Thursday, July 7, 2011

சிவத்தம்பி மறைவு - 1

ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைவுக்கு மதிமுக பொதுசெயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், மிக்க துயரமும் அடைந்தேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் சு. வித்தியானந்தத்தின் மாணவராகிய சிவத்தம்பி, பின்னர் அதே பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்புலத் தலைவராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

சிவத்தம்பி, சிறந்த விமர்சகர். மேலை நாட்டு விமர்சன முறையை தமிழ் இலக்கியத்தில் அறிமுகம் செய்தவர். தொல்காப்பியத்தைப் படித்து, தமிழ் இலக்கணத்தில் கரை கண்டவர். ‘தொல்காப்பியத்தை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதி இருக்கிறார்கள்’ என்ற கருத்தை முன்வைத்தவர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருள்சோதியில் கலந்தார் என்பதற்கு, வரலாற்று ரீதியாக பகுத்தறிவு விளக்கத்தைக் கொடுத்தவர். சிறந்த பொது உடைமைவாதி, பகுத்தறிவாளர்.

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில், உலக அமைப்பின் பொதுச் செயலாளராக, தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று கூறி தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இலங்கை சுதந்திராக் கட்சித் தவைர்களுடன் நெருக்கமாக இருந்த சிவத்தம்பி, நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணி ஆற்றினார்.

சிவத்தம்பியின் தந்தையார் கார்த்திகேசு, சைவப்புலவராகத் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இலங்கையின் வடமராட்சி பகுதி ஈன்ற சிறந்த புலமையாளர்களுள் ஒருவர் சிவத்தம்பி. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி தமிழ் இலக்கியவாதிகள் நிறைந்த பகுதி என்பதால், இலங்கை அரசு வடமராட்சி பகுதியைக் குறிவைத்துத் தாக்கியது. பிரபாகரனுக்கும், கவிஞர் காசி ஆனந்தனுக்கும் உறவினரான பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment