Friday, January 13, 2012

ஜாபர் சேட் காப்பாற்றப்படுகிறாரா? நத்தை வேகத்தில் நகரில் வழக்குகள்.

டந்த ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தவர் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட். இதுபற்றி முதல்வர் ஜெயலலிதாவே மதுரைப் பொதுக்கூட்டத்தில் நேரடியாகச் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சி பதவியேற்றதும், அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. இருந்தும், அவை டாப்கியரில் போகாமல் மந்தமாக இருப்பதுதான் காவல்துறைக்கே ஆச்சரியம்!

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு ஜாபர் சேட் மாற்றப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் சென்னை திருவான்மியூரில் ஒரு வீட்டு மனையை முதலில் தன் பெயரிலும், பிறகு தன் மகள் மற்றும் மனைவி பெயரில் ‘சமூக சேவகர்’ என்ற பிரிவிலும் ஜாபர் ஒதுக்கீடு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரும் விசாரணைக்கு வந்தது.

ஜாபர் குடியிருந்த அண்ணாநகர் வீட்டுக்கு மாதம் 30 ஆயிரம் வாடகை தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், அந்த வீடே அவரது சொந்த வீடுதான் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். ‘‘இந்த வீடு ஜாபரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரில் உள்ளதாகத் தெரிகிறது. பால்ராஜ் ஜான்சன் என்ற ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஜாபர் சேட்டின் முதலீடுகள் அனைத்தையும் கவனித்து வந்திருக்கிறார். இவரைத் தவிர அமர் என்ற ஆடிட்டரும் ஜாபரின் முதலீடுகளைக் கவனித்து வந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், உளவுத் துறை சார்பாக, தமிழ்நாட்டில் நக்சல் இயக்கங்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய 20 லட்ச ரூபாய் சிறப்பு நிதி வாங்கியுள்ளார். இந்த நிதியை தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற் காகவே பயன்படுத் தியிருக்கிறார். ‘டி3டி டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் சங்கர் ஜூவாலின் மனைவி பெயரில் ஒட்டுக் கேட்பு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் சட்டவிரோத ஒட்டுக் கேட்பு நடைபெற்றது. பின்னாளில், இன்னொரு நிறுவனம் உளவுத் துறைக்காக ஒட்டுக் கேட்பு விவகாரங்களில் ஈடுபட்டது. இந்த நிறுவனமே ஜாபரின் பினாமிதான்.

ஜாபர் சேட்டோடு சேர்ந்து தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர் அ.தி.மு.க.வின் மதுசூதனனின் நெருங்கிய உறவினர் ஜெயப்பிரகாஷ். இவர்தான், ஜாபர் சேட் உத்தரவின்பேரில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சோவுக்கும் நடந்த உரையாடலை விஜயகாந்துக்கு கொடுத்திருக்கிறாராம். ஜெயப்பிரகாஷ் மூலமாக பவர் சென்டரில் இருந்தவர்களோடு தொடர்பு ஏற்படுத்திய ஜாபர் சேட், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பாயாமல் பார்த்துக்கொண்டாராம்’’ என்கிறது காவல்துறை வட்டாரம்.
இனியாவது ஜாபர் சேட் மீதான ஊழல் வழக்குகள் வேகம் பிடிக்குமா?

தற்போது உளவுத் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள ராமானுஷம், 2009-ல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக இருந்தவர். அப்போது, மதுரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஷெயஸ்ரீ ஊழல் புகாரில் சிக்கினார். மு.க.அழகிரியிடம் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரது உதவியைக் கேட்டுள்ளார் ஷெயஸ்ரீ. அழகிரியின் உத்தரவின் பேரில், பொட்டு சுரேஷ் அப்போதைய உளவுத் துறைத் தலைவராக இருந்த ஷாபர் சேட்டை அணுகியிருக்கிறார். ராமானுஷத்தை நேரில் சந்தித்துப் பேசுமாறு ஷெயஸ்ரீயிடம் கூறியுள்ளார் ஷாபர் சேட். ஆனால், ராமானுஷம் பேச மறுத்தார். இதையடுத்து, ராமானுஷத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்தே மாற்றினார் ஷாபர் சேட்.

பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக போலோநாத் நியமிக்கப்பட, அப்போது அத்துறையில் இணை இயக்குனராக இருந்த சுனில் குமாரும், போலோநாத்தும் இணைந்து, ஷெயஸ்ரீ ஒரு ‘அப்பழுக்கில்லாத அதிகாரி’ என்று சான்றளித்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைத்தது. இந்தப் புகார் தற்போது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கும் பாய்ந்துள்ளது.

No comments:

Post a Comment