Tuesday, January 24, 2012

சசிகலா தவிர வேறு யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். எம்.நடராஜன்

துவரை கட்டுண்டோம், பொறுத்​திருந்தோம். இனி, கட்டுப்பாடற்ற நடராஜனாக ஆகிவிட்டேன். சரியான நேரத்தில் முடிவெடுப்பேன்’ என்று எம்.நடராஜன் தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அதிரடியாக வெடிக்கவே, அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் வெவ்வேறு அர்த்தம் சொல்கிறது தமிழக உளவுத்துறை!

சசிகலா உள்ளிட்ட அவரது சொந்தங்கள் அனை​வரும் அ.தி.மு.க.வில் இருந்து கல்தா கொடுக்கப்​பட்டு விட்டனர். அத்தோடு, அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத எம்.நடராஜனும் நீக்கப்பட்ட​துதான் அதில் காமெடி. எப்போதும் உடனடியாக ரியாக்ஷன் காட்டிவிடும் நடராஜன் இதை அறிந்தும் அமைதியாகத்தான் இருந்தார். ''பொங்கல் விழாவில் அண்ணன் பொங்குவார். அதுவரை அமைதியாகத்தான் இருப்பார்'' என்றார்கள். அந்த நாளும் வந்தது. தஞ்சாவூர் களை கட்டியது!

ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று நடராஜனால், தஞ்சாவூரில் தமிழர் கலை இலக்கியத் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டும் ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் ராஜராஜ சோழன் மணிமண்டபம் எதிரே உள்ள தமிழ்அரசி மண்டபத்தில் விழா நடைபெற்றது.

குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்த மதுரை ஆதீனம், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிகள் வரை தண்ணீரைத் தேக்க வேண்டும். இது தொடர்பாக 'புதியபார்வை’ ஆசிரியர் நடராஜன் பாத யாத்திரை போராட்டம் நடத்தினால், அனைவரும் கலந்து​கொள்வோம். கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என்று ஆவேசப்பட்டார். ஆனாலும், அன்று அடக்கியே வாசித்த நடராஜன், 'காங்கிரஸ் அரசை எதிர்த்து கருணாநிதி போராட வேண்டும். உடனே, அனைத்து எம்.பி-க்களையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துப் போராட்டம் நடத்தினால், அவர் பின்னே செல்ல நானும் தயாராக உள்ளேன்' என்று நிறுத்திக்கொண்டார். இந்த விழாவில், பிரணாப் முகர்ஜியின் உறவினர் ஒருவரும் கலந்து கொண்டது மத்திய, மாநில உளவுத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

வழக்கமாகவே, விழாவின் இறுதி நாளில்தான் நடராஜன் பேச்சு பட்டையைக் கிளப்பும். இந்த முறையும் அப்படித்தான். 'பிரணாப் முகர்ஜியின் உறவினர் கிருஷ்ண மோகன்ஜி எனக்கு எப்படி நட்பு ஆனார் என்று உள்துறை அமைச்சருக்கு (ப.சிதம்பரம்!) ஒரே தலைக்காய்ச்சலாக இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள எனது நண்பர்களை அழைத்தால்... தமிழகம் தாங்காது. வரும் ஆண்டில் இருந்து அதை நிறைவேற்றிக் காட்டப்போகிறேன்.

இதுவரை கட்டுண்டோம். பொறுத்திருந்தோம். காலம் மாறி இருக்கிறது. மாற்றுவோம். சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு என்பது போல கட்டுப்பாடற்ற நடராஜனாகி இருக்கிறேன். நான் இரண்டு பேருக்குத்தான் கடடுப்பட்டு இருக்கிறேன். ஒருவர் (பழ.நெடுமாறன்) ஐயா, மற்றொருவர் என் மனைவி (சசிகலா). வேறு எவருக்கும் கட்டுப்பட மாட்டேன்.

ஈழத் தமிழர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் எம்.ஜி.ஆர். தமிழ் ஈழப் பிரச்னையில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம், எம்.ஜி.ஆர். எப்படிச் செயல்படக் கூடாது என்பதற்கு கலைஞர்தான் உதாரணம். இன அழிப்புக்கு துணை போனவர் கலைஞர். எம்.ஜி.ஆர். தமிழ் ஈழத்தைக் கட்டி அணைத்திருக்கிறார். கலைஞரோ மௌனமாக காட்டிக் கொடுத்திருக்கிறார். அதனால்தான், கலைஞரையும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சிக்கிறோம்.

முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றி நான் எழுதிய பிறகுதான், 'தேவிகுளம். பீர்மேடு ஆகியவற்றை மீட்கிறோம்’ என கலைஞர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ஆட்சியில் இருக்கும்போது ஏன் பேசவில்லை. மேடாவது, குளமாவது என்று பேசி பீர்மேடையும் தேவிகுளத்தையும் விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். ஆனால் கலைஞர், 'பிரிட்டிஷ் கவர்னர் ஆறு லட்ச ரூபாய் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் கொடுத்திருந்தால், அவை தமிழகத்துக்கு சொந்தமாகி இருக்கும்’ என்கிறார். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்கும்போது, பீர்மேடு, தேவிகுளம் ஆகியவற்றை கேரளாவுக்குத் தானம் அளித்தது காங்கிரஸ். அதைக் குற்றம் சாட்டாமல் ஆங்கிலேயரைக் குற்றம் சொல்கிறார். காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சொல்ல அவர் மனம் ஏன் குறுகுறுக்கிறது?' என்று முழங்கியவர் அடுத்து, தஞ்சாவூரில் அமைய உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணுக்காகத் தன்னுடைய மூன்று கார்களையும், வாட்ச் ஒன்றையும் ஏலம் விட்டார். அதில் கிடைத்த 50 லட்ச ரூபாய் பணம் மேடையிலேயே பழ.நெடுமாறனிடம் ஒப்படைக்கப்பட்டது.

'இனி நான் பொது வாகனங்களையே பயன்படுத்த உள்ளேன். நிறையப் பேர் நடராஜன் அதை செய்யப்போகிறார். இதை செய்யப்போகிறார் என எதிர்பார்க்கிறார்கள். நான் இது போன்ற நல்லதுதான் செய்வேன். நாட்டுக்கு எது தேவையோ, அதைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்வேன். 'முடிவெடு தலைவா’ என்கிறார்கள். நான் முடிவெடுக்காமல் எப்போது இருந்தேன்? முடிவெடுத்ததால்தானே கடந்த ஆட்சி போனது. மக்கள் சக்தியைத் திரட்டுவோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

நான் ஏன் அமைதி காக்கிறேன்? எனது முடிவு​களால் தமிழகத்தின் பொது நன்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. என் மனைவியின் வழக்கும் அங்கே இருப்பதால், அதற்காகவும் அமைதி காக்க வேண்டியது இருக்கிறது. இன்று வரும் இடர்பாடுகளைக் கண்டு யாரும் அச்சம்கொள்ள வேண்டாம். சரியான நேரத்தில் முடிவெடுப்போம். அது வரை காத்திருங்கள்' என்று முடித்தார் நடராஜன்.

கார்களை ஏலம் விட்டதால் விழா முடிந்​ததும் சாலையில் நடந்தே சென்றார் நடராஜன். வழியில் அவரிடம் பேசி, சமாதானப்படுத்தி வேறு ஒரு காரில் ஏற்றிச் சென்றனர்.

''தஞ்சை மாவட்டம் முழுவதும் மன்னார்குடி ஆதரவாளர்கள்தான் கட்சியில் நிறைந்து இருக்கிறார்கள். அதனால் இப்பகுதியில் அ.தி.மு.க. உடையவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை அணி திரட்டும் வேலைகளில் மறைமுகமாக நடராஜன் இறங்கிவிட்டார். ஏப்ரல் 14 அன்று தனது முக்கிய முடிவை நடராஜன் அறிவிக்கப்போகிறார். அது புதிய கட்சியாகவும் இருக்கலாம். அல்லது அ.தி.மு.க.வின் இன்னோர் அணியாகவும் இருக்கலாம்'' என்று கூட்டத்தில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. பிரமுகர்கள் காதைக் கடித்தார்கள். அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும் கட்சிக் கரை போட்ட வேட்டிகளில் இல்லாமல் பட்டு வேட்டிகளில் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து ​கொண்டார்கள்.

தனக்குச் செல்வாக்கான பகுதி மக்களைச் சந்திக்க இன்னும் இரண்டு வாரங்களில் நடராஜன் தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்யப்போகிறார். அவருக்குக் கூடும் கூட்டத்தைப் பொறுத்ததாக அமையும் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள்!

No comments:

Post a Comment