது பாதித்தாலன்றி, அதில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படிப் பார்த்தால் அது அதிகபட்சம் உங்கள் குடும்பப் பிரச்சினையாக இருக்கலாமே தவிர சமூகத்தின் பொதுப் பிரச்சினையே அல்ல.

இதுவே மேலை நாடாக இருந்தால், நீங்கள் உங்கள் அந்தரங்கத்தில் அத்துமீறியதற்காக அத்தனை ஊடகங்கள், பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடுத்து பெரும்தொகைகளை இழப்பீடாகப் பெறுவதற்கான சட்டப்பூர்வமான உரிமைகள் தெளிவாக இருக்கின்றன. நம் நாட்டில் அவையெல்லாம் இன்னும் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

நித்யானந்தா என்ற ஆன்மீக வாதி, ஊருக்கெல்லாம் பிரும்மச்சரியத்தை போதித்துவிட்டு தான் அதைப் பின்பற்றாத ஒரு போலி மனிதன் என்று அம்பலப்படுத்த ஒருவர் விரும்பினால், அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியல் முதல் ஆன்மீகம் வரை, டி.வி. முதல் பத்திரிகை வரை, சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அம்பலப்படுத்த நடக்கும் முயற்சிகளை நான் ஆதரிப்பேன்.

அதே சமயம் அந்த வீடியோவில் உங்கள் முகத்தை மறைத்துவிட்டு வெளியிடுவதுதான் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும். ஏனென்றால் அம்பலப்படுத்தப்பட வேண்டிய போலி நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.

அந்த வீடியோவில் உங்களுக்கு பதில் வேறு ஏதோ ஊர் பேர் தெரியாத பெண் அல்லது ஏதோ ஒரு அதிகாரி, தொழிலதிபர், அலுவலர் வீட்டுப் பெண்இருந்திருந்தால் இந்த அளவு மீடியா ஆனந்த தாண்டவம் ஆடியிருக்காது. நடிகை என்பவள் நம் சமூகத்தில் இன்னமும் பெருவாரியாகப் பலராலும் தேவடியாளாகவேக் கருதப்படுகிறாள். அவளைத் துகிலுரியவும், அதை ரசிக்கவும் கொன்டாடவும் மனநிலை இருக்கிறதே தவிர, அவளை மதிப்பதில்லை. புவனேஸ்வரி கைதின்போது வெளியான அவதூறு செய்திகளுக்காக வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கமும் நடிக & நடிகைகளும் இப்போது உங்கள் விஷயத்தில் உரத்த மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது. நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவுகொள்கிறீர்கள். அவ்வளவுதான்.

யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. ஆனால் என்னைப் போன்றவர்களுக்குப் புதிராக இருப்பதெல்லாம் உங்களைப் போன்ற பல பெண்கள் ஏன் சாமியார்களிடம் போய் சிக்கிக் கொள்கிறீர்கள் என்பதுதான். இப்போது கூட ஒரு உயர் பெண் அதிகாரி, ‘சுவாமிஜி இந்த சோதனையை எல்லாம் கடந்து வருவார்’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

பலருக்கும் அப்படிப்பட்ட முட்டாள்தனமான பக்தி இருக்கிறது. அப்படி இந்தசாமியார்கள் நமக்கு அளிப்பதாகக் கூறும் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும்அவர்கள் சொல்லும் வழிகள் மூன்றுதான். யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம்.இந்த மூன்றையும் கற்க கடவுளும் தேவையில்லை. மதமும் தேவையில்லை. சடங்குகளும் தேவையில்லை. கிருஷ்ணமாச்சாரியாரின் யோக மந்திரம் போன்றபல அமைப்புகள் ஒரு பள்ளிக்கூடம் போல இவற்றை சொல்லிக் கொடுத்துவிடுகின்றன. கடவுள் நம்பிக்கையற்றவர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் நம்முதலமைச்சர் கூட இவற்றால் பயனடைய முடிந்திருக்கிறது.

நீங்கள் எங்கே என்ன படித்தீர்கள், உங்கள் குடும்பப் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பெருவாரியான ஆண்களும் பெண்களும் சாமியார்களிடம் தஞ்சமடைவதற்குக் காரணம், நம் குடும்பங்களும்கல்வி முறையும்தான்.

பத்து வாழ்க்கைத் திறன்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று உலக சுகாதாரநிறுவனம் வரையறுத்திருக்கிறது. தன்னை அறிதல், தன்னைப் போல் பிறரைஉணர்தல், இன்னொருவருடன் சரியாக உறவாடக் கற்றல், உரையாடக் கற்றல்,எதையும் கேள்வி கேட்கப் பழகுதல், எதற்கும் நாமே பதில் தேடப் பழகுதல், தெளிவாக முடிவெடுத்தல், சிக்கல்களை அவிழ்த்தல், உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல், அழுத்தங்களை லேசாக்குதல் என்ற பத்து வாழ்க்கைத் திறன்களைப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிமையாகிவிடும்.

இந்த வாழ்க்கைத் திறன்களை நம் குடும்பத்தில் கற்கலாம். பள்ளியில் கற்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் கடவுள், கோவில், சாமியார், மடம் என்று குடும்பமே நம்மை வேறு திசைக்கு இழுத்துப் போய் விடுகிறது. செக்ஸ் எப்படி முழுக்க முழுக்க அந்தரங்கமான விஷயமோ அதே போல கடவுள் நம்பிக்கை என்பதும் முழுக்க முழுக்க அந்தரங்கமானதாக மட்டுமே இருந்தால் போதும் என்ற பார்வையை நாம் பெறுவதில்லை.

இதன் விளைவு உங்களைப் போன்றவர்கள் தன்னைத்தானே நம்பாமல்,சாமியார்களை நம்பத் தொடங்குகிறீர்கள்.

பல வருடம் நம்முடன் பழகிய பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ,ஆசிரியர்களோ காட்டாத வழியை முன்பின் தெரியாத ஒரு சாமியார் காட்டுவார் என்பதே பெரும் மூட நம்பிக்கைதான். இதைத்தான் தங்கள் முதலீடாக சாமியார்கள்வைத்துக் கொள்கிறார்கள்.

பேச்சுத் திறமை இருந்தால் அரசியலுக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இப்போது இல்லை. அங்கே வாய்ப்புகள் குறைந்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே போட்டா போட்டி போடும் அளவுக்கு நெரிசலாகிவிட்டது.

எனவே சாமியாராவது நல்ல மாற்றுத் தொழிலாக இருக்கிறது. கொஞ்சம் யோகா,கொஞ்சம் தியானம், கொஞ்சம் சடங்கு, பத்து வாழ்க்கைத் திறன்களிலிருந்தும் கொஞ்சம் கிள்ளியெடுத்து பேச்சில் தெளித்தல், இத்துடன் காவி காஸ்ட்யூம் சேர்த்தால் சாமியார் தயார். கறுப்புப் பணத்தை கொண்டு வந்து கொட்டத் தொழிலதிபர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த சாமியாரும் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்துக்குப் போவதில்லை. ஈரோடு, கோவை என்று வளமான பகுதிகளில் மடம் வைக்கிறார்கள்.

அடுத்த ஸ்டெப் அரசியல் செல்வாக்கு. உங்கள் நண்பர் நித்யானந்தா அதிலேதான் வழுக்கிவிட்டார். அரசியல் செல்வாக்கு இருக்கும் எந்த சாமியாரும் இதுவரை அம்பலப்பட்டதில்லை. பெரும் கூட்டத்தை திரட்டி அரசியல்வாதிகளை பயமுறுத்தினால், கூட்டணிக்கு வந்து விடுவார்கள். வீட்டுக்கே அழைத்து ஆசி கேட்பார்கள். ஒரு கூட்டணி சிக்கலானால் இன்னொரு கூட்டணி அரசியலில் அமைப்பது போல இதிலும் அமைக்கலாம். அப்போது எதிலாவது சிக்கினாலும் வழக்கு சாட்சிகள் கூட பல்டி அடிப்பார்கள்.

இந்த தந்திரங்களை இன்னும் நித்யானந்தா சரியாகப் பழகிக் கொள்ளாததால் அடிபட்டுவிட்டார். கூட சேர்ந்து நீங்களும் அடிபட்டிருக்கிறீர்கள் என்பதுதான் பாவமாக இருக்கிறது.

சாவித்திரி முதல் காஞ்சனா, கனகா, நீங்கள் வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும் வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. அதற்குக் காரணம் கல்வி இல்லாதது, தப்பானவர்களையே நம்புவது, எது உண்மையான ஆனந்தம் என்ற அறிவை வளர்த்துக் கொள்ளாதது, தற்காலிக மகிழ்ச்சிகளில் தன்னைத் தானே தொலைத்துக் கொள்வது இவையெல்லாம் தான்.

ranjitha-18220-680x1024

உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவேண்டும்.அதிலிருந்து வருங்கால நடிகைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கையை இன்னொருத்தர் தீர்மானிக்க விட்டுவிட்டால் என்னவெல்லாம் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். என் வாழ்க்கை என் கையில் என்ற உறுதியோடு நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் வளர, உங்கள் பங்களிப்பாக உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள்.

உங்களைச் சூழ்ந்துவிட்ட இழிவிலிருந்து விடுதலை பெற அது ஒன்று தான் வழி.

அன்புடன்

ஞானி


1 comment:

  1. நான் வலையுலகில் பார்த்தவரைக்கு சகல ஜனரஞ்சக விசயங்களையும் ஒரு குடுவையில் போட்டு அடைத்த மாதிரி படிப்பவர்களுக்கு ஒரு சுவராஸ்யத்தை தந்தமைக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete