Wednesday, June 13, 2012

மதுரை ஆதீனத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்தில் இருந்தவருக்கு, பிடதியும் பறிபோகும் சூழ்நிலை!



ஞ்சிதா சி.டி. விவகாரம் வெளியான நேரத்தில், நீண்ட நாட்கள் தலை​மறைவாக இருந்தார் நித்தி​யானந்தா. இப்போது, ஆர்த்தி ராவ் விவகாரத்தில் கேள்வி கேட்ட‌ பத்திரிகையாளர்களைச் சீண்டியதால், மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். தினம் தினம் கர்நாடகாவில் நித்தியானந்தா விவகாரம்தான் ஹாட். மதுரை ஆதீன மடத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்தில் இருந்தவருக்கு பிடதியும் பறிபோகும் சூழ்நிலை! 
அடுத்த சாட்சி ரெடி!
கர்நாட‌க சி.ஐ.டி. போலீஸின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் அமலா என்று குறிக்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவின் வாக்குமூலம்தான் நித்தியை ஆட்டிப்படைக்கிறது. சில நாட்களில் அமெரிக்காவில் இருந்து இன்னும் ஒரு சாட்சியும் வருகிறாராம். அவர், நித்தியானந்​தாவின் அமெரிக்க ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த விநய் பரத்வாஜ். 'நித்தியானந்தாவுக்கு பெண்களோடு மட்டுமல்ல... ஆண்களோடும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்தால் நைட்கிளப்,  ரேபான் கண்ணாடி, ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பப்களில் சுற்றுவார். என்னிடம் அதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றன’ என்று தெரிவித்து இருக்கிறாராம் விநய். அவரை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
சிக்கலாகிப்போன அவசர உத்தரவு!
கடந்த 7-ம் தேதி, தனக்கு எதிராக ஆர்த்தி ராவ் அடுக்கிய பாலியல் புகாருக்குப் பதில் சொல்​வதற்காக பிடதியில் பிரஸ்மீட் நடத்தினார் நித்தி. ஆங்கிலத்திலும் தமிழிலும் பதில் சொல்லி கன்னடப் பத்திரிகையாளர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பினார். ஒரு கட்டத்தில், கன்னட சுவர்ணா செய்தி சேனலின் நிருபர் அஜீத், 'அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏன் வாங்க மறுக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு, 'சம்மனா? அப்படி ஒண்ணும் வரலையே’ என்று அப்பாவியாகப் பதில் சொன்னார் நித்தி. உடனே நித்தியை நோக்கி முன்னேறிய அஜீத், 'அந்த சம்மனின் நகல் என்னிடம் இருக்கிறது’ என்று சொன்னார். உடனே டென்ஷனான நித்தி, 'நீ என்ன பத்திரிகையாளரா... இல்லை, வக்கீலா? அவனைத் தூக்குங்கடா’ என்று தன் பக்தர்களுக்குக் கட்டளை போட்டார். உடனே, களத்தில் குதித்த பக்தர்கள் ஆவேசத்துடன் மல்லுக்கட்டில் இறங்கினார்கள். பெண் பக்தர்கள் மீடியா ஆட்களுடன் போட்ட சண்டையை ரசித்துப் பார்த்தார் நித்தியானந்தா. இந்த மோதல் நாடு முழுவதும் தெரியவரவே, நித்திக்கு சோதனை ஆரம்பம்.
கல் எடுத்த கன்னட அமைப்புகள்!
தமிழனுக்கு எதிராக எப்போது கல் எறிய​லாம் என்று காத்துக்கிடந்த கன்னட அமைப்புகளுக்கு, லட்டு மேட்டராகச் சிக்கினார் நித்தி. அன்று மாலையே கன்னட நவநிர்மாண் வேதிகே, ஜெய் கர்நாடகா ஆகிய அமைப்பினர் பிடதி ஆசிரமத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். 'மதுரை இளைய ஆதீனமான பிறகு, கர்நாடகத்தில் என்ன வேலை? தமிழ்நாட்டுக்கு ஓடிப் போ!’ என்று கோஷம் எழுப்பினர். அவர்களை நித்தியின் சீடர்கள் திடீரென தாக்கத் தொடங்கவே, நிலைமை மேலும் சிக்கலானது. உடனே தலையிட்ட போலீஸ், ஆசிரமத் தரப்பில் எட்டுப் பேரையும், கன்னட அமைப்பினர் 16 பேரையும் கைது செய்தது.
கொந்தளிக்கும் கர்நாடகா!
ரஞ்சிதாவுடன் இருந்த காட்சிகள் வெளியான​போதுகூட, கர்நாடகத்தில் இந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பவில்லை. ஆனால் இப்போது பெங்களூரு, பிடதி மட்டுமின்றி மைசூர், மங்களூர், பெல்லாரி என கர்நாடகம் முழுக்கவே போராட்டங்கள் நடக்கின்றன. நித்தி படங்களைக் கிழிப்பதும் உதைப்பது என்று பல்வேறு வகைகளில் கேவலப்படுத்தினர். கன்னட நவநிர்மாண் வேதிகே, ஜெய் கர்நாடகா ஆகிய அமைப்புகள் தினமும் பிடதி ஆசிரமத்தை முற்றுகையிட்டு, நித்தி படத்துக்கு சாணி அடிக்கின்றனர். பொதுமக்களும், எதிர்க் கட்சிகளும், மற்ற அரசியல் கட்சிகளும் நித்தியை எதிர்த்து, தங்கள் கருத்துகளைச் சொல்லத் தொடங்கவே இதுவரை அமைதியாக இருந்த பி.ஜே.பி. அரசும் நித்திக்கு எதிராக வாளைச் சுழற்றத் தொடங்கியது.
களம் இறங்கிய அரசு!
''நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமம், அரசின் கட்டுப்​பாட்டுக்குள் கொண்டு வரப்படும்'' என்று, முதல் குண்டு வீசியவர் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமார். ''நித்தியானந்தா ஆசிரமத்தால் பிடதியில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் நடப்பதாக அரசுக்குத் தகவல்கள் வருகின்றன. அதனால் முதல்வரிடமும், உள்துறை அமைச்சரிடமும் ஆலோசித்து பிடதி ஆசிரமத்தை அரசின் க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதா அல்லது தனி அதிகாரியை நியமிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.
அடுத்துப் பேசிய கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, ''பிடதியின் அமைதி பறி போய் இருக்கிறது. சர்ச்சைக்குரிய ஆசிரமத்​தையும், நித்தியானந்தாவையும் விசாரித்து ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவு இட்டிருக்கிறேன்'' என்று அழுத்தமாகவே சொன்னார். இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
எஸ்கேப் நித்தி!
கடந்த 7-ம் தேதி கன்னட அமைப்புகளும், பொது​மக்களும் பிடதி ஆசிரமத்தைத் தாக்க ஆரம்பித்ததும் நித்தியானந்தா உடனே ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நித்ய சதானந்தா, நித்ய பிரானானந்தா ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், மறுநாள் பிரஸ்மீட் நடத்தி மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று திட்டம் வகுக்கப்பட்டதாம். ஆனால் அன்று இரவே ராம்நகர் போலீஸ், நித்தியான‌ந்தா உள்ளிட்ட எட்டுப் பேர் மீது கொலை மிரட்டல், வெறித்தாக்குதல், பொதுஅமைதியைச் சீர்குலைத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக நித்தியை சேர்த்துவிட்டு, 'உடனே கைது செய்வதா... வேண்டாமா?’ என்று மேலி​டத்தின் பதிலுக்காகக் காத்தி​ருந்தார் எஸ்.பி. அனுபம் அகர்வால். இந்தத் தகவல் காவல் நிலையத்தில் இருந்த நித்ய சாந்தானந்தா மூலமாக நித்திக்குத் தெரியவரவே, அன்று இரவே நித்தி எஸ்கேப். ''எந்தக் காரணம்கொண்டும் எங்கள் மதுரை இளைய ஆதீனத்தைக் கைது செய்யக் கூடாது... கூடாது... நெவர்’ என்று போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தாராம் மதுரை மூத்த ஆதீனம்.
நித்தி ஆசிரமத்துக்கு சீல்!
பிடதி ஆசிரம விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக திங்கள் கிழமை காலை, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ராம் நகர் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நித்தியானந்தா ஆசிரம விவகாரம் குறித்து இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்தனர். ''நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் முழுவதும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. அதனால் ஏற்கெனவே அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். புதிய வழக்கில் விரைவாகக் கைது செய்ய வேண்டும். நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தைத் தற்காலிகமாக சீல் வைக்கவும், ஆசிரமத்தை முழுமையாக சோதனை செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உள் துறை அமைச்சர் தலைமையிலான குழுவுக்கு, கர்நாடக முதல்வர் உத்தரவு போட்டுள்ளார். ஆக... ஆசிரமத்துக்கு மட்டுமல்ல நித்திக்கும் ஆப்புதான்!

 மதுரையிலும் பூட்டு!
பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமம் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் மதுரை ஆதீன மடத்துக்குச் சென்றோம். அதன் பிரதான வாயிலில் உள்ள இரும்பு கேட் உட்புறமாக பூட்டுப் போடப்பட்டு இருந்தது. அன்னதானம் நடைபெறும் கிழக்கு நுழைவாயிலையும் பூட்டி நித்தியின் சீடர்கள் காவலுக்கு நின்றார்கள். ''நித்தியானந்தா இருக்கிறாரா?'' என்று கேட்டபோது, அவர் பிடதியில் இருக்கிறார். பெரியவர்தான் இங்கே இருக்கிறார். ஆனால், அசதியாகவும், மன அழுத்தத்திலும் இருப்பதால் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று சீடர்கள் தெரிவித்தார்கள்.
மதுரை ஆதீனத்தின் செய்தித் தொடர்பாளர் பாண்டிச்செல்வத்திடம் கேட்ட​போது, 'பிடதியில் உள்ள ஆசிரமம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆசிரமத்துக்கு சீல் வைக்கலாமா என்று ஆலோசிக்கப்படுவதைத்தான் மீடியாக்கள் மிகைப்படுத்துகின்றன. தமிழக அரசும், தமிழகக் காவல் துறையும் நித்தியானந்தா தரப்பு நியாயங்களை உணர்ந்து செயல்​படுகிறது. அவர் சைவ மதத்தோடு தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுவது, சில கன்னட அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பிரச்னைகளைக் கிளப்பு கிறார்கள். இந்த நேரத்தில் லோக்கல் ரவுடிகள் புகுந்துவிடக்கூடாது என்பதற்​காகத்தான் மதுரை ஆதீன மடத்தைப் பூட்டி வைத்துள்ளோம்'' என்றார் கூலாக.

Thanks to Junior vikatan.

No comments:

Post a Comment