Monday, June 11, 2012

குடும்ப அரசியல் ஆதிக்கத்தால், இந்தியாவில் இன்னும் மன்னராட்சி முடியவில்லையா?




இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தேசிய அரசியலில் மட்டுமின்றி மாநில அரசியலிலும் பல இடங்களில் ஒரு சில குடும்பத்தினர்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மன்னராட்சி முறை ஒழிந்து விட்டது என்று கூறிவிட்டாலும், இந்தியாவில் பல நிலைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கட்சிகளின் உயர் பதவிகள் என ஆட்சியிலும், கட்சியிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டதாக இவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதனை தங்கள் பேச்சாற்றலால் சமாளித்து வாரிசுகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் பதவிகளைப் பகிர்ந்தளிக்கும் சுயநலப் போக்கை மாற்றிக் கொள்வதே இல்லை. ஆட்சி, அதிகாரம் பதவி சுகம் அவர்களை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

முலாயம் குடும்பத்தில் 6-வது நபர்: இதற்கு சமீபத்திய உதாரணம் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் குடும்பத்தில் இருந்து 6-வது நபராக தேர்தல் மூலம் பதவியைப் பெற்றுள்ளார் டிம்பிள் யாதவ்.

முலாயம் சிங் மக்களவை உறுப்பினராக உள்ளார். அவரது மகன் அகிலேஷ்தான் உத்தரப் பிரதேச முதல்வர், மருமகன் தர்மேந்திர யாதவ், உறவினர் ராம்கோபால் யாதவ் ஆகியோரும் எம்.பி.க்களாக உள்ளனர். முலாயமின் சகோதரர் சிவபால் யாதவ் மாநில அமைச்சராக உள்ளார்.

குடும்பம் ஒன்று, கட்சி வேறு: மகன், மகள், மருமகள், மனைவி உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது இந்தியாவுக்குப் புதிது அல்ல. இதற்கு நேருவின் குடும்பம் சிறந்த உதாரணம். இந்திரா காந்தியின் மருமகளான சோனியா காந்திதான், இப்போது மத்திய அரசை இயக்கும் சக்தியாக உள்ளார். மற்றொரு மருமகள் மேனகா காந்தி, காங்கிரஸின் எதிரணியான பாஜகவில் உள்ளார். இவர்களது பிள்ளைகள் ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகியோரும் எம்.பி.க்கள்தான்.

சோனியாவின் கேள்வி: முன்னதாக 2004-ம் ஆண்டில் ராகுலுக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, "ஏன் எங்கள் கட்சிக்கு எதிராக மட்டும் குடும்ப அரசியல் என்ற கேள்வியை எழுப்புகிறீர்கள். மற்ற கட்சியை விட்டுவிடுகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார் சோனியா.

குடும்ப அரசியலுக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதுதான் சமீபகால இந்திய அரசியல் சூழ்நிலை. பிகாரில் தனக்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது, தனது மனைவியை முதல்வராக்கி அரசியலுக்கு அழைத்து வந்தார் லாலு பிரசாத்.

மாநிலக் கட்சிகள்: தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் ஸ்டாலின், அழகிரி என குடும்பத்தினர் பலர் அரசியலில் உள்ளனர். கருணாநிதியின் மகள் கனிமொழியும் எம்.பி.தான்.

பாமகவில் டாக்டர் ராமதாûஸ அடுத்து கட்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளவர் அவரது மகன் அன்புமணி.

ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அந்த மாநில மக்களின் செல்வாக்கை நீண்டகாலம் பெற்றிருந்த என்.டி.ராமராவின் மருமகன். கேரள முன்னாள் முதல்வர் மறைந்த கே. கருணாகரனின் மகன் முரளிதரன் தந்தை வழியில் அரசியலுக்கு வந்தவர்.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகெüடாவின் மகன் எச்.டி.குமாரசாமிதான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர். மற்றொரு மகன் எச்.டி. ரேவண்ணாவும் அரசியலில்தான் உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை எம்.பி.யாக்கி அழகு பார்த்தார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் மேற்கு வங்கத்தில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல: குடும்ப அரசியல் குற்றசாட்டை காங்கிரஸ் மீது பாஜக கூறினாலும், அவர்களும் முழுமையாக குடும்ப அரசியலை ஒதுக்கியவர்கள் என்று கூற முடியாது. ராஜஸ்தானின் முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, குடும்ப அரசியல் வழி வந்தவர்தான். அவரது சகோதரி யசோதரா ராஜேயும் எம்.பி.தான். வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங்கும் எம்.பி.யாக உள்ளார்.

இமாசலபிரதேச பாஜக முதல்வர் பிரேம் குமார் துமலின் மகன் அனுராக் தாகூரும் மக்களவை உறுப்பினர். கர்நாடகத்தில் சர்ச்சைக்குப் பெயர்போன பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவும் தனது மகன் ராகவேந்திராவை எம்.பி.யாக்கியுள்ளார்.

காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வாரிசு, தில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வாரிசு, ஹரியாணாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வாரிசு, ஆந்திரத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் வாரிசு, மகாராஷ்டிரத்தின் பால்தாக்கரேவின் மகன், பேரன். அதே மாநிலத்தில் காங்கிரஸின் பிருதிவிராஜ் சவாண் என வாரிசு அரசியலை வழி நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை.

உள்ளூர் உதாரணங்கள்: தேசிய, மாநில அளவில் என்று மட்டுமல்லாது உள்ளூர் அளவிலும் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தங்கள் வாரிசுகளை தங்களது அரசியல் வாரிசுகளாகத்தான் வளர்த்து வருகின்றனர். இதற்கு மாநில அளவில் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். நாட்டு நலனுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் போய், தங்கள் வீட்டு நலனுக்காக வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வருவதே இப்போதைய அரசியல்வாதிகளின் முதன்மைப் பணியாக உள்ளது.

No comments:

Post a Comment