Tuesday, May 22, 2012

வேலைநிறுத்தம் நீடிப்பதால் 30 பைலட்களை டிஸ்மிஸ் செய்தது ஏர் இந்தியா.



 ஏர் இந்தியா பைலட்களின் வேலை நிறுத்தம் இரண்டு வாரமாக நீடிப்பதால் அந்த நிறுவனத்துக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 30 பைலட்களை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. ஏர் இந்தியாவில் இணையவுள்ள ‘போயிங் 787 ட்ரீம்லைனர்’ விமான பயிற்சிக்கு உள்நாட்டு வழித்தடத்தில் செல்லும் பைலட்களை அனுப்பக் கூடாது என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, வெளிநாட்டு வழித்தடத்தில் செல்லும் பைலட்கள் கடந்த இரண்டு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல பைலட்களை ஏர் இந்தியா டிஸ்மிஸ் செய்துள்ளது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளுங்கள் என நீதிமன்றம் கூறிவிட்டது. பணிக்கு திரும்பினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் உறுதியாக கூறிவிட்டார். 

இதனால் பைலட் ஸ்டிரைக் 2 வாரத்துக்கு மேலாக நீடித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.300 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளும், இந்தியா திரும்பும் பயணிகளும் வெகுவாக பாதிப்படைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பைட்களில் மேலும் இருவர் நேற்று பணிக்கு திரும்பினர். இதுவரை 5 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, போராட்டம் நடத்தி வரும் 30 பைலட்களை ஏர் இந்தியா நேற்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. இவர்களையும் சேர்த்து இதுவரை 101 பைலட்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 

இப்பிரச்னையை மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது, பா.ஜ உறுப்பினர் நிஷிகாந்த் துபே எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பைலட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மக்களவையில் விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத் சிங் பல முறை கூறினார். 

ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. பைலட்களின் ஸ்டிரைக்கை நான் நியாப்படுத்தவில்லை. இதற்கு அவர்கள் மீது மட்டும் தவறில்லை. இப்பிரச்னையை தீர்ப்பதற்கான வழிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பைலட்டுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதே போல் இப்பிரச்னையை மாநிலங்களவையில் பா.ஜ.வை சேர்ந்த முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி எழுப்பினார்.

No comments:

Post a Comment