இதுவரை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கட்சியிலிருந்து ஒரு முனை தாக்குதல்தான் வரும். இம்முறை பலமுனை தாக்குதலுக்கு ஆளாகி நிற்கிறார். தி.மு.க. மீது குத்தப்பட்ட ஊழல் முத்திரை, தேர்தல் தோல்வி, சிறையில் அடைக்கப்பட்ட மகள் கனிமொழி என்று நிலைகுலைந்த நேரத்தில், கட்சியை தூக்கிப்பிடிக்க வேண்டிய தருணம் இது. ஆனால், கட்சியை தூக்கிப் பிடிக்க வேண்டிய கலைஞரே, கட்சியை தூக்கி எறிய முடிவு செய்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம். கட்சியின் சீனியர்… தி.மு.க.வின் முதன்மை செயலாளர், கலைஞர் அவையின் விகடகவி, கட்சியின் அறிவுஜீவி என்றெல்லாம் பேசப்படும் துரைமுருகனை காரணமே இல்லாமல், கடித்து குதறிவிட்டார் கலைஞர். என்ன நடந்தது. நாள்: 2011ம் ஆண்டு ஜூலை, 14ம் தேதி வியாழக்கிழமை. நேரம்: இரவு 7.30 மணி. இடம்: அண்ணா அறிவாலயம். தி.மு.க.வின் தலைமை அலுவலகம் அமைந்த அண்ணா அறிவாலயத்தில், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.ச் செயலாளர் சிவாஜி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அம்மாவட்ட உடன்பிறப்புக்கள் கூட்டம் “சரிப்பா… நீங்க யாரை பொறுப்பாளரா போடனும்ன்னு எழுதிக் கொடுங்க’ என்று தலைமை முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேட்க, எல்லோரும் எழுதிக் கொடுக்கிறார்கள். அதில் மாதவரம் ஒன்றியச் செயலாளர் சுதர்சனம் பெயரே அதிகமாக இருக்கிறது. அவரை பெயரை அறிவிக்க, கலைஞருடன் துரைமுருகன் ஆலோசிக்கிறார். அப்போது, அந்த அறைக்கு, சில நாட்களாக வராமல் இருந்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவரிடமும் துரைமுருகன் பேசிவிட்டு, அறிவிப்பு படலம் முடிந்தது. “சரி… நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் வெளியே இருங்க. வக்கீல் சண்முகசுந்தரம் என்னிடம் ஏதோ தனியா பேசனுமாம். அவன்கிட்டே பேசிட்டு உங்களை கூப்பிடறேன்” என்றார் கலைஞர். 25 நிமிடங்கள் கழித்து, ஸ்டாலினையும் துரைமுருகனையும் உள்ளே அழைக்கிறார் கலைஞர். “என்ன… குடும்பத்தில குழப்பதை ஏற்படுத்தறீயா” – இது கலைஞர். “என்ன தலைவரே… நாங்க இரண்டு பேர் இருக்கோம். யார்கிட்டே கேட்கறீங்க” – இது துரைமுருகன். ”உங்கிட்டத்தான்யா கேட்கிறேன். என் குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தறீயே. இது உனக்கே நல்லா இருக்கா” என்று கலைஞர் கேட்டதுதான் தாமதம். எப்போதும் எக்காளமும் எகத்தாளமுமாக இருப்பவர் துரைமுருகன். கருணாநிதியின் வார்த்தையால், துரைமுருகனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ”என்ன தலைவரே… என்னைப் போய்” “நிறுத்துங்க தலைவரே. இதை சொன்னது யாருன்னு நீங்களே ஒரு முறை திகாருக்கு போய் கேட்டுக்கிட்டு வாங்க. சிறையில் போய் பார்த்தேன். ஆனா, நடந்தது என்னனு தெரியுமா உங்களுக்கு. ‘அங்கிள்… நான் என்ன பாவம் செஞ்சேன். பணத்தை அனுபவிச்ச எல்லாரும் வெளியே இருக்காங்க. பேசாம, 164வது சட்டப்படி கோர்ட்டில் வாக்குமூலம் சொல்லிடலாம்ன்னு நினைக்கிறேன். அழகிரி அண்ணன்கிட்டேயும் கேட்டேன். அப்படியே சொல்லிட்டு வெளியே வாம்மான்னு சொல்றார். என்ன பண்ணட்டும் அங்கிள்’னு கேட்டுச்சு. “அப்படியெல்லாம் செஞ்சா, யாருக்கு இது பாதகமா போகும்ன்னு தெரியுமா உனக்கு. நாளைக்கே, உன் குடும்பத்துலயே யாருக்காவது சிக்கல் வந்தா என்ன பண்றது?ன்னு கேட்டேன். அதுக்கு பதிலே இல்லை. அழகிரி சொன்னதா எங்கிட்ட சொன்ன கனிமொழி, அந்த வார்த்தையை, நான் சொன்னதா சொல்லி இருக்கறது அபாண்டம். என்னை எத்தனையோ முறை சந்தேகப்பட்டீங்க. என்னை பலமுறை அசிங்கப்படுத்தி இருக்கறீங்க. என்கிட்ட இருந்த பொதுப்பணித்துறையை கூட பறிச்சீங்க. கட்சிக்கும், உங்களுக்கும் கட்டுப்பட்டு இதுவரை இருந்துக்கிட்டு இருக்கேன். குடும்பத்துல நான் குழப்பம் செஞ்சிட்டதா என்னக்கி சொன்னீங்களோ… இனிமே நான் இங்கே இருக்கறதுல அர்த்தம் இல்லை” என்று சொல்லிவிட்டு சென்றார் துரைமுருகன். அவரை இழுத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டும், பலனளிக்கவில்லை. அன்று இரவே, செல்வியும் செல்வமும் சமாதான முயற்சியில் இறங்கினார்கள். அவர்களுக்கும் தோல்வியே. வெள்ளிக்கிழமை, 15ம்தேதி காலையில், துரைமுருகன் வீட்டுக்கே வந்தார் ஸ்டாலின். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சமாதானம் செய்தும், துரைமுருகன் தனது முடிவில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக துரைமுருகன் தரப்பில் கேட்ட போது, “தலைவர் இந்த அளவுக்கு சந்தேகப்படுவார் என்று அண்ணன் நினைக்கவேயில்லை. பெரும் மன வருத்தத்தில் இருக்கிறார் அண்ணன். விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியையும்ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து கெளரவமாக விலகவே நினைக்கிறார். தளபதி வந்து சமாதானம் செய்தும், அண்ணன் ஏற்கவில்லை. யாருடைய சமாதானத்தையும் அவர் ஏற்கமாட்டார். அதற்காக, கட்சியினர் வந்தாலும், அவரை தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்” என்று சொல்லப்பட்டது. துரைமுருகனோடு ஏற்பட்ட சண்டை காரணமாக, வெள்ளிக்கிழமை காலையில் கலைஞரும் கோபித்துக் கொண்டு சண்முகநாதனை மட்டும் அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்றுவிட்டார். வழக்கமாக, மகாபலிபுரம் சென்றால், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரை அழைத்துச் செல்வார். அவரும் துரைமுருகன் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதால், கட்சியில் பெரும் குழப்பம் உருவாகும் சூழல் நிலவி வருவதாக கட்சியினர் கலங்கிக் கொண்டிருக்கிறார்கள். ”ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க.வில் நடக்காத குழப்பங்கள் இல்லை. அரசியல் கட்சிகளில் தி,மு,.க.வும் அதியசம். அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் அதியசம். தன்னைச் சுற்றி, அபிமன்யு சக்கரம் சூழ்ந்துக்கிடக்கிறது என்று கலைஞருக்கு தெரியும். அதை விரித்துக் கொண்டவரே கலைஞர்தான். விரித்தவருக்கே, அதிலிருந்து வெளியே வர முடியாதா? துரைமுருகன் மீது சொல்லப்பட்டதுக்கு ஆதாரம் இல்லாமல் போனால், கட்சிக்கும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றக்கூடியவர் கலைஞர் என்கிறார் கட்சியின் சீனியர். இதற்கிடையில், துரைமுருகன் கோபித்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை இரவு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து கம்போடியாவுக்கு சென்றார். ஆனால், அவரை விடாமல், சமாதானம் செய்ய, சண்முகநாதனுக்கு கலைஞர் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பேரில் சண்முகநாதன் தொடர்ந்து பேசி, துரைமுருகனை இளக செய்திருக்கிறார். வரும் 20ம் தேதி வர வேண்டிய துரைமுருகன் இன்றோ அல்லது நாளையோ வருவார் என்று சொல்லப்படுக்கிறது. நன்றி ! |
Tuesday, July 19, 2011
கனிமொழி செய்த கலகம்! கம்போடியாவுக்கு ஓடிய துரைமுருகன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment