Saturday, July 9, 2011

தயாநிதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., திட்டம்?

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, தயாநிதியிடம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விப் பட்டியலை தயாரிக்கும் பணியில், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது."கடந்த 2004ல், தயாநிதி தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது' என, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தயாநிதி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து, தயாநிதியிடம் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை, சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:சிவசங்கரன் தெரிவித்த புகார் குறித்து, தயாநிதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., தயாராகி வருகிறது. அடுத்த வாரம், இந்த விசாரணை நடக்கலாம். விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விப் பட்டியலும் தயாராகி வருகிறது. தயாநிதியின் பதவிக் காலத்தின் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான தொலைத் தொடர்பு கொள்கைகள் மாற்றப்பட்டதா என்பது குறித்தும், சன் "டிவி' மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையே நடந்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்தும், விசாரணை நடத்தப்படவுள்ளது.


கடந்த 2005ல், சென்னையில் உள்ள சன் "டிவி' அலுவலகத்தில் கலாநிதியை சந்தித்ததாக சிவசங்கரன், சி.பி.ஐ.,யிடம் கூறியுள்ளார். அப்போது, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்யும்படி, கலாநிதி தன்னை மிரட்டியதாகவும், சிவசங்கரன் கூறியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பின், தயாநிதி தன்னை தொடர்பு கொண்டு, இதே கோரிக்கையை வலியுறுத்தினார் என்றும், சிவசங்கரன் சி.பி.ஐ.,யிடம் கூறியுள்ளார். இதுகுறித்தும், தயாநிதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment